Tuesday, September 27, 2011

காதல் காலம்



தை, மாசி
கன்னியவள்
தைத்திட்டாள்
என் மனதில்
கதை
   பல பேசி...



பங்குனி, சித்திரை
பந்தம் கொண்டவள்
படுத்திய பாட்டில்
பங்கம் கண்டது
     என் நித்திரை.....



வைகாசி, ஆனி
எங்கள் காதல்
ஏறியது இனிதே
பல ஏணி....



ஆடி, ஆவணி
இணைந்தே
பாடிட்டார்
இருவீட்டாரும்
  எதிர்லாவணி....



புரட்டாசி, ஐப்பசி
புதுவாழ்வில்
இறங்கிட்டோம்
புறந்தள்ளி
     பல சதி.....



கார்த்திகை, மார்கழி
காதல் களியில்
புது உறவொன்று
உருவாக
இனி
எங்கள் வாழ்வில்
தினம், தினம்
தீபாவளி.




Saturday, September 24, 2011

கண்டவர் விண்டிலர்….



அனுநித்தம் கனவில் வந்திட்ட
அழகுமுத்தம் பல தந்திட்ட
கனதினம் பிரிந்திட்ட
காதலி தொலைவில் வந்திட
கண்கள் நோக்கிட
காதல் பெருக்கிட
இதயநீர் இளகிட
இமைகள் நனைந்திட
உதடுகள் ஒட்டிட
உள்நாக்கு உலர்ந்திட
கட்டி அணைத்திட
கைகள் துடித்திட
கண்ணியம் தடுத்திட
அருகே அழைத்திட
அவள் பெயரும் மறந்திட
ஏதேதோ என்னுள் நடந்திட
உலகமொழியெலாம்
ஒரு வார்த்தை இல்லை
தன்நிலை மறந்திட்ட
என்நிலை விளக்கிட….



Tuesday, September 20, 2011

தமிழா…..தமிழா

ஓட்டு வீடு,
ஓலைக்குடிசையில்
தூசி,தும்பு
மண், மட்டி
ஒட்டி விழும்
மழைத்தண்ணீர்
வேட்டித்துணியில்
வடிக்கட்டி
தவலையில் பிடித்து
தவணையில் குடித்து
வளர்ந்தோம்
அப்போது…..


தண்டா பானி
மினரல் வாட்டர்
பிராண்ட் மாறி
குடித்தால்
த்ரோட் இன்வக்சன்
சளி, கபம்,காய்ச்சல்
ரூபாய் தொள்ளாயிரம்
செலவு
நாளொன்றிற்கு
இப்போது…..

Sunday, September 18, 2011

தாய் நீ(ர்) தாய்...


ஊற்றுச் சேய்
ஓடைக் குழந்தை
அருவிக் குமரி
ஆற்று மங்கை
  அலைகடல் பெண்....


சூரியக் கணவன்
சுடுகதிர் பட்டு
நீராவிக் கர்ப்பம்
    நீ தரித்து....


நெடுமழையாய்
பிரசவித்தாய்
நீர்சூழ்
  பிரபஞ்சத்தில்.....

Friday, September 16, 2011

கவிஞனின் கவலை...



கடந்து செல்லும்
ஒவ்வொரு முகங்களும்
எனக்கொரு  கதை
சொல்லுகின்றன.



என் கதை
எழுதவே
நேரமில்லையே....



எப்போது  எழுதுவேன்
எல்லோர்  கதைகளையும்
 நான்....






Wednesday, September 14, 2011

ராஜா மகள் பூஜா - பிறந்த நாள்

ராஜா மகள் பூஜா


இந்த ராஜாவின் குட்டி இளவரசி சிவ பூஜாவிற்கு இன்று பிறந்த நாள்.



நான்கு வயது முடிந்து ஐந்தாவது தொடங்குகிறது.


அன்புமகள் சிவபூஜா இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.








Monday, September 12, 2011

வெறுமை

ஏதோ ஒரு
பயணத்தின்
இடையில்
காத்திருக்கும்போது 
கடக்க மறுப்பது
நேரம் மட்டுமல்ல
நினைவுகளும் தான்...... 

Saturday, September 10, 2011

வசியக்காரி...



பேய்க்கதைகளை
கேட்டு
பீதியடையாத
 நான்.....

உன்
வாய்க்கதைகளை
கேட்டு
வசமிழந்து போகிறேன்.




Tuesday, September 06, 2011

காதல் தந்திரம்

ஏழு கடல், ஏழு மலை தாண்டி
ஏதோ ஒரு குகையில்
எந்திரக்கிளியிடம்
ஒளிந்திருக்குமாம்
மந்திரவாதியின் உயிர் .
படித்திருக்கிறேன்
பாலவயதில்......

பலகடல் தாண்டி
பணிக்காக பறந்தபோது
காதல் மந்திரக்கிளி
உன்னிடம் தந்திரமாக
என்னுயிர் ஒட்டிக்கொள்ள....
துடித்திருக்கிறேன்
பருவவயதில்.....

Monday, August 22, 2011

தத்தை உன் வித்தை



கூடு விட்டு
கூடு பாயும்
வித்தையை
ஏடுகளில்
படித்த பொழுது
எக்களித்த
என்மனம்
ஓடி வந்து
ஒட்டிக் கொண்டது
உன்னைக்
       கண்டவுடன் ........


Monday, August 15, 2011

புதிய வானம்..... புதிய பூமி.....




அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

இப்போது
   புதிய நாடு....
       புதிய வாழ்க்கை...
      புதிய பயணங்கள்......
       புதிய அனுபவங்கள்......

இனி தொடர்ந்து கதைகள் , கவிதைகள்
போன்ற பல்சுவை பதிவுகளோடும், பலவிதமான அனுபவப்பகிர்வுகளோடும்
வலையுலகில் வளைய வரலாம் என உள்ளேன்.

உங்கள் மேலான அன்பும்,
ஆதரவும் வேண்டி
அன்பு நண்பன்

(துபாய்) ராஜா.


Wednesday, April 21, 2010

நீண்ண்ண்ண்ண்ண்ண்ட விடுமுறை

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். கால, நேரம் பார்க்காமல் திட்டம் முடியும் வரை கடுமையாக உழைக்க வேண்டிய துறை கட்டுமானத் (Construction) துறையாகும் .என்னதான் நான்கு மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு சென்று வந்தாலும் முழுமையாக பணி நிறைவடைந்து ஒரு மனத்திருப்தியோடு சென்றால்தான் விடுமுறையை முழுமையாக அனுபவிக்க முடியும். ஒன்றரை வருட கடும்பணிக்கு பின் ஒரு நீண்ட ஓய்வு கிடைத்துள்ளது. குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஊரில் இருக்கலாம் என எண்ணம். ஊரில் இருக்கும் நேரம் வலையுலகம் பக்கம் வரமாட்டேன். எனவே வலைப்பூவிற்கு வருகை தரும் நண்பர்கள் எனது அனைத்து பல்சுவைப் பதிவுகளையும், பகிர்வுகளையும் படித்து ரசித்து மகிழ வேண்டுகிறேன்.



ஒரு இனிய காதல் தொடர்கதை

சில குளிர்ச்சியான கவிதைகள்











பயணப்பதிவுகள்
விறுவிறுப்பான திகில் கதைகள்



மேலும் பல சுவாரசியமான பதிவுகளுக்கும், பகிர்வுகளுக்கும் வலைப்பூவின் வலதுபக்கம் உள்ள மாதம் வாரியாக உள்ள பெட்டகத்தை திறந்து பார்த்து, படித்து மகிழுங்கள்.


நாளை (23.04.10 - வெள்ளி) எகிப்திலிருந்து கிளம்பி துபாய் வழியாக நாளை மறுநாள் (24.04.10 - சனி) காலை திருவனந்தபுரம் செல்கிறேன். அதன்பின் இரண்டு, மூன்று மாதங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கலாம் என எண்ணம். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சொந்த ஊரில்தான் இருப்பேன். சென்னை, மதுரை, திருச்சி என தமிழகம் முழுதும் பரவலாக பயணம் செய்ய வேண்டியும் உள்ளது. ஊரில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் thubairaja@gmail.com என்ற இணைய முகவரிக்கு தனிமடல் இடுங்கள். நிச்சயம் சந்திப்போம்.

நன்றி. வணக்கம்.

எகிப்திய விருந்து

நேற்றைய பதிவில் எகிப்தியர் எளிய உணவுதான் உண்பர். ஆனால் விருந்து என்று வந்துவிட்டால் வெளுத்து கட்டிவிடுவர் என்று கூறியிருந்தேன். இன்று எனது கூற்று உறுதிப்படுத்தப்பட்டது.

எகிப்தில் நாங்கள் பணிபுரியும் மின்சாரஉற்பத்தி நிலைய கட்டுமான திட்டம் (Power Plant Project) இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டதால் ஒரேயடியாக ஊர் திரும்பும் தினம் உறுதி செய்யப்பட்டு விட்டது. இதனை அறிந்தது முதல் உள்ளூர் நண்பர்கள் விருந்திற்கு அழைத்துக்கொண்டே இருந்தனர். எவ்வளவோ மறுத்தும் விடாப்பிடியாக இழுத்துச் சென்று மிகச்சிறந்த விருந்தளித்து உபசரித்து மகிழ்ந்தனர்.

அலெக்சாண்டிரியா நகரத்தில் கேரி ஃபோரின் எதிரே அமைந்துள்ள டவுண் டவுன் என்னும் இடத்தில் உள்ள புகழ்பெற்ற பல்பா என்ற எகிப்திய உணவகத்திற்கு சென்றோம்.

உணவகம்
இடம் பிடிச்சாச்சு

சாப்பாடு எப்படி இருக்கும்...
நம்பர் ஒன். சூப்பரா இருக்கும்...

ஸ்டார்ட்டர்கள், வெஜிடபிள் சாலட், பல விதமான சட்னிகள்....



புறா சூப்.
சுவையான எகிப்திய ரொட்டி
காய்ந்த திராட்சை நிறைய போட்டு சூடும்,சுவையும் நிறைந்த வாத்து பிரியாணி


ஸ்டார்ட் மியூசிக்....

சாப்பிட்டு முடிச்சாச்சு...
எல்லாரும் கையைக் கட்டிட்டா பில் யார் கொடுப்பா...
அருமையான விருந்து தந்த அன்பு உள்ளங்கள்
சரியா சாப்பிடலையாம். வீட்டுக்கு போய் சாப்பிட தனி பார்சல்...
அப்போ கெளம்புவோமா....

Monday, April 19, 2010

ஆப்பிரிக்காவின் ஆச்சரியம் - எகிப்து

எகிப்து- ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்து, ஆசிய கலாச்சாரத்தோடு , அரேபிய பழக்க வழக்கங்களோடு, ஐரோப்பிய நாகரிகமும் கலந்த ஆச்சரியமான நாடு. ஆசிய , ஐரோப்பிய, ஆப்பிரிக்க கண்டங்களின் நுழைவாயிலாகவும், அரேபி பேசும் நாடுகளில் பெரியதாகவும் எகிப்து உள்ளது.


ஆப்பிரிக்காக் கண்டத்தில் இருந்தாலும் எகிப்திய மக்கள் மற்ற ஆப்பிரிக்க நாட்டு மக்களைப் போன்ற தோற்றம் இல்லாமல் நமது காஷ்மீரிகளைப் போல் சிவந்த நிறமும் , அழகு தோற்றமும் கொண்டவர்கள். நாட்டின் பெரும்பான்மைப் பகுதி பாலைவனம் என்றாலும் வற்றாத ஜீவநதியான நைல்நதியை கால்வாய்கள் மூலம் பலபகுதிகளுக்கும் கொண்டு சென்று பசுமையாக்கி உள்ளனர்.


மாவீரன் அலெக்சாண்டரால் மத்திய தரைக்கடல் கரையில் அமைக்கப்பட்ட அலெக்சாண்டிரியா நகரம் எப்போதும் குளிர்ந்த காற்று வீசும் அழகான குளுகுளு நகரமாகும். உலக அளவில் முன்னோடி மாதிரி நகரங்கள் வரிசையில் அலெக்சாண்டிரியா தனி இடம் வகிக்கிறது. இங்கு வருடத்தில் இரண்டு மாதம் மட்டுமே மிதமான கோடைக்காலம். பத்து மாதங்கள் பனிக்கால ஆடைகள் அணிந்து திரியும் மக்கள், இரண்டு மாதக் கோடையில் இரவு , பகல் எப்போதும் கடலில் குளித்து மகிழ்வர்.


புராதான பிரமிடுகள் தலைநகர் கெய்ரோ அருகிலே அமைந்திருந்தாலும், பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களும், கோயில்களும் அப்பர் எகிப்து என அழைக்கப்படும் நைல்நதிக்கரையோரம் அமைந்துள்ள அஸ்வான் மற்றும் லோக்சூரிலே உள்ளன. சுற்றுலா பிரியர்களுக்கு ஏற்ற பல இடங்கள் எகிப்தில் உள்ளன. இங்கு வரும் முன் இணையத்தில் எல்லாத் தகவல்களையும் அறிந்து பின் வந்து சுற்றி பார்த்தால் இனிமையான பயணமாக இருக்கும்.



எகிப்தின் புராதன பெயர் மஸைர் என்பதாகும். எனவே அவர்கள் மஸ்ரிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மற்ற அரேபிய நாடுகளை விட எகிப்தில் பேசப்படும் அரேபி மிகவும் இலக்கணச் சுத்தமுடையது. மென்மையான, இனிமையான உச்சரிப்பு கொண்டது. அமீரகத்தில் இருந்தபோது அங்குள்ளவர்களின் கடினமான உச்சரிப்பால் அரேபியை முரட்டு மொழி என்றுதான் நானும் நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு எகிப்தியர்கள் பேசும் இனிமையால் கவரப்பட்டு அரேபியை கற்றறிந்து சரளமாக பேசுகிறேன்.


இந்தியர்கள் என்றால் எகிப்தியர்களுக்கு மிகவும் பிடிக்கும். காந்திஜி, நேருஜி, இந்திராஜி என நமது தேசத்தலைவர்களை பிரியமாக அழைக்கிறார்கள். லண்டனுக்கு வட்டமேஜை மாநாடு செல்லும் வழியில் காந்தியடிகள் எகிப்து வந்து சென்றதை இப்போதும் பலரும் நினைவு கூறுகிறார்கள். வல்லரசுகளின் பனிப்போருக்கு எதிராக நமது அன்றைய பிரதமர் திரு. நேருவும், எகிப்திய அதிபர் திரு.நாசரும், இந்தோனேஷிய அதிபர் திரு.சுகர்த்தோவும் இணைந்து அணி சேரா இயக்கம் ஆரம்பித்தபின் இந்தியா எகிப்திற்கு பல உதவிகள் செய்துள்ளது என்று நன்றியோடு கூறுகிறார்கள்.



 விமான நிலையத்தில் வந்து இறங்குவது முதல் நாம் இங்கு எங்கு சென்றாலும் முதல் மரியாதைதான். இந்திப்படங்கள்தான் எல்லா வீடுகளிலும் 24 மணி நேரமும் டிவி சேனல்களில் ஓடும். ஏனென்றால் நமது கலாச்சாரமும், எகிப்திய கலாச்சாரமும் ஏறக்குறைய ஒன்றுதான். அமிதாப்பச்சன் எகிப்தியர்களின் ஆதர்சன ஹீரோ. எந்த நாட்டில் நீங்கள் எகிப்தியரை சந்தித்தாலும் அமிதாப்பச்சன் பற்றி பேசாமல் இருக்கமாட்டார். எகிப்தில் அமிதாப் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த சூப்பர் ஹீரோவாக திகழ்கிறார். இப்போதும் வார இறுதிகளில் அவர் நடித்த பழைய ஆக்சன் இந்திப் படங்களே எல்லா டி.வி. சானல்களிலும். அதிபர் தேர்தலில் நின்றால் கூட அன்னபோஸ்ட்டாக ஜெயித்துவிடுவார். ஒருமுறை அவர் எகிப்து வந்திருந்த போது ஏர்போர்ட்டிலும், வழி நெடுங்கிலும் மக்கள் அலை அலையென கூடி உற்சாக வரவேற்பு அளித்தனராம். இந்திப்படங்களில் நடித்துள்ளதால் நமது ரஜினி, கமலுக்கு கூட இங்கு ரசிகர் உண்டு.


வளைகுடா நாடுகளில் இந்தியர்களோடு வேலை பார்த்த எகிப்தியர்கள் பலரும் சரளமாக இந்தி பேசி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர். ரொட்டி போன்று பெரும்பாலும் மிக எளிமையான உணவே உண்ணுகின்றனர். எகிப்து குளிர்ந்த நாடு என்பதால் வியர்ப்பதே இல்லை. எனவே கோடைக்காலத்தை தவிர மற்ற காலங்களில் மிக குறைவாகவே நீர் அருந்துகின்றனர். குளிருக்காக எப்போதும் சூடான தேநீர் அருந்திக்கொண்டே இருப்பர். குளிர் காரணமாக பெரும்பான்மையோருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. ஆண்களோடு பெண்களும் சீசா எனப்படும் ஹூக்கா புகைப்பதில் வல்லுநராக உள்ளனர்.



பெரும்பாலும் அவரவர் துணையை அவரவரே தேடிக்கொள்கின்றனர். உடன் படிப்பவர்கள், நண்பனின் சகோதரி, உறவினர்கள் என குறுகிய வட்டத்தினுள்ளே காதல் மலர்கிறது. ஆண்கள் முதலில் குறிப்பிட்ட பெண்ணின் சம்மதம் பெற்ற பின் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர். பின் நமது நாட்டைப் போலவே மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்கு சென்று பேசி திருமண நிச்சயார்த்தம் செய்கின்றனர். அதன்பின் எத்தனை ஆண்டானாலும் சொந்த வீடு, வசதியான வாழ்க்கைக்கு தேவையான பணம், நல்ல வேலை, திருமணத்திற்காக மணமகளுக்கு கொடுக்க வேண்டிய பரிசுகள் ஆகியவற்றை மணமகன் சேர்த்த பின்னரே திருமணம் என்பதால் தற்போதைய காலத்தில் எகிப்தில் திருமணம் ஆகாதவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


எகிப்திய மருத்துவர்களும், கட்டுமான பொறியாளர்களும் உலக அளவில் மிகவும் புகழ் பெற்றவர்கள். அவர்களது திறமைக்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் பார்ப்போரை வியக்க வைக்கும் பிரமிடுகளும், பதப்படுத்தப்பட்ட உடல்களான மம்மிகளுமே சாட்சி.




அலெக்சாண்டிரியா நகரம் -
1 ,

  2

3

கட்டுமானப்பணியில் பல நாடுகள் சென்று கொண்டிருந்தாலும் கடந்து ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வை தந்த எகிப்தை விட்டு பிரிவது மனதிற்கு கஷ்டமே....

Sunday, April 18, 2010

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்...

தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்று பல தமிழ் உணர்வு மிகுந்த தமிழ் உள்ளங்கள் தவித்துகொண்டிருக்கும் பொழுது தந்தையின் திடீர் மறைவு பேரிடியாய் விழுந்தது. அதற்குள் அதிர வைக்கும் அடுத்த செய்தி. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியத்திற்காக இனவாத இலங்கை அரசின் அனுமதியோடு மலேசியா சென்று பின் முறையான ஆவணங்களோடு தமிழகம் வந்த தாயார் விமானநிலையத்தில் தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவர் என்ன ஆட்சிக்கட்டிலில் இடம் கேட்டாரா அல்லது அடுத்த புரட்சிக்கு ஆள் திரட்ட வந்தாரா... இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்று கேள்விப்பட்ட கற்காலத்திற்கு சென்று கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணத்தை இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் தருகின்றன.

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்...

Friday, April 16, 2010

சிட்டாடல் கோட்டை - அலெக்சாண்டிரியா - எகிப்து

சிட்டாடல் கோட்டை எகிப்து நாட்டில் அலெக்சாண்டிரியா நகரத்தின் மையத்தில் மத்தியதரைக்கடல்கரையில் அமைந்துள்ளது. கடல்வழியே அன்னியர்கள் புகுந்து விடாமல் கண்காணித்து தடுக்கவும், நகரின் பாதுகாப்பிற்காகவும் பண்டைய மன்னர்களால் கட்டப்பட்டது.






வெளிமதில் சுவர்கள்



கோட்டையின் உள்சுவர்கள்


கோட்டையின் கீழ் சுரங்கப்பாதைகள்



கோட்டையின் உள்ளே அமைந்துள்ள மீன் காட்சியகம்



கோட்டையின் உள்ளே...




மேல் கூரையில் செங்கல் சித்திரங்கள்


உள் அறைகளில் சில புராதன நினைவுச்சின்னங்கள்




கோட்டையின் நடுவில்...




கோட்டையின் மேல்தளம்



மத்தியதரைக்கடல், கப்பல்கள், அலெக்சாண்டிரியா நகரம்