Wednesday, March 25, 2015

காலை உடைத்த காஞ்சனா…. - பாகம் 4


உருண்டோடும் இந்த பூமிப்பந்தில் ஆச்சரியங்களும், அதிசயங்களும் மட்டுமல்ல அமானுஷ்யங்களும் நிறைந்ததுதான் பாச,பந்தங்களால் பிணைக்கப்பட்ட மானிட வாழ்க்கை. ஏற்றம், இறக்கம் எத்தனையோ கொண்ட வாழ்வின் பல கட்டங்களில் நான் சந்தித்த பல அசந்தர்ப்பமான சம்பவங்களை ஏற்கனவே





போன்ற பதிவுகளில் பகிர்ந்துள்ளேன். கடந்த பத்தாண்டிற்கு முன் என் வாழ்வில் நடந்த இத்தனை காலமாக தைத்த முள்ளாய் என் மனதில் தழும்பேறியிருந்த இந்த நிகழ்ச்சியும் மேலே குறிப்பிட்டவை  போன்ற ஒரு அனுபவப் பகிர்வே ஆகும்.

பாகம் 2 ஆராய்ச்சி நிறுவனமும், அரசாங்கவிதிகளும்

பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….

மேலே உள்ள முதல் மூன்று பாகங்களை படித்துவிட்டு பின்  இங்கு தொடரவும்.


பாகம் 4 - காணாமல் போன காஞ்சனா….


காஞ்சனா ஆராய்ச்சியகத்தின் தோட்ட பராமரிப்பு மற்றும் சுகாதாரத்துறை ஒப்பந்த நிறுவனத்தில் மேஸ்திரியாக பணிபுரியும் பக்கத்து ஊர்ப்பெண். அவளுக்கு கீழ் ஆண், பெண் என இருபாலருமாக முப்பது பேருக்கும் மேல் வேலை செய்கிறார்கள். அன்றாடம் அனைத்து டிபார்ட்மெண்டுகளிலும் இருக்கும் வேலைகளின் அளவைப் பொறுத்து இருவர், மூவர் என பல குழுக்களாக பிரித்து வேலை பார்க்க அனுப்பிவிட்டு பின் எல்லா இடத்திற்கும் சென்று மேற்பார்வை செய்து அந்தந்த துறைத்தலைவரிடம் கையெழுத்து வாங்கி வரவேண்டியது இவள் பணி.


எங்களது சப் ஸ்டேசனுக்கும் தினம் வந்து செல்லும் போது என்னிடம் கையெழுத்து வாங்கிச் செல்வதால் அறிமுகம் உண்டு. பார்த்தால் சிரிக்கும் அளவு பழக்கம்.  பார்ப்பதற்கு பழைய நடிகை ஒய்.விஜயா போல் களையான சிவந்த நிறமும், செழிப்பான உடல்கட்டும், கவர்ச்சியான முகவெட்டும் கொண்டவள். எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி பழகுபவள் என்பதால் ஆராய்ச்சியகத்தின் அடிமட்டத் தொழிலாளர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை அனைவருக்கும் அவள் மீது ஒரு கண். 


திருமணம் ஆகி கணவரைப் பிரிந்தவள் என்பதாலும், பணிக்கு வரும் போதும், போகும் போதும் தினம் அந்த நேரத்தில் கண்ணில் படும் ஆராய்ச்சியக ஊழியர்கள் அல்லது ஒப்பந்த தொழிலாளர்கள் யாராவது ஒருவருடன் பைக் அல்லது காரில் வந்து செல்வதாலும், எப்போதுமே பகட்டான சேலை கட்டி கைகளில் அடுக்கடுக்கான தங்க வளையல்கள், விரல்களில் வித்தியாசமான மோதிரங்கள், தினம், தினம் கழுத்தில் பெரிய பெரிய புதிய மாடல் செயின்கள் , காதுகளில் தொங்கட்டான்கள், கம்மல்கள் என வித விதமான தங்க நகைகள் அணிந்து ஆராய்ச்சியகம் முழுதும் பந்தாவாய் பவனி வருவதாலும் அவளைப் பற்றி ஏதேதோ கதைகள்.




ஞாயிறன்று காஞ்சனாவிற்கு விடுமுறை என்பதாலும், எதிர்பாராத இடத்தில் திடீரென அவளைப் பார்த்ததுமே எனது அதிர்ச்சிக்கு காரணம். ’இன்னைக்கு லீவாச்சே. இந்த நேரத்தில், இந்த காட்டுப்பகுதியில் உனக்கு என்ன வேலை’ என்று எனது மனதில் பட்டதை அவளிடம் கேட்டும் விட்டேன். ‘இல்லை சார். என்னோட அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. அதான் கஷாயம் வைக்க பச்சிலை பறிக்க வந்தேன்’ என்றாள்.


‘தனியாகவா வந்தாய். இந்த நேரத்தில் இந்த இடத்திற்கு இவ்வளவு நகைகளை அணிந்து வந்திருக்கிறாயே. பயமாக இல்லையா உனக்கு’ என்று கேட்டதற்கு, ‘தெரிஞ்ச இடம். பழகுன ஆள்கள். எனக்கு என்ன சார் பயம்.’ என்று கூறியவள் 'இதையா தேடி வந்தீங்க' என்றவாறே அவள் கையிலிருந்த பந்தை என்னிடம் தந்தாள். அதற்குள் விளையாட்டு முடிந்து விட்டதற்கு அடையாளமாக ஆரவாரக் குரல்களும், விசில் சத்தங்களும் கேட்க நான் மைதானம் நோக்கி திரும்பி விட்டேன்.அன்று அமாவாசை தினம் என்பதால் சீக்கிரம் இருட்டி விட நானும், மணியும் பணி முடிந்து பாலாப்பூர் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு காவலர்களின் மோட்டார் பைக்குகளில் ஏறி சாரஸ்தா வந்திறங்கி மணி அவன் அறைக்கு செல்ல நான் தங்குமில்லம் வந்து சேர்ந்தேன்.


மறுநாள் ஞாயிறு ஓய்வு தினம் என்பதாலும், மதியத்திற்கு மேல் கோட்டி நகருக்கு சென்று வரலாம் என முந்தைய தினமே மணி சொல்லியிருந்ததாலும் மெதுவாக எழுந்து தேசிங்கு செய்த சமையலுக்கு சிறு உதவி செய்துவிட்டு குளித்து சாப்பிட்டு கிளம்பிக் கொண்டிருந்தபோது மணியும், சாஜனும் வர நான், பாண்டே, தேசிங்கு ஆக ஐவரும் கோட்டி கிளம்பிச் சென்றோம். சென்னையின் தியாக.நகரைப் போல இல்லையென்றாலும் 'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை' என்ற அளவிலே கோட்டி நகரில் சில துணிக்கடைகளும், வணிக வளாகங்களும் இருந்தன.இரவு ஏழு மணி வரை சுற்றி விட்டு பின் அங்கு உள்ள ‘கோகுல் சாட்ஸ்’ என்னும் பிரபலமான சிற்றுண்டி கடைக்குச் சென்று விதவிதமான சாட்ஸ் வகை உணவுகளை சுவைத்து பின் அங்கிருந்து கிளம்பி பேருந்து மூலம் பாலாப்பூர் சாரஸ்தா அடைந்து தங்குமில்லம் வந்து சேரும்போது இரவு மணி ஒன்பது ஆகிவிட்டது. சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு மணியும் சாஜனும் கிளம்ப நாங்களும் உறங்கச்சென்றோம். 

திங்கள் வழக்கம் போல் அலுவலகம் சென்று பின் பணிகளுக்காக ஆராய்ச்சி நிறுவனத்தின் உள் சென்றபோது அங்கு சுகாதாரத்துறையின் வாயில் கதவருகே நிறைய கூட்டமாக இருந்தது. ’வாங்க சார். என்னன்னு போய் பார்ப்போம்’ என மணி அழைக்க அருகில் சென்றோம். ஒப்பந்த ஊழியர்களோடு பக்கத்து கிராம முக்கியஸ்தர்கள் சிலரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். மணி அவனுக்கு பழக்கமான ஊழியர் ஒருவரை அழைத்து ‘என்ன ஏது’ என்று விசாரிக்க அவர்கள் சொன்ன விபரம் அதிர்ச்சியாக இருந்தது. ‘ஆம். காஞ்சனாவைக் காணோமாம். சனி மாலை பச்சிலை பறிக்க வந்தவள் அதன்பின் வீடு திரும்பவில்லையாம்’. சனி இரவும், ஞாயிறு முழுதும் அக்கம்பக்க கிராமங்களிலும், சொந்தக்காரர்கள் வீட்டிலும் தேடிய ஊர்க்காரர்கள் திங்கள் காலை ‘அவள் வேலை செய்யும் இடத்தில் விசாரித்து ஏதும் விபரம் கிடைக்கிறதா’ என்று பார்க்க வந்துள்ளார்கள்.


அலுவலகத்திலும், உடன் பணிபுரிபவர்களிடமும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதால் காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கலாம் என்று வந்தவர்கள் கிளம்பிச் சென்றார்கள். தேவையில்லாமல் ஏதும் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக சனி மாலை அவளைப் பார்த்த விபரத்தை மணியிடமும், மற்ற யாரிடமும் கூறவில்லை. அதன்பின் வந்த நாட்களில் எங்கள் துறையில் பணிபுரியும் உள்ளூர்க்காரர் மூலம் அவ்வப்போது காஞ்சனா பற்றி ஏதாவது தகவல் வந்து கொண்டுதான் இருந்தது. ஏற்கனவே திருமணமாகி கணவனைப் பிரிந்து இருந்த காஞ்சனா யாருடனோ ஓடிப்போய் இருக்கலாம் என்பது போன்ற யூகங்களும், யாருடன் சென்றிருக்கலாம் என்பது போன்ற ஆராய்ச்சிகளுமே அவற்றில் முக்கியமானவை.


நான்கைந்து நாட்களுக்குப் பின் ஒரு நாள் காலையில் பணிக்கு ஆராய்ச்சி நிறுவன பேருந்தில் செல்லும் போது மைதானத்தில் போலீஸ் வாகனங்களும், ஆம்புலன்சும் நின்று கொண்டிருந்ததை பார்த்தோம். உள் நுழைவு வாயிலின் அருகில் இருந்த செக்யூரிட்டி அலுவலகத்தில் கையெழுத்து போடும் இடத்திலும் ஒரே பரபரப்பு. விசாரித்தால் முந்தியநாள் இரவு மைதானத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் நாய்கள். கூட்டமாக குரைத்து சண்டை போட்டு கொண்டிருந்தனவாம். திருடர்கள் யாரும் நுழைந்து விட்டார்களா, என்ன, ஏது என்று பார்க்கச் சென்ற இரவுக்காவலர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி தரக்கூடியது. கொன்று புதைக்கப்பட்டிருந்த காஞ்சனாவின் பிணத்தை நாயோ, நரியோ வெளியே இழுத்து போட்டிருந்தனவாம். அதன்பின் செக்யூரிட்டி இன்சார்ஜ் மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்து, ஆம்புலன்ஸ் வந்து அங்கேயே பிரேதப்பரிசோதனை செய்ய முடிவெடுத்து அரசு அதிகாரிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்களாம். 


இரண்டு நாட்களுக்கு பின் வந்த தகவல் மிகவும் அதிர்ச்சியானது. ஆம். காஞ்சனா அணிந்திருந்த தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு யாரோ அவளை பின்புறமாக தாக்கி தலையில் பலமாக அடித்துக் கொன்றிருக்கிறார்கள். ஆராய்ச்சி நிறுவனத்தின் உள் நடந்ததாலும், ராணுவ வீரர்கள் அல்லது போலீஸ்காரர்களே சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதாலும் மூலிகை பறிக்கச் சென்றவள் காட்டுவிலங்கு தாக்கி இறந்துவிட்டதாக கேஸை முடித்துவிட்டார்களாம். சம்பவம் நடந்த அன்று இரவுப்பணியில் இருந்த அனைத்துக் காவலர்களையும் கோல்கொண்டா கோட்டைப் பணிக்கு அனுப்பி விட்டு ஆராய்ச்சி நிறுவனக் காவல் பணிக்கு வேறு ஆள்களை மாற்றிவிட்டார்களாம்.


அடுத்து வந்த வாரங்களில் வேலைகளின் பரபரப்பில் காஞ்சனா குறித்த பேச்சுக்கள் குறைந்து, சில நாட்களில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே அனைவரும் மறந்து விட்டனர் என்றாலும் சனி, ஞாயிறுகளில் மைதானத்தில் விளையாடப்போவதை பலரும் குறைத்துக்கொண்டனர். காஞ்சனா காணாமல் போன சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதத்திற்கு பின் ஒரு நாள் மாலை மைதானத்தை தாண்டி காட்டுக்குள் இருந்த வாட்ச் டவரில் லைட் எரியவில்லை என்று புகார் வந்ததால் எங்கள் டிபார்ட்மெண்டில் இருந்து சாகரும், சங்கரும் தேவைப்படும் உபகரணங்களை எடுத்துக் கொண்டு கோளாறு சரி செய்ய ஆறு மணி அளவில் கிளம்பிச் சென்றனர். எப்போதுமே இரவு பணிக் குழு இரவு ஏழு,ஏழரை மணிக்கு வந்தபின்னே பகல் குழு கிளம்புவது வழக்கம் என்பதால் நாங்களும் காத்துக் கொண்டிருந்தோம். சுமார் ஏழு  மணி அளவில் செக்யூரிட்டி அலுவலகத்தில் இருந்து போனில் எங்களை அழைத்து சங்கரும், சாகரும் காட்டுப்பகுதியில் மயங்கிக்கிடப்பதாக கூற ஐந்து மணிக்கே வீட்டிற்கு சென்று விட்ட கவாண்டேவிற்கு போன் மூலம் தகவல் கூறி விட்டு இரண்டு பேரை மட்டும் டிபார்ட்மெண்டில் வைத்து விட்டு அனைவரும் ஜீப்பை எடுத்துக்கொண்டு, மிகுந்த பதட்டத்தோடு சென்றோம். வழியெல்லாம் கும்மிருட்டாக இருக்க என்ன காரணம் என்று யோசித்த போதுதான் அன்று அமாவாசை என்பது நியாபகத்திற்கு வந்தது.

 ( தொடரும் )

Saturday, March 21, 2015

காதல் ஏக்கம்



பாவை
உன் மீது
கொண்டேன்   
பாங்காய்
காதல் ஏக்கம்


பாழாய்
போனது
பாவி உன்னால்
பலநாள்
 இரவு தூக்கம்


 வஞ்சி
உன்னை
அடைவதே
வாலிபன்  
என்
வலிய நோக்கம்


கொஞ்சிப்
 பேசி
கொடுத்திடு
 குறைவிலா ஊக்கம்

தத்தை 
உன் செயலால்
தணிந்திடுமே
தாங்க முடியா என்
காதல் காய்ச்சலின்
தாக்கம்...


Thursday, March 19, 2015

சோம்பல் சுந்தரி...



சோம்பல் முறிக்கும்
சுந்தரி 
உன் அழகு….

சொக்கிப் போனேன்
 சொல்ல இல்லை 
ஒரு அளவு…

தத்தை நீ
தடையில்லாமல்
நடத்திடும்
தொடர் காதல் களவு…

தடுக்க விரும்பாமல்
தவிக்குது
 என் மன உளவு…

எழில் அழகி நீ
எப்போதும்
என்னைச் சுற்றி
வட்டமிடும்
 காதல் கழுகு…

ஏடாகூடம் ஏதும்
 ஆகிடாமல் இருக்க
எட்டி இருந்தே
 எதற்கும்  பழகு…


Tuesday, March 17, 2015

காதல் மனம்




காய்க்கும்  மரம்
கல்லடி  படும்…

காதலிக்கும்  மனம்
சொல்லடி படும்...

கல்லடி படும்  மரம்
பல கனி கொடுக்கும்...

சொல்லடி படும் மனம்
நல் கவி கொடுக்கும்...

மரம் படும்பாடு
மனம்  அறியும்...

காதல் மனம் பாடும்  பாடல்
பல மனிதர்  அறியாரே…

Friday, March 13, 2015

மச்சக்காரி...



உனக்கே தெரியாமல்
ஒளிந்து இருக்கிறது
உன் உடம்பில்
 எததனையோ மச்சம்…

அங்கெல்லாம்  
 ஒட்டிக் கிடக்கிறது
ஏழை என்
 உயிரின் எச்சம்…

----------------------------------------

அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்...

அறிந்த என் மனம்
பண்ணத்துடிக்குது
உன்  இதழ் கதவை பாழ்….

Monday, March 09, 2015

அப்பு

















பலன் எதிர்பாராத அன்பு மற்றும் நன்றிக்கு சிறந்த உதாரணமாகிய பிராணிகளுடனான எனது நினைவுகளும், நிகழ்ச்சிகளும் ‘மாடல் ஹவுஸ்’ எனப்படும் தாழையூத்து சுந்தரா காம்பவுண்டின் மணி, பிரவுனியில் இருந்து ஆரம்பிக்கிறது. மொத்தம் பதினைந்து வீடுகள் கொண்ட சுந்தரா காம்பவுண்டிற்கு அவை எப்படி வந்து சேர்ந்தன. யார் கொண்டு வந்து விட்டார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. எல்லோர் வீட்டிலும் சாப்பாடு வைப்பார்கள் என்பதாலும், தங்குவதற்கு எவர் தொந்திரவும்,  இடப்பிரச்சினை இல்லாத காரணத்தாலும், அவைகளும் குடியிருப்பின் நிரந்தர உறுப்பினர்களாக அந்நியர் யாரும் அனாவசியமாக உள்ளே நுழைந்து விடாமல் பொறுப்பாய், ஒற்றுமையாய் காவல் காத்து வந்தன. அப்படி மீறியும் ஆடு,மாடு, அன்னிய மனிதர்கள் புகுந்து விட்டால்  இரண்டும் சேர்ந்து விரட்டி,விரட்டி துரத்தி குரைத்து, கடித்து  மறுபடியும் அந்தப்பக்கம் வராதபடி செய்து விடும். 'நாய்க்கு நாய் ஆகாது' என்றாலும் அவை இரண்டும் எப்போதும் சண்டை போட்டதே கிடையாது.  காம்பவுண்ட்டின் சிறுகுழந்தைகள் அனைவரும் அவற்றின் வாலை பிடித்து இழுப்போம். மேலே ஏறி உட்கார்ந்து காதுகளைப் பிடித்து கொண்டு சவாரி செய்வோம். மேலே விழுந்து அமுக்குவோம். எப்போதுமே எங்களிடம் உறுமியதோ, குரைத்ததோ, யாரையும் கடித்ததோ கிடையாது என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.

 பக்கத்தில் ஆடு,மாடு வளர்த்து வந்த மேரி என்பவர்  ஒரு பிளாஸ்டிக் குடத்தை பொதுவான ஓரிடத்தில் வைத்து குடியிருப்போர் வீடுகளில் சாதம் வடிக்கும் கஞ்சி, மற்றும் மிஞ்சும் உணவுப்பொருள்களையும் அதில் போட்டு வைக்குமாறு எல்லோரிடமும் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மற்றொரு குடத்தை வைத்து விட்டு நிறைந்த குடத்தை எடுத்துச் சென்று அவர் வீட்டிலுள்ள ஆடு,மாடுகளுக்கு தீவனமாக அளித்து வந்தார். ஒருமுறை மதியம் பசி தாங்க முடியாத பிரவுனி அந்தக் கஞ்சிப் பானையில் கிடந்த உணவை உண்ண தலையை விட குடத்தின் வாய்ப்பகுதியில் தலை மாட்டிக் கொண்டு விட்டது. பின் மணிதான் சத்தம் போட்டு குலைத்து ஆள்களை அழைத்து நண்பனை காப்பாற்றியது. அந்திமக்காலம் நெருங்கி விட்டால் வளர்த்தவர் கண்படாமல் நாய்கள் மறைந்து விடும் என்பதை உறுதிப்படுத்துவது போல முதலில் மணியும், பின் பிரவுனியும் யார் கண்ணிலும் படாமல் எங்கோ சென்று விட்டன.

சொந்தக்கிராமத்தில் வயல் காவலுக்காக வீட்டுக்கு வீடு நாய் வளர்ப்பார்கள். ஒரு பெரியப்பா வீட்டில் அமுதா என்று பெயரிட்டு செந்நிற புல்டாக் இன பெண்நாய் ஒன்று வளர்த்தார்கள். குலைத்தால் எட்டூருக்கு கேட்கும். குளிப்பதற்கு ஆற்றுக்கோ, வாய்க்காலுக்கோ போகும் போது அதனையும் குழந்தையை போல இடுப்பில் பெரியம்மா தூக்கி செல்லுவது வேடிக்கையாக இருக்கும். வீட்டில் அனைவரும் சாப்பிடும் பொழுது அதற்கும் தனித்தட்டு வைத்து என்ன சாப்பிடுகிறோமோ அதை வைக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடுபவர் முன் அமர்ந்து குலைக்கும். சாப்பிடுபவர் கையை முன்னங்கால்களினால் சாப்பிட விடாமல் தடுக்கும். ஊருக்கு செல்லும் போதெல்லாம் அதற்கு பொறையும், பிஸ்கட்டும் வாங்கிப்போடுவதால் மிக பிரியமாக இருக்கும். அதற்கு ஜோடி வேண்டும் என்பதற்காக சத்யராஜ் என்னும் ஆண் புல்டாக் நாய் பெரியம்மாவின் தம்பி வீட்டில் வளர்க்கப்பட்டது. பேருக்கேற்றார் போல் வில்லத்தனம் பல செய்யும் நாயது.

சிறுவயதில் குடும்பத்தில் மூத்தவரான பெரிய பெரியப்பா மகன் திருமணத்திற்கு சென்றிருந்தபோது உறவினரொருவர் வீட்டில் சடைநாய் (பொமரேனியன்) குட்டி போட்டிருப்பதை பார்ப்பதற்காக சொந்தக்கார மழலைப்பட்டாளங்களோடு அண்ணனும், நானும் சென்றோம். முதல் மாடியிலிருந்து இரண்டாவது மாடிக்கு செல்லும் படிக்கட்டின்  கீழ் அமைந்துள்ள கதவில்லா அறையில் நாயும், குட்டிகளும் மூங்கிலான கோழிக்கூட்டை வைத்து மூடப்பட்டு மேலும் பாதுகாப்புக்கு தகரம் வைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. கோழிக்கூட்டை தூக்கி பார்க்கும் போதே தாய் நாய் குலைக்க ஆரம்பித்துவிட்டது. யாரோ ஒரு குறும்புக்காரன் தகரத்தையும் எடுத்து விட நாய் பயங்கர கோபத்துடன் எல்லோரையும் துரத்த சிலர் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ள, சிலர் மாடிப்படியில் பாய்ந்து ஏற பழக்கமில்லாத இடத்தில் தப்ப வழியில்லாமல் மாட்டிக்கொண்ட நானும், எனது அண்ணனும் செய்வதறியாமல் பதினைந்தடி உயரமான மாடியில் இருந்து தரைக்கு குதித்து விட்டோம். சப்பென்று தரையோடு தரையாக உட்கார்ந்ததால் அண்ணனுக்கு பிட்டியிலும், , சக்கென்று தரையில் கால்களை ஊன்றி உட்கார்ந்ததால் எனக்கு இரண்டு கால்களிலும் சரியான அடி. கிராமம் என்பதால் உடனே கை வைத்தியம் செய்பவரை அழைத்து தடவி கால் சுளுக்கு மற்றும் ரத்தக்கட்டுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது அப்பா வேலை செய்த தொழிற்சாலையின் குடியிருப்பிற்கு மாறிய போது அங்கு எங்களை முதல் ஆளாய் வரவேற்றது டாமிதான். வெள்ளை நிறத்தில் குட்டையாக, குண்டாக, கப்பைக்கால்களுடன் பார்க்கும் போதெல்லாம் வாலை ஆட்டிக் கொண்டு இருக்கும் டாமிக்கு தினமும் எங்கள் வீட்டில் சாப்பாடு வைப்போம் என்பதால் எங்கள் வீட்டு முன்வாசல், பின்வாசல் விட்டு நகராது. பக்கத்து குடியிருப்பில் வளர்த்த டைகர் பார்க்க சாதுவாய் இருக்கும். ஆனால் யாராவது புதிய நபர்கள் வந்தால் நைசாக பின்னாடி சென்று கடித்துவிடும். இது போக கம்யூனிஸ்ட்காரரான கடைசி வீட்டிற்கு மாதமொரு முறை அவர்கள் பழைய வீட்டில் இருக்கும்போது வளர்த்த நாய் வந்து செல்லும். அவர்கள் இருந்த பழைய வீட்டைச் சுற்றி கசாப்புக்கடைகள் நிறைய இருந்ததால் கறி ருசி கண்டு பழகிய அந்த நாய் புதிய வீட்டில்  மாதம் ஓரிரு நாட்களுக்கு மேல் தங்கியதேயில்லை. தொழிற்சாலை உயரதிகாரியின் மிகப்பெரிய பங்களாவில் வளர்த்த உயர்ஜாதி வேட்டை நாய்களை இரவில் காவலுக்காக அவிழ்த்து விட்டுவிடுவார்கள். அவ்வப்போது சத்தமில்லாமல் குடியிருப்பில் புகுந்து விடும் நாய்கள் சத்தம் கேட்டு நாங்கள் விரட்டுவதற்குள் டாமியையும், டைகரையும் குதறி எடுத்து குற்றுயிராக்கி விடும். ஏதோ காட்டுப்பூச்சி கடித்து டாமி இறந்துவிட பக்கத்து வீட்டில் காவலுக்காக டாமி என்று இன்னொரு குட்டி எடுத்து வளர்த்தார்கள். பெயர் ராசியோ என்னவோ அதுவும் கப்பைகால் கொண்டதாகவே இருந்தது.

படிப்பு, முடித்து சென்னைக்கு வந்து வேலை செய்த கம்பெனியில் ஜானி என்னும் டாபர்மேன் நாய் இருந்தது. கறுப்பு நிறத்தில் ‘விடாது கருப்பு’ போல பார்க்க பயங்கரமாக பிரமாண்டமாயிருந்தாலும் குழந்தை போல பழகும். பகல் முழுதும் தனியறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜானி இரவில் அவிழ்த்து விடப்படும். வாரத்தின் சில நாட்களின் மாலை நேரங்களில் பக்கத்தில் இருக்கும் மைதானத்திற்கு அழைத்துச் செல்வேன். பார்ப்பவரெல்லாம் அதன் பிரமாண்ட தோற்றத்தை கண்டு பயந்து ஒதுங்குவர். எகிப்தில் பணி செய்த போது தங்கியிருந்த வில்லாவின் உரிமையாளர் வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயை கண்டு நாங்கள் பயந்தால் அது எங்களை கண்டு பயந்து ஓடும்.

பாபநாசத்தில் வீடு கட்டி குடியேறியவுடன் ரோட்டடி வீடு என்பதால் காவலுக்கு ஒரு நாய் வளர்க்க வேண்டும் பலரிடம் சொல்லி இருந்தேன். பெரியப்பா பேரன்,அவர்கள் வீட்டில் வளர்க்கும் குட்டிநாயை பிள்ளைகள் பாடய் படுத்துகிறார்கள் எனக் கூறி எங்கள் வீட்டில் விட்டுச் சென்றான். ஒரு மாதம் கூட ஆகி இருக்காத குட்டி கறுப்பு வெள்ளை கலந்த நிறத்தில் பார்க்கவே பாவமாய் இருந்தது. தினமும் பால் ஊற்றி, குளிப்பாட்டி பராமரித்ததில் ஓரளவு தேறியது. விடுமுறை முடிந்து சிங்கப்பூர் திரும்பிய பின் போன் செய்யும் போதெல்லாம், ’குட்டி எப்படி இருக்கிறது, என்ன பெயர், குலைக்க ஆரம்பித்து விட்டதா’ என்று கேட்க தவறுவதில்லை.

நான்கைந்து மாதங்களுக்கு பின் மறுபடியும் ஊருக்கு சென்றபோது நன்றாகவே வளர்ந்திருந்தது. வீட்டில் அதற்கு ‘அப்பு’ என்று பெயர் வைத்திருந்தார்கள். குட்டியிலிருந்து சிமெண்ட் தரையில் கிடந்து வளர்ந்ததால் அதன் முன்னங்கால்கள் இரண்டும் சிறிது வளைந்து அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் குள்ளக் கமல்  வித்தியாசமாக நடந்ததால் ‘அப்பு’ என்ற அந்த பெயரும் அதற்கு பொருத்தமாகவே இருந்தது. கழுத்திற்கு பட்டியும் கட்டுவதற்கு சிறிய  இரும்புச்சங்கிலியும் வாங்கி கட்டியும் போட்டாகி விட்டது. தெருவில் யார் சென்றாலும் நன்றாக குலைத்தது. விடுமறை முடிந்து திரும்பும் வரை தினமும் வீட்டின் அருகிலிருந்த ஓடையில் குளிக்க வைத்து நீந்தச் செய்தேன்.

அடுத்த விடுமுறைக்கு சென்ற போது பார்த்தால் வளர்ந்திருந்ததால் சங்கிலியை இழுத்து அறுத்திருந்த அப்பு உணவிற்காகவும், ஓய்விற்காகவும் மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே வீட்டிற்கு வரும். மற்ற நேரங்களில்  வீட்டில் தங்குவதேயில்லை. ஆனால் சீட்டி அடித்து அழைத்தாலோ அல்லது ‘அப்பு’ என்று குரல் கொடுத்தாலோ எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடும். காலையிலும், மாலையிலும் நடைப்ப்யிற்சி செல்லும்போது, விரட்டி,விரட்டி விட்டாலும் அதுவும் கூடவே வரும். தமிழ் வருடப்பிறப்பான சித்திரை விசுவிற்கு முந்திய நாள் வீட்டிற்கு விருந்தாள்கள் வந்திருக்க வி.கே.புரம் பஜாருக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்து பார்த்தால் ரோட்டில் அங்கும், இங்கும், ஓடிய அப்பு பைக்கில் அடிபட்டு கால் உடைந்து பரிதாபமாகக் கிடந்தது. மறுநாள் காலையில் மெதுவாக நடக்க ஆரம்பித்த  பின்னே வீட்டில் அனைவருக்கும் மனது சமாதானமானது. பின் உள்ளூர் அரசாங்க கால்நடை மருத்துவமனையில் இருந்து கம்பவுண்டரை அழைத்து வந்து ஊசி போடப்பட்டது. அந்த வாரத்திலே அம்பை தாலுகா தலைமை மருத்துவமனைக்கும் கொண்டு சென்று ரேபிஸ் தடுப்பூசியும், மற்றும் சத்து டானிக்குகளும் வாங்கி வந்து அறுந்திருந்த சங்கிலியை சரி செய்து கட்டிப்போட்டு வேளாவேளைக்கு உணவும், மருந்தும்  கொடுத்து   கொஞ்சம்  தேறிய பின் மறுபடியும் சங்கிலியை அறுத்து வேலி வழியாக நுழைந்து வெளியே சென்று விட்டது. சரி, பரவாயில்லை என்று விட்டால் புது பழக்கமாக தெருவில் சைக்கிள் மற்றும் பைக்கில் செல்வோரை எல்லாம் துரத்த ஆரம்பித்து விட்டது. 'பைக்கில் அடிபட்டதால் தான் பழிவாங்கும் விதமாக இப்படி செய்கிறது' என்று அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கூறியதாலும், யாரையும் கடித்து விட்டால் பின் வரும் பிரச்சினைகளையும் நினைத்து இது சரிப்படாது என்று எடை கூடிய பெரிய சங்கிலியாக வாங்கி கட்டிப் போட்டு விட்டு நான் விடுமுறை முடிந்து திரும்பி விட்டேன்.

நிரந்தரமாக கட்டி போட்டபின் சேட்டைகள் குறைந்திருந்தத அப்பு காலை ஒருமுறை, மாலை ஒரு முறை மட்டும் நடை பயிற்சிக்கு மட்டும் வெளியில் சங்கிலியுடன் அழைத்துச் செல்லப் படுவதாக வீட்டில் கூறி அறிந்தேன். இரண்டு மாதங்களுக்கு பின் கழிச்சல் நோய் வர வந்து பார்த்து மருந்து கொடுத்த கம்பவுண்டர், ‘இன்னொரு முறை வந்தால் பிழைப்பது கடினம்’ என்று கூறிவிட்டாராம்.அதன்பின் எத்தனையோ கவனமாக உணவும், மருந்தும் கொடுத்து வந்தாலும் வயிற்றில் இருந்த பூச்சிகளின் காரணமாக மறுபடியும் கழிச்சல் நோய் வந்து அப்பு மிகவும் கஷ்டப்பட்டதாக அலைபேசியில் அறிந்தேன். அக்கம்பக்கம் நாய் வளர்ப்பவர்களிடம் விசாரித்தால், ‘நாயின் நோய்க்கு மருந்து நாய்க்கே தெரியும் அதுவே தேவையான மூலிகையை தேடி தின்று சரி செய்து கொள்ளும்’ என்று கூறி உள்ளனர். வீட்டில் என்னை அழைத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்க, ‘அதை  அவிழ்த்து விட்டால் தெருவில் வருவோர், போவோரை மறுபடியும் துரத்த ஆரம்பித்து விடும், எனவே கொண்டு போய் மூலிகைகள் நிறைந்த தலையணைப்பகுதியில் விட்டுவிடுங்கள்.பின் ஓரிரு வாரம் கழித்து அதன் உடல்நிலை தேறியபின் வீட்டிற்கே அழைத்து கொண்டு வந்து விடலாம்’  என்று கூறினேன். அதன்படியே அதனை தந்த பெரியப்பா பேரனையே வீட்டில் அழைத்து பாபநாசம் தலையணைப்பகுதியில் கொண்டு விட்டு வரச்சொல்ல, அவன் வந்து அழைத்துச் செல்லும் போது அப்பு திரும்பி, திரும்பி பார்த்து கொண்டே சென்றதாக வீட்டில் கூறியபோது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.


அந்த மாதம் முடிவதற்குள்ளே விடுமுறையில் சென்ற நான் ஊருக்குச் சென்ற அன்றே பைக்கை எடுத்துக் கொண்டு தலையணைக்கு அப்புவை தேடிச் சென்றேன். அடுத்தடுத்த நாள்களிலும் சென்று அலைந்து திரிந்து தேடினாலும் அப்பு கண்ணில் படவில்லை. அப்புவை கொண்டு சென்று விட்டு வந்து ஏழெட்டு மாதங்கள் ஆகிவிட்டாலும் அதன்பின் இப்போதுவரை மாதம்தோறும் விடுமுறையில் செல்லும் போதெல்லாம் ஊர் திரும்பும் நாள் வரை தினமும் தலையணை சென்று தேடிக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. பாபநாசத்திலோ, தலையணைப் பகுதியிலோ உங்கள் யார் கண்ணிலாவது ‘அப்பு’ பட்டால்  உடனே  தெரிவியுங்கள்.