Sunday, February 03, 2019

துள்ளு மறி - பாகம் 3

துள்ளுமறி - பாகம் 

துள்ளுமறி - பாகம் 2 -  சொடுக்கி படித்து விட்டு பின் இங்கு தொடருங்கள்.

பாகம் 3

கொடை தினமன்று காலை முதலே ஊரெங்கும் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளில் பால்குடம் அழைப்பு, வார்ப்பு பாயாசம் விநியோகம், வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம் என ஒவ்வொரு நிகழ்ச்சிகள் குறித்தும் அறிவிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஆச்சி, அம்மா, அப்பா என ஆள் மாற்றி ஆளாக ஒவ்வொருவருடனும் கோயிலுக்கு சென்று வேடிக்கை பார்த்த ஐயப்பாவிற்கு முதல் முறையாக ஊருக்கு வந்து கொடை விழா பார்ப்பதால் அனைத்தும் புதுமையாகவும், விநோதமாகவும் இருந்தன. அப்பா, அம்மாவிடம் சொல்லி விட்டு தன் வயதையொத்த ஒரே தெருவைச் சேர்ந்த விளையாட்டுத் தோழர்களான நான்கைந்து சிறுவர்களுடன் சேர்ந்து கோயிலையும், சுற்றி அமைந்திருந்த திருவிழாக் கடை வீதிகள் முழுதும் சுற்றி, சுற்றி வந்தான் ஐயப்பா.

வார்ப்பு பாயாசம் விநியோகம் நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டத்திற்குள் நுழைந்து, அடுப்பில் இருக்கும் பாயாச தேக்சாக்களை அடைந்து தனியாக வாளிகளில் கோரி வந்து தங்கள் குழுவிற்கு பகிர்ந்து கொடுத்தனர் ஐயப்பாவின் நண்பர்கள். விழாக் குழுவினர் ஊர் மக்களுக்கு விநியோகிக்க சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்கள் இருக்கும் குத்துபோனி எனப்படும் பாத்திரங்களை  தலைக்கு மேல் வைத்து எடுத்து வரும்போதே சில குறும்புக்காரச் சிறுவர்கள் மேற்கூரைப் பந்தலுக்காக ஊன்றப் பட்டிருந்த பந்தக்கால் வழியாக ஏறி குறுக்குவாக்கில் அமைக்கப்பட்டிருந்த கம்புகளில் தலைகீழாக தொங்கியவாறு, கூட்ட நெரிசலினால் திணறிய படி மெதுவாக தட்டுத்தடுமாறி தூக்கி வரும் விழாக்குழு உறுப்பினருக்கு தெரியாமல் மேலிருந்து கை விட்டு  அள்ளி கீழே நிற்கும் நண்பர்கள் தூக்கி பிடிக்கும் பாத்திரங்களில் போட்டனர்.

பகல் உணவிற்கு அம்மா, அப்பா, ஆச்சி என ஆள் மாற்றி ஆள் அழைத்தபோதும் பாயாசம், சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் பிரசாதங்கள் சாப்பிட்டே வயிறு நிறைந்து விட்டதாக கூறி மறுத்த ஐயப்பா நாள் முழுதும் நண்பர்களோடு கோயிலையும், கடை வீதிகளையும் சுற்றி விளையாடிப் பொழுதைப் போக்கினான். மாலை நேரத்தில் பேரனைத் தேடி வந்த போத்தி, வீட்டில் இருந்து காய்ச்சி எடுத்து வந்த பாலைக் குடிக்க வைத்து, மேலும் சில தின்பண்டங்களும் ஐயப்பாவிற்கும், அவனது நண்பர்களுக்கும் வாங்கிக் கொடுத்து விட்டு பின் ஆட்டுப் பட்டி அமைக்கப் பட்டிருந்த வயல் நோக்கிச் சென்றார். நண்பர்களுடான விளையாட்டு ஆர்வத்தில் ஐயப்பா அன்று அவருடன் செல்ல வில்லை.

ஆட்டுப்பட்டிக்குச் சென்று அன்றாட வேலைகளை முடித்து விட்டு மறுநாள் அம்மன் கோயிலில் வெட்ட வேண்டிய கிடாக்களை தேடிப் பிடித்து, கயிற்றில் பிணைத்து ஒரு கையில் பிடித்துக் கொண்டும், தாயுடன் பட்டிக்குள் இருந்த செவலைக் குட்டியை துள்ளு மறிக்காக ஒரு கையில் தூக்கிக் கொண்டும் கோயிலுக்கு வந்த போத்தி. விழாக்குழுவினரை அழைத்து கிடாக்களையும், துள்ளு மறியையும் காண்பித்து மடப்பள்ளியருகே இருந்த பந்தக்கால்களில் வரிசையாக கட்டி வைத்து விட்டு வீடு நோக்கி சென்றார். வீட்டில் தயாராக இருந்த வெந்நீரில் குளித்து விட்டு, சப்பர வேலைகளுக்கு உதவி செய்வதற்காக கோவிலுக்கு கிளம்பியவர் பேரன் கண்ணில் படாததால் எங்கே என்று விசாரிக்க இன்னும் வீடு திரும்பவில்லை என்று ஆச்சி சொன்னதால் கோயிலுக்குச் சென்று தேடிய போது அங்கு ஐயப்பா நண்பர்களுடன் பச்சைக் குதிரை தாண்டி விளையாடிக் கொண்டிருந்தான்.

இரவு வெகு நேரம் ஆகி விட்டதால் பேரனையும், உடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களையும் அன்பாக அதட்டி வீட்டில் போய் தூங்கச் சொன்னார் போத்தி. வீட்டிற்குப் போகும் வழியில் ஊர் சுற்ற கிளம்பும் உற்சவ அம்மனுக்கு தீபாரதனை காண்பித்து சுண்டல், பூம்பருப்பு கொடுப்பதாக ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யவும், உடன் இருந்த நண்பர்கள் கோயிலை நோக்கி ஓடவே ஐயப்பாவும் பின் தொடர்ந்து ஓடினான்

மடப்பள்ளி அருகே விநியோகம் செய்து கொண்டிருந்த பிரசாதங்களை கூட்ட்த்தில் நுழைந்து வாங்கித் தின்று கொண்டிருக்கும் போது அங்கே பந்தக்காலில் கட்டப்பட்டிருந்த செவலைக் குட்டியைப் பார்த்து, “இது எப்படி இங்கே வந்தது…” என ஆச்சரியமாக நண்பர்களிடம் கேட்க மறுநாள் காலை பலி கொடுக்கப் போகும் விவரத்தைக் கூறி விட்டு அவரவர் வீடு நோக்கிச் சென்றார்கள். அவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து சில நேரம் நின்ற ஐயப்பா பின் ஒரு முடிவு எடுத்தவனாக, பிரசாத விநியோகம் முடிந்து எல்லோரும் அந்த இடத்தை விட்டு அகன்ற பின் அக்கம் பக்கம் பார்த்து யாரும் அருகில் இல்லை என்பது உறுதியானவுடன் செவலைக் குட்டியை அவிழ்த்து கையில் தூக்கிக் கொண்டு மடப்பள்ளி அருகே இருந்த சிறிய கதவு வழியாக கோயிலை விட்டு வெளியேறி, இருட்டில் பதுங்கிப் பதுங்கிச் சென்று வீட்டை அடைந்தான். வீட்டில் உபயோகப்படுத்தாமல் ஓரத்தில் வைத்திருந்த கோழிக்கூடையை எடுத்து கவிழ்த்து அதனுள் செவலையை மறைத்து வைத்து விட்டு நிம்மதியாக உறங்கச் சென்றான் ஐயப்பா.

உற்சவ அம்மனை சப்பரத்தில் ஏற்றி அம்மன் கோவில் இருக்கும் நடுத்தெரு கடந்து ராந்தக்கல் வரை உடன் வந்த போத்தி இரவு பன்னிரெண்டு மணியை தாண்டி விட்டதால் அலுப்பின் காரணமாக வீடு நோக்கி உறங்கச் சென்றார்.  மனைவி, மகன், மருமகள், பேரன் மற்றும் கொடை பார்க்க வந்திருந்த  உறவினர்கள் என வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆட்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததால் தான் படுக்க இடம் தேடிய போத்தியின் கண்களில் கோழிக்கூடை பட்டதால் எடுத்து வேறெங்காவது வைத்துவிட்டு அந்த இட்த்தில் படுக்க முடிவு செய்தார்.

கவிழ்த்து வைத்திருந்த கோழிக்கூடையை எடுத்து மேலே பரணில் வைத்துவிட்டு, கூடை இருந்த இட்த்தை சுத்தப்படுத்தும் விதமாக தோளில் இருந்த துண்டால் வேகமாக விசிறியவர், “ம்ம்மேஎன்று அலறிய ஆட்டுக்குட்டியின் சத்தம் கேட்டு அதிர்ந்து, விளக்கைப் போட்டுப் பார்த்தவர் செம்மறிக் குட்டியைப் பார்த்ததும், தூக்க கலக்கம்  முற்றிலும் கலைந்தவராய், “ இது எப்படி இங்கே வந்தது...என செய்வதறியாது திகைத்தார். கோயிலில் விட்டு வந்த குட்டியை யார் தூக்கி வந்திருப்பார் என யோசித்தவர், பேரனின் சேட்டையாகத் தான் இருக்கும் என முடிவு செய்து கோயிலில் மறுபடியும் கொண்டு விடுவதற்காக குட்டியை தூக்கிக் கொண்டு போனார்.

நள்ளிரவு என்பதால் போத்தி போன நேரம் கோயிலில் யாரும் இல்லை. மேளக்காரர்கள் சப்பரத்துடன் ஊர் சுற்றி வரப் போயிருந்தார்கள். வில்லுக்காரர்கள் தூங்கப் போயிருந்தார்கள். விழாக் குழுவினரும், சில வயதானவர்களுமாக அங்கங்கே சிலர் மட்டும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். மடப்பள்ளியின் அருகே இருந்த பந்தக்கால்களில் வரிசையாக கட்டப்பட்டு படுத்திருந்த கிடாக்கள் போத்தியைப் பார்த்ததும் எழுந்து வாஞ்சையுடன் தலையை ஆட்டி அன்பைத் தெரிவித்தன. ஏற்கனவே கட்டியிருந்த பந்தக்காலில் மறுபடியும் செம்மறிக் குட்டியை கட்டி விட்டு, கிடாக்களையும் தடவிக் கொடுத்து விட்டு, வீடு திரும்பி உறங்கிப் போன போத்தி அதிகாலையில் சப்பரம் ஊர் சுற்றி வந்து அம்மன் கோயிலில் மேளம் அடித்து சாமியாடும் சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்து வழக்கம் போல ஆட்டுக் கிடை போட்டிருக்கும் வயல் நோக்கிப் போய் பட்டி வேலைகளை பார்க்கலானார்.

( தொடரும் )

No comments: