Monday, February 04, 2019

துள்ளு மறி - பாகம் 4

பாகம் 1




சொடுக்கி படித்து விட்டு பின் இங்கு தொடருங்கள்.
பாகம் 4

வழக்கமாக புலிப்பட்டி ஊரில் கிடா வெட்டு முடிந்ததும் தங்கள் நேர்ச்சைக்காக தனிப்பட்ட முறையில் ஆடு, கோழி வெட்டியவர்கள் அவரவர் வீட்டிற்கு எடுத்துச் சென்று  சமைத்து உறவினர்களையும், ஊராரையும் அழைத்து கறி விருந்து வைத்து விடுவார்கள். கோவில் சார்பாக வெட்டப்படும் ஆடுகள், கோழிகள் அந்த இடத்திலே ஏலம் விடப்பட்டு யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு கொடுக்கப்படும். ஏலம் மூலம் கிடைத்த பணமும், கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு அந்த வருடச் செலவு போக மீதம் இருக்கும் தொகையோடு சேர்த்து அடுத்த வருட கொடைக்கான நிர்வாகச் செலவுகளுக்கு பயன் படுத்தப்படும். 

எட்டு மணி வாக்கில் தூங்கி எழுந்தவுடன் நேராக செம்மறி குட்டியை இரவில் வைத்த இடத்திற்கு சென்ற ஐயப்பா கூடை மேலே பரணில் இருப்பதையும், குட்டி வீட்டில் இல்லாத்தையும் பார்த்து ஒரு வேளை தாத்தா காலையில் கிடைக்கு எடுத்துச் சென்று தாய் ஆட்டுடன் சேர்த்திருப்பார் என்ற நம்பிக்கையில் ஆறுதல் கொண்டவனாய் பல் தேய்த்து, பால் குடித்து, காலை உணவையும் சாப்பிட்டு விட்டு, நண்பர்களுடன் சேர்ந்து மறுபடியும் கோவிலுக்கு விளையாடப் போனான். கோயிலுக்கு வெளியே நின்ற சப்பரத்திலிருந்த அலங்காரத் தட்டிகள் மற்றும் கோயில் உள்ளேயும், சுற்றியும் போட்டிருந்த பந்தலைப் பந்தல்காரர்கள் பிரித்துக் கொண்டிருந்தனர். ஒலி பெருக்கிகள், குழல் விளக்குகள் மற்றும் அலங்கார வண்ண தொடர் விளக்குகளை ஒளி-ஒலி அமைப்பாளர்கள் அவிழ்த்துக் கொண்டிருந்தனர். விழாக் குழுவினர் வில்லுப் பாட்டுக் குழுவினர், மேளக்காரர்கள், வெடிகாரர், பந்தல்காரர், ஒளி-ஒலி அமைப்பாளர் என ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டிய மீதத் தொகையை கணக்கு பார்த்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கோவில் உள்ளே விளையாட இடம் இல்லாததால் வெளியே குச்சி ஊன்றி, அணி பிரித்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்கள் ஐயப்பாவும், நண்பர்களும். எதிர் அணியான் ஒருவன் தூக்கி அடித்த பந்து கோயிலுக்கு அருகே இருந்த வீட்டின் உரக்குழியில் விழ, அங்கு கூட்டமாய் இருந்த காகங்கள் பதறி, எழுந்து பறந்து மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தன. பந்தை துரத்தி ஓடிய ஐயப்பா எங்கே விழுந்தது என்று தெரியாமல் தேடியும் கிடைக்காமல் போகவே, உடன் தேடி வந்த நண்பர்களில் ஒருவன் கூட்டமாய் அமர்ந்திருந்த காகங்களை விரட்டி விட்டு அவை கூடி இருந்த இடத்திற்கு மிக நெருக்கமாய் பந்தை தேடிப் போனவன் ,” எலெய், வெட்டுன துள்ளு மறி இங்க கிடக்குலேய். அதான் காக்காலாம் வந்து கொத்திட்டு இருக்கு…” என்று கத்தினான். ஆம். வெட்டிய எல்லாக் கிடாக்களும், சேவல்களும் ஏலத்தில் போய் விட்டாலும் எலும்பு, கறி, தோல் எதுக்குமே ஆகாத துள்ளுமறியை வாங்குவார் யாருமில்லை. ஏலம் போகாத அந்த குட்டியை பந்தல் வேலை செய்யும் ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு போகும் போது எடுத்துச் செல்ல்லாம் என கோயில் வெளிச் சுவற்றின் அருகே வைத்திருக்க, அதைத் தான் காகங்கள் சூழ்ந்து கொத்திக் கொண்டிருந்தன.  
  
மற்ற நண்பர்களோடு அருகில் ஓடி வந்து பார்த்த ஐயப்பா அதிர்ச்சி அடைந்து அருவெறுப்பில் ஓங்கரித்து, ஓங்கரித்து தொடர்ந்து வாந்தி எடுத்து வலிப்பு வந்து மயங்கி விழுந்தான். பதறிப் போன சிறுவர்கள் கத்தியதைக் கேட்டு ஓடி வந்த விழாக்குழுவினர் கோயிலுக்குள் தூக்கிப் போய் கையில் இரும்புச் சாவி கொடுத்து ஆசுவாசப் படுத்தினர். அதற்குள் ஒரு சிறுவன் ஓடிப் போய் போத்தி வீட்டில் தகவல் சொல்ல ஆச்சியும், ஐயப்பாவின் தாய், தந்தையரும் அலறி அடித்து ஓடி வந்து அழுது புலம்ப சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தாரும் கூட கோயிலில் கூட்டம் குவிந்து விட்டது. “ என் ஆட்டுக் குட்டிஎன் ஆட்டுக் குட்டி…” என்று மயக்கம் தெளிந்து அழுத ஐயப்பாவை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை. யார் என்ன சொன்னாலும் ஓவென்று பெருங்குரலெடுத்து அழுதான் ஐயப்பா.

ஒரு வழியாக ஐயப்பாவை தூக்கி, தோளில் போட்டுக் கொண்டு வீடு வந்தவர்கள் உடனே கிளம்பி ஒரு ஆட்டோ அமர்த்தி அம்பை அருணாச்சலம் டாக்டர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஐயப்பாவை பரிசோதித்த மருத்துவர், “ எதிர்பாராத அதிர்ச்சியே வலிப்பிற்கு காரணம். பையன் பலவீனமாக இருப்பதால் குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று கூறி ஒரு அறையில் தங்க வைத்து ஊசி, மருந்து கொடுத்து குளுக்கோஸ் பாட்டிலும் போட்டு விட அலுப்பில் ஐயப்பா உறங்கிப் போனான். இந்த விபரம் ஏதும் தெரியாமல் கிடை வேலைகளை முடித்து விட்டு வந்த போத்தி வீடு பூட்டியிருப்பதைப் பார்த்து, எல்லோரும் எங்கே சென்றிருப்பார்கள் என்று ஏதும் புரியாமல் நிற்க பக்கத்து வீட்டம்மாள் வந்து சாவி கொடுத்து விபரம் கூறினார்.  பேரன் வலிப்பு வந்து மயங்கி விழுந்த்தைக் கேட்ட போத்திக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்ன செய்ய என்று தெரியாமல் திகைத்து நின்றவரை சமாதானப்படுத்திய எதிர்வீட்டுக்காரர் தன் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி அம்பை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

மருத்துவமனைக்கு வந்த போத்தியைப் பார்த்த்தும் ஆச்சியும், மகனும், மருமகளும் அழ ஆரம்பிக்க போத்தியும் கண்ணீரை அடக்க முடியாமல் கத்திக் கதறி விட்டார். இவர்கள் போட்ட சத்த்த்தில் பதறி எழுந்த ஐயப்பாவும், “ என் ஆட்டுக் குட்டிஎன் ஆட்டுக் குட்டி…” என்று மறுபடியும் ஆரம்பித்து,” நீ தானே என் ஆட்டுக்குட்டியை வெட்ட கொண்டு போய் கொடுத்தே… “ என்று தாத்தா மேல் புகார் சொல்லி அழ ஆரம்பிக்க இரைச்சல் கேட்டு தன் அறையில் இருந்து எழுந்து வந்த டாக்டர் பெரியவர்களை அதட்டி, ” பையனையும், அம்மாவையும் தவிர மற்றவர்கள் வெளியே வாருங்கள்…” என்று அழைத்து வந்தார்.

இதற்கு முன் இப்படி வலிப்பு வந்ததில்லையே எனக் கேட்டவர்களிடம், “ வலிப்பு வர உடல் பல்வீனம், மனச் சோர்வு, எண்ணக் குழப்பங்கள், தட்ப வெப்பம், உணவுப் பழக்கம் என்று பல காரணங்கள் உள்ளன. இவற்றில் எல்லாமே உங்கள் குழந்தைக்கு ஒத்து வரும் என்பதால் இரண்டு, மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்து மறுபடியும் வலிப்பு வரவில்லை என்றால் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்.” என்று கூறிச் சென்றார் மருத்துவர். மறுபடியும் புலிப்பட்டிக்குச் சென்றாலோ, போத்தியைப் பார்த்தாலோ மீண்டும் வலிப்பு வரக்கூடிய அபாயம் இருந்ததால் போத்தியை மட்டும் ஊருக்குப் போகச் சொல்லி விட்டு ஆச்சி, மகன், மருமகள், பேரனோடு மருத்துவமனையிலே தங்கி விட்டார்.

( தொடரும் )
                  

No comments: