Saturday, December 29, 2018

ஊத்துக்குழி - பாகம் 12











மேலே இருக்கும் கதைப் பாகங்களை சொடுக்கிப் படித்துவிட்டு பின் இங்கே தொடரவும்.

பாகம் 12 – இதுவும் கடந்து போகும்...

ஏழெட்டு நாட்களாக தொடர்ந்து எரிக்கப்பட்ட ராமசாமிப் போத்தி வீட்டுக் கூரை  மரைக்காயரின் மலையாள மந்திர, தந்திரத்தினால் முந்தைய நாள் இரவு தீப்பிடிக்காதது விடிகாலைப் பொழுதிற்குள் ஊரெல்லாம் பரவிட அனைவரும் வந்து ஆச்சரியமாக பார்த்துப் போயினர். சிலர் நேராக பள்ளிவாசலுக்கே சென்று மரைக்காயரிடம் தங்கள் குடும்பம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளைக் கூறி மந்திரம் மூலம் தீர்வு கிடைக்குமா என்று விசாரிக்க, நியாயமான கோரிக்கைகளுக்கு மட்டும் உதவுவதாக கூறி அனுப்பினார் மரைக்காயர். மேலும் சிலரோ ஆரோக்கியம் ஐயாவின் தொடர் பிரார்த்தனைகளே கூரையை தீப்பிடிக்காமல் செய்தது என்று கூறி தங்கள் வீடுகளிலும் சபை பாதிரிகளை வந்து ஜபவழிபாடு செய்யச் சொல்லுமாறு  போத்திகளிடம் கூறிச் சென்றனர். தங்கள் வீட்டுக் குழந்தைகள் கிறித்துவ மதபிரசங்கப் பாடல்கள் பாடுவதை பலரும் வியந்து கொண்டாடினர். இவ்வாறு ஊரே பரபரப்பாக பேசித் கொண்டிருக்கும் போது பெரிய பண்ணையாரம்மாவின் நோய்க்கும் மரைக்காயர் அல்லது ஆரோக்கியம் ஐயாவின் உதவி நாடிப் பார்த்தால் நல்லது என்று பலரும் கூற ஆரம்பித்தது பூசாரி மற்றும் ஈணா, சோணாவின் காதுகளுக்கும் சென்றது.

எடுத்த காரியத்தில் வென்று விட்டதாக எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஏற்பட்ட இந்த பின்னடைவு ஈணா, சோணாவிற்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது என்றாலும் சின்னப் பண்ணையாரையும், பெரிய பண்ணையாரம்மாவையும் அணுகி யாரும் இதுபற்றி சொல்லி விடாமல் இருக்க தங்களால் ஆன தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டனர். யார் கண்ணிலும் படாமல் வயலையும், வீட்டையும் எரித்து போத்தி நிம்மதியை தொடர்ந்து குலைத்து வந்தவர்கள் முந்தைய நாள் பிடிபட இருந்த்து போல் இனியும் அசட்டையாக இருக்கக் கூடாது என்று பேசி முடிவெடுத்தனர். பூசாரியோ தெருவில் ஊர்க்குழந்தைகள் கிறித்துவ மதப்பாடல்களை பாடி, விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டும், மரைக்காயரின் மலையாள மந்திரத்தை அனைவரும் பெருமையாக பேசுவது கேட்டும், இந்த நிலை நீடித்தால் கோயில்களுக்கு யாரும் வரமாட்டார்களே… தனது சித்த மருத்துவ மகிமையும் கெட்டுப் போகுமே என்று பலவாறு எண்ணி குழம்பிப் போனார்.

போத்திகள் இருவரும் சனிக்கிழமை சந்தைக்குப் போகும் வழியில் சபைத் தோட்ட்திற்குச் சென்று ஆரோக்கியம் ஐயாவை சந்தித்து மரைக்காயரின் மலையாள மாந்திரீகத்தால் கூரை எரியாமல் காப்பாற்றப்பட்டது குறித்தும், தூக்குத்துரை ஐயாவிற்கு சிறப்பு வழிபாடு நடத்த மரைக்காயர் சொல்லியிருப்பதால் சாமான்கள் வாங்க சந்தைக்கு போவதாகவும் கூறி, தினமும் மாலை நேரம் பள்ளிப் பாதிரிகளையும், விடுதி மாணவர்களையும் தொடர்ந்து அனுப்பி ஜபங்கள் செய்து, துதி பாடல்கள் பாடி தங்களுக்கும், மற்ற ஊர் மக்களுக்கும் மன ஆறுதல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்ற ஆரோக்கியம் ஐயா இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் விதமாக சின்னப் பண்ணையாரையும், பெரிய பண்ணையாரம்மாவையும் சந்தித்து பேசப் போவதாகவும், மேலும் நம்பிக்கை தரும் பல நல்ல வார்த்தைகளும் கூறி அவர்களை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார்.

சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு நடக்கும் சிறப்பு வகுப்புகளை பார்வையிட்டு முடிக்கவே மதிய நேரம் ஆகிவிட்டதாலும், சின்னப்பண்ணையார் பொதுவாக பகல் நேரங்களில் பல விஷயங்களாக அம்பை, கல்லிடை, தென்காசி போன்ற ஊர்களுக்கு சென்று விட்டு அந்திப் பொழுதிலே திரும்புவார் என்பதாலும், மாலை நேரத்தில் ஜப வழிபாட்டிற்காக மற்ற பாதிரிகளும், விடுதி மாணவர்களும் செல்லும் பொழுது தாமும் செல்லலாம் என முடிவெடுத்த ஆரோக்கியம் ஐயா வழக்கமான சபை நிர்வாக வேலைகளில் கவனம் செலுத்தலானார்.  

காலை உணவு முடித்துவிட்டு வெளியே கிளம்பும் சின்னப்பண்ணையாரோடு ஈணா, சோணா இருவரில் யாரவது ஒருவர், மதிய உணவுப் பெட்டியை எடுத்துக் கொண்டு வண்டியோட்டிச் செல்வர். இன்னொருவர் வீட்டுக் காவலுக்கு இருப்பர் என்பதால் சின்னப் பண்ணையாரை பார்க்கவோ, பேசவோ அவர்கள் அனுமதி இல்லாமல் யாரும் அணுக முடியாது. அவர்கள் கண்காணிப்பை மீறி பண்ணை வீட்டுக்குள்ளும் யாரும் நுழைய முடியாது. ஊரில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் ஈணா, சோணா மற்றும் பூசாரி மூலமே சின்னப்பண்ணையாருக்குச் செல்லும். போத்தியின் வயலையும், வீட்டையும் கொளுத்திய விபரம் கூட முழுமையாகச் சொல்லாமல் அவரை விரைவில் வழிக்கு கொண்டு வந்து விடுவோம் என்று மட்டும் பேம்போக்காக சொல்லி வைத்திருந்தனர்.

மாலை நேரம் போத்திகள் வீட்டில் இளம் பாதிரிகளும், விடுதி மாணவர்களும் நடத்தும் ஜபக்கூட்டத்தில் சிறிது நேரம் கலந்து கொண்ட ஆரோக்கியம் ஐயா பண்ணையார் வீடு சென்ற நேரம் இருட்டி விட்டது. ஈணா, சோணா இருவரும் ஆற்றிற்கு குளிக்க சென்றிருந்ததால், மற்றொரு வேலையாள் மூலம் தான் சின்னப் பண்ணையாரைப் பார்க்க வந்த செய்தியை சொல்லி அனுப்பினார். சகோதரர்கள் சபை பள்ளியும், விடுதியும் தொடங்கிய காலம் முதல் பள்ளி விழாக்களில் பரிசுகள் வழங்க சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பண்ணையார் குடும்பத்தினர் அழைக்கப்படுவதால் சின்னப் பண்ணையாருக்கும் ஆரோக்கியம் ஐயாவின் மீது மிகுந்த மரியாதை இருந்தது. உடனே வரவேற்பறைக்கு வந்து வழக்கமான ஷேம லாபங்கள், பள்ளி மற்றும் விடுதி நிர்வாகம் குறித்து  பேசிக் கொண்டிருந்த பண்ணையாரிடம் ஆரோக்கியம் ஐயா மென்மையாக தான் வந்த விஷயத்தை தெரியப்படுத்தினார்.

பெரிய பண்ணையார் தது பண்ணையில் தலைமை காவல்கார பொறுப்பு ஏற்க பலமுறை அழைத்தும்  பிடிகொடுக்காதது, சிறுவயதில் தனக்கு சிலம்பு கற்க சொல்லிக் கேட்டபோது மறுத்தது, ஈணாசோணா விவகாரத்தில் தங்களுக்கு தெரிவிக்காமல் தம் வீட்டுக் காவலாளிகளை தண்டித்தது.. “ போன்ற பழைய விஷயங்களில் போத்தியின் செயல்பாடு குறித்து ஆதங்கப்பட்ட சின்னப் பண்ணையார், தனது அன்னையின் நோய் குணமாவதற்காக இறங்கிச் சென்றுப் பேசியும் போத்தி ஊத்துக்குழிக்கு வழிப்பாதை அமைக்க இடம் கொடுக்க மறுத்தது குறித்துச் சொல்லும்போது மட்டும் “ அப்படி என்ன வெறுப்பு அந்த போத்திக்கு எங்க குடும்பத்து மேல…  என்று கோபப்பட்டு கேட்டார்.

அமைதியாக அனைத்து விவரங்களையும் காது கொடுத்து கேட்ட ஆரோக்கியம் ஐயா, “அதுக்காக குடியிருக்கிற வீட்டையும், கும்பிடுற வயலையும் கொளுத்தறது நியாயமா… தர்மமா…. நீதியா… “ என்று கேட்க கேட்க சின்னப்பண்ணையார் அதிர்ந்தார். “போத்தியிடம் பேசிப் பார்த்துதான் வழிக்கு கொண்டு வரச் சொன்னேனே தவிர, வீட்டிற்கும், வயலுக்கும் தீ வைக்கச் சொல்லவில்லையே…” என்று வருத்தப்பட்டவர்  இந்த விஷயத்தை நோய்வாய்ப்பட்டு தளர்ச்சிசியோடு இருக்கும் தன் அன்னையிடம் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் தானே விரைவில் பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வருவதாகவும் உறுதி கூறினார். மரைக்காயர் மந்திரம் மூலம் தீப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததையும், மறுநாள் தூக்குத்துரை ஐயாவிற்கு போத்தி குடும்பத்தார் சிறப்பு வழிபாடு செய்ய இருப்பது குறித்தும் ஆரோக்கியம் ஐயா கூற தானும் சென்று வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று சின்னப்பண்ணையார் மனதில் எண்ணிக் கொண்டார்.

ஜபவழிபாடு முடித்த பாதிரிகளின் வண்டி  பண்ணையார் வீட்டிற்கு வந்திருப்பதாக வேலயாள் வந்து சொல்லவும், பிரச்சினைக்கு தீர்வு கிடைத்த மனநிறைவோடு ஆரோக்கியம் ஐயா அவர்களோடு சேர்ந்து கிளம்பி சபைத் தோட்ட விடுதி நோக்கிச் சென்றார். ஆரோக்கியம் ஐயா சின்னப் பண்ணையாரைச் சந்தித்து சென்ற விபரம் அறியாத ஈணா, சோணா இருவரும் ஆற்றுக்குச் சென்று முந்தைய நாள் போலவே கூழாங்கற்களை சேகரித்து வண்டியில் ஏற்றிக் கொண்டு, ஊரடங்கும் வரை காத்திருந்து தீப்பந்தங்களோடு போத்தி வீடு நோக்கி வந்தனர். போத்திகளும் பேரன்களோடு எதிரிகளின் கல்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக உடலில் சுற்றத் தேவையான கனத்த போர்வைகளோடும், தலைக்கவசமான பிரம்புத் தட்டுக்களோடும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அன்றும் தீப்பந்தங்களை எறிந்தும் கூரை தீப்பிடிக்காததால் கோபமுற்று கூழாங்கற்களை வீசி எறிய ஆரம்பித்த ஈணா, சோணாவை ஏற்கனவே தங்கள் வீட்டைச் சுற்றி குவித்து வைத்திருந்த கற்களால் பல திசைகளில் இருந்தும் சராமரியாக தாக்கி தோற்று ஓடச் செய்தனர் போத்தி குடும்பத்தார்.

(தொடரும்)

No comments: