Thursday, November 15, 2018

ஊத்துக்குழி - பாகம் 4






மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 4 - எட்டுவிரல் ஈணா, சோணா

ராமசாமிப் போத்தி சிலம்பு, வர்மம், குஸ்தி மற்றும் பல கலைகளும் கற்றவர். அவரை ஆசானாக கொண்டு கலைகளை கற்ற சிஷ்யர்கள் பலர். எவர் ஒருவர் போத்தியிடம் சண்டைக் கலைகள் கற்க வந்தாலும் ஏன் கலைகள் கற்க வந்தார்கள், குடும்ப பிண்ணனி என்ன என பல விவரங்களையும் தீர விசாரித்து கேட்டு அறிந்த பின்னரே சேர்த்துக் கொள்வார். சிறு சந்தேகம் வந்தாலும் கண்டித்து திருப்பி அனுப்பி விடுவார். அவரது சிஷ்யர்கள் யாராவது கற்றுக் கொண்ட தற்காப்புக் கலைகளை நியாய, தர்ம்ம் மீறி பயன்படுத்தினாலோ, அடுத்தவரை துன்புறுத்தினாலோ மீண்டும் அந்த விதமாக நடக்காதபடி மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்குவார் என்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் அக்கம்பக்க கிராமங்களில் எல்லாம் ராமசாமிப் போத்திக்கும், அவரது சிஷ்யர்களுக்கும், மதிப்பும் மரியாதையும் இருந்தது.

கிறித்துவமத சமய ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்த தொண்டு நிறுவனமான சகோதரர்கள் சபைக்கு கல்லிடையில் இருந்து புலிப்பட்டி போகும் பாதையில் பள்ளியும், மாணவர்கள் தங்கும் விடுதியும், அதன் பின்னே குளமும், வயல்களும், தோட்டங்களும் இருந்தன. அந்த தோட்டங்களில் இல்லாத பழ மரங்களே கிடையாது. ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பம்பிளிமாஸ், பன்னீர் கொய்யா, ரம்தான், மங்குஸ்தான், பிளம்ஸ் மற்றும் பல மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய அபூர்வ வகை மரங்கள் எல்லாம் அங்கு இருந்தன. மா, பலா, வாழை,  தென்னை, பனை, கொய்யா, நாவல், கொடுக்காபுளி, சிறுநெல்லி, பெருநெல்லி என வகைவகையாக வருடம் முழுதும் காய்த்தாலும் எதுவும் விற்பனைக்கு கிடையாது. மொத்தமாகப் பறித்து பள்ளியில் படிக்கும் மற்றும் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு கொடுத்தது போக மீதி உள்ள பழங்களை  அக்கம்பக்க கிராமங்களிலும் உள்ள குழதைகளுக்கு ஊட்டச்சத்தாக கொடுத்து ஊக்கப்படுத்தி கல்வி கற்க பள்ளிக்கு வரச்செய்வதற்கும் சகோதரர்கள் சபையினர் பயன்படுத்தினர்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், ஒருநாள் இரவு நேரம் ராமசாமிப் போத்தி கல்லிடை சென்று விட்டு சில சிஷ்யர்களோடு புலிப்பட்டி ஊர் நோக்கி வந்து கொண்டிருந்த போது சகோதரர்கள் சபைக்குச் சொந்தமான பள்ளி விடுதியில் இருந்து சத்தமாக கேட்க என்னவோ, ஏதோ என்று உள்ளே சென்று பார்த்தால் அதிர்ச்சி. தோட்டக் காவலாளி ஒருவரும், மற்றும் சில மாணவர்களும் தலை, கை, கால் ,முதுகு என உடம்பெல்லாம் தாக்கப்பட்டு வீக்கமான காயங்களோடு, இரத்தம் வடிந்தவாறு வலி தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருந்தனர். என்ன, ஏது என்று விசாரித்தால் தோட்டத்தில் சில திருடர்கள் நடமாடுவதைப் பார்த்த இரவுக் காவலாளி விடுதியில் தங்கி இருந்த சில பெரிய மாணவர்களை அழைத்துக் கொண்டு சென்று தடுக்க முயன்ற போது திருடர்களால் தாக்கப்பட்டதாக கூறினர். மேலும் முகத்தை துண்டால் மறைத்து கட்டி இருந்த அந்த திருடர்கள் சில மாணவர்களை அடித்து மிரட்டி திருடிய பழங்களை பெட்டிகளிலும், மூட்டைகளுமாக கட்டி அவர்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டு இருப்பதாகவும் கூறினர்.

மாணவர்களை அடித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களையே திருட்டு வேலைக்கும் உடந்தையாகப் பயன்படுத்துவதை கேட்டு மிகவும் ஆத்திரமடைந்த ராமசாமிப் போத்தி, தன் சிஷ்யர்களோடு தோட்டத்திற்குள் புகுந்து திருடர்கள் இருக்கும் அடைந்தார்.  ராமசாமிப் போத்தியைக் கண்ட அந்த இரண்டு முகமூடித் திருடர்களும், “ ஒழுங்கு மரியாதையா எல்லாரும் போய் விடுங்கள். எங்களைத் தடுக்க நினைத்தால் உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை என மிரட்ட, வெகுண்ட போத்தி ஒற்றை ஆளாக களத்தில் இறங்கி சிலம்பம் சுற்ற ஆரம்பித்தார். இரண்டு திருடர்களுக்கும் இருபது வயதுதான் இருக்கும் என்றாலும் அவர்களும் மிக திறமையாகவே கம்பு சுற்றினர். சண்டை ஆரம்பித்த சில நிமிடங்களிலே திருடர்கள் கம்பு சுற்றும் முறையை வைத்து அவர்கள் தன்னிடம் சிலம்பம் கற்றவர்கள்தான் என்பதை போத்தி உணர்ந்து கொண்டார். இரண்டு கைகளிலும் கம்புகளை வைத்து விளையாடிய போத்தியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அடிபட்டு விரைவில் ஒருவன் சரிய, அடுத்த சில நொடிகளிலே அடுத்தவனையும் அடித்து வீழ்த்தினார் போத்தி.

சிஷ்யர்கள் உதவியோடு திருடர்கள் அசையமுடியாமல் கை, கால்களை கட்டிய பின் இருவரின் முகத்தையும் மறைத்துக் கட்டி இருந்த துண்டுகளை அவிழ்த்துப் பார்த்தால், அவர் சந்தேகப்பட்டது போல இருவரும் அவரது பழைய சிஷ்யர்களான ஈணமுத்துவும், சோணமுத்துவும் ஆவர். பண்ணையார் வீட்டையும், வயல்கள், தோட்டங்களைப் பாதுகாக்கும் காவல்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலே ஈணா எனப்படும் ஈணமுத்துவையும், சோணா எனப்படும் சோணமுத்துவையும் சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுத்தார் போத்தி. வேலியே பயிரை மேய்ந்தது போல் காவல்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்களே களவில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் தாக்கிக் காயப்படுத்தியதை தற்போது கண்டிக்காவிட்டால் பிற்காலத்தில் பெரும் பிரச்சினைகளுக்கு காரணமாக இந்த திருடர்கள் இருவரும் மாறி விடுவர் என்பதை உணர்ந்த போத்தி, அந்த சம்பவத்திற்கு பின் ஈணாவும், சோணாவும் கம்பு எடுத்து சுற்ற முடியாத அளவிற்கு கடும்தண்டனை கொடுக்க முடிவு செய்தார்.


என்ன மாதிரியான தண்டனை என்பதை பிரதான சிஷ்யர்களை தனியாக அழைத்து கூறிய போது அவர்கள் நடுங்கிப் போய் விட்டார்கள் என்றாலும், குருவின் சொல் மீறாமல் திருடர்களை மண்டி, இட்டு அமரச் செய்து, இரண்டு கைகளிலும் பெருவிரல் மட்டும் நீட்டி இருக்குமாறு வைத்து விட்டு மற்ற நான்கு விரல்களையும் மடக்கி துண்டால் இறுக்கிக் கட்டி விட்டனர். என்ன நடக்கிறது என்பதை திருடர்கள் பார்க்க முடியாதவாறு ஈணா, சோணா இருவரது கண்களும் இறுக்கமாக கட்டப்பட்டன. உட்கார வைக்கப்பட்ட திருடர்களின் இரண்டு பக்கமும் அமர்ந்த வாக்கில் கையை நீட்டி வைக்கும் உயர அளவிற்கு அடிமரத்துண்டங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டன.

அந்த இருட்டு நேரத்திலும் ரண சிகிச்சைக்கு பயன்படுத்தும் மரத்துப் போகச் செய்யும் மூலிகைச் செடியையும், வெட்டுக்காயம் விரைவில் ஆற உதவும் மூலிகைச் செடியையும்  தேடிக் கண்டுபிடித்து பறித்து வந்த போத்தி, இடுப்பில் எப்போதும் வைத்து இருக்கும் அரிவாளையும் நன்றாக தீட்டி வைத்துக் கொண்டார். மரத்துப் போகச் செய்யும் மூலிகையின் சாறு எடுத்து அடிமரத்துண்டங்களின் மேலிருந்த இருவரது கைகளின் மணிக்கட்டு முதல் பெருவிரல் முழுதும் மூலிகைச் சாறை தடவி இருவரும் சிறிதும் அசைய முடியாதவாறு சிஷ்யர்களை பிடித்துக்கொள்ளச் சொல்லி, என்ன நடக்கிறது என்று இருவரும் உணரும் முன்பே கூரான அரிவாளை ஓங்கி வீசி இரு கைகளிலும் உள்ள பெருவிரல்களை அடியோடு மொத்தமாக வெட்டி எடுத்து விட்டார் போத்தி. இரத்தம் பொங்கி வரவிடாமல் உடனே அரைத்து வைத்திருந்த வெட்டுக்காயம் விரைவில் ஆற உதவும் மூலிகைச் செடிப் பசையை அப்பி துணியால் இருவரது கைகளிலும் இறுகக் கட்டிவிட்டார்.

ஈணா, சோணாவால் தாக்கப்பட்டு காயம் அடைந்திருந்திருந்த அனைவருக்கும் வைத்தியம் செய்து முடித்த போத்தி, வெளியூர் சென்றிருந்த சகோதரர்கள் சபையின் பொறுப்பாளர் வரும் வரை இருவரது கட்டுக்களையும் யாரும் அவிழ்க்க கூடாது என்று கூறி தன் சிஷ்யர்கள் இருவரையும் காவலுக்கு வைத்துவிட்டு வீடு திரும்பி விட்டார். மறுநாள் காலை விஷயம் அறிந்த பெரிய பண்ணையார், தனக்கு தெரிவிக்காமல் தன் வீட்டுக் காவலாளிகளை தண்டித்த ராமசாமிப் போத்தியின் மீது கோபம் கொண்டு குதித்தார். போத்தியை அழைத்து வரச்சொல்லி ஆளனுப்பியும் உடனே பார்க்க வராமல் வயலுக்கு போய் இருப்பதாக தகவல் வந்ததாலும், பண்ணையாட்கள் சென்று சொல்லியும் ஈணா, சோணாவை அவிழ்த்துவிட போத்தியின் சிஷ்யர்கள் மறுத்ததாலும், சின்னப்பண்ணையாரையே நேரே அனுப்பி ஈணா, சோணாவை அவிழ்த்து வரச்செய்தார் பெரிய பண்ணையார். அன்று முதல் ராமசாமிப் போத்தி மேல் கடும்வெறுப்பு கொண்டு பழிவாங்க தக்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்த ஈணா, சோணாவிற்கு இருபது ஆண்டுகளுக்கு பின் பூசாரியை போத்தி மடக்கிப் பிடித்த அன்றுதான் நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது.

(தொடரும்)

பாகம் 5

Sunday, November 11, 2018

ஊத்துக்குழி - பாகம் 3





மேலே இருக்கும் கதைகளை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 3 - பொன்னுசாமி பூசாரி

தென்பாண்டித் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான ஊர்களில் பெரிய, பெரிய ஆலயங்கள் இருந்தாலும் சிறுதெய்வ வழிபாடும் சிறப்பாகவே நடந்து வருகிறது. வீதிகள் தோறும் கோவில்களும், வீடுகள் தோறும் விதவிதமான வழிபாடுகளும் அன்றோட வாழ்வோடு ஆங்குற பிணைந்துள்ளன. ஆமக விதிமுறைகளின் படி கல்சிலைகள் இருக்கும் கோவில்களில் சுவாமி சிலைகளின் அளவிற்கு ஏற்ப ஒரு அடிக்கு இவ்வளவு படி என்று நைவேத்ய பிரசாதங்கள் படைத்து காலை, மாலை இருவேளைகளும் நித்ய பூஜை, புனஸ்காரங்கள் செய்து வழிபாடு நடத்த வேண்டும் என்பதால் பெரும்பான்மையான தென்மாவட்ட கிராம தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் கோவில்களில் உருவச்சிலைகள் அமைக்காமல் பூடம் என்னும் பீடங்களே இருக்கும்.

கோயில் கொடைத் திருவிழாக்களின் போது புது மண், செங்கல் கொண்டு செய்து, சுண்ணாம்பு பூச்சு ஏற்றிய பூடங்களின் மேல் தீர்த்தக்குடங்கள் ஏறிய பின்பு உருவ அலங்காரம் பண்ண தோதாக கம்புகள் கட்டி, வாழைத் தண்டு, மட்டைகளை வகைப்படுத்தி அடுக்கி, அதன் மேல் சந்தனம், மாவு மூலம் கனகச்சிதமாக கைகள், கால்கள், கழுத்து, தலை, மார்பு, முகம் உருவேற்றி மின்னும் பல வண்ணத்தாள்கள் மூலம் கண், காது, மூக்கு, வாய், மீசை, அரிவாள், கத்தி, ஆடை, ஆபரணங்கள் ஜோடித்து ஒட்டி, சுற்றிலும் அலங்காரத் தட்டிகள், மின்னும் பல வண்ண விளக்குகள் பாங்கே கட்டி வில்லுப்பாட்டு கதைகளில் கூறப்படும் காட்சிகளைப் போன்று துடியாய் நிற்கும் சுவாமிகளை கண் முன்னே நிறுத்தும் பழக்கம் காலம்காலமாக நடந்து வருகிறது.

புலிப்பட்டி பண்ணையார் குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட அகத்தியர் கோயில், அம்மன் கோயில்கள் மற்றும் ஊத்துக்குழி சிவன் கோயில்களில் பல நூறு ஆண்டுகளாக காலை, மாலை இருவேளைகளுமே பூஜைகள் தொடந்து நடந்து வருகின்றன. அதற்கெனவே தனியாக பூசாரிக் குடும்பம் காலம் காலமாக உள்ளது. பொன்னுசாமி பூசாரியே தற்போது பொறுப்பில் இருப்பவர். அவரது அப்பா, தாத்தா என தலைமுறை, தலைமுறையாக பண்ணையார் குடும்பத்தின் ஆன்மீகப் பணிகளுக்கு அடித்தளமாக இருந்து வருகின்றனர். 

கோயில் பூஜைகள் மட்டுமல்லாமல் பண்ணையார் குடும்பத்திற்கு விவசாய வேலைகள் மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு பஞ்சாங்கம் பார்த்து நல்ல நாள் குறித்துக் கொடுப்பது, நாள், நட்சத்திரம் பார்த்து பிரயாணத் தேதிகள் மற்றும் பலன்கள் சொல்வது, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பிதுர்கடன்கள்  தவறாமல் செய்வது, பருவகால மாற்ற நோய், நொடிகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுப்பது என பல வழிகளில் உதவி வந்ததால் பூசாரிக் குடும்பத்திற்கு என புலிப்பட்டியில் தனி மரியாதை உண்டு. தவிரவும் சித்து வேலைகளான மந்திர, தந்திரங்களிலும் பரிச்சயமானவர் என்ற பேச்சும் ஊருக்குள் உண்டு.

பொன்னுசாமி பூசாரி வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, யாரிடமும் அதிகம் பேச மாட்டார். தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர். அதிகாலையில் எழுந்து ஆற்றில் சென்று குளித்து விட்டு, அகத்தியர் கோவில் நடை திறந்து, ஆற்றில் இருந்து நீர் சேந்தி வைத்து விட்டு, கோயிலைச் சுற்றி அமைத்துள்ள நந்தவனத்தில் இருந்து பூக்கள் பறித்து, மாலைகளாக தொடுத்து அகத்தியர் கோவில் போக ஊத்துக்குழி சிவாலயம் மற்றும் அம்மன் கோவில்களுக்குத் தனித்தனியாக தென்னை ஓலைகளால் முடைந்து பின்னப்பட்ட பூக்குடலைகளில் எடுத்து வைத்து விடுவார். 

அதன்பின் மடப்பள்ளியில் சென்று அன்றைய நைவேத்திய பிரசாதங்கள் தயாரித்து அவற்றையும் தனித்தனி பாத்திரங்களில் எடுத்து மூடி வைத்து விடுவார். அதன்பின்னே கருவறைக்குள் சென்று முந்தைய நாள் அலங்காரங்கள் கலைத்து, சுவாமிகளுக்கு அபிசேகம் முடித்து, அலங்கார, ஆராதனைகள் செய்து, நைவேத்திய பிரசாதங்கள் படைத்து முடித்து, தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு விநியோகித்தது போக மீதியை தானும் உண்டு விட்டு பின் அகத்தியர் கோவில் நடை சாத்தி, பூட்டி சாவி எடுத்துக் கொண்டு ஊருக்குள் இருக்கும் அம்மன் கோவிலுக்கு வருவதற்கு காலை மணி பத்து, பத்தரை ஆகிவிடும்.

பூசாரியின் இரண்டு மகன்களும், அவருடனே காலையில் வந்து ஆற்றில் குளித்து, நீர் சேந்துவது, பூக்கள் பறித்து கட்டுவது என தந்தைக்கு வேண்டிய உதவிகள் செய்து விட்டு பின் பூக்குடலைகளை எடுத்துக் கொண்டு இளையவர் ஊத்துக்குழி கோவிலுக்கும், பெரியவர் ஊரினுள் இருக்கும் அம்மன் கோவில்களுக்கும் பூஜை செய்ய சென்று விடுவர். பொன்னுசாமி பூசாரி அன்றாடம் அகத்தியர் கோயிலில் இருந்து வரும்போது பண்ணையார் வீட்டில் கொடுப்பதற்காக விபூதி, குங்கும பிரசாதங்கள் எடுத்து வருவார். 

ஊத்துக்குழி கோவிலில் பூஜை செய்து விட்டு வந்து பிரசாதங்களை அம்மன் கோவிலில் வைத்து விட்டு அவர் இளைய மகன் பள்ளி சென்று விடுவான். பெரிய மகனும் அம்மன் கோவில்களில் பூஜை முடித்து பிரசாதங்கள் கொண்டு வந்த பின் அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு பண்ணையார் வீட்டிற்கு செல்வார். சின்ன பண்ணையார் பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார். ஆனால் பெரிய பண்ணையாரம்மா அதிகாலையிலே குளித்து தேவாரம், திருவாசகம் படித்து, பூஜைகள் செய்து பூசாரி கொண்டு கொடுக்கும் விபூதி, குங்கும பிரசாதங்களை நெற்றி நிறைய பூசிய பின்பே காலை உணவு எடுப்பார்.

பெரிய பண்ணையார் இருந்த வரை பண்ணையாரம்மா விசேச நாட்களில் அகத்தியர் கோவிலுக்கும், செவ்வாய், வெள்ளி தவறாமல் அம்மன் கோவிலுக்கும் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். சிறந்த பக்திமானாகிய பெரிய பண்ணையார் மறைவிற்கு பின் பண்ணையாரம்மா வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை என்றாலும் தினமும் காலையும், மாலையும் கோயில் பிரசாதங்கள் வரும் வரை பூஜையறையை விட்டு வெளியே வருவதில்லை. பொன்னுசாமி பூசாரி கோயில் பிரசாதங்களை கொடுத்து விட்டு கோயில் வரவு, செலவு வகை விவரங்களை கணக்குப் பிள்ளையிடம் ஒப்படைத்து விட்டு கொஞ்ச நேரம் பண்ணையாரம்மாவிடம் பேசிக் கொண்டு இருந்து விட்டு பின் வந்து விடுவார்.

மாலை நான்கு மணி அளவில் மறுபடியும் அகத்தியர் கோவிலுக்குச் சென்று மீண்டும் பூக்கள் பறித்து கட்டி மாலை ஆக்கி ஊத்துக்குழி சிவாலயம் மற்றும் அம்மன் கோவில்களுக்குத் தனித்தனியாக  பூக்குடலைகளில் எடுத்து வைத்தது போக மற்றவற்றை அகத்தியர் கோவில் சுவாமிகளுக்கு அணிவித்து சந்தி கால பூஜைகளை முடித்து நடை சாத்தி விட்டு பிரசாதம் எடுத்துக் கொண்டு கிளம்புவார். மாலை நேரங்களில் மடப்பள்ளி வேலைகள் இல்லாத காரணத்தாலும், மகன்கள் பள்ளி விட்டு வந்து படிக்க வேண்டி இருப்பதாலும் அவரே ஊத்துக்குழி கோவில் மற்றும் அம்மன் கோவில்களில் பூஜை செய்து விடுவார். அப்படி ஊத்துக்குழி கோவில் போகும்போதுதான் ராமசாமிப் போத்தி வயலில் இருந்த காய்கறிகள் அவர் கண்ணை உறுத்தின.

பொன்னுசாமி பூசாரிக்கு கோயில் வருமானத்தை தவிர வேறு வருமானம் கிடையாது. கோயில் பூஜைகளுக்கான சன்மானம் வருடம் இருமுறை அறுவடையின் போது பண்ணையார் நெல்லாக அளந்து கொடுத்து விடுவார். எனவே சாப்பாட்டு அரிசிக்கு பிரச்சினை இல்லை. அமாவாசை திதிகள், பவுர்ணமி சிறப்பு பூஜைகள், பஞ்சாங்கம் பார்ப்பது, சித்த மருத்துவம் போன்றவற்றிற்கு பண்ணையார் தட்சணையை பணமாக கொடுத்து விடுவதால் இதர குடும்ப செலவுகளுக்கு சரியாக இருக்கும்.ஆறேழு பேர் கொண்ட குடும்பத்திற்கு குழம்பு, கறி வைக்க காய்கறிகள் வேண்டும் அல்லவா. அதற்காகத்தான் ராமசாமிப் போத்தி வயலில் இருந்த கீரை, காய்கறிகளை பறித்து செல்ல ஆரம்பித்தார்.

ஊத்துக்குழி கோவிலுக்கு சந்தி பூஜை செய்யப்போகும் நேரம் கண்ணில் படும் காய்கறிகளை கவனித்துக் கொள்வார். பின் திரும்பி வரும்போது காலியாக இருக்கும் பூக்குடலைக்குள் கீரை காய்கறிகளை பறித்துப் போட்டு துண்டால் மூடி எடுத்துச் செல்வதால் உள்ளே என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.  பொன்னுசாமி பூசாரி ஒருவர் மட்டுமே அந்த நேரத்தில் நடமாடுவதால்  ராமசாமிப் போத்திக்கு சந்தேகம் இருந்தும், ஆதாரம் இல்லாததால் உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை. ஆனால் அன்று பொன்னுசாமி பூசாரி கையும், களவுமாக வசமாக பிடிபட்டு விட்டார்.

(தொடரும்)

பாகம் 4

Saturday, November 10, 2018

ஊத்துக்குழி - பாகம் 2


நீர் இருக்கும். மோர் இருக்காது



மேலே இருக்கும் கதைகளை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 2 - பலநாள் திருடன்

கண்ணில் படும் காட்சியை எல்லாம் பார்த்து ஏதாவது கணக்குப் போட்டு கொண்டே இருக்கும்.மனித மனம் மிகவும் விசித்திரமானது. விநோதமானது. விபரீதமானது. நம் மனதுக்குள் நொடிக்கு நொடி ஆயிரமாயிரம் வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். ஆனால் மனமோ எது நல்லது, எது கெட்டது என்று பிரித்தறியாது அனைத்திலும் பற்று வைக்கும். பின் அதைப் பற்றியே அடிக்கடி நினைக்க வைத்து ஆசை ஏற்றும். ஆசை வெட்கம் அறியாது. நாள்பட, நாள்பட ஆசையான பற்று வெறி ஆக மாறி விடும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று அனுபவித்து அறிந்த பெரியோர் சொல்லி வைத்தார்கள்.

எந்த ஒரு விஷயத்திலும் பற்று இருக்கலாம். வெறி இருக்கக் கூடாது. நான் நல்லவன் என்பது நம் மீது கொண்ட நம்பிக்கைப் பற்று. நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். நான் மட்டுமே நல்லவன் என்பது அடுத்தவர் மீது குற்றம் கண்டு விமர்சிக்கும் வெறி. ஜாதி, மத, அரசியல் பற்று பொருள், பதவி அடைய ஆசை கொடுப்பதால் வெறியாக மாறி பல விபரீதங்களுக்கு காரணமாகி, கலகங்களும், கலவரங்களும் ஏற்படுகின்றன. அப்படியான ஒரு தனி நபரின் ஆசையால் அமைதியான புலிப்பட்டி ஊரில் ஏற்பட்ட அனர்த்தங்கங்களும், பலரது வாழ்க்கையில் பிரச்சினைப் புயல் அடித்து புரட்டி போட்ட சம்பவங்களின் தொகுப்பே இக்கதையின் சாராம்சமாகும்.


ஆற்றுச் சாலையில் இருந்து ஊத்துக்குழி சிவாலயத்திற்கு ராமசாமிப் போத்திக்கு சொந்தமான வயல்களுக்கு இடையேயான வரப்புகள் வழியேதான் செல்ல வேண்டும். ராமசாமி போத்தி கடும் உழைப்பாளி. காலை முதல் மாலை வரை வயலிலே ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு இருப்பார். பின் மாலை வெயில் அடங்கும் நேரம், ஆற்றில் சென்று குளித்து விட்டு, அகத்தியர் கோயிலை நோக்கி கை எடுத்து கும்பிட்டு விட்டு, கரையோரம் உள்ள நொச்சி செடியில் சில இலைகளைப் பறித்து காதுகளில் செருகி கொண்டு வீடு நோக்கி வந்து விடுவார்.

ஊரின் நடுவே அமைந்துள்ள லாந்தர் கல்லுக்கு (கல்லால் ஆன விளக்குத்தூண்)  தென்பக்கத்தில், மணிமுத்தாறு செல்லும் பாதையின் மேல்பக்கத்தில் தந்தை வழிப்பங்காளிகள் வீடுகள் சூழ்ந்து இருக்க அவரது பெரிய வீடும், தொழுவமும் பக்கத்திலே உரக்குழியும் இருந்தன. எல்லா வளமும் கொடுத்த இறைவன், ஒன்றுக்கு இரண்டு மனைவிகள் இருந்தும் ராமசாமிப் போத்திக்கு குழந்தைச் செல்வம் மட்டும் கொடுக்க வில்லை. எனவே தன் வயல், வரப்புகளில் வளரும் பயிர்களையே தன் பிள்ளைகளாக எண்ணி வாழ்ந்து வந்தார். அவரது அந்த சந்தோஷத்திற்கும் சமீப காலமாக சங்கடம் வந்துவிட்டது.


ராமசாமிப் போத்தி ஆசை ஆசையாக வளர்த்து வரும் பயிர்களில் உள்ள காய்கறிகளுக்கு ஆசைப்பட்ட யாரோ அன்றாடம் மாலை அவர் வ்யலை விட்டுப் போனதும் திருட்டுத்தனமாக பறித்து எடுத்து சென்று கொண்டு இருந்தனர். காய்கறிகள் களவு போவது குறித்து கூட போத்தி கவலைப்படவில்லை. ஆனால் பிள்ளைகள் போல் வளர்த்த செடி, கொடிகளை இழுத்து, ஏறி மிதித்து, ஒடித்துப் போட்டு அழித்து செல்வதைத் தான் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மாலையில் மலர்ச்சியோடு நின்ற செடிகள் மறுநாள்  காலை வந்து பார்க்கும்போது ஒடிந்து உயிர் விட்டு இருப்பதைக் கண்டு, மனம் வெதும்பி கவலையில் கண்ணீர் விடுவதைக் காண்போர் கலங்கி விடுவர்.

ஆரம்பத்தில் ஏதோ மிருகங்களின் சேட்டையோ என்றே எண்ணி வந்தார். பின் வரப்பிலும், வயலுக்குள்ளும் காலடித் தடங்களை பார்த்து இது மனிதர்களின் வேட்டையே என்ற முடிவிற்கு வந்தார். எப்படியாவது அந்த திருடனைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இரண்டொரு நாள் இரவுக் காவலுக்கு செல்ல முயன்றவரை,. “இந்த வயதான காலத்தில் இரவுக்காவலுக்கு செல்ல வேண்டாம்” என்று இரண்டு மனைவியரும் ஒரே குரலில் கூறியதால் மறுத்துப் பேசாமல் மனதை மாற்றிக் கொண்டார்.


ஒரு சில மாலை நேரங்களில் வயலில் இருந்து திரும்பி ஆற்றுக்கு சென்று குளித்து விட்டு வீடு திரும்பும் நேரத்தில் மறுபடியும் வயலுக்குப் போய் பார்த்தாலும் யாரும் பிடிபடவில்லை. ஆனால் ஒரு சந்தேகம் மட்டும் போத்தி மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. உறுதிப்படுத்த தான் முடியவில்லை. அன்று ஏனோ அவர் மனதில் ஏதோ தோண, ஆற்றுக்கு கூட குளிக்கச் செல்லாமல் மேல வயலுக்கும், கீழ வயலுக்கும் இடைப்பட்ட ஓடைப்பள்ளத்தில் ஒளிந்து அமர்ந்து கொண்டார். மேலவயலை விட கீழ வயல் பள்ளத்தில் இருந்ததால் அவர் ஒளிந்து அமர்ந்து இருந்தது வரப்பில் நடந்து செல்பவர்களுக்கு தெரியாது. ஆனால் பள்ளத்தில் இருந்து சுற்றி நடப்பதைப் பார்க்க முடியும்.



நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உருவம், வரப்புகள் வழியே சென்றாலும், எதிர்பார்த்தபடி ஏதும் செய்யாமல் அவர் வயலை கடந்து சென்றது. ராமசாமிப் போத்தி சிறிது ஏமாற்றம் அடைந்தாலும் இன்று எவ்வளவு நேரம் ஆனாலும் இருந்து நடப்பதைப் பார்த்து தெரிந்து கொள்ளாமல் வீட்டிற்கு செல்லக் கூடாது என்று  முடிவு செய்து விட்டார். அவர் காத்திருந்த்து வீண் போகவில்லை. முக்கால் மணி பொழுது ஆனபின் திரும்பி வந்த உருவம், சுற்றும் முற்றும் பார்த்து ஆட்கள் யாரும் இல்லை என்பது உறுதியானவுடன், வரப்பில் இருந்த செடி, கொடிகளில் இருந்து காய்கறிகளை அவசரம், அவசரமாக முறித்து, பறிக்க ஆரம்பித்தது.

ஓடைப்பள்ளத்தில் இருந்து உருவத்தின் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு இருந்த போத்தி சத்தம் எழாமல் பதுங்கி, பதுங்கி திருடனின் பின்புறமாக வந்து மேல்துண்டை வீசி முறுக்கிப் பிடித்தார். திருட்டு வேலையில் மும்முரமாக இருந்ததாலும், இருட்டும் நேரம் என்பதாலும் ராமசாமிப் போத்தி பதுங்கி, பதுங்கி வந்ததை பார்க்க முடியாத திருடன் வசமாக மாட்டிக் கொண்டான். பலநாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டான்.

(தொடரும்)

Wednesday, November 07, 2018

ஊத்துக்குழி


பெருமா கிழவி மேல் கோபம் கொண்டுசெழிப்பான சிங்கம்பட்டி ஊருக்கு சாபம் கொடுத்துச் சென்ற அகத்தியருக்கு தாகம் மேலும் அதிகரித்ததால் ஆற்றுக்கு செல்லும் வழியில் காய்ந்து இருந்த கட்டாந்தரையில் கையில் இருந்த தண்டத்தால் ஓங்கி அடித்து ஒரு குழியை உருவாக்கி அதிலிருந்து ஊற்றாய் பொங்கி வந்த நீரை அருந்தி தாகம் நீங்கினார். பல ஆயிரம் ஆண்டுகளாக பருவகால வேறுபாடுகளால் பாதிக்கப்படாத அகத்திய சித்தர் அருளினால் உருவாக்கப்பட்ட அந்த ஊற்றுக் குழியிலிருந்து அன்று முதல் இன்று வரை நீர் வற்றாமல் பொங்கி வந்து கொண்டிருக்கிறது.

பல அரிய நோய்கள் தீர்க்கும் அருமருந்தான அந்த ஊத்துக் குழி நீரின் வரலாறு தெரிந்த ஆன்றோர்கள், சான்றோர்கள், பெரியோர்கள், சித்த மருத்துவர்கள், ஜோதிடர்கள்,  போன்றோர் அறிவுரையின் படி சிங்கம்பட்டி ஊர் மக்கள் மட்டும் அல்லாமல் சாதி, மதம் பாராமல் பல ஊர் மக்களும் பயன்படுத்தி பலன் பெற்றுள்ளனர். அந்த காலத்திலே பலவிதமான மக்களும் பயன்பெறும் வகையில் படித்துறைகளும் கட்டி அருகிலே ஒரு சிவாலயமும் அமைத்து வைத்துள்ளனர்.

காலப்போக்கில் தாழம்புதர்கள் அடர்ந்து இருந்த சித்த மருத்துவ குணங்கள் கொண்ட ஊத்துக் குழியை சமீப காலத்தில் ஊர் பொதுமக்கள் உதவியோடு, சிங்கம்பட்டி இளையோர் பெருமுயற்சி எடுத்து சுத்தம் செய்து புதுப்பித்து மறுபடியும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இவ்வளவு சீரும், சிறப்பு மிக்க ஊத்துக்குழியை மையமாகக் கொண்டு, ஐந்து தலைமுறைகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளின் புனைவே இக்கதையின் களமாகும்.


ஊத்துக்குழி


மாலை மயங்கி, அந்திக்கருக்கல் அன்றைய தினத்தை அணைக்கும் நேரம். எட்டத்தில் இருந்த இருட்டு மங்கை கிட்டத்தில் வந்து கொண்டிருந்த சாயங்காலப் பொழுது. ஆறு தாண்டி அக்கரைக்குச் சென்று இருந்த ஆடு, மாடுகள் எல்லாம் மேய்ச்சல் முடிந்து திரும்பி விட்டன என்றாலும் மந்தையை விட்டுப் பிரிந்து வெகுதூரம் சென்றிருந்த சில மாடுகள் மட்டும் வீடுகள் நோக்கி வேகநடை போட்டுக் கொண்டு இருந்தன. அலைகடலில் ஆதவன் உதிக்கும் முன்பே இரைதேடி பலதிசைகள் சென்றிருந்த பலவிதமான பறவைகளும் அந்தி மயங்கும் அந்த நேரத்தில் குஞ்சுகள், கூடுகள் நாடி குரல் எழுப்பியவாறு குதூகலத்துடன் பறந்து கொண்டு இருந்தன. அதிகாலையிலே கஞ்சி எடுத்துக் கொண்டு களத்து வேலைகளுக்குச் சென்று களைத்துப் போன அனைவருமே அவரவர் வீடு திரும்பி விட்டனர். இரவுக்காவலுக்கு செல்வோர் உணவு முடித்து ஊரடங்கிய பின்பே செல்வது வழக்கம் என்பதால் இருட்டிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ஆற்றுக்குச் செல்லும் வழியில் ஆள்நடமாட்டமே இல்லை.


புலிப்பட்டி ஊரானது வயல்களால் சூழப்பட்டு நடுவில் அமைந்து இருந்தது. மணிமுத்து ஆறு ஊருக்கு கிழக்கே, தென்வடலாய், ஒதுக்குப் புறமாய் ஓடிக்கொண்டு இருந்தது. ஆற்றின் கரையில் பாறையின் மேல் அமைந்து இருந்த அகத்தியர் கோவில் என்று அழைக்கப்படும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலும், ஊருக்கு நடுவே அமைந்திருந்த அம்மன் கோவிலும், மந்தை வாசலில் இருந்த வடக்கு எல்லை அம்மன் கோவிலும் மற்றும் ஆற்றுக்கு செல்லும் வழியில் வலதுபுறத்தில் வயல்களுக்கு நடுவில் அமைந்து இருந்த ஊத்துக்குழி சிவன்கோயிலும் காலம்காலமாக புலிப்பட்டி பண்ணையார் குடும்பத்தின் பொறுப்பிலே இருந்து வந்தன.



பண்ணையார் குடும்பம் பாரம்பரியமானது. ஒரு காலத்தில் புலிப்பட்டி ஊரும், ஊரைச் சுற்றி இருந்த வயல்கள், தோப்புகள் முழுதும் அவர்களுக்கே சொந்தமாய் இருந்தது. பல ஊர்களிலும் இருந்து பிழைப்பு தேடி வந்த மக்கள்  தலைமுறை தலைமுறையாக பண்ணையார் குடும்ப வயல்களில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்படி பரம்பரையாக பாடுபட்டு வந்தவர்களது உண்மை உழைப்பை பாராட்டி , பரிசாக அவரவர் வேலை பார்த்த வயல்களையும், தோப்புகளையும் அன்பளிப்பாக பட்டா, பத்திரத்தோடு வழங்கிச் சிறப்பித்த சீர்மிகு குடும்பத்தினர் என்பதால் உள்ளூர் மக்கள் பண்ணையார் குடும்பத்திற்கு பெருமரியாதை கொடுத்து வந்தனர். ஊர்ப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்ப்பு வழங்கும் ஒப்பற்ற பொறுப்பும் கொடுத்திருந்தனர். செல்வத்தில் மட்டும் அல்லாமல் பக்தியிலும், ஒழுக்கத்திலும், கல்வி, கலைகளிலும் சிறந்து இருந்த புலிப்பட்டி பண்ணையார் குடும்ப புகழ் திருநெல்வேலி ஜில்லா மட்டும் அல்லாமல் தென்பாண்டி நாடெங்கும் பரவிப் படர்ந்து இருந்தது.

புலிப்பட்டி ஊரில் அகத்தியர் கோவிலுக்கும், அம்மன் கோவில்களுக்கும் செல்லும் பாதைகள் சிறப்பாக இருந்த போதும் ஊத்துக்குழி சிவன் கோவிலுக்கு மட்டும் வயல்வரப்புகள் வழியேதான் செல்ல முடியும். அறுவடை முடிந்து, கதிரடித்து, களங்கள் அனைத்தும் காய்ந்து இருக்கும் காலங்களில் பிரச்சினை இல்லை என்றாலும் வயல்கள் எல்லாம் விளைந்து இருக்கும் போது கால் தவறி விழுந்து விடாமல் கவனமாக செல்வது என்பது மிகவும் கடினமான விஷயம்தான். 

ஏதுமறியா விவசாயிகளிடம் பன்னாட்டு நிறுவனங்களும், பணத்தாசை பிடித்த வியாபாரிகளும் அதிக மகசூல் ஆசை காட்டி, ஏதேதோ இரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் பயன்படுத்த வைத்து, விவசாயமே விஷமாய் போன இந்த காலத்தைப் போல் அல்லாமல், அந்த காலத்தில் பயிர்களில் விழுந்து விளைச்சலை அழிக்கும் பூச்சிகளை கட்டுபடுத்துவதற்காக இயற்கைப் பூச்சி விரட்டிகளான ஆமணக்கு, அகத்தி, வெண்டை, கத்தி, அவரை, துவரை, புடல், பாகல், பூசணி, தடியங்காய், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி போன்ற செடி, கொடி மற்றும் கீரை வகைகளைப் பெரும்பாலும் எல்லா வயலைச் சுற்றியும், வரப்புகளில் வளர்த்து இருப்பர்.

கார குணத்தோடு, கசப்புத்தன்மையோடு, வழுவழுப்பான அகலமான இலைகளும், பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் மஞ்சள் நிற இனக்கவர்ச்சிப் பூக்கள் கொண்ட மேலே சொன்ன செடி, கொடி மற்றும் கீரை வகைகளால் பயிர்களுக்கு ஆபத்தான பலவிதமான பூச்சிகளும் கட்டுப்படுத்தப்பட்டு, அன்றாடம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளும் கிடைத்து வந்த இயற்கை விவசாயம் செய்து வந்த அந்த காலத்தில் பூச்சி விரட்டி என்றனர். உடல் ஆரோக்கியம் குறித்து கவலைப்படாமல், குறைந்த உடல் உழைப்பில். அதிக லாபம் பார்க்க ஆசைப்படும் இந்த காலத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்களையும், மருந்துகளையும் பூச்சிக் கொல்லி என்கிறோம். “விரட்டி”, “கொல்லி” என்ற வார்த்தைகளின் மூலமே நாம் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது புரிந்து விடும்.

இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்த நேரத்திலாவது எல்லா விவசாயிகளும் மரபணு மாற்றப்பட்ட நாசக்கார நச்சு விவசாயத்தை விட்டு விட்டு, பெருமை மிக்க நமது பாரம்பரிய விவசாயத்திற்கு மொத்தமாக திரும்புவார்கள் என்ற நம்பிக்கையோடு நமது கதைக்குள் வருவோம். ஊத்துக்குழி சிவன்கோயிலுக்கு செல்லும் வழியில் வயல் பயிர்களோடு, வரப்புத் தாவரங்களும் விருத்தியாய் விளைந்து இருக்க, தென்பொதிகை தென்றலோடு சிரித்துப் பேசி, கொத்தும், குழையுமாக, கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த செடி, கொடிகளில் இருந்து கீரை, காய்கறிகளை அங்குமிங்கும் ஆள்நடமாட்டம் பார்த்தபடி  பூவும், பிஞ்சும், காயுமாக ஒரு ஜோடிக்கரங்கள்  அவசரம், அவசரமாக பறித்துக் கொண்டு இருந்தன.

( தொடரும் )


Saturday, November 03, 2018

நீர் இருக்கும். மோர் இருக்காது



ஓங்கு சூழ் உலகம் உய்வடைய அகிலமெல்லாம் காத்தருளும் அய்யன் சிவபெருமானுக்கும், அம்மை பார்வதிக்கும் திருமணம் பேசி நாள் குறித்த விபரம் அறிந்தது முதல் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், பக்தர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள்  என பல தரப்பான மக்கள் கூட்டம், கூட்டமாக கைலாய மலை வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள். பல நாட்டு அரசர்களும், படைகள், பரிவாரங்களோடு வந்ததால் திருமணம் பார்க்க வந்தவர்கள் கனபாரம் தாங்காமல் வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்து விட்டது. அனுதினமும் ஆட்கள் வர, வர நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதைக் கண்ட சிவபூதகணங்கள் சிவ்பெருமானிடம் முறையான அறிவுரை பெற முடிவு செய்து முக்கண்ணர் முன் சென்று நின்றார்கள். தியான நிஷ்டையில் இருந்த எம்பெருமான் பூதகணங்களது அபய சரணங்கள்  கேட்டு விழித்துப் பார்த்து விஷயம் அறிந்து குறுமுனி அகத்தியரை அழைத்து வரக் கூறினார்.

பூதகணங்கள் அழைப்பின் பேரில் அம்மையப்பர் முன் வந்து நின்ற் அகத்தியரை முறுவலித்துப் பார்த்த முக்கண்ணர், “ அகத்தியரே, நீர் உடனே தெற்கே கிளம்பி சென்று நிலைமையை சீர் செய்து, இப்பூவுலகம் முன் இருந்த நிலையை அடைய உதவ வேண்டும். என்று உத்தரவிட்டார்.. அய்யனின் கட்டளைக்கு மறுமொழி உரைத்த அகத்தியர், ’ “ஐயனே, தெற்கு பாஷை எனக்கு தெரியாதே. மேலும் உமா-மகேஷ்வரர் ஆகிய தங்கள் திருமணம் பார்க்கின்ற பெரும்கொடுப்பினையையும் அடியேன் இழப்பேனேஎன்று சொல்லி மனதளர்ச்சி அடைய, “ வருந்த வேண்டாம் அகத்தியரே, தென்தேச மொழியை உமக்கு உபதேசம் செய்வோம். இங்கு நடக்கிற எங்கள் திருமணக் காட்சியையும் நீர் அங்கு இருந்தே பார்க்க யாம் அருள் செய்வோம்”” என்று சொல்லி உடனடியாக அவருக்கு தமிழ் மொழி உபதேசம் செய்து வழி அனுப்பி வைத்தார் ஆனந்தக் கூத்தர் அய்யன் சிவபெருமான்.

அகிலமெல்லாம் ஆட்கொண்ட ஆடல்நாயகரின் ஆணையின் பேரில் கைலாயத்தில் இருந்து கால்நடையாக கிளம்பி பல ஜீவநதிகளில் நீராடி, புண்ணிய ஷேத்திரங்கள் பலவற்றையும் தரிசனம் செய்து, எம்பெருமான் ஈசன் அருளால் வானுயரம் கொண்டு வழி மறித்து நின்ற விந்திய மலையின் கர்வம் அடக்கி,  வாதாபி போன்ற அசுரர்களை வதம் செய்து, மேலும் பல திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு அருளாசி செய்தவாறே மதுரை தமிழ்சங்கம் கடந்து, திருச்செந்தூர் கடலில் நீராடி தமிழ்க்கடவுள் திருமுருகனையும் தரிசித்து நெல்லைச் சீமை வந்து நெல்லையப்பரை தரிசித்தவாறு, நடைப்பயணமாக சென்ற அகத்தியருக்கு போன வழியெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு தந்தனர். அவர் அமர்ந்து அருளாசி தந்த இடத்தில் எல்லாம் அன்பர்கள் ஆலயம் அமைத்து வழிபட்டனர்.

இப்படியாக அம்பை, கல்லிடை நகர் எல்லாம் கடந்து சிங்கம்பட்டி ஊர் வழியாக பொதிகைமலை நோக்கிப் போன அகத்தியருக்கு திடீரென தாகம் எடுக்க, கமண்டல நீரும் காலியாகி விட்ட படியால் சுற்றும், முற்றும் பார்த்தார். சிங்கம்பட்டி ஊரெங்கும் பச்சைப் பசேலென பயிர் பல விளைந்து, வயல்களுக்கு இடையே அங்கங்கே குடில் அமைத்து காவலுக்கு ஆள் அமர்ந்திருந்தனர். இப்போது போல் நெருக்கமாக அல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாகவே அப்போது சிங்கம்பட்டியில் வீடுகள் இருந்தன.

அகத்தியர் நின்ற இடத்தின் அருகில் இருந்த வீட்டின் வெளியே அமர்ந்திருந்தவர் பெருமா கிழவி. வயது எண்பது தாண்டி விட்டாலும், பிள்ளைகள், பேரன்களுக்கு உதவியாக அதிகாலையிலே எழுந்து, தொழுவம் சுத்தப்படுத்தி, பசு மாடுகள் அவிழ்த்து கட்டி, கன்றுகளுக்கு விட்டு பால் கறந்து, பின் அவற்றிற்கு நீர் காட்டி, தேவையான தீவனம் வைத்து, முந்தின நாள் உறை ஊற்றிய தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது என சுறுசுறுப்பாக இருப்பார். வீட்டில் உள்ள ஆண், பெண் அனைவரும் காலையில் கஞ்சி எடுத்து கொண்டு வயல் வேலைகளுக்கு சென்றால் பின் இருட்டும் நேரம்தான் வீடு திரும்புவார். பெருமா கிழவி வீட்டில் உள்ள ஆடு, மாடு, கோழி மற்றும் குழந்தைகளுக்கு காவலாக இருந்து பார்த்துக் கொள்வார். அப்படி ஒரு நாள் உச்சி நேரத்தில் வீட்டு வாசல் தாழ்வாரத்தில் அமர்ந்து தயிர் கடைந்து, மோர் தனியாக, வெண்ணை தனியாக பிரித்துக் கொண்டு இருக்கும்போதுதான் அகத்தியர் வந்து அருகில் நின்றார்.

சிங்கம்பட்டி செழிப்பான ஊர் என்பதால் விளைந்த தானியங்களை விற்றது போக வீடுகள்தோறும் பத்திரப்படுத்தி வைத்து இருப்பர். அவற்றை திருடுவதற்கும், கொள்ளைக் கூட்ட்த்திற்கு உளவு பார்க்கவும் அவ்வப்போது ஊருக்குள் அன்னியர் பலவிதமான வேடங்கள் அணிந்து வந்து செல்வர். எனவே பெரும்பாலான சிங்கம்பட்டி மக்கள் அவரவர் வீடு, வயல்கள் காவலுக்கும், கொள்ளையர்கள் ந்தால் குரைத்து விரட்டவும் வீடுதோறும் வேட்டை நாய்களும் வளர்ந்து வந்தனர். ஆனால் அகத்தியரின் தபவலிமை உணர்ந்த பெருமா  கிழவி வீட்டு நாய்கள் சீறிக் குலைக்காமல், வாலைக் குழைத்தவாறு அவரது காலைச் சுற்றி, சுற்றி வந்தன.

“தாயே, தாயே” என்று அழைத்தவாறு தன் அருகில் வந்து நின்ற அகத்தியரை நிமிர்ந்து பார்த்த கிழவி தன் வீட்டு நாய்களும் அவர் அருகே மயங்கி நிற்பது கண்டு, கொள்ளைக் கூட்ட உளவாளி தான் சன்னியாசி வேடமணிந்து ஊருக்குள் வந்து இருப்பதாக நினைத்துக் கொண்டு, “என்ன வேண்டும்” என்றார். தயிர் கடைந்து கொண்டு இருந்த கிழவி அருகில் மோர்க் குடம் நிரம்பி வழிந்து கொண்டு இருப்பதைக் கண்ட அகத்தியர், “தாகமாக இருக்கிறது. மோர் அருந்த தந்தால் குடித்து தாகம் நீங்குவேன்” என்று கேட்க வெகுண்ட கிழவி, “ ஊர் முழுக்க ஓடையெல்லாம் தண்ணீர் போகுது. உமக்கு குடிக்க மோர் வேணுமா… ஆறு நிறைய போற தண்ணீரை ஆசை தீர அள்ளி குடிக்காமல் மோர் வேணும். தயிர் வேணும்ன்னு வீடேறி வந்து விருப்பமாய் கேட்பீரோ.. என்றதோடு நிறுத்தாமல் கிராமத்து கிழவிகளுக்குரிய இன்னும் பல கேலி, கிண்டல் பழமொழிகளை நீட்டி, முழக்கி பேசலானார்.

“கைலாயமலை இறங்கியது முதல் இப்போது வரை வந்த வழியெல்லாம் நீர் கேட்டால் மோர் கொடுத்து எல்லா ஊர் மக்களும் உபசரித்தனர். ஆனால் செழிப்பு மிக்க சிங்கம்பட்டி ஊரில் மட்டும் மோர் பானையை பக்கத்தில் வைத்துக் கொண்டே  கிழவி இந்த பேச்சு பேசுகிறாளே… ஐந்தறிவு மிருகங்களே தன்னருகே அமைதியாக நிற்க, ஆறறிவும், அனுபவமும் கொண்ட சிங்கம்பட்டி கிழவி இப்படி அடக்கமில்லாமல் பேசுகிறாளே… “ என்று கோபம் கொண்ட அகத்தியர், “ இந்த ஊரில் இனி நீர் இருக்கும். மோர் இருக்காது.முப்போகம் விளையும். ஆனால் மோருக்கு வக்கத்துப் போகும்.” என்று சாபம் கொடுத்துச் சென்றார். அன்று முதல் இன்று வரை சிங்கம்பட்டி ஊரில் வீடுதோறும் பால் மாடுகள் பல இருந்தாலும் மோர் மட்டும் ருசியாக இருக்காது. இதனை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் அறிவர். சிங்கம்பட்டி ஆற்றில் குளித்து கரையில் உள்ள பாறையில் அமர்ந்து வழிபாடு செய்த இடத்தில்தான் "அகத்தியர் கோவில்" என்னும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலும் உள்ளது.

நன்றி. வணக்கம்.

Thursday, March 01, 2018

அருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு

🎪 *தளவாய் மாடசாமி வரலாறு*🎪



பிரம்மனின் மைந்தன் தட்சன் என்ற தக்கராஜன், சிவனின் மீது சினம் கொண்டிருந்தான், தனது தந்தை பிரம்மன், தாத்தா மகாவிஷ்ணு  இருவரும் சிவபெருமானின் அடிமுடி தேடி அலைந்தும் பார்க்க முடியாமல் தோல்வி அடைந்தது கேட்டு கோபம் கொண்டிருந்தான். சிவனை தனது காலில் விழ  வைக்க வேண்டும் என்ற செறுக்குடன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். தட்சனின் கடும் தவத்தை கண்டு சிவபெருமான், அவன் முன் தோன்றினார்.  அப்போது தட்சன், எனக்கு மகளாக உமாதேவி பிறக்க வேண்டும் என்று கேட்டான். சிவனும் நீ விரும்பிய படியே ஆகட்டும் என்று வரமளித்தார்.


அதன்படி உமையவள் குழந்தை ரூபமாக தாருகா வனத்தில் இருக்க, தட்சனும், அவனது மனைவி தாருகாவல்லியும், தாருகா வனத்திற்கு சென்றபோது அழகான  அந்த பெண் குழந்தையை கண்டெடுத்தனர். அந்த குழந்தைக்கு தாட்சாயினி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பருவ வயதை அடைந்ததும், சிவன்  தாட்சாயினியை மணம் முடித்தார்.

மகளை மணம் முடித்த மருமகனான சிவபெருமான், மாமனார் என்ற உறவில் தன்னை வணங்க வேண்டும் என்று தட்சன்  கர்வம் கொண்டான். அது நடக்கவில்லை என்பதால் சிவன் மேல் தட்சனுக்கு கோபம் அதிகரித்தது. இந்த நிலையில் சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்ற  எண்ணத்தில், மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினான் தட்சன். அதற்கு ஈரேழு லோகத்திலுள்ளவர்களுக்கும் அழைப்பை விடுத்தவன், தனது மகளை மணமுடித்த மருமகன் என்ற உறவின் அடிப்படையில் கூட சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதையறிந்த தாட்சாயினி, சிவனிடம் சென்று தனது தந்தையிடம் இதுகுறித்து கேட்டு வருவதாக கூறினாள்.


சிவபெருமான் தடுத்தார். செல்ல வேண்டாம், உனக்கு  உரிய மரியாதை கிடைக்காது  என்று கூறினார். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் தாட்சாயினி தனது தந்தையிடம் சென்று கேட்டாள். அதற்கு தட்சன்,  சிவபெருமானை அவமதித்து பேசியதோடு மகள் என்றும் பாராமல் தாட்சாயினியையும் அவமதித்தார்.

 நடந்தவற்றை அறிந்த சிவபெருமான், தனது மேனியின்  வியர்வை துளிகளை ஒன்றாக்கி ஒரு புத்திரனை பிறக்கச்செய்தார். வியர்வையில் பிறந்த புத்திரன் வியர்வை புத்திரனாகி, வீரபுத்திரர் ஆனார். அது மருவி  வீரபத்திரரென அழைக்கப்படுகிறார். வீரபத்திரர் வேகம் கொண்டு வேள்வி சாலைகளை அழித்தார். தட்சனை வாளால் வெட்டினார். வெட்டுப்பட்ட தட்சனின் தலை,  வேள்விக்குழியில் விழுந்து எரிந்தது. முண்டம் தரையில் விழுந்தது. தனது பதி மாண்டதை அறிந்து துடிதுடித்த தட்சனின் மனைவி தாருகாவல்லி, சிவனிடம்  முறையிட்டாள். தவறை உணர்ந்து இனி நல்வாழ்வு வாழ, மீண்டும் அவருக்கு உயிர்பிச்சை இடுங்கள் என வேண்டினாள்.

அவளது அழுகுரலுக்கு இறங்கிய சிவபெருமான், வடக்கே தலை சாய்த்து உறங்கும் உயிரினத்தின் தலையை கொய்து உனது கணவனது உடலில் சேர்த்து வை,  அவன் உயிர் பெற்று வருவான் என்று கூறினார். வேகம் கொண்டு எழுந்த தாருகாவல்லி, அங்கும் இங்கும் ஓடினாள், அலைந்தாள், பதறினாள், தேடினாள். சற்று  தொலைவில் கருப்பு நிறத்தில் மாடு ஒன்று வடக்கே தலை சாய்த்து படுத்திருந்தது. அதன் தலையை கொய்து வந்து தனது கணவனின் உடலோடு ஒட்ட  வைத்தாள். உயிர்பெற்று எழுந்தான் தட்சன். மாட்டுத் தலையுடன் எழுந்த அவன் தனது கரங்களை கூப்பி, சிரம் தாழ்த்தி சிவனை வணங்கினான். (புராணத்தில்  ஆடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது). மகுட, வில்லிசை கலைஞர்கள் மாடு என்று பாடி வருகின்றனர். அதன் காரணமாக தளவாய் மாடசாமி சிலைகளை  மாட்டுத்தலையுடன் அமைத்துள்ளனர்.(ஆகவே இங்கே மாடு என்றே குறிப்பிடுகிறேன்.)

சிவனின் ஆங்காரமும் தணிந்திருந்த வேளை, தட்சனின் பணிவை கண்டு மனமிறங்கி, நீயும் போற்றப்படுவாய், உன்னை வணங்கித் துதிக்கும் அடியவர்களுக்கு  கொல்லும் வரம், வெல்லும் வரம் அளிக்கும் பாக்யம் உனக்கு தருகிறேன். உடனே நீ பூலோகம் சென்று மகா சாஸ்தாவின் தளபதிகளில் ஒருவனாக திகழ்வாயாக  என்று வரமளித்து பூலோகம் அனுப்பி வைத்தார்.

தலை மாறிய சாமி என்றும் தலை மாறிய மாடன் என்றும் அழைக்கப்பட்டவர் பின்னர் அப்பெயர் மருவி தளவாய்மாடன் என்று அழைக்கப்பட்டார். (தளவாய் என்றால் தளபதி, அமைச்சர் என்றும் பொருள் உண்டு.) சிவனின் உத்தரவிற்கிணங்க பல்வேறு வரங்களை  வாங்கி தளவாய்மாடன் பூலோகம் வருகிறார். பொதிகை மலை வந்தமர்கிறார். அங்கிருந்து மலையாள நாட்டிற்கு பேச்சியம்மை, பூதத்தார் தலைமையிலான  இருபத்தியோரு பந்தி தெய்வங்களோடு சென்றார். மாயாண்டி சுடலைமாடன், மாடன் தம்புரான் பெயரில் நிலையம் கொண்டிருந்த கொட்டாரக்கரை கடந்து  செல்கையிலே அவரும், இவர்களுக்கு தலைமையேற்று பந்தள நாடு வந்தனர்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்கு மரவேலைப்பாடுகள் செய்ய பந்தள நாட்டு எல்லையிலிருந்து மரங்கள் வெட்டி வரப்படுகிறது. அந்த மரங்களில்  சுடலைமாடன், தளவாய்மாடன், பூதத்தார், பேச்சி முதலான தெய்வங்கள் குடியமர்ந்திருந்தனர். அவர்கள் அந்த மரத்தோடு பத்மநாபபுரம் வருகின்றனர். கோயிலில்  வேலைப்பாடுகள் முடிந்து தச்சு கழித்தல் எனும் வேள்வி பூஜை நடக்கையில் இருபத்தியோரு தெய்வங்களும் வந்திருந்ததை அறிகின்றனர். அவர்களை  சாந்தப்படுத்தி அவர்களுக்கு அட்டக்குளம் கரையினில் பிலா மூடு, பலா மரம், மாமரமூடு ஆகிய இடங்களில் நிலையம் போட்டுக் கொடுத்தனர்.

 இந்த நாளிலே  திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக யாக குண்டல பூஜைக்கு அழைக்கப்பட்டதன்பேரில் திருவனந்தபுரத்திலிருந்து ஒன்பது போத்திமார்கள் புறப்படுகின்றனர். அவர்கள் வரும்போது பலா மரத்திலிருந்து வறுக்கை என்ற ஒரு வகை பலாவை (சக்கை) கொண்டு வருகின்றனர். இந்த வறுக்கை சக்கையுடன் தளவாய்மாடசாமி  வருகிறார். அவர்களுடன் இருபத்தியோரு பந்தி தெய்வங்களும் வருகின்றனர்.

மலை நாட்டு எல்லை கரமனை கடந்து நெய்யாற்றங்கரை பாதையாக நாஞ்சில் நாட்டு குழித்துறை வந்தமர்ந்து. அங்கிருந்து அந்தி சந்தை கூடும் சாமியார்மடம்  கடந்து பத்மநாபபுரம் வழியாக வேளிமலை போக்கும் விட்டு தோட்டியோடு பாதையாக களியங்காடு விட்டு, பார்வதியாள்புரமும் விட்டு வெட்டூர்ணி மடம் கடந்து  நாகர்கோவில் தான் கடந்து சுசீந்திரம் பதி வந்து தாணுமாலயனை அடி பணிந்து வழுக்கம்பாறை விட்டு கொட்டாரம் பாதை கூடியல்லோ, கன்னியாகுமரியில்  நீராடி வந்தல்லோ, பகவதியை வணங்கிவிட்டு வாரியூர் தான் கடந்து கருங்குளம் போக்குவிட்டு, வேப்பிலாங்குளம் வழியாக கும்பளம்பாடு எல்லை விட்டு  தம்பட்டிவிட்டு மடமதிலே ஒன்பது போத்திமாரும் ஓய்ந்து இருக்கும் வேளையிலே தலைமை போத்தி தானெழுந்து ஆடலானார். ஆராதனை வந்து பேசலானார்.  தளவாய்மாடன் நான் வந்திருக்கிறேன்.

எனக்கு நம்பியாற்றின் தென்கரையினிலே சித்தூர் பதியினிலே குடியிருக்கும் ராஜாவுக்கு மந்திரியாய் நானிருக்க, அங்குள்ள கன்னி மூலையிலே அஷ்ட
பந்தனம் எனக்கு செய்யவேணும். வறுக்கை நல்ல பழத்தையுமே நைவேத்தியம் வைக்கவேணும் என்றாரே. அதன் படியே ஒன்பது போத்திமாரும் சித்தூர் பதி வந்து  தளவாய்மாடனுக்கு நிலையம் இட்டனர். அவரோடு வந்த இருபத்தியோரு துணை தெய்வங்களுக்கும் நிலையம் கொடுத்தனர். இங்குள்ள தளவாய்மாடன் சைவமாக  இருக்கிறார். சுடலைக்கு தலைமை இடம் சீவலப்பேரி, பூதத்தாருக்கு தலைமை இடம் திருக்குறுங்குடி,
தளவாய்மாடனுக்கு தலைமை இடம் சித்தூராகும். 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, சித்தூர் கிராமத்தில் மகாராஜேஷ்வரர் கோயிலில் நின்றருளும் தளவாய்மாடசாமி, தன்னை மனமுருக வேண்டும் பக்தர்களுக்கு தக்க  நேரத்தில் வந்தருள்கிறார்.