Thursday, February 07, 2019

துள்ளு மறி - இறுதி பாகம்

பாகம் 1





சொடுக்கி படித்து விட்டு பின் இங்கு தொடருங்கள்.


இறுதி பாகம் 

பாசமான பேரன் தன்னை வெறுத்ததாலும், மனைவியும், மகனும் பேரனை பார்க்க விடாமல் மறுத்ததாலும், மருத்துவமனையில் இருக்க கூட விடாமல் தடுத்து விரட்டியதாலும் மனம் வெதும்பி சோர்ந்து போய் ஊர் திரும்பிய போத்திக்கு எந்நேரமும் பேரன் நினைவாகவே இருந்தது. கிடைக்குப் போனால் குட்டியைப் பிரிந்த தாய் ஆடு மேய்ச்சலுக்கு கூட போகாமல் பட்டியையும், குட்டிகள் அடைக்கும் கூண்டையுமே சுற்றி, சுற்றி வந்தது வேறு போத்தியின் மனதை உறுத்தியது. எந்த வருடமும் .இது போன்று சம்பவம் நடந்ததாக அவர் நினைவில் இல்லை.

காலையிலும், மாலையிலும் ஆட்டுக்கிடைக்கு சென்று பட்டி வேலைகளைப் பார்த்தாலும் பகல் நேரங்களில் இதையே நினைத்து, நினைத்து மனம் குழம்பியவாறும், இரவெல்லாம் தூங்க முடியாமலும் இரண்டு நாட்களாக தவித்துப் போனார் போத்தி. அக்கம்பக்கத்து வீட்டார், அங்காளி, பங்காளி உறவினர்கள் என அம்பை மருத்துவமனைக்கு   போய் ஐயப்பாவை பார்த்து வந்தவர்கள் எல்லாம் வீட்டிற்கு வந்து போத்தியைப் பார்த்து, “ எப்படி இருந்தவன் இப்படி வாடி வதங்கிப் போயிட்டானே…. ஒரு நிமிசம் கூட சும்மா இருக்க மாட்டானே…. உட்காராம எப்பவும் ஓட்ட சாட்ட்த்துலே இருக்க பையன் இப்படி படுத்த படுக்கையா கிடக்கானே….” என்று அங்கலாய்த்து சென்றது வேறு போத்திக்கு மிகுந்த மனக் கஷ்டத்தை தந்த்து.

மூன்றாவது நாள் வெள்ளியன்று காலை வீட்டிற்கு வந்த போத்தியின் மகன் அன்று மாலை சென்னை கிளம்பிப் போவதாகவும், இனிமேல் ஊருக்கு ஐயப்பாவை அழைத்து வரவே போவதுமில்லை என்றும் கூறியதைக் கேட்ட போத்திக்கு துக்கம் தொண்டை அடைத்து கண்ணீர் பொங்கியது.

வழியனுப்பாவது வருகிறேனே…” என்று கெஞ்சியவரிடம், “ நேத்தும், இன்னைக்கும் தான் கொஞ்சம் பரவாயில்லாம இருக்கான். அதனால்தான் டாக்டர்ட்ட கேட்டுகிட்டு இன்னைக்கு சாயந்திரம் அம்பைல  இருந்து சென்னைக்கு போற டிராவல்ஸ் பஸ்ல டிக்கெட் போட்டிருக்கேன். ஊருக்கு புறப்பட ஏற்பாடு செஞ்ச இந்த நேரத்துல, உங்களைப் பார்த்து மறுபடியும் வலிப்பு வந்ததுன்னா அதைத் தாங்குற சக்தி அவன் உடம்புக்கும் இல்லை. எங்களுக்கும் இல்லை. அதனால நீங்க வராம இருக்கிறதுதான் நல்லது. வளர்ந்து பெரியவனாகி அவனா உங்களை எப்போ பார்க்க வர்றானோ அப்ப நீங்க பார்த்துகிடுங்க….” என்று திட்டவட்டமாக கூறிவிட்டு ஊருக்கு கொண்டு போக வேண்டிய பை, பெட்டிகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான் போத்தியின் மகன்.

மகனது வார்த்தைகளால் இடிந்து போய் அன்று முழுதும் உணவு எடுக்காமலும், பட்டிக்கு போகாமலும் வீட்டிலே முடங்கிக் கிடந்தார் போத்தி. மகன், மருமகள், பேரனை வழியனுப்பி விட்டு அந்திக்கருக்கல் நேரம் வந்த ஆச்சி, “என்ன வீட்டுல விளக்கு கூட போடாம உட்கார்ந்திருக்காரு மனுசன்…” என்று அங்கலாய்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைய பேரனைப் பற்றிய விபரங்கள் கேட்கலாம் என்று ஆர்வத்துடன் எழுந்து வந்தார் போத்தி. 

அதற்குள் ஆச்சி வந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தார் வந்து, “என்ன, ஏது.. “ என்று ஐயப்பா குறித்த விபரம் விசாரிக்க ஆரம்பிக்க, “என்னத்தைச் சொல்ல… பெரியவங்க செஞ்ச பாவம் சின்னவங்களைப் பிடிக்கும்ங்குற மாதிரி எங்க வீட்டுல தாத்தா பண்ணது பேரனைப் பிடிச்சுட்டு…. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ங்கிறதுன்னா என்னான்னு இப்போ தான் புரியுது. துள்ளு மறி மாதிரி துள்ளிக்கிட்டு திரிஞ்ச பய துடிச்சு துவண்டு போயிட்டானே…." என்று உரத்த குரலில் ஒப்பாரி வைத்து பாட ஆரம்பித்தார். அடுத்தடுத்து உறவினர்களும், அங்காளி, பங்காளிகளும் தொடர்ந்து வர அனைவரிடமும் போத்தியைக் குறை சொல்லியே ஆச்சி அழுது புலம்பியதால் ஏற்கனவே நொந்து போயிருந்த போத்தி மனது மேலும் வெந்து போனது. ஆச்சியின் குத்தல் பேச்சுகளால் கூனிக் குறுகிப் போன போத்தி வீட்டிற்குள் சென்று படுத்தாலும் வெளியில் பேசும் பேச்சுக்கள் அவர் காதுகளில் தொடர்ந்து விழுந்து வேதனையை அதிகப்படுத்தின.

ஒரு வழியாக உறவினரெல்லாம் போன பின் ஆச்சி அலுத்துப் போய் படுத்தாலும், இரவெல்லாம் தூங்காமல் யோசித்துக் கொண்டே இருந்த போத்தி ஒரு முடிவெடுத்தவராய் அதிகாலை நாலு மணி முதல் பேருந்தில் ஏறி ஆலங்குளம் சென்று சனிக்கிழமை ஆட்டுச் சந்தையில் தெரிந்த தரகரைப் பார்த்து மொத்தமாக ஆடுகளை விற்பனை செய்யப் போவதாகவும், ஆனால் கறிக்கடைக்கு அல்லாமல் சொந்த வளர்ப்பிற்கு வாங்க நல்ல ஆட்கள் இருந்தால் விலை முன்னே, பின்னே இருந்தாலும் கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். வீரவநல்லூரில் ஒரு பண்ணையாரின் வயல், தோட்ட உரத்தேவைகளுக்காக ஆட்டுக்கிடை வாங்க பண்ணை நிர்வாகம் பார்ப்பவர் இரண்டு வாரமாக வந்ததாகவும் தோதாக அமையாததால் அலைபேசி எண் கொடுத்து சென்று இருப்பதாகவும் கூறிய தரகர், அந்த எண்ணில் அழைத்து விபரம் கூற, அருகே வந்து விட்டதாக கூறிய நிர்வாகி சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார்.

பண்ணை ஆள்கள் இருவரோடு அவர் வந்திருந்த வண்டியிலே போத்தியையும், தரகரையும் ஏற்றிக் கொண்டு நேராக புலிப்பட்டிக்குச் சென்று ஆற்றுக்குச் செல்லும் சாலை ஓர வயலில் அமைந்து இருந்த ஆட்டுக் கிடையை காலை எட்டு மணி அளவில் அடைந்தார்கள். பட்டி வேலைகள் முடித்து, குட்டிகளைப் பிரித்து கூண்டுக்குள் அடைத்துக் கொண்டிருந்த கொண்டிருந்த கீதாரியிடம் போத்தி விபரம் கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் பட்டியை சுற்றி வந்து ஆடுகள், கிடாக்கள், குட்டிகளைப் பரிசோதித்துப் பார்த்த பண்ணை நிர்வாகி பரம திருப்தியாகி, “ இதை மாதிரி நல்ல கிடையா வாங்க ஆசைப்பட்டுத்தான் எங்க முதலாளி மூணு வாரமா தொடர்ந்து எங்களை அனுப்பிச்சிகிட்டு இருக்காரு. சீக்கு ஏதும் இல்லாம ஆடுகளை நல்லா பராமரிக்கிறீங்க.  ரொம்ப சந்தோஷம். எங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. முதலாளிக்கும் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்புல அனுப்பிச்சேன்.அவரும் பார்த்துட்டு ;பேசி, முடிச்சுற சொல்லிட்டாரு. உங்க கீதாரிக்கு விருப்பம்ன்னா ஆடுகளைப் பார்த்துகிட்டு எங்க பண்ணையிலே குடும்பத்தோட வந்து தங்கச் சொல்லிட்டாரு…” என்று நிர்வாகி சொன்னதைக் கேட்டு போத்தியும், தரகரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

மொத்தமாக ஆடுகளை எண்ணி விலை பேசி பேரம் படிந்தவுடன் கையோடு கொண்டு வந்திருந்த பணத்தை போத்திக்கும், தரகுப் பணத்தை தரகருக்கும் கொடுத்து விட்டு, புலிப்பட்டியிலே ஒரு டிராக்டரை வாடகைக்கு ஏற்பாடு செய்து கிடை அமைப்பதற்கான மூங்கில் தட்டிகள், கம்பிகள், குட்டிகள், அடைக்கும் கூண்டுகள் எல்லாவற்றையும் ஏற்றி கூட வந்திருந்த பண்ணை ஆட்களில் ஒருவரையும் துணைக்கு அனுப்பிய பண்ணை நிர்வாகி, குட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் டிராக்டரை மெதுவாக ஓட்டிக் கொண்டு போகவும் அறிவுறுத்தினார். மற்றொரு பண்ணை ஆளை கீதாரியோடு சேர்ந்து ஆடுகளை பத்திரமாக மணிமுத்தாறு புதிய கால்வாய் கரை வழியாக நேராக பண்ணைக்கு கால்நடையாக அழைத்து வருமாறு சொல்லி விட்டு போத்தியை புலிப்பட்டியிலும், தரகரை கல்லிடையிலும் விட்டுச் செல்வதாக சொல்ல காரில் ஏறிக் கொண்டு புறப்பட்டனர் அனைவரும்.

காரில் போகும் போது “இவ்வளவு தொகையை கையில் வைத்துக் கொண்டு இருப்பது நல்லது இல்லை என்பதாலும் சனிக்கிழமையான அன்று வங்கி அரைநாள் மட்டும் வேலை செய்யும் என்பதாலும் தன்னையும் தரகரையும் கல்லிடை வங்கி வாசலில் விட்டுச் செல்லுமாறு வேண்டிக் கொண்டார் போத்தி. தரகருக்கு வங்கி மேலாளர் பழக்கம் என்பதால் போத்தியை அழைத்துக் கொண்டு நேராக அவர் அறைக்குச் சென்றார். பேரனின் பெயரில் ஒரு புதிய வங்கிக் கணக்கு தொடங்கி, காப்பாளர்களாக மகன், மருமகள் பெயரைப் போட்டு அனைத்துப் பணத்தையும் முதலீடு செய்து விட்டு, கையோடு சேமிப்புக் கணக்கு புத்தகத்தை வாங்கிக் கொண்டு தரகருக்கு நன்றி கூறி வங்கி வாசலில் இருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்று மதிய உணவு வாங்கிக் கொடுத்து தானும் அவருடன் சேர்ந்து உண்டு விட்டு மன நிம்மதியோடு வீடு திரும்பினார் போத்தி.

திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாமல் பல ஊர் சிவாலயங்களுக்கு உழவாரப் பணிகளுக்கு செல்லும் புலிப்பட்டி ஊரில் உள்ள போத்தி வயதையொத்த சிலர் அம்மன் கோவில் கொடை முடிந்தவுடன், மற்ற ஊர் உழவாரக் குழுவினரோடு சேர்ந்து காசிக்கு செல்வதாக இருந்தனர். ஆச்சி சென்னைக்குப் போயிருக்கும் போது தானும் அவர்களுடன் வருவதாக கூறிப் போக்குவரத்து, உணவு மற்றும் தங்கும் செலவுகளுக்கு முன்பணம் கொடுத்து உறுதி செய்திருந்தார் போத்தி. போய் வர ஒரு மாத காலம் ஆகும் என்பதால் ஆட்டுக் கிடையைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கீதாரியிடம் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தார். ஆனால் எதிர்பாராமல் ஆடுகளை விற்பனை செய்யும் படி ஆகி விட்டாலும் அதுவும் நல்லதாகவே தோன்றியது போத்திக்கு.

மறுநாள் ஞாயிறு அதிகாலை நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் இரயிலில் புறப்படுவதாக இருந்ததால், சனிக்கிழமையான அன்று மாலை புலிப்பட்டியில் இருந்து கிளம்புவதாக ஏற்பாடு. வங்கி வேலைகள் முடித்து வீட்டிற்கு மதியம் மூன்று மணி அளவில் வீட்டிற்கு சென்ற போத்தி, ஆச்சியை அழைத்து ஆட்டுக் கிடையை விற்று விட்டதையும், பணத்தை பேரன் பெயரில் வங்கியில் முதலீடு செய்திருப்பதையும் கூறி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தை கையில் கொடுத்தார். அன்று மாலை தான் காசிக்குப் புறப்படுவதாலும், திரும்பி வர ஒரு மாத காலம் ஆகும் என்பதாலும் வேண்டுமானால் கொடைக்கு வந்து விட்டு சென்னை திரும்பும் உறவினர்களோடு சேர்ந்து மகன் வீட்டிற்கு சென்று தங்குமாறும் சொல்லி விட்டு பயணத்திற்கு தேவையான உடைகளை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு காசிக்கு புறப்பட்டுச் சென்ற போத்தி அதன் பின் புலிப்பட்டி ஊருக்கு திரும்பவேயில்லை.

நன்றி. வணக்கம்.

No comments: