Tuesday, October 25, 2011

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



           சிங்கப்பூரில் கொண்டாடிய தீபாவளி விருந்தின் சில படங்கள்                உங்கள் பார்வைக்கு....


         இலை எல்லோருக்கும் போட்டாச்சா... 



நம்ம வேகத்துக்கு சப்ளை இல்லையே....


நம்ம ரெண்டு பேரும் சாப்பிட்டு... சாப்பிட்டு விளையாடுவோமா....


எப்பா...பேரர்... எல்லா தட்டும் காலி...

 


இன்னும் ஏதாவது வருதா.....


சாப்பிட்டு முடிச்ச பிறகு குரூப் போட்டோ எடுத்தா தொப்பை தெரியாம இருக்க எப்படியெல்லாம் தம் கட்ட வேண்டியிருக்கு....


 விருந்துக்கு பின் ஒரு விளையாட்டு....


விருந்துக்குப் பின் எல்லோரும் வித்தியாசமாய் போட்டோ எடுக்க இடம் தேடித் திரிய.... அம்மையப்பனே உலகம்... உலகமே அம்மையப்பன்...  என    ஓரமாய் கிடந்த சோபாவில் ஒய்யாரமாய் அமர்ந்து எடுத்த                     மங்காத்தா போஸ் படங்கள்...

 


 
இன்று இரவு சிங்கப்பூரில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் வந்து நாளை தீபாவளி காலை வீட்டை அடையுமாறு பயணத்திட்டம்.


நன்றி. வணக்கம்.

Saturday, October 22, 2011

புதுமனை புகுவிழா அழைப்பிதழ்...



அன்புடையீர்,
வணக்கம்.
நலம். நலமறிய அவா.
வீட்டைக் கட்டிப் பார். கல்யாணம் பண்ணி பார் என்பது முதுமொழி. கல்யாணம் செய்து விட்டு பெருமுயற்சியால் வீட்டைக் கட்டியுள்ளேன். தங்களையும், குடும்பத்தார், உற்றார், உறவினர், சுற்றார் அனைவரையும் நவம்பர் மாதம் இரண்டாம் நாள் புதன்கிழமை ( 02.11.2011 ) திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, மருதம் நகரில் அடியேன் கட்டியுள்ள இல்லத்தின் புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி.வணக்கம்.
அன்பன் 
(துபாய்) ராஜா
&
குடும்பத்தார்



புகைப்படத்தில் உள்ள வீடு பழைய குற்றாலம் செல்லும் பாதையில் உள்ளது. நண்பர் பலாபட்டறை ஷங்கரோடு சென்றபோது எடுத்தது. நான் தற்போது கட்டி விழா நடக்க இருக்கும் வீடும் இதுபோன்றுதான்.

Wednesday, October 19, 2011

வெளிநாட்டு வேலைக்கு செல்லுபவர்களே...

சிங்கப்பூர் அரசாங்க விதிமுறைப்படி  மேலாளர் பணி முதல் அடிமட்ட ஊழியர் வரை பணிக்காக வரும் அனைவரும் மனிதவள மேம்பாட்டு துறையால் நடத்தப்படும் பணியிடப் பாதுகாப்பு குறித்த கட்டாய வகுப்புகளில் சேர்ந்து, படித்து, தேர்வு பெற்றால் மட்டுமே பணிக்கு சேரமுடியும். அந்த வகுப்புகளுக்கு சென்றிருந்த போது சந்தித்த பலரின் கதையும் மிக உருக்கமானது.



ஏஜெண்டுகளை நம்பி ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை கொடுத்து  இவர்கள் வருவது இருப்பதிலே கடைமட்ட ஊழியர் பணி ஆகும். அதற்கான  சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக ஒன்று  முதல் ஒன்றரை  சிங்கப்பூர் டாலர் பணமாகும்.  எட்டு மணி நேர வேலைக்கு ஒரு நாள்  சம்பளம் சராசரியாக  பத்து சிங்கப்பூர் டாலர்.  எட்டு மணி  நேரத்திற்கு  மேல்  செய்யும் பணிக்கு ஒன்றரை மடங்கு, விடுமுறை நாள் பணிக்கு இரண்டு மடங்கு சம்பளம் என்பதால் ஏஜெண்டுகளிடம் 
கொடுத்த பணத்தை எடுப்பதற்காக உண்ணாமல், உறங்காமல் உயிரை கொடுத்து உழைப்பவர்கள் ஏராளம்.ஏராளம்.


நான் சென்ற வகுப்பு முடிந்து தேர்வு எழுதும் நேரம் வினாத்தாள் கொடுத்தவுடன்  விறுவிறுவென்று விடைகளை எழுதிவிட்டு நிமிர்ந்த நான் எனது அருகில் இருந்தவர் திருதிருவென்று விழித்துக் கொண்டிருப்பது கண்டு என்ன, ஏது என்று கேட்க  எழுதப்படிக்க தெரியாது என்று அவர் கூறிய பதிலால் மிக்க அதிர்ச்சியடைந்தேன். என் அதிர்ச்சிக்கு காரணம் அன்று வகுப்பில் தமிழர்கள் அதிகம் இருந்ததால் தமிழில் தான் பயிற்சி நடந்தது.வினாத்தாளும் தமிழிலேதான் இருந்தது.அன்று  வந்திருந்த வகுப்பாசிரியரும் தமிழர் என்பதால் அவரை அழைத்து விபரம் கூறினேன். இதுபோன்று அன்று பலர் வந்திருப்பதாக கூறி என்னை மேலும் அதிச்சிக்குள்ளாக்கினார் அவர்.


 எனது அருகிலிருந்த எழுதப்படிக்க தெரியாதவர்  எங்கெங்கோ கடன் வாங்கி இந்தியப்பணம் இரண்டு லட்சம் கொடுத்து அந்த பணிக்கு வந்துள்ளார். அந்த பணத்திற்கு ஊரில் ஒரு காய்கறிக்கடையோ, டீக்கடையோ, பெட்டிக்கடையோ
வைத்திருந்தால் கூட குடும்பத்தோடு நிம்மதியாக ஊரில் காலம் கழிக்கலாம்.


உலகின் 180 நாடுகளில் மூன்று கோடிக்கு மேல் இந்தியர்கள் உள்ளனர். இதில், சுமார் இரண்டு கோடி பேர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்கள் போலி ஏஜன்டுகளிடம் சிக்கி தவிக்கும் நிலையும், படிக்கச் செல்லும் மாணவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதும், குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவம் கிடைக்க போராட வேண்டிய நிலையும் தற்போது தலை தூக்கி வருகிறது.


இந்தியாவிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, கனடாவுக்கும், சவுதி அரேபியா, துபாய், குவைத் உட்பட வளைகுடா நாடுகளுக்கும் வேலைக்காக செல்பவர்கள், போலி ஏஜன்டுகளால் ஏமாற்றப்படுவது அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில், பல்வேறு நகரங்களில், பல ஆயிரம் தமிழர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்கள் மூலம் அவர்களின் நிலை விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் உள்ளன. மத்திய அரசும் அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


சென்ற ஆண்டு மும்பை போலி ஏஜன்டுகளை நம்பி மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற 80 பேர் அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு, உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில்  தமிழகம் வந்தடைந்தனர். பஞ்சாபிலிருந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு வேலைக்கு சென்ற 63 பேர் ஏமாற்றப்பட்டு தாயகம் திரும்ப வழியின்றி, ஆறு வருடங்களாக வீதிகளில் தவித்ததாகவும், அதில் ஐந்து பேர் அங்கு இறந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகின.


வெளிநாடுகளுக்கு அரசு மூலம் அனுப்பப்படுபவர்கள் மற்றும் படித்தவர்களுக்கு அவ்வளவாக பிரச்னையில் சிக்குவதில்லை. "எல்லாரும் வெளிநாடு போய் சம்பாதிக்கின்றனர்; நாமும் போவோம்' என்று, படிக்காதவர்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் அங்கு என்ன சம்பளம், என்ன வேலை, பாதுகாப்பு உத்தரவாதம் பற்றிய அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல், போலி ஏஜன்டுகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். போலி ஏஜன்டுகளிடம் ஏமாறாமல் இருக்கவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் உள்ள கஷ்ட, நஷ்டங்கள் குறித்தும், நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் மூலம் மக்கள் மத்தியில் குறிப்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.


துபாய், சவுதி அரேபியா உட்பட 17 வெளிநாடுகளில் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களை மீட்க, "இந்தியர்கள் நல நிதி'க்காக மத்திய அரசு நான்கு கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. இத்துடன் விழிப்புணர்வு பிரசாரத்திற்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். விழிப்புணர்வு பிரசாரத்திற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக சேவை அமைப்புகளும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஏமாற்றும் ஏஜன்டுகளை தண்டிக்க போதுமான அளவில் தற்போதைய சட்டத்தில் இடமில்லை. ஏமாற்றும் ஏஜன்டுகளைத் தண்டிக்க, அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளைத் தண்டிக்க, குடியேற்றச் சட்டத்தில் மாற்றம் செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள், அங்கு இனவெறி தாக்குதலுக்கு உள்ளாவதும் தொடர்கிறது.


முன்னர் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்களில் 71 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கும், 8 சதவீதம் பேர் பிரிட்டனுக்கும், 7.6 சதவீதம் பேர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றனர். அமெரிக்கா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 56 சதவீதமாகக் குறைந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் நாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் படிப்பு உதவி வசதி, படிக்கும் போதே வேலையும் தேடிக்கொள்ளும் நிலையும் உள்ளதால், இந்தியாவைச் சேர்ந்த லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் தற்போது அங்கு படித்து வருகின்றனர்.


இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய மாணவர்கள் மீது கிட்டத்தட்ட இரண்டாயிரம் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. பல இடங்களில் இனவெறி தாக்குதலும் நடத்தப்பட்ட போதும் கூட, அந்நாட்டு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இனவெறி தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்திய மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்காக வழங்கப்பட்ட விசாக்களுக்கான விதிமுறைகளை அந்நாடு, கடந்த ஆண்டு  மார்ச் மாதம் முதல் மிகவும் கடுமையாக்கியுள்ளதால், அறுபது சதவீதம் இந்திய மாணவர்களின் விசா நிராகரிக்கப்பட்டுள்ளது.


வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்களுக்கு, இந்தியர்களாலேயே பிரச்னை ஏற்படும் நிலையும் தலை தூக்கியுள்ளது. மலேசியாவில் இந்துக்களுக்கு சம உரிமை கோரியும், இந்து கோவில்கள் இடிக்கப்படுவதை தடுக்கவும் அங்குள்ள இந்தியர்கள் ஒன்றிணைந்து, "இன்ட்ராப்' என்ற அமைப்பு மூலம்  நான்காண்டுகளுக்கு முன் கோலாலம்பூரில் போராட்டம் நடத்தினர். இதில், 15 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்த இன்ட்ராப் தலைவர்களின் ஒருவரான உதயகுமார், "மனித உரிமை கட்சி'யை  துவங்கினார்.


"ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இந்தியர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகளை தீர்த்து வைக்க முயற்சிக்கவில்லை. மலேசியாவில் உள்ள இந்தியர்களின் உரிமைக்காக போராடுவதே கட்சியின் வேலையாக இருக்கும்' என்று, உதயகுமார் அறிவித்தார். இது, வரவேற்கப்படக் கூடிய முடிவு என்றாலும் ஆளும் கட்சி அதிருப்தியில் உள்ளதால், இந்தியர்களின் ஒற்றுமை பலத்தை மறைமுகமாகக் குறைக்கும் நோக்கில் தனேந்திரன் தலைமையில், "மலேசிய மக்கள் சக்தி' என்ற பெயரில் புதிய கட்சியை அந்நாட்டு பிரதமர் துவங்கி வைத்துள்ளதாகவும் மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.


பல கட்சி கூட்டணி ஆட்சி நடக்கும் மலேசியாவில், இந்தியர்கள் 20 லட்சம் பேர் உள்ளனர். இது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம். அரசியல் மூலம் தனித்து ஆட்சியைப் பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இந்திய வம்சாவளியினருக்கு இல்லை. ஆளும் அரசை அனுசரித்தே காரியம் சாதித்துக் கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. எனவே, வெளிநாடுகளுக்கு பிழைக்கச் செல்பவர்கள் எப்போதும் உஷாராக இருப்பது நல்லது.

இதே கருத்து குறித்த எனது முந்தைய பதிவுகள்....






புதிதாக வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் சம்பளம், விடுமுறைகள், தங்கும் வசதி, சாப்பாடு போன்ற வசதிகள் குறித்து நன்றாக விசாரித்தறிந்த பின் வெளிநாடு  செல்வது பற்றி சிந்தித்து, செயல்படுவதே சிறந்தது என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மையும், அறிவுரையாகும்.

நன்றி. வணக்கம்.


Tuesday, October 18, 2011

வேண்டும்….வேண்டும்...


                   பற்றற்ற வாழ்க்கைக்கு பழக வேண்டும். 
            முற்றற்ற நிலைக்கு முயல வேண்டும்.
              குற்றற்ற சொல், செயல் புரிய வேண்டும்.


         திக்கற்ற திசையெலாம் திரிய வேண்டும்.
தென்பட்ட தெய்வமெலாம் வணங்க வேண்டும். 
புண்பட்ட மனமெலாம் உதவ வேண்டும்.
கண்பட்ட மொழி, கலையெலாம் பயிலவேண்டும்
பண்பட்ட பலகுணம் பார்க்க வேண்டும்.


மானம் மறை உடை உடுத்த வேண்டும்.
ஞானம் தரும் உணவு படுத்த வேண்டும்.
ஈனமில்லா இடத்தில் உடல் கிடத்த வேண்டும்.

வேண்டும்... வேண்டும் என்ற எண்ணம்
வேண்டாம் என்ற எண்ணம் வேண்டும்.


இறந்த காலம் எளிதாய் கடந்துவிட்டோம்.   
வரும்காலம் வருத்தமின்றி வாழவேண்டும்
    நிகழ்காலம் நேர்மையாய் நாம் நடந்து கொண்டால்....  

Saturday, October 15, 2011

பள்ளி பருவத்திலே…..

எல்லோருடைய வாழ்க்கையிலும் மாணவப்பருவம் என்பது படிப்பைத் தவிர எந்த ஒரு கவலையும் இல்லாத காலகட்டம் ஆகும். அடிப்படை வசதி இல்லாத ஏதோ ஒரு கிராமத்தின் ஆரம்பப்பள்ளி என்றாலும், அமெரிக்க பல்கலைகழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு என்றாலும் குறும்பும், குதூகலமே கூடி இருக்கும்.

 
பொதுவாக பல மாணவர்களும், ஆசிரியர்களும் பாடப்புத்தகத்தில் என்ன கொடுத்துள்ளதோ அதை மட்டுமே மனப்பாடமாக படித்தும்,நடத்தியும் விடுவர். ஆனால் சில ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பாடத்தை விட்டு வெளியேயும், அல்லது பாடத்தையே வேறு கோணத்திலும் சிந்தித்து செயல்படுத்த முனைவர். அதனால் முந்திரிக்கொட்டை, அதிகப்பிரசங்கி என்ற பட்டப்பெயர்களோடு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், அடக்குமுறைகளும் ஆயிரமாயிரம்…. அப்படிப்பட்ட மாணவர்களைப் பற்றிய சில சுவாரசியப் பகிர்வுகளின் தொகுப்பே இந்த பதிவு. 

மாநிலமெங்கும் உள்ள அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளின் அடிப்படை வசதிகள், ஆசிரியர்களின் அணுகுமுறை,  பயிற்றுவிப்பு முறை, மாணவர்களின் புரியும் திறமை , ஆகியவற்றை சோதிப்பதற்காக மாநில அரசின் கல்வித்துறையின் மாவட்ட கல்வி அலுவலர்கள்  ( DEO – District Education Officer )  மூலம் அவ்வப்போது தணிக்கை ஆய்வுகள் நடத்தப்படுவது  நாம் அனைவரும் அறிந்ததே.

அவ்வாறான ஆய்விற்கு DEO வருவதை அறிந்தது முதல் ஆய்வு முடிந்து செல்லும்வரை சம்பந்தப்பட்ட பள்ளி முழுதுமே ஒரு அசாதரண, பரபரப்பான சூழ்நிலை தொற்றிக்கொள்ளும். பள்ளி கட்டிட பராமரிப்பு, வெள்ளையடிப்பது, மற்றும் பல மராமத்து பணிகளில் நிர்வாக அலுவலர்களும், மாணவர்களை தயார்படுத்துதல், பல்வேறு பாட சம்பந்தமான குறிப்புகள், படங்கள்  தயார் செய்து வகுப்பறை முழுதும் ஒட்டி அழகு செய்தல் என ஆசிரியர்களும் முழுவீச்சில் முயற்சிப்பார்கள். இந்த முயற்சிகளிலெல்லாம் சிக்கி, சின்னாபின்னாமாவது மாணவர்களே.

இப்படித்தான் ஒரு ஆரம்பப்பள்ளியிலும் DEO ஆய்விற்காக மாணவர்களை தயார் செய்த ஆசிரியர் ஆங்கிலப்பாடத்தை “ ஏ ஃபார் ஆப்பிள் “ , “ பி ஃபார் பிஸ்கட் “ , “ சி ஃபார் சாக்லெட் “ ….  என்று சொல்லிக் கொடுத்து சரியாக பதில் சொன்னவர்களுக்கு பரிசாக ஆப்பிள், பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றை கொடுத்து ஊக்கப்படுத்தியிருந்தார்.


ஆய்வு தினமும் வந்தது. ஆசிரியரும், மாணவர்களும் , தனித்தனி தட்டுகளில் ஆப்பிள்களும்,பிஸ்கட்டுகளும், சாக்லேட்டுகளும் தயாராயிருக்க மாவட்டக் கல்வி அதிகாரியும் வகுப்பினுள் வந்தார்.



ஆசிரியரிடமும், மாணவர்களிடமும் வழமையாக பேசிவிட்டு ஆங்கிலப்பாடத்திலிருந்து கேள்வி கேட்க ஆரம்பித்தார். “ ஏ ஃபார் …. “ என ஒரு மாணவனைப் பார்த்து கேட்க அவன் “ ஆப்பிள் “ என கூறவும் ஆசிரியர் பெருமிதத்துடன்  DEO கையாலே அந்த மாணவனுக்கு ஒரு ஆப்பிள் பரிசளிக்கச் செய்தார்.

அடுத்த மாணவனைப் பார்த்து “ பி ஃபார்….. “ என கேட்க அந்த  மாணவன் பதில் சொல்லாமல் நிற்பதை கண்ட DEO  சரியாக காதில் விழவில்லையோ என்றெண்ணி, சிறிது சத்தமாக “ பி ஃபார்….. “ என்று கேட்டார். அந்த மாணவனோ இன்னும் தீவிரமாய் யோசிக்க ஆரம்பிக்கவும், “ இதுதானா நீ பாடம் சொல்லிக்கொடுத்த லட்சணம் “ என்பது போல் DEO ஆசிரியரைப் பார்க்க ஆசிரியர் மாணவனை நாக்கை துருத்திக் கொண்டு மிரட்ட கொஞ்சமும் அசராத மாணவன் “ பி ஃபார்….. “, “ பி ஃபார்….. “ என்று இரண்டு முறை யோசனையோடு கூறி  மூன்றாவது முறை முகமலர்ச்சியுடன், பதில் கிடைத்த சந்தோஷத்தில் “ பி ஃபார்….. ஃபிக் ஆப்பிள் “. ( Big Apple ) என்று சத்தமாகச் சொன்னான்.

 ஆம்… பிஸ்கட்டும், சாக்லேட்டும் அவ்வப்போது சாப்பிட்ட அவனுக்கு ஆப்பிள்தான் அரிதான பொருள். அதனால்தான் பெரிய ஆப்பிளாக கேட்டான். அவனது சாமர்த்தியமான பதிலைக் கேட்டு சத்தமாக சிரித்த DEO அவனது கையில் இரண்டு ஆப்பிள்களை தூக்கி கொடுத்து ஆசிரியரையும் பாராட்டி சென்றார்.


இன்னொரு பள்ளி,இன்னொரு ஆய்வு, இன்னொரு DEO, மாணவர்களிடம் சில படங்களை காண்பித்து அது என்ன என்று கேட்டு கொண்டிருந்தார்.


மாணவர்களும்  வாழைப்பழம், மாமரம், ஆடு, மாடு, மணி, மணல் , சணல் அணில்…  என்று போட்டி போட்டுக் கொண்டு பதில்கள்  சொல்லிக் கொண்டிருந்தனர். இப்படியாக பலரிடம் கேட்டு பதில் பெற்றுக் கொண்டிருந்தவர் ஒரு மாணவன் மட்டும் மற்றவர்கள் பதில் சொல்லும் போதெல்லாம் உற்றுக்கவனித்து திருப்தி இல்லாத பாணியில் முகத்தை சுழித்துக் கொண்டிருப்பதை கண்டு அவனிடம் ஒரு படத்தை காண்பித்து கேட்க அவன் மிக தெளிவான முகத்துடன் “ யானையின் படம் “ என்றான்.

மேலும் அவனிடம் அடுத்தடுத்து படங்களை காண்பித்து பதில் கேட்க அவன் அசராமல்  வாழைப்பழத்தின் படம், மாமரத்தின் படம், ஆட்டின் படம், மாட்டின் படம், மணியின் படம் என்று தெளிவான குரலில் வரிசையாக சொன்னான்.  இப்போதுதான் DEO விற்கு அந்த மாணவன் முகம் சுழித்த காரணம் புரிந்தது. ஆம் மற்ற மாணவர்கள் படத்தை படமாக பார்க்காமல் அதில் உள்ளதை உள்ளபடி உருவகப்படுத்தி சொன்னார்கள். இந்த மாணவன் மட்டுமே அவை யாவும் படம் என்ற உண்மையை உணர்ந்து பதில் சொன்னான். 

அவன் அதிகப்பிரசங்கித்தனமாக பேசியதாக எண்ணாத DEO வும் அவனை வியந்து பாராட்டி சென்றார்.
 
மற்றுமொரு  நடுநிலைப் பள்ளியில் நடந்த சுவாரசியமான சம்பவம். பள்ளி தலைமையாசிரியர், கரெஸ்பாண்டட் புடைசூழ ஒரு வகுப்பினுள் நுழைந்த DEO மாணவர்களின் பொது அறிவுத்திறனை சோதிக்கும் விதமாக          “ இராமாயணத்தில் இருந்து கேள்வி கேட்கப்போகிறேன் “ என்று கூறி ஒரு மாணவனை நோக்கி “ ஜனகனின் வில்லை உடைத்தது யார் “ என்று கேட்டார்.

அவரது திடீர் கேள்வியால் அதிர்ச்சியடைந்த மாணவன் ஏதோ ஒரு ஞாபகத்தில் “ நான் இல்லை சார் “ என்றான். அவனது பதிலால் துணுக்குற்ற DEO  இன்னொரு மாணவனை எழுப்பி அதே கேள்வியை கேட்க  “ ஆமாம் சார். அவன் உடைக்கலை சார் “. என்று அவன் கூற வகுப்பிலிருந்த அனைவரையும் வரிசையாக எழுப்பி கேட்டபோதும் எல்லோரும் இதே பதிலை சொல்ல குழப்பமடைந்த DEO வகுப்பாசிரியரைப் பார்க்க அவரும், “ ஆமாம் சார். பசங்க சொல்றது சரிதான். அந்த வில்லை அவன் உடைக்கலை சார் “ என்றார்.

இப்போது கொஞ்சம் கோபமடைந்த DEO தலைமையாசிரியரைப் பார்க்க, அவரும், “ ஆமாம் சார். அப்படி சேட்டை பண்ற  பசங்க யாரும் நம்ம பள்ளியிலே கிடையாது சார். “ என்றார். DEO மேலும் கோபமாகி முகம் சிவந்து நிற்பதை கண்ட கரெஸ்பாண்டன்ட் அவரை தனியே அழைத்துச் சென்று, “ சார். வேணும்ன்னா அந்த உடைந்த வில்லுக்குண்டான பணத்தை பள்ளி நிர்வாகத்திலிருந்து கொடுத்து விடுகிறோம். பெரிய மனது பண்ணி  இந்த பிரச்சினையை மேலும் பெரிதாக்காமல் இத்தோடு விட்டுவிட்டால் ரொம்ப புண்ணியமாப் போகும் “ என்று கெஞ்சிய குரலில் கேட்க மயக்கமடைந்து விழுந்தார் அந்த DEO.









Thursday, October 13, 2011

செய்நன்றியில் சிறந்தவர் கர்ணனா…. கும்பகர்ணனா….

அறை நண்பரோடு ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து, என்னவெல்லாமோ பேசி கடைசியில் நின்ற இடம்தான் பதிவின் தலைப்பு. உங்களின் பார்வைக்கும் அந்த பகிர்வு.

செய்நன்றியில் சிறந்தவர் கர்ணனா…. கும்பகர்ணனா….


செய்நன்றியில் சிறந்தவர் கர்ணனா…. கும்பகர்ணனா…. – இது என்ன கேள்வி கும்பகர்ணன் அண்ணனுக்காக சண்டை போட்டு மாண்டதில் என்ன சிறப்பு… கர்ணன்தான் பாண்டவர்கள் தம் சகோதரர்கள் என்று தெரிந்தும் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க இறுதிவரை துஷ்டன் துரியோதனனுக்காக போராடி உயிர்நீத்தான் என்பதுதான் எல்லோருடைய கருத்தாகவும் இருக்கும்.


இனி விவாதத்திற்கு வருவோம்.


கர்ணன் : கன்னிப் பெண் குந்தி தேவிக்கும், சூரிய தேவனுக்கும் பிறந்து ஆற்றில் விடப்பட்டு, தேரோட்டியால் வளர்க்கப்பட்டு, வில்வித்தை கற்றுத்தேர்ந்து போட்டியொன்றில் அர்ஜுனனோடு மோதவரும்போது துரோணச்சாரியால் இழிகுலத்தான் என அவமானப்படுத்தப்பட்டவன். அந்த நேரம் துரியோதனன் எழுந்து அர்ஜுனனை விட திறமைசாலி என்பதால் கர்ணனின் வில்திறமைக்காக அவனை அங்கதேச அதிபதியாக்கி தன்னுடன் சேர்த்துக்கொண்டு எடுக்கவோ… கோர்க்கவோ… என்ற அளவில் நட்பு கொண்டான். நட்பிற்கு நன்றியாக தன் உடல், பொருள்,ஆவி அனைத்தும் துரியோதனனுக்கு அர்ப்பணம் என்று உறுதிமொழி கூறியவன் கர்ணன்.












குற்றம் 1 : இந்திரன் தன் மகன் அர்ஜுனனுக்காக கர்ணனது கவச,குண்டலத்தை தானமாக கேட்டபோது அறுத்துக் கொடுத்த கர்ணன் அவனது உடல், பொருள், ஆவிக்கு சொந்தக்காரனான துரியோதனனிடம் அனுமதி பெறாதது ஏன்…


குற்றம் 2 : உண்மையான நட்பிற்கும், உறவிற்கும் அழகு தவறு செய்யும்போது இடித்துரைப்பது… சூதாட்டத்தில் பாஞ்சாலியையும் தர்மர் வைத்து தோற்றவுடன் அவளை அவைக்கு இழுத்து வந்து துச்சாதனன் அவமானப்படுத்தும்போது ஆட்சேபிக்காததும்…. அந்த அநியாயத்தை தட்டிக்கேட்டு, தடுக்க முயன்ற கௌரவர்களில் கடைசியானவனான விகர்ணனை பெரியவர்களை எதிர்த்து பேசக்கூடாது என்று திட்டி சபையை விட்டு வெளியே அனுப்பியதும் நியாயமா…



குற்றம் 3 : கண்ணன் மூலம் கர்ணன் தன் மகன் என அறிந்த குந்தி தேவி அவனை பாண்டவர்களோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறு அழைக்கும்போது செஞ்சோற்றுக்கடன் கூறி மறுத்த கர்ணன், அர்ஜுனனை தவிர மற்ற பாண்டவர்களை கொல்லமாட்டேன் என்றும், அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டும்தான் கொடிய நாகபாணம் பிரயோகிப்பேன் என்றும் துரியோதனனிடம் அனுமதி பெறாமல் உறுதிமொழி கொடுத்தது சரியா… தவறா…



குற்றம் 4 : யுத்த தர்மபடி களத்தில் ஆயுதமின்றி நிற்கும் எவரையும் தாக்கக்கூடாது…. ஆனால் நிராயுதபாணியாக நின்ற அபிமன்யுவை அம்பு விட்டு கொன்றது யுத்ததர்மமா…..


குற்றம் 5 : அர்ஜூனனை அழிக்க நாகபாணம் விடும்பொழுது நெஞ்சுக்கு குறிவக்குமாறு பலகளம் கண்ட அனுபவசாலியான தேரோட்டிய சல்லியன் கூறியும் கேட்காமல் தலைக்கு குறிவைக்க கண்ணன் தன் காலால் தேரை ஒரு அடி கீழே அழுத்தி அர்ஜுனனை காப்பாற்றினான். அதனால் கடும்கோபம் கொண்ட கர்ணன், நிலத்தில் அழுந்திய தேரை தூக்க முயற்சித்துக் கொண்டிருந்த சாரதியும், பாரதப் போரில் ஆயுதம் தூக்கமாட்டேன் என சத்தியம் செய்திருந்தவனுமாகிய கண்ணனை அம்பால் அடித்து துன்புறுத்தினான். இச்சம்பவத்தையும், அபிமன்யுவை கொன்றதையும் கூறித்தான் நிராயுதபாணியான கர்ணனை கொல்ல மறுத்த அர்ஜுனனின் மனதை மாற்றினான் கண்ணன்.



குற்றம் 6 : கர்ணன் உயிர்பறிக்க அர்ஜூனன் விடும் அம்புகளெல்லாம் தர்மதேவதையால் மாலைகளாக மாறுவதை கண்ட கண்ணன் வயோதிக அந்தணர் உருவம் எடுத்து கர்ணன் செய்த தர்மத்தையெல்லாம் தானமாக கேட்க, அவனும் ரத்தத்தில் தாரை வார்த்து கொடுத்தான்.நெகிழ்ச்சியுற்ற கண்ணன் என்ன வரம் வேண்டுமென்றாலும் கேட்க சொல்ல ஈரேழு உலகம் இருக்கும் வரை கொடைவள்ளல் என்ற பட்டம் மட்டும் போதும் என்று கூறியதற்கு பதிலாக தன் நண்பன் துரியோதனன் போரில் வெல்ல வேண்டும் என்று கேட்டிருக்கலாமே…. 


குற்றம் 7 : இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாது என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்பதற்காக வாரி, வாரி வழங்கிய கர்ணன் அந்த பொன்னும்,பொருளும் துரியோதனன் கொடுத்ததே என்பததை எப்போதும் மனதில் கொண்டும், எல்லோரிடமும் சொல்லியும் அந்த புகழெல்லாம் துரியோதனனுக்கு கிடைக்கும்படி செய்திருக்கலாம் அல்லவா….




கும்பகர்ணன் : இராவணனின் தம்பி. மிகுந்த பலம் வாய்ந்தவன். தூக்கத்தில் ஆழ்ந்தால் ஆறுமாதத்திற்கு ஒருமுறைதான் விழிப்பான்.
அப்படியொரு நாள் விழித்திருக்கும்போது தான் இராவணன் சீதையை கவர்ந்து வந்தான். உடனே அச்செயலை கண்டித்த கும்பகர்ணன் சீதையை திருப்பி கொண்டுபோய் விட்டுவிடுமாறு அறிவுரை கூறி விட்டு தூங்கச் சென்று விட்டான்.



 சீதை இராவணனால் கடத்தப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருப்பதை அறிந்த இராமன் வானரப்படை திரட்டி வந்து நடத்திய போரில் இந்திரஜித் மற்றும் முக்கிய தளபதிகள் மடிந்தவுடன் தூங்கிக் கொண்டிருந்த கும்பகர்ணனை எழுப்பச் சொன்னான் இராவணன்.






 கடும்போராட்டத்திற்குபின் உறக்கத்தில் இருந்து எழுப்பப்பட்ட கும்பகர்ணன் விவரங்கள் அறிந்து இராவணனிடம் சென்று, “ உன்னை அன்றே சீதையை கொண்டு விடச்சொன்னேனே…. அப்படிச் செய்திருந்தால் இந்த தேவையில்லாத போரே வந்திருக்காதே… இந்திரஜித் போன்ற ஒப்பிலா வீரர்களையே அழித்தவன் என்றால் அவனது பலம் இன்னும் புரியவில்லையா… இப்போதாவது மன்னிப்பு கேட்டு சீதையை இராமனிடம் ஒப்படைத்து விட்டு உயிர்பிழைக்கும் வழிபார் ”. என்று அறிவுரை கூறினான்.அதற்கு இராவணன் எனக்காக போரிட்டு மடியும் அளவு பாசம் கொண்ட மகன்களையும்,நண்பர்களையும் பெற்றும் உன்னையும், விபீஷணனையும் போன்ற துரோகிகளை தம்பிகளாக அடைந்ததற்காக வெட்கப்படுகிறேன் . வேதனைப்படுகிறேன் என்று கூறவும் உனது நன்மைக்காகவும், மீதியிருக்கும் நமது குலம் காக்கப்படவேண்டும் என்பதற்காகவும்தான் உன்னை திருந்தச்சொன்னேன். விதியை யாரால் வெல்ல முடியும். என்று கூறி கும்பகர்ணன் போருக்கு புறப்பட்டு சென்றான்.



கும்பகர்ணன் களத்தில் இறங்கி வானரப்படைகளை துவம்சம் செய்வதை கண்டு திகைத்த இராமன் யார் இந்த இராட்சதன் என விபீஷணனிடம் கேட்டு விவரம் அறிந்தான்.






இனியும் இவனை விட்டு வைத்தால் வானரப்படையை கூண்டோடு அழித்துவிடுவான் என்பதால் அம்பு விட்டு கும்பகர்ணனின் இரு கைகளையும் அறுத்தும் அங்கும், இங்கும் ஓடி அகப்பட்டவர்களை கால்களால் மிதித்து அழிப்பதை கண்ட இராமன் இரு கால்களையும் அறுத்தான்.




சகோதர பாசத்தால் பீடிக்கப்பட்டு மிகுந்த மனவருத்தத்துடன் மாமிசமலை போல் களத்தில் விழுந்து கிடந்த கும்பகர்ணனின் அருகில் சென்ற விபீஷணன் அவனது கண்களில் இருந்து தாரை, தாரையாக கண்ணீர் வடிவதை கண்டு மேலும் கலங்கி காரணம் கேட்க “ மிகுந்த பலசாலியும்,பெரும் உடலும் கொண்ட என்னையே இராமனது பாணங்கள் சிதைத்து சின்னாபின்னப் படுத்தி விட்டனவே..என்னை விட நூறு மடங்கு உருவத்தில் சிறிய இராவணன் மீது இந்த பாணங்கள் பட்டால் அவன் எவ்வளவு வலியும், வேதனையும் அடைவான் என்பதை நினைத்தே என் கண்கள் கலங்குகின்றன ” என்று கூறியவாறே உயிர் நீத்தான் கும்பகர்ணன்.


உங்களது கருத்துக்களையும் கூறுங்கள்….

செய்நன்றியில் சிறந்தவர் கர்ணனா…. கும்பகர்ணனா….

Monday, October 10, 2011

அன்பே... என் அன்பே...


உயிர்ப்பறவை
உடலை
விட்டுச்செல்லும்
 நேரம்...

அன்பே...
என் அன்பே...

உன் 
நினைவுகளோடுதான்
என்
அஸ்தமனம்
  நேரும்...


உறவென்று
சொல்லிட
உலகில்
  பலருண்டு...

உடலொட்டிய
உயிர்
ஒன்றே ஒன்று...

அன்பே...
என் அன்பே...

உரக்கச்
சொல்வேன்
அது
நீயே என்று...


பணிக்காக
பறந்தேன்
  பல நாடு...

அன்பே...
என் அன்பே...

காதல்பிணி
தீர
எப்போதும்
இருப்பேன்
இனி
நான்
உன்னோடு...

Tuesday, October 04, 2011

பயணம்...


ஓரூரில் பிறந்து
ஈரூரில் வளர்ந்து
மூவூரில் படித்து
நாலூரில் முடித்து
ஐந்தூரில் பணிபார்த்து
ஆறூரில் குடியமைத்து
ஏழூரில் எல்லாம் இருக்க
எட்டாத ஊர் செல்லும்வரை
இன்னும் எததனை
    ஊர் வழிப்பயணம் எமக்கு......

Saturday, October 01, 2011

காரணம் என்னடி...



கட்டி அணைத்து
முத்தம் கொடுத்தால்
கன்னங்கள் சிவக்கும்
சரிதான்....


ஆனால்
எட்டி நின்று 
ரசிக்கும்போது கூட
நித்தம்
உன் கன்னங்கள்
  சிவப்பதன்
காரணம் என்னடி...

------------------------

மோதலின் போது
ஒரு கன்னத்தில்
அறைந்தால்
மறுகன்னத்தை காட்டு
    தத்துவம் சொல்லும் நீ.....


மிகுந்த காதலின்போது
உன்னொரு கன்னத்தில்
முத்தமிட்டால்
மறுகன்னம் காட்ட
மறுப்பதன்
காரணம் என்னடி...