Thursday, January 31, 2019

துள்ளு மறி - பாகம் 2

துள்ளுமறி - பாகம்  -  சொடுக்கி படித்து விட்டு பின் இங்கு தொடருங்கள்.

பாகம் 2

தனிநபர்களால் பலி கொடுக்கப்படும் ஆடுகள்சேவல்கள் பெரும்பாலும் அவரவர் வீட்டிலே வளர்க்கப்பட்டாலும்கோவில் சார்பாக பலி கொடுக்கப்படும் கிடாக்களும்துள்ளுமறியும் பொதிகாசலப் போத்தியிடமே வாங்கப்படும்புலிப்பட்டியைச் சேர்ந்தவரான பொதிகாசலப் போத்தியின் குடும்பம் தலைமுறைதலைமுறையாக ஆட்டுக்கிடை வைத்து பராமரித்து வரும் பாரம்பரியமான குடும்பம் ஆகும்ஊரெங்கும் வயல்கள் பயிர் செய்யப்பட்டிருக்கும் காலகட்டங்களில் பகல் நேரங்களில் மணிமுத்தாறு புதிய கால்வாய் கரையோரப் பகுதிகளில் அல்லது ஆறு தாண்டி அக்கரையில் மேய்க்கப்படும் ஆடுகள் இரவில் போத்தி வீட்டருகே இருக்கும் தொழுவத்தில் அடைக்கப்படும்நாற்றங்கால்களுக்கும்வயல்களுக்கும் ஆட்டுச் சாணம் சிறந்த உரம் என்பதால் அறுவடை முடிந்து அடுத்த பயிர் வைக்கப்படும் காலம் வரை ஊர்க்காரர்கள் தங்கள் வயல்களில் ஆட்டுக்கிடை அமைக்க முன்பணம் கொடுத்து தேதி உறுதி செய்து கொள்வார்கள்.



அறுவடை முடிந்த  காலங்களில் பகல் முழுதும் வயல்காட்டுப்பகுதிகளில் மேய்க்கப்படும் ஆடுகள்வெயில் மங்கும் மாலை நேரத்தில் அன்றைய முறைக்குண்டான வயலுக்கு அருகே கொண்டு வரப்படும்பின் இரவு நேரங்களில் இரண்டு விரல் கனம் கொண்ட இரும்பாலான ஐந்தடி உயரம் கொண்ட கடப்பாரைக் கம்பிகளை நீளஅகலத்தில் வயலில் ஊன்றி மூங்கில் தட்டிகளை அவற்றில் கட்டி அமைக்கப்பட்டிருக்கும் பட்டிகளில் அடைக்கப்படும்வயல் முழுதும் ஆட்டுச் சாணம் பரவும் வகையில் தினமும் பட்டி போடும் இடங்களை மாற்றிமாற்றி அமைத்துக் கொள்வர் எனபதால் ஒரு வயலில் குறைந்தது ஒரு வாரமாவது ஆடுகள் தங்கும்.

கோழிக்குஞ்சுகளை காகம்பருந்துபூனைநாயிடமிருந்து காக்க பிரம்பினாலான கூடைகளில் அடைத்து மூடி வைத்து காப்பது போல ஆட்டுக்குட்டிகளை பாதுகாக்கவும் பனை  மட்டை மற்றும் ஓலைகளால் பரிசல் போன்ற பெரிய கூண்டுகள் செய்து வைத்து இருப்பர்பிறந்து ஒரு மாதத்திற்குப் பின்னே குட்டிகள் தாயுடன் மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் என்பதால் பகல் நேரங்களில் வெயில்மழை தாக்காமலும்நாய்நரி போன்ற மிருகங்கள் தூக்கிச் செல்லாமல் இருப்பதை தடுக்கும் வகையில் பட்டிக்குள் பனை ஓலை கூண்டுகளை வைத்து அதனுள் குட்டிகளை அடைத்து வைத்து இருப்பர்.




மாலை நேரம் வயலுக்கருகே வந்ததுமே தாய் ஆடுகள் குட்டிகளைத் தேடி பட்டிக்கருகே வந்து குரல் கொடுக்க, முரட்டுக் கூடைகளுக்குள் இருட்டில் இருக்கும் குட்டிகளும் பதில் குரல் கொடுக்கும். கீதாரி பட்டியைத் திறந்து கூடையை தூக்கியதும், பகல் முழுதும் பசியுடன் இருக்கும் குட்டிகள் துள்ளிக் குதித்து தாய் ஆடுகளை நோக்கி ஓடி முட்டி, முட்டி பால் குடிக்கும். பின் இரவு முழுதும் தாய் ஆடுகளுடனே பட்டிக்குள் விடப்பட்டு காலையில் எல்லா ஆடுகளும் மேய்ச்சலுக்கு செல்லும் முன் பிடித்து மீண்டும் குட்டிகள் கூண்டுகளுக்குள் அடைக்கப்படும்.

பொதிகாசலப் போத்திக்கு ஒரே மகன். பத்தாம் வகுப்பு முடித்த பின் பேட்டை அரசு தொழில் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்து விட்டு சென்னைக்கு வேலைக்கு சென்றவன், தங்கி இருந்த வீட்டின் அருகேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். காதல் விவகாரத்தை பெற்றோரிடம் சொல்லி திருமணத்திற்கு அனுமதி வாங்க வந்தவனை சொந்த்ததிலே ஒரு பெண்ணை கட்டிக் கொண்டு, ஆட்டுக் கிடையை பார்த்துக் கொண்டு ஊரிலே இருந்து விடுமாறு பொதிகாசலப் போத்தி வற்புறுத்தியதால் தாய், தந்தையரிடம் சொல்லாமலே சென்னை திரும்பி, விரும்பிய பெண்ணையே திருமணமும் செய்து கொண்டான். ஊருக்கும், உறவினர்களுக்கும் அஞ்சி ஏழெட்டு வருடங்கள் ஊர்ப்பக்கமே வராதவனுக்கு  மகனும் பிறந்தான். பேரனைப் பார்க்க வேண்டுமென ஆச்சி தொடர்ந்து நச்சரித்ததால் ஊருக்கு வந்து சென்ற உறவினர் ஒருவரோடு ஆச்சியை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைத்தார் போத்தி.

மருமகள் நல்ல குணமாக இருந்ததாலும், மகன் நன்றாக கவனித்துக் கொண்டதாலும், பேரனும் பாசமாக இருந்ததாலும் ஐந்தாறு மாதம் சென்னையில் மகன் வீட்டிலே தங்கி விட்ட ஆச்சி, அம்மன் கோவில் கொடைக்கு ஊருக்கு வரும் போது மகன், மருமகள், பேரனை அழைத்து வந்தார். மகனுக்கு தந்தையின் பெயரையே போத்தி மகன் விட்டு இருந்ததால் ஆச்சிக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்றாலும் கணவர் பேரை சொல்லக் கூடாது என்பதால் தந்தையின் தந்தை என்று பொருள் கொள்ளும் விதத்தில் “ஐயா அப்பா” என்றே அழைப்பார். ஆச்சி வந்த பின் அனைவருமே “ஐயா அப்பா”, “ஐயா அப்பா”    என்று அழைக்கத் தொடங்க நாளடைவில் “ஐயா அப்பா” என்பது ஐயப்பா என்று மருவி விட்டது. 

ஆச்சியோடு ஊருக்கு வந்த பேரன் தாத்தாவோடும் நன்றாக ஒட்டிக் கொண்டான். பகலெல்லாம் கீதாரி ஆடுகளை மேய்த்து வந்தாலும் காலையிலும், மாலையிலும் தொழுவத்தில் இருந்து அல்லது வயல் பட்டிகளில் இருந்து ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் பொதிகாசலப் போத்தி சென்று ஒவ்வொரு ஆடாக தனித்தனியாக பிடித்து உற்றுக் கவனிப்பார். பகல் நேரத்தில் அவ்வப்போது பட்டிக்குச் சென்று ஆட்டுக் குட்டிகளை கவனிப்பது, பட்டிகள் இடம் மாற்றிக் கட்டுவது என ஏதாவது வேலைகள் பார்த்துக் கொண்டே இருப்பார். காலையில் பேரன் தூங்கி எழுவதற்கு முன்பே பட்டிக்கு சென்று வந்தாலும், மாலை நேரம் போகும் போது ஐயப்பா அழுது, அடம் பிடித்து தாத்தாவோடு சென்று விடுவான்.




வீட்டிலிருந்தே பேரனை தூக்கிச் செல்லும் போத்தி, ஆட்டுப் பட்டிக்குப் போகும் போதே டீக்கடையில் மாலைப் பலகாரமாக சூடாக போட்டிருக்கும் முறுக்கு, வடை, பஜ்ஜி, போண்டா என ஐயப்பா ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுத்து அழைத்துச் செல்வார். பின் பட்டியை அடைந்ததும், ஐயப்பாவை தோளில் இருந்து இறக்கி விட்டு, கூடைகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் குட்டிகளை பேரன் விளையாட திறந்து விடுவார். பட்டிக்குள் குட்டிகளுடன் ஓடிப் பிடித்து விளையாடும் ஐயப்பாவை தாய் ஆடுகள் வந்தவுடன் குட்டிகள் பால் குடிக்க தொந்தரவில்லாமல் தூக்கி வைத்துக் கொள்வார்.  பின் அரைமணி நேரம் கழித்து குட்டிகள் பால் குடித்து முடித்து விட்டு, தாய் ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு செல்லும் போது தான் ஐயப்பாவை தோளில் இருந்து இறக்கி விடுவார்.

தாய் ஆடுகளுடன் செல்லும் குட்டிகளை துரத்திக் கொண்டு வயல் வரப்புகளிலும், வயல்கள் முழுதும் ஓடும் ஐயப்பா மேடு, பள்ளங்களில் ஏற முடியாமல் தவிக்கும் குட்டிகளை தூக்கி விட்டும் உதவுவான். எல்லாக் குட்டிகளும் அவனைக் கண்டு பயந்து ஓடினாலும் சில குட்டிகள் மட்டும் அவனுடன் நின்று விளையாடும். அவற்றில் அவனுக்கு மிகவும் பிடித்தது பிறந்து இரண்டு நாட்களே ஆகி இருந்த செவலை (சிவந்த) நிறமுடைய செம்மறிக்குட்டி தான். 




கோவில் கொடை நாள் உறுதி ஆனதுமே இந்தந்த கிடாக்களை கோவிலுக்கு வெட்டலாம் என முடிவு செய்து விடும் போத்தி, "துள்ளு மறி” என்னும் புதிதாகப் பிறந்த குட்டிக்கு மட்டும் கொடை தினத்திற்கு மிக அருகாமை தினத்தில் பிறந்த குட்டியை கொடுப்பது வழக்கம். பொதுவாக அமாவாசை தினத்தை நெருங்கிய தினங்களிலே வளர்ப்பு கால்நடைகள் குட்டி போடுவது வழக்கம் என்றாலும் சிலநேரங்களில் முறை மாறுவதும் உண்டு. புலிப்பட்டி ஊரின்  அம்மன் கோவில் கொடை வளர்பிறை தினத்தில் கொண்டாடப்படும் கொடை என்பதால் அமாவாசைக்கு   இன்னும் அதிக நாட்கள் இருக்கின்றன. கொடைக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில் வேறு ஆடுகள் ஏதும் குட்டி போடும் பருவத்தில் இல்லாத்தால் ஐயப்பாவிற்கு பிடித்த செம்மறியையே கோயில் பலிக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை.

இதையெல்லாம் அறியாத ஐயப்பா எப்போதும் போல தாத்தாவுடன் வயலுக்கு போவதும், குட்டிகளுடன் விளையாடுவதுமாக இருந்தான். கொடைக்கு முதல் நாள் தீர்த்தக் குடம் கோயிலுக்கு வந்து தீபாராதனை ஆகும் நேரத்திலே மந்தைக் கிடாவை கொண்டு வந்து ஒப்படைக்கும் போது மற்ற கிடாக்களையும், துள்ளு மறியையும் மறுநாள் மாலை நேரம் கொண்டு வந்து கோயிலில் கட்டிச் செல்வதாக விழாக் குழுவினரிடம் உறுதி கூறி வந்தார் போத்தி. சப்பரம் ஊர் சுற்றி வந்ததும் அதிகாலை நேரத்திலே கிடா வெட்டு நடந்து விடுவதால் கொடை தினம் மாலையே கோயில் மடப்பள்ளி அருகே கிடாக்களையும், துள்ளுமறியையும் கொண்டு வந்து கட்டி விடுவது என்பது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.

(  தொடரும் )

Wednesday, January 30, 2019

துள்ளு மறி



மனிதர்களின் ஆயுட்காலமானது வன்முறை, கலகம், போர்கள், விபத்து, நோய்கள் என்று பல விதமான முறைகளில் முடிவு செய்யப் படுவதை உயிர் கணக்கு என்பார்கள். உலக உயிர் நிலை சமன்பாடு முக்கியம் என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டாலும், உயிர் அழிவைத் தடுப்பதற்காக, தள்ளிப் போடுவதற்காக ஆதிகாலம் முதலே மனித இனம் பலவிதமான தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்களுக்கான மருத்துவம், ஆரோக்கியம் காக்கும் அன்றாட உணவு முறைகள், சுற்றுப்புற சுத்தம் , சுகாதாரம் பாதுகாப்பது போன்றவற்றோடு உயிர்ப்பலி கொடுப்பது என்பதும் முக்கியமான ஒன்றாகும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் என ஒரு ஊரில் இத்தனை உயிர்களை எடுக்க வேண்டும் என்ற எமனது உயிர் கணக்கை சரி செய்யும் விதத்தில் ஆண்டுக்கொரு முறை அந்தந்த ஊர் காவல் தெய்வங்களுக்கு உயிர்பலி கொடுப்பது என்பது நாடு முழுதும் இருக்கும் பழக்கம் என்றாலும், கொடுக்கப்படும் வகைகளில் ஊருக்கு ஊர், தெய்வத்திற்கு தெய்வம் வித்தியாசப்படுகிறது.

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதிலான ஆண்கள் உடல்நலத்திற்காக நன்கு வளர்ந்த கிடாக்களையும், சேவல்களையும், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என குழந்தைகள் முதல் பல தரப்பிலான பெண்களையும் மற்றும் கர்ப்பவதிகளையும், அவர்கள் கர்ப்பத்தில் உள்ள சிசுக்களையும் கொள்ளை நோய்களில் இருந்து காப்பாற்ற சினை ஆடுகளையும், கைப்பிள்ளைகளான தொட்டில் குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்க புதிதாகப் பிறந்த குட்டிகளையும் பலியிடுவது சில ஊர்களில் வழக்கம்., உடல் பாகங்களை தாக்கும் நோய்களில் இருந்து மக்களைக் காக்க இளங்கிடாக்களை அறுத்து சாமியாடிகள் இரத்தம் குடிப்பது, இருதயம், நுரையீரல், குடல் போன்ற உள்ளுறுப்புகளை எடுத்து சுவாமிகள் முன் படையலாக இலையில் வைப்பது என பலிகள் பல விதம்.  அப்படியான உயிர்பலி இடும் முறையால் நமது கதைக்களமான புலிப்பட்டியில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டதே இந்ததுள்ளு மறிகதையாகும்.


துள்ளு மறி

வருடா வருடம் பெய்யும் மழைப்பொழிவு அளவையும், மணிமுத்தாறு அணையில் தேக்கப்பட்டுள்ள  நீர் இருப்பின் கொள்ளளவையும் பொறுத்தே புலிப்பட்டி ஊரில் பயிர் செய்யப்படுவதால் பொங்கலுக்கு முன் சரியாக யாரும் நெல் அறுவடை செய்வதில்லை. நடுவை செய்துள்ள நெல் வகையின் பயிர் நாள் கால அளவு மற்றும் தட்ப, வெப்ப நிலையைப் பொறுத்து மார்கழி தொடங்கி, தை, மாசி, பங்குனி வரை தொடர்ந்து அறுவடை நடந்து கொண்டுதான் இருக்கும். அறுவடை நடந்து கொண்டிருக்கும் போதே பெரும்பாலும் வியாபாரிகள் வயலுக்கே வந்து விவசாயிகளிடம் நேராக விலை பேசி வாங்கிச் சென்று விடுவார்கள். அனைவரிடமும் பண நடமாட்டம் இருக்கும் நேரம் என்பதால் சித்திரை மாத அம்மன் கோயில் கொடைக்கு தை மாதம் முதலே புலிப்பட்டி ஊரில் வரி பிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

புலிப்பட்டி ஊரில் அம்மன் கோயில் கொடை என்பது மிகவும் விசேஷமான ஒரு திருவிழாவாகும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு ஊருக்கு வராதவர்கள் கூட அம்மன் கோவியில் கொடைக்கு கண்டிப்பாக வந்து விடுவார்கள். நெல்லை மாவட்ட மற்ற ஊர்களைப் போலவே புலிப்பட்டியிலும் முத்தாரம்மன் மற்றும் முப்பிடாதி அம்மன்களே பிரதான அம்மன்கள். முத்தாரம்மன் கோயில் ஊருக்கு நடுவிலும், வடக்கம்மன் கோயில் என்று அழைக்கப்படும் முப்பிடாதி அம்மன் கோயில் ஊருக்கு வடக்கே வயல்களின் நடுவே இருந்தாலும் ஒரே நாளில் தான் இரண்டு கோயில் கொடைகளும் நடக்கும். மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவிலும் புலிப்பட்டி ஊர் நிர்வாகத்தில் இருந்தாலும் வைகாசி மாதம் இரண்டாம் செவ்வாயில் அங்கு தனியாக கொடை விழா நடத்தப்படும்.



பொங்கல் அன்று காலை பத்து மணிக்கு முத்தாரம்மன் கோயிலில் ஊர்ப்பெரியவர்கள் உட்கார்ந்து பேசி விழாக் குழுவை உறுதி செய்வது புலிப்பட்டி ஊரில் காலம் காலமாக இருந்து வரும் வழக்கம். விழாக் குழு பொறுப்பேற்க போட்டி இருக்கும் பட்சத்தில், துண்டுச் சீட்டில் போட்டி இடுபவர்கள் பெயர் எழுதிப் போட்டு குலுக்கல் முறையில் விழாக் குழு தலைவர் முதல் உறுப்பினர்கள் வரை அனைவரும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். ஊர் அம்மன் கோவில்கள் மற்றும் மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில் கொடைகளுக்கு கீழத் தெரு, மேலத் தெரு, வடக்குத் தெரு, தெற்கு தெரு, நடுத் தெரு என அனைவர் வீட்டிற்கும் சென்று அழைப்பிதழ் கொடுத்து வரி வசூல் செய்வது, வெளியூரில் இருக்கும் வரிதாரர்களுக்கு அழைப்பிதழை தபாலில் அனுப்பி கொடை விழாவிற்கு அழைப்பது, மேளக்காரர்கள், வில்லுப் பாட்டு குழு, கரகாட்டக் குழு, வெடிகாரர், பந்தல்காரர், பூக்காரர், தட்டி அலங்கார காரர், ஒலி, ஒளி அமைப்பாளர் போன்றோரை முடிவு செய்து முன்பணம் கொடுப்பது என மாசி, பங்குனி முதல் மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில் கொடை முடியும் வைகாசி மாத காலம் வரை விழாக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பரபரப்பாகவே இருப்பர்.

வழக்கமாக புலிப்பட்டி ஊரில் வருடா வருடம் சித்திரை மூன்றாம் செவ்வாயன்று கொடை நடக்கும். கொடை முன் தினமான திங்கள் கிழமை காலையிலே மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவிலுக்கு செல்லும் சாமி கொண்டாடியானவர், கோவில் கசத்தில் குளித்து, பூஜை செய்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு மாலைக் கருக்கலில் ஊருக்குள் நுழையும் நேரத்தில் மேள தாளத்தோடு உச்சி மேடு சென்று  அழைத்து வருவதில் இருந்து புலிப்பட்டி ஊரில் கொடை ஆரம்பிக்கும். தீர்த்தக் கலசம் கோயில் சென்று அடைந்து, அம்மனுக்கும் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாராதனை முடிந்தவுடன் இருட்டோடு இருட்டாக ஒரு கிடாவை அழைத்துக் கொண்டு போய் ஊர் கால்நடைகள் உயிர் காக்க பெருங்கால் கரை தாண்டி மணிமுத்தாறு பகுதியில் உள்ள மந்தையில் அந்த கிடாவை வெட்டுவார்கள்.

மறுநாள் கொடை தினமான செவ்வாய் காலை பால் குடம் எடுப்பவர்கள் மேள தாளத்தோடு கோயிலில் ஆரம்பித்து ஊர் சுற்றி வருவார்கள். விழாக் குழுவினர் முற்பகல் நேரத்தில் நான்கைந்து அடுப்புகளில் தேக்சாக்கள் எனப்படும் வாயகன்ற பெரிய பாத்திரங்களில் வார்ப்பு பாயாசம் செய்து ஊர் மக்களுக்கு செலவழிப்பார்கள். சுவாமிகளுக்கு உருவ அலங்காரம் செய்பவர்கள் கோயிலில் குடி கொண்டுள்ள பிள்ளையார் தொடங்கி சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, கும்பா முனி, பொம்மக்கா, திம்மக்கா சமேத பட்டவராயன் ஆகியோருக்கு அலங்காரம் செய்து பின் அம்மனுக்கும் முடித்த பின் உற்சவ அம்மன் ஊர் சுற்றி வரும் சப்பரம் என்னும் தேருக்கு அலங்காரம் செய்து முடிக்க இருட்டி விடும்.  

மதிய நேரம் வல்லரக்கன் கதை சொல்லி வில்லுப்பாட்டு தொடங்கி, கோயிலில் குடி கொண்டுள்ள சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, கும்பா முனி,, பட்டவராயன் என இடைவேளை எடுத்து, எடுத்து ஒவ்வொரு தெய்வங்களாகப் பாடி விடிகாலையில் சரியாக அம்மனுக்கு பாடி முடிப்பார்கள். மாலை நேரத்தில் சாமியாடிகள் கரகம் எடுத்து ஊர் சுற்றி வருவார்கள். பின் இரவு எட்டு மணி வாக்கில் அரண்மனை முன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக நையாண்டி மேளம், கரகாட்டக்காரர்களின் ஆடல், பாடல் என ஊரே கூடி வேடிக்கை பார்க்க ஆட்டம், பாட்டம் அமர்க்களப்படும். அம்மன் கோவிலில் இருந்து இரவு பத்து மணி வாக்கில் உற்சவ அம்மனோடு கிளம்பும் சப்பரமானது மேள தாளத்தோடு நடுத்தெரு வழியாக சென்று அங்கங்கே நின்று, நின்று அனைத்து வீட்டு மக்களும் சமர்ப்பிக்கும் பன்னீர், தேங்காய், பழம், பூமாலை ஆராதனைகளை ஏற்று ராந்தக்கல் வழியாக மேலத்தெரு, வடக்குத் தெரு, கீழத்தெரு கடந்து மறுபடியும் அம்மன் கோயிலை அடையும் போது பொழுது விடிந்து விடும்.



சப்பரம் கோவிலை அடைந்து உற்சவ அம்மனை கீழே இறக்கி கோவிலுக்குள் கொண்டு வைப்பதற்கும், வில்லுப்பாட்டு பாடி முடிப்பதற்கும் சரியாக இருக்கும்.அதன் பின் மேளம் அடித்து, சப்பரத்தோடு ஊர் சுற்றி வந்த சாமி கொண்டாடிகள் சாமி ஆடி முடித்ததும் கோயில் சார்பாகவும், தனிப்பட்ட முறையில் நேர்ந்து கொண்டவர்கள் சார்பாகவும் ஆடுகள், கோழிகள் வெட்டி பலி கொடுப்பார்கள். பின் கடைசியாக கைக்குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்க பிறந்து சில நாட்களே ஆன  துள்ளுமறிஎனப்படும் செம்மறி ஆட்டுக் குட்டியை பலியிடுவதோடு கொடை முடிவடையும்.

(தொடரும்)

Tuesday, January 08, 2019

ஊத்துக்குழி - இறுதி பாகம்











பாகம் 12 இதுவும் கடந்து போகும்...


மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.




ஆழிசூழ் உலகானது மூன்று பங்கு நீராலும், ஒரு பங்கு நிலத்தாலும் நிறைந்திருந்தாலும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை நிலங்களாக பிரிந்து இருப்பது போல அலைகடலும் பலவிதமான குணங்கள் கொண்டுள்ளது. ஓயாது அலையடிக்கும் கரைப்பரப்பு போல் இல்லாமல் எப்போதும் அமைதியாக காட்சியளிக்கும் ஆழ்கடலே பெருநாசம் விளைவிக்கும்  பேரலைகளை உருவாக்குகிறது.. சிப்பிகள், பவளப் பாறைகள், சிறு மீன்கள் முதல் பெருந்திமிலங்கள் என பலவகையான உயிரினங்கள் கடலிலும், , எறும்பு, கொசு முதலான சிறுபூச்சிகள் முதல் கொடும் மிருகங்கள் வரையான பலவாழினங்கள் ஐவகை நிலங்களிலும் இருப்பது போலவே மனிதர்களிலும் பலவிதமான குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஐந்தறிவு மிருகங்கள் குணநலன் அறிந்து கொள்ள முடிந்தாலும் ஆறறிவு படைத்த மனிதர்கள் எப்போது, எப்படி மாறுவார்கள் என்பதை மட்டும் யாரும் கணிக்கவே முடியாது. பலவிதமான குணம் படைத்த நமது கதை மாந்தர்களின் மன மாறுதலால் புலிப்பட்டி ஊரின் போராட்ட களமும் ஒரு பகல் பொழுதில் மாறிப்போனதை இந்த இறுதிபாகத்தில் காண்போம்.

தனது குடும்பக் குழந்தைகளும், ஊர்க்குழந்தைகளோடு சேர்ந்து கிறித்துவ மதப்பாடல்களை பாடி, விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டும், மரைக்காயரின் மலையாள மந்திரத்தை அனைவரும் பெருமையாக பேசுவது கேட்டும் மனம் குழம்பிப் போயிருந்த பூசாரி ஏதேதோ சிந்தனைகளால் பீடிக்கப் பட்டு, இரவெல்லாம் தூக்கம் வராமல் தவித்தார். காலையில் எழுந்து வழக்கம் போல அகத்தியர் கோயில் சென்று நடை திறந்து நித்திய பூஜை வேலைகளில் ஈடுபட்டிருந்தவரின் புத்தியை மேலும் குழப்பும் விதமாக உற்றார், உறவினர்கள் புடை சூழ, பல விதமான பொருட்களோடு போத்தி குடுமபத்தார் வந்தனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்களது எறிபந்தங்களால் ராமசாமிப் போத்தி வீட்டுக் கூரை எரியாததாலும், போத்தி குடும்பத்தாரின் இடையறாத எதிர் தாக்குதலாலும் தளர்ந்திருந்த ஈணா, சோணா இருவரும் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்று பல திட்டங்களை யோசித்தவாறு இருந்து பின் விடிகாலைப் பொழுது நேரத்தில் அயர்ந்து தூங்கிப் போயினர். எட்டு மணி அளவில் சின்னப் பண்ணையார் வெளியே செல்ல தயாராகி விட்டதாக பண்ணையாள் வந்து குரல் கொடுத்ததும் அடித்துப் பிடித்து எழுந்து ஓடி, மாடுகளையும், வண்டியையும் தயார் செய்து  ஓட்டிக் கொண்டு ஈணா வர சோணாவையும் தம்முடன் வருமாறு பண்ணையார் கூறவே, குழப்பத்துடன்  முன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டான். பண்ணைவீட்டை விட்டு வெளியே வந்ததும் ஊரின் முக்கிய நாற்சந்தியான ராந்தக் கல் (லாந்தர் கல்விளக்குத் தூண்) வழியாக அகத்தியர் கோவில் நோக்கி போகச் சொல்ல, அதிர்ச்சியில் மாடுகளை இழுத்துப் பிடித்த இருவரையும் அதட்டி ஆற்றுவழிப் பாதையில் வண்டியை திருப்பச் சொன்னார் பண்ணையார்.  
    
ராந்தக் கல் நாற்சந்தி வழியாக செல்லும் போது வண்டியில் இருந்தவாறே போத்தி வீட்டையும், தொழுவத்தையும் பார்த்த பண்ணையார், ஆற்றுச்சாலையில் செல்லும் போது போத்தி வயலருகே நிறுத்தச் சொல்லி வண்டியை விட்டு இறங்கி, நடந்து, இடிக்கப்பட்ட சுற்றுச் சுவரின் வழியாக நுழைந்து எரிக்கப்பட்ட வயல்களையும், ஆங்காங்கே அடித்துக் குவிக்கப் பட்டிருந்த மணல் குவியலையும் சுற்றிப் பார்த்தார். பின் எதுவுமே பேசாமல் வண்டியில் ஏறி அமர்ந்தவர் அகத்தியர் கோயிலை அடைந்ததும் அமைதியாக இறங்கி உள்ளே செல்ல, வண்டியை நிழலில் நிறுத்தி, மாடுகளை அவிழ்த்துக் கட்டி விட்டு, அவசரமாக அவரை பின் தொடர்ந்து ஓடிச் சென்றனர் எதுவும் புரியாத ஈணா, சோணா இருவரும்.

கோயிலுக்குள் சென்ற பண்ணையார், சுற்றும், முற்றும் பார்த்தும் போத்தி கண்ணில் படாமல் போகவே, வழிபாட்டிற்கு வாங்கி வந்த பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டும், நைவேத்தியப் பிரசாதங்களான சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், வடை ஆகியவை தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக இருந்த   போத்தி குடும்பத்தாரை அணுகி, “போத்தி எங்கே…” என்று விசாரிக்க, அடுப்பு எரிக்கத் தேவையான ஓலை, மட்டை, சுள்ளி எடுக்க சென்று இருப்பதாக தகவல் கிடைத்தது. மூலஸ்தான சுவாமிகள், உற்சவர் மற்றும் சுற்றுப் பிரகார மூர்த்திகளுக்கான வழக்கமான பூஜை வேலைகளை முடித்து விட்டு, பூக்கட்டிக் கொண்டிருந்த பூசாரி,  திடீரென கோயிலுக்கு வந்த பண்ணையாரைப் பார்த்து எழுந்து ஓடி வர, போத்தி குடும்பத்தார் செய்ய உள்ள அனைத்து நைவேத்தியப் பிரசாதங்களையும் கோயில் மடப்பள்ளியிலேயே தயார் செய்து கொடுக்குமாறும், தூக்குத்துரை ஐயா சிலைக்கும் அபிஷேக, ஆராதனை அலங்காரங்கள் செய்ய உதவுமாறும் சொல்லிவிட்டு போத்தியை தேடிச் சென்றார் பண்ணையார். கோயிலுக்கு பின்னால் இருந்த நந்தவனத்தின் ஒரு பக்கத்தில் இருந்த தென்னந்தோப்புக்குள் விறகு சேகரித்துக் கொண்டிருந்த போத்தியை பார்த்த பண்ணையார், விறுவிறுவென்று அருகில் சென்று, “போத்தி…” என்று அழைத்தவாறு கையைப் பிடித்துக் கொண்டார்.

திடீரென்று எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் பண்ணையார் தன்னை தேடி வந்து ஆதரவாக கையைப் பிடித்து அன்போடு அழைத்ததால் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்த போத்தியிடம், “நடந்த தவறுக்கெல்லாம் நானே பொறுப்பேத்துகிடுறேன். பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சிடுங்க…” என்று எடுத்த எடுப்பில் இறங்கிப் பேசியதால் மனம் இளகிய போத்தி, “இதுவரை உங்க குடும்பத்திற்கு எதிரா வீம்புக்காக நான் எதுவும் பண்ணலை. நான் கத்துக்கிட்ட கலைகளை பலபேருக்கு கத்துக் கொடுக்கணும்ன்னு என் குருநாதர் சத்தியம் வாங்கியிருந்தார். உங்க பண்ணையில காவல்கார பொறுப்பு ஏத்துகிட்டா அந்த சத்தியத்தை காப்பாத்த முடியாதேன்னுதான் உங்கப்பாட்ட மறுத்தேன். பிள்ளையில்லாத நான் சிஷ்யர்களை பிள்ளைகளாக நினைத்ததால் தான் உங்களையும் அவர்கள் கூட வந்து கத்துக்க கூப்பிட்டேன். என் பிள்ளைகளா நினைச்சுதான் தப்பு பண்ண ஈணா, சோணா கை பெருவிரல்களையும் உரிமையோடு வெட்டினேன். என் பிள்ளைகளை கண்டிக்க நான் யார்ட்ட அனுமதி வாங்கணும்ன்னு நினைச்சது தப்பா…” என்று அடக்கி வைத்திருந்த அத்தனை வருட ஆதங்கத்தையும் கொட்டி விட்டார்.

ஊத்துக்குழி தண்ணி உடம்புல பட்ட உடனேயே எத்தனை நாள் பட்ட ஊத்தமும் இல்லாம போயிடுமேன்னுங்கிறதாலேயும், வயசானவங்க வந்து அலைய வேண்டாமேன்னும் தான் தண்ணி கோரி கொண்டு போய் கொடுக்கச் சொன்னேன். வேற எந்த உள்ளர்த்தமும் கிடையாது.” என்று மேலும் பொருமிய போத்தியின் ஆதங்க பேச்சை அனுசரணையோடு கேட்ட பண்ணையார் மேலும் பல ஆறுதல் வார்த்தைகளை கூறி அவரை ஆசுவாசப்படுத்தினார். பண்ணையார் பின்னாலே ஓடி வந்த ஈணா, சோணா இருவரும் போத்தி கூறிய வார்த்தைகளைக் கேட்டு மனமுடைந்து அவர் காலில் விழுந்து தாம் அறியாமல் செய்த தவறுகளையும், அவருக்கு தொடர்ந்து கொடுத்த தொல்லைகளையும் மறந்து மன்னிக்குமாறு அழுது தொழுதனர்.

என் பிள்ளைகளாக உங்களை நினைத்ததால்தான்  உங்களைப் பழிவாங்கும் எண்ணம் ஏதும் எனக்கு வரலை. அப்படி வஞ்சம் தீர்க்க நினைச்சிருந்தா என் வயலுக்கு தீ வச்ச முதல் நாளே உங்களை தேடி வந்து வெட்டியிருப்பேனேநீங்களா மனசு திருந்தி வரணும்ன்னு இத்தனை நாள் நான் பொறுமையா இருந்தேன்நீங்க செஞ்ச காரியங்களாலேயும் எனக்கு நல்ல பலன்தான் கிடைச்சிருக்குஎன் சொக்காரங்கல்லாம் எப்படிப் பட்டவங்க.. யாரு உண்மையான சொந்தக்காரங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்….” ஆபத்திற்கு உதவாத இந்த புலிப்பட்டி ஊருல இருக்கிற வீடு வயலையெல்லாம் வித்துட்டு என் பொண்டாட்டிங்க ஊரோட போயிடலாம்ன்னு இருக்கேன். எனக்கப்புறம் அவங்களை பார்க்க ஆள் வேணுமில்லா…. “ என்றவர் பண்ணையாரைப் பார்த்துவீட்டை என் தம்பி மவளே வாங்கிகிடுதேன்னு சொல்லியிருக்காஉங்களை பகைக்கப் பயந்து வயலை வாங்க யாரும் முன் வரலை. வயலை வாங்கற அளவிற்கு அம்புட்டு பணமும் இல்லைன்னு என் தம்பி மவளும் சொல்லிட்டாபெரிய மனசு பண்ணி என் எல்லா வயலையும் நீங்களே வாங்கிக்கோங்கஉங்க இஷ்டப்படி என்ன வேணும்ன்னாலும் பண்ணிக்கோங்க…. “ என்ற போத்தியிடம் பண்ணையார், “ஊரை விட்டு போக வேண்டாம்…” என்று எவ்வளவோ மன்றாடியும் போத்தி தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

இப்படியாக அகத்தியர் கோயில் நந்தவனத்தில் நின்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கோயிலுக்குள் நைவேத்தியப் பிரசாதங்களும், தூக்குத்துரை ஐயாவிற்கான அபிஷேக அலங்காரங்கள் முடிந்து வழிபாட்டிற்கு தயாராகி விட்டதால், நெடுநேரமாகியும் போனவர்களை காணோமேஎன்று லெட்சுமணப் போத்தியும், ராமரும்  தேடி வந்து விட்டதால் அனைவரும் கோயில் நோக்கி திரும்பி வந்தனர். தூக்குத்துரை ஐயாவின் ஆளுயர சிலைக்கு புது வேட்டி, துண்டு, தலைப்பாகை கட்டி, பல வண்ண பூ மாலைகள் அணிவித்து, சந்தனப் பொட்டு, சாந்துப் பொட்டு இட்டு கம்பீரமாக காட்சியளிக்க அனைவரும் கை தூக்கி தொழுதனர். அவர் சிலை முன் தலை வாழை இலைகள் இட்டு நைவேத்தியப் பிரசாதங்களோடு, இளநீர், தென்னம்பூரி, வெற்றிலை, பாக்கு, வாழைக்குலை, பல விதமான கனிகள் அடுக்கப்பட்டிருந்தன.




போத்தியும்பண்ணையாரும் வந்ததும் மணி அடித்துகற்பூர ஆரத்தி காண்பித்துஅனைவரும் கண் ஒற்றிக் கொள்ள ராமரிடம் கொடுத்து விட்டுதூக்குத் துரை ஐயாவின் கழுத்தில் இருந்த இரண்டு மாலைகளை எடுத்து போத்தி கையில் ஒன்றும்பண்ணையார் கையில் ஒன்றுமாக கொடுத்து அவருக்கு இவரும்இவருக்கு அவருமாக அணிவிக்கச் சொன்னார் பூசாரிமேலும் பண்ணையார் தன் கையோடு கொண்டு வந்திருந்த இரண்டு பட்டு வேட்டிகளை வண்டியில் இருந்து எடுத்து வரச்சொல்லிபோத்திக்கு தலையில் பரிவட்டம் கட்டியும்தோளில் அணிவித்தும் மரியாதை செய்தார்மனம் மகிழ்ந்த போத்தியும் தனக்கு உடமையான ஒரு வயலை கோயில் கைங்கர்யங்களுக்கு அன்பளிப்பாக அளிப்பதாகவும்மற்ற வயல்களை பண்ணையாருக்கு மனமுவந்து விற்பதாகவும் அறிவித்தார்மனம் நெகிழ்ந்த பண்ணையாரும் போத்தியின் வயல்களுக்கு தகுந்த விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும்ஆனால் தனது உடமையாக்கிக் கொள்ளாமல் அனைத்து வயல்களையும் கோயில்களின் பெயரிலே எழுதி வைக்கப் போவதாகவும் எல்லோர் முன்னும் தெரிவித்தார்.

ஒரு வழியாக பிரச்சினை நல்ல படியாக முடிந்ததால் மகிழ்ந்த அனைவரும் உற்சாகத்தில் ஆரவாரக் குரல் எழுப்பிய நேரத்தில் பூசாரி உடல் முறுக்கிகைகள் பின்னிகண்கள் மூடிபற்கள் நெறித்து அருள் வந்து ஆடத்தொடங்கியவுடன் கூட்டம் அமைதியானது.  “சந்தோசம்பா… ரொம்ப சந்தோசம்… என் மக்கள் எல்லாரும் ஒண்ணானதிலே ரொம்ப சந்தோசம்… எல்லார் மனம் போலயும் எல்லாம் நடக்கும்முடிஞ்சது முடிஞ்சு போச்சு… இனி நடக்கிறது நல்லதாவே நடக்கும்நீர் அடிச்சு நீர் விலகுமா… இருந்தாலும் என் மக்கள் சிலகாலம் விலகி இருந்தாதான் எல்லாருக்கும் விருத்தி… யாருக்கும் எந்த குறையும் வராது…” என்று பூசாரி மூலம் தூக்குத்துரை ஐயாவின் ஆன்மா பேசிய அர்த்தத்தை அனைவரும் உணர்ந்து கொண்ட விதமாய் தலையசைத்து ஆமோதிக்கவேஅனைவருக்கும் திருநீறு கொடுத்து ஆசிர்வதித்த பின்ஆவேசம் குறைந்து  அமைதியானார் பூசாரி

நைவேத்தியப் பிரசாதங்களை அங்கேயே எல்லோருக்கும் விநியோகித்து விட்டு மனநிறைவோடு அனைவரும் அவரவர் வீடு திரும்பினர்ஊருக்குள் சென்ற பின்னும் போத்தி வீட்டிற்கு சென்று சிறிது நேரம் அமர்ந்த பண்ணையார் அனைவருடனும் பேசிக் கொண்டு இருந்த போது ஒரு பேரனை பள்ளிவாசலுக்கு அனுப்பி மரைக்காயரை அழைத்து வரச்செய்து பண்ணையாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் லெட்சுமணப் போத்திபின் சிறிது நேரம் கழித்து பண்ணையாரோடு போத்தியும் வண்டி கட்டிக் கிளம்பி லெட்சுமணப் போத்திமரைக்காயர் மற்றும் ராமரை அழைத்துக் கொண்டு ஆரோக்கியம் ஐயாவைச் சந்திக்கச் சென்றார்ஞாயிற்றுக் கிழமை சபை தேவாலயத்தில் சிறப்பு பூஜை முடித்து ஓய்வாக இருந்த ஆரோக்கியம் ஐயா அனைவரும் ஒன்றாக வந்து கூறிய விஷயங்கள் அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டுபோத்தி மற்றும் பண்ணையாரின் பெருந்தன்மையைப் போற்றி வாழ்த்தினார்.

தம்பி லெட்சுமணப் போத்திமருமகன் ராமர்மரைக்காயர்ஆரோக்கியம் ஐயா மற்றும் பண்ணையாரோடு அனைத்து விஷயங்களையும் நன்கு கலந்தாலோசித்த பின் அனைவரும் ஒன்றாக கிளம்பி கல்லிடையில் இருந்த பத்திர எழுத்தரின் வீட்டிற்கு சென்று வயல்களை கோயில்களுக்கும்வீட்டை ராமர் பெயருக்கும் மாற்றி எழுத வேண்டிய விவரங்களை தெரிவித்தார்கள்ஞாயிற்றுக்கிழமை பதிவாளர் அலுவலகம் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த பத்திர எழுத்தர் இரண்டு நாட்களில் அனைத்து பத்திரங்களும் எழுதி தயார் செய்து எடுத்து வந்து காண்பிப்பதாகவும்திருத்தம் ஏதும் இல்லை என்றால் புதன்கிழமை அன்று பத்திரம் பதிவு செய்து விடலாம் என்றும் உறுதி கூறவே மனநிறைவோடு அனைவரையும் அழைத்துக் கொண்டு புலிப்பட்டி ஊர் திரும்பினார் போத்தி.

அன்று மாலை தொழுகையை முடித்து வந்த மரைக்காயரை பெரிய பண்ணையாரம்மாவின் உடல்நிலைமை சோதிக்க பண்ணையார் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றார் லெட்சுமணப் போத்திநாடி பிடித்தும்பூசாரி கொடுத்த மருந்து குளிகைகளையும்கஷாயப் பொடிகளையும் வாங்கிப் பார்த்தும் சோதித்த மரைக்காயர் அனைத்தும் நல்ல மருந்துகளே என்றும், “தோலில் மினுமினுப்பு ஏறிவிட்டதால் அரிப்பு நோய் குறைந்திருக்குமே..” என்று கேட்க பெரிய பண்ணையாரம்மாவும் அதை ஆமோதித்தார்அந்தி பூஜைகள் முடித்து பிரசாதங்கள் கொடுக்க வந்த பூசாரியை அழைத்துப் பாராட்டிய மரைக்காயர் அவரது சிறப்பான சித்த வைத்திய மருந்துகளை வெகுவாகப் புகழ்ந்தும்தொடர்ந்து கொடுத்து வந்தால் விரைவில் குணமாகி விடும் என்று சொல்லவும் மனம் குளிர்ந்துமகிழ்ந்தனர் பூசாரியும்சின்னப் பண்ணையாரும்.

ராமசாமிப் போத்தி குடும்பத்தோடு ஊரை விட்டு போக இருப்பதால் தங்களுக்கு துணையாக புலிப்பட்டி ஊரிலே இருக்குமாறு சொல்லி தொடர்ந்து மகள் சீதையும்பேரன்களும்மருமகனும் வற்புறுத்தவே கூப்பு வேலையை விட்டுவிட முடிவு செய்தார் லெட்சுமணப் போத்திமறுநாள் காலை மலையேறும் வண்டிகளோடு மரைக்காயரை சேர்த்து அனுப்பும் பொழுது அடிக்கடி புலிப்பட்டி ஊருக்கு வந்து செல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டு பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர் போத்தி குடும்பத்தார்செவ்வாயன்று பத்திர எழுத்தர் தான் எழுதிய பத்திரங்களை புலிப்பட்டி ஊருக்கு எடுத்து வந்துபோத்தி குடும்பத்தினரோடு சென்று பண்ணையாரிடம் காண்பித்து ஒப்புதல் வாங்கிச் சென்றார். மறுநாள் புதன்கிழமை பத்திரம் பதிந்து முடித்து வந்தவுடன் தனது மனைவியரோடு அவர்கள் தாய்வழி ஊரான வைராவிகுளத்திற்கு கிளம்பிப் போன ராமசாமிப் போத்தியையும், அவரது இரண்டு துணைவியரையும் அவர்கள் காலம் முடியும் வரை ராமர் குடும்பத்தினர் அடிக்கடி சென்று பார்த்து வந்தனர்.  

போத்தி ஊரை விட்டுப் போவதற்கு தாங்கள் காரணமாகி விட்டோமே என்று இரண்டு இரவு, பகலாக மனம் புழுங்கிய ஈணா, சோணா இருவரும் செவ்வாய் கிழமை காலையிலே சென்று பண்ணையாரை சந்தித்து தாங்களும் புலிப்பட்டி ஊரை விட்டுப் போகப் போவதாக கூறவும் பண்ணையார் மறுத்தார். ஆனாலும் விடாது இருவரும் பலமுறை மன்றாடியதால் மனதை மாற்றிக் கொண்டவர் குற்றாலத்தில் இருக்கும் அவரது தோட்டத்தில் சென்று தங்கி மேற்பார்வை பார்த்துக் கொள்ளச் சொன்னார். பத்திரங்களை பண்ணையாரிடம் காண்பிக்க வந்த ராமசாமிப் போத்தியை பார்த்து மறுபடியும் ஒரு முறை அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டு விட்டு உடனடியாக ஊரை விட்டு கிளம்பிச் சென்ற ஈணா, சோணா இருவரும் ஆயுள்காலம் முடியும் வரை அதன்பின் புலிப்பட்டி ஊருக்குள் வரவே இல்லை.

பத்திரம் காண்பிக்க வந்திருந்த நேரத்தில் ஈணா, சோணா இருவரும் ஊரை விட்டு கிளம்பியதால் மனம் சோர்ந்திருந்த பண்ணையாரிடம் ஆறுதல், தேறுதல் வார்த்தைகள் கூறிய ராமசாமிப் போத்தி, “அன்பிலும், பண்பிலும், சிலம்பம், வர்மம் போன்ற தற்காப்புக் கலைகளிலும் தலைசிறந்த தனது சிஷ்யரான ராமரையும், அவரது மகன்களையும் வேண்டுமானால் பண்ணைக் காவலுக்கும், வயல் வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறவே பண்ணையாரும் உடனே ஒப்புக் கொண்டார். சீதையம்மாளையும் தினம் பண்ணை வீட்டிற்கு வந்து பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் தரச் சொல்லுமாறும், தன் தாய் மற்றும் மனைவிக்கு ஒத்தாசையாக அடிக்கடி வந்து செல்லுமாறும் லெட்சுமணப் போத்தியிடம் வேண்டி கேட்டுக் கொண்டார்.



அதன்பின் ராமரது குடும்பத்தினர் பண்ணையார் குடும்பத்தினாரோடு ஒன்றி, ஒத்துப் போய் தலைமுறை, தலைமுறையாக ஒத்துழைப்பாக இருந்து வந்ததால் புலிப்பட்டி ஊரில்  தனிப்பட்ட மரியாதை பெற்று பண்ணையார் குடும்பத்திற்கு அடுத்த படியாக இன்று வரை காலம், காலமாக ஊராரால் மதிக்கப் பட்டு வருகின்றனர். அவர்களது குடும்பமும் வாழையடி, வாழையாக ராமசாமிப் போத்தி வீடு இருந்த இடத்தில் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். நமது கதையின் அனைத்து காட்சிகளுக்கும் சாட்சியாக ஊத்துக்குழியும், அகத்தியர் கோயிலும், அருவமான உருவமாக ஐயா தூக்குத்துரையும் சிங்கம்பட்டி ஊரில் ஆண்டாண்டு காலமாக அருள்பாலித்து வருகின்றனர்.

( முற்றும் )

நன்றி. வணக்கம்.