Monday, August 03, 2009

படைப்பாளிகள்

சென்ற
நூற்றாண்டின்
சிறந்த
படைப்பாளிகள்
யாரென்று
கேட்டால்
உன்
பெற்றோர்
பெயர்களைத்தான்
கூறுவேன்
நான்.

Saturday, August 01, 2009

நாளை நண்பர்கள் தினம்.

உலகெங்கும் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே. வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய மனம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Give thousand chances to your enemy to become your friend, But don't give a single chance to your friend to become your enemy.
' F - Few
R - Relations
I - In
E - Earth
N - Never
D - Die'


பெற்ற நட்பை பேணிக்காப்போம்.
வாழ்த்துக்கள்.

Wednesday, July 29, 2009

இடையினம்.....


மெல்லினமான
அவள்
இடையினம்
கண்டு
வல்லினமானது
என்மனம்.

Monday, July 27, 2009

அ,ஆ,இ,ஈ,உ,ஊ.....


ரிவாள்

டு

ரத்தம்


யிர்

ருக்காக....

Sunday, July 26, 2009

மும்பை 26/11 கொடூர சம்பவ வழக்கில் குற்றவாளி கசாப் ஒப்புதல் வாக்குமூலம்




மும்பை 26/11 கொடூர சம்பவ வழக்கில் ஒரு வாக்குமூலம் - ஒரு மெகா திருப்பம் : குற்றவாளி கசாப் ஒப்புதல் பின்னணி


""முஜே குணாஹ் கபூல் ஹை...!'' - (என் குற்றத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்) மும்பையில் கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் சிக்கிய ஒரே பயங்கர வாதி அஜ்மல் கசாப், மும்பை விசேஷ கோர்ட்டில் 20ம் தேதி பிற்பகலில், விசாரணை ஆரம்பித்த சில நிமிடங்களில் சொன்ன வார்த்தைகள் இவை.



தாஜ், ட்ரைடென்ட் ஓட்டல்கள், சி.எஸ்.டி., ரயில் நிலையம் உட்பட சில இடங் களில் பாக்., பயங்கரவாதிகள் பத்து பேர் கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தினர். 180 பேர் கொல்லப்பட்ட இந்த பயங்கர சம்பவத்தில் உயிருடன் சிக்கிய ஒரே குற்றவாளி அஜ்மல் கசாப் தான். கசாப்பிடம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசேஷ கோர்ட்டில் விசாரணையும் ஆரம்பித்தது. நான்கு மாத விசாரணையில் கசாப், இதுவரை எதுவும் வாய் திறக்கவில்லை. கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டதும், கூண்டில் உட்கார்ந்து விடுவான்; எதுவும் வாய் திறந்து கூட பேச மாட்டான். அப்படியிருக்கும் கசாப், கடந்த 20ம் தேதி கோர்ட்டில், நீதிபதி முன்னிலையில் திடீரென நாலரை மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளான். பாகிஸ்தானில் லஷ்கர் முகாமில் பயங்கரவாத பயிற்சி பெற்றது முதல், கராச்சியில் இருந்து படகில் மும்பை வந்து, அங்கிருந்து சி.எஸ்.டி.,க்கு வந்து தாக்குதலை நடத்த ஆரம்பித் தது உட்பட எல்லாவற்றையும் விரிவாக சொல்லி விட்டான். இப்படி அவன் சொல்லி முடித்தபோது, அதிர்ச்சி அடைந்தது அவன் வக்கீல் தான். அவன் சார்பில் வாதாட நியமிக்கப்பட்ட வக்கீல் அப்பாஸ் கஸ்மியை மட்டுமல்ல, கோர்ட்டில் இருந்த போலீஸ் அதிகாரிகளையும் நிலைகுலைய வைத்தது.


படிப்பறிவில்லாதவன்; பாகிஸ்தானில் பரீத்கோட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன் கசாப். அவனிடம் விசாரணை செய்த போது, தகவல் களை சேகரிப்பதே பெரும் சிரமமாக இருந்தது. பல மறுப்புகள்; பல குழப்பமான பதில்கள்; பல தயக்கங்கள் என்று அவன் பேச்சுகளில் தெரிந்தது. அப்படியும் பொறுமையாக அவனிடம் தகவல்களை சேகரித்தனர் போலீசார்.


திடீர் மாற்றம் ஏன்? அப்படியிருக்கும் போது, கசாப்பிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம், வக்கீல்கள், விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் பற்றி பாகிஸ்தான் பல முரண்பட்ட தகவல்களை தந்து குழப்பிக் கொண்டிருக்கும் நிலையில், கசாப்பின் "வாக்குமூலம்' இன்னும் பல குழப்பங்களையும், திருப்பங்களையும் ஏற்படுத்துமோ என்று கேள்வி எழுகிறது.

பாகிஸ்தானில் இருந்து வந்த 10 பேர் கும்பலில், கசாப்பும், அபு இஸ்மாயில் ஆகிய இருவரும் சி.எஸ்.டி., நிலையத்தில் தாக்குதல் நடத்த ஆரம்பித்து, பக்கத்தில் காமா மருத்துவமனை மற்றும் சாலையில் ஏ.கே.47 துப்பாக்கியாலும், கையெறிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து, 61 பேரை கொன்றுள்ளனர். கசாப் இப்போது கோர்ட்டில் தந்துள்ள வாக்குமூலத்தில், நான் குற்றவாளி' என்பதை தவிர, சம்பவங்களை கோர்த்திருக்கும் போக்கை பார்த்தால், போலீஸ் விசாரணையில் தெரிவித் ததற் கும் இதற்கும் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது என்பதை போலீஸ் கண்டுபிடித்துள்ளது. இதனால் தான், கசாப்பின் வாக்குமூலத்தின் பின்னணி பற்றி பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.



என்னென்ன பல்டிகள்: கசாப்பிடம் மும்பை கிரைம் பிரிவு போலீசார் தான் விசாரணை நடத்தினர்; 11,280 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். நாலரை மணி நேரத்தில் நீதிபதி முன் கசாப் சொன்னதற்கும், இந்த குற்றப் பத்திரிகையில் அவன் சொன்னதாக கூறப்பட்டுள்ளதற்கும் முரண்பாடுகள் உள்ளன. தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இருபது விஷயங் களில் இப்படி முரண்பாடுகள் உள்ளதை துல்லியமாக மும்பை போலீசார் ஆதாரபூர்வமாக தயார் செய்துவிட்டனர். அதை கோர்ட்டில் அவர்கள் தரப்பில் வாதிடக்கூடும்.



முரண்பாடுகளில் சில:
* கான்ஸ்டபிள் துகாராம் ஓம்பலே கொலை: சி.எஸ். டி.,யில் தாக்குதல் நடத்தி விட்டு, ஸ்கோடா காரில் கசாப், இஸ்மாயின் தப்பிச் சென்ற போது, அந்த காரில் கான்ஸ்டபிள் ஓம்பலே எப்படியோ ஏறி, கசாப்பை கட்டிப்பிடித்துக் கொண்டு கத்தினார். அப்போது, கசாப், துப்பாக்கியால் ஐந்து முறை ஓம்பலேயை சுட்டான்; அதில் படுகாயமடைந்த அவர் இறந்து விட்டார் என்று கசாப், போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டான். ஆனால், "காரில் போன என் மீது லத்தியால் போலீசார் அடித்தனர். அப்போது, என் துப்பாக்கி நழுவி விட்டது. அதனால், ஓம்பலேயை நான் சுட முடியவில்லை.



* டாக்சியில் வெடிகுண்டு: விலே பார்லே பகுதியில், டாக்சியை பிடித்தனர் கசாப், இஸ்மாயில். முன் சீட்டில் அமர்ந்திருந்த இஸ்மாயில், டாக்சி டிரைவரிடம் பேச்சு கொடுத்து வந்தபோது, பின் சீட்டில் அமர்ந்திருந்த கசாப், காரில் குண்டு வைத்து விட்டான். இது தான் போலீஸ் விசாரணையில் சொன்னது. வாக்குமூலத்தில் கசாப் சொன்னது: "டாக்சியின் முன் சீட்டில் நான் உட்கார்ந்திருந் தேன்; இஸ்மாயில் தான் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தான். அவன் தான் காரில் வெடிகுண்டை வைத்தான்.



* சி.எஸ்.டி.,யில் குண்டு வீச்சு: ரயில் நிலையத்தில் பயணிகளை பயமுறுத்த கசாப், இஸ்மாயில் இருவருமே வெடிகுண்டுகளை வீசினர் என்பதே போலீஸ் குற்றப்பத்திரிகை தகவல். ஆனால், கசாப் வாக்குமூலத் தில் சொன்னதோ, "சி.எஸ்.டி., ரயில் நிலையத்தில் என் துப்பாக்கியில் தோட்டாக்கள் தீர்ந்து விட்டன. நான் கழிப்பறைக்கு சென்று தோட்டாக்களை நிரப்பிக் கொண்டிருந்தேன். இஸ்மாயில் தான் வெடிகுண்டுகளை வீசி பயணிகளை விரட்டினான்.



* படகு டிரைவர் கொலை: பாக்., பயங்கரவாதிகளை குஜராத்தை சேர்ந்த சோலங்கி என்பவர் தான், தன் படகில் மும்பைக்கு அழைத்து வந்துள் ளார். வாடகைக்கு அமர்த்தி வந்த படகு, மும்பை வந்ததும், சோலங்கியை கசாப்பும், இஸ்மாயிலும் கத்தியால் குத்திக் கொன்று விட்டனர். - இது தான் குற்றப்பத்திரிகை தகவல். "படகில் டிரைவர் அறையில் இருந்து ஷோயப்பும், இஸ்மாயிலும் கத்தியுடன் வந்தனர். கத்தியில் ரத்தக்கறை இருந்தது. டிரைவர் சோலங்கியை அவர்கள் கொன்றது அப்போது தான் தெரிந்தது. - இது கசாப்பின் வாக்குமூலம்.



* பாக்., பிரஜை தானா? "கசாப்பை தன் பிரஜையாக பாக்., ஏற்றுக்கொண்டு விட்டது என்று போலீசார் சொல்லியிருக்க வேண்டும். அதனால் தான், "என்னை பாக்., ஏற்றுக்கொண்டதால் தான், குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்' என்று கூறியிருக்கிறான். - கசாப் வக்கீல் கஸ்மி கூறியது இது. "கசாப்பை நாங்கள் பார்க்க வழியே இல்லை. அப்படியிருக் கும் போது, இப்படி சொல்லியிருக்க சாத்தியமில்லை' என்று போலீஸ் தரப்பு தகவல். இப்படி தாக்குதல் தொடர்பான பல சம்பவங்களில் கசாப் வாக்குமூலத்தில் மாற்றிச் சொல்லியிருக்கிறான்.



மர்ம முடிச்சுகள்: கசாப் வாக்குமூல பின்னணியில் பல மர்ம முடிச்சுகள் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. நான்கு மாதங்களாக விசாரணை நடந்துகொண்டிருக் கிறது. கோர்ட்டிற்கு வந்துபோகும் கசாப், ஒரு வார்த்தை கூட பேசமாட்டான்; தனக்கு சம்பந் தமே இல்லாமல் உட்கார்ந்திருப்பான். அப்படிப் பட்டவன், நாலரை மணி நேரம், கோர்வையாக சம்பவங்களை "தேவைப் பட்ட இடத்தில் தனக்கு சாதகமாக மாற்றி' சொல்ல எப்படி முடிந்தது என்பது முதல் மர்ம முடிச்சு.



தன் வாக்குமூலத்தில், பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் பயங்கரவாத தலைவர்களில், அறிமுகமே இல்லாதவர்களின் பெயர்களை சொன்ன அவன், லஷ்கர் தலைவன் ஹபீஸ் சயீது பெயரை சொல்லவே இல்லை. பாக்., லஷ்கர் தலைவர்கள் லக்வி, அபு ஹம்சா, அபு கானா, அபு காபா என்றெல்லாம் சொன்ன அவன், சயீது பாய் என்று கூறியுள்ளான். இதில் இருந்தே, மும்பை தாக்குதலுக்கு முக்கிய காரணமான சதிகார தலைவன் ஹபீஸ் சயீது பெயரை திட்டமிட்டு மறைத்துள்ளான். இது இரண்டாவது மர்ம முடிச்சு.



சிறையில் கசாப்புக்கு "டிவி' பார்க்கும் வசதி இல்லை; பத்திரிகைகளும் படிக்க முடியாது. மும்பை தாக்குதலுக்கு தொடர்பே இல்லாதது போல பேசி வந்த பாக்., சமீபத் தில், "மும்பை தாக்குதலுக்கு பாக்., பயங்கரவாதிகள் தான் காரணம்' என்று ஒப்புக் கொண்டது. இதற்கு மறுநாளே, கசாப் வாக்குமூலம் தந்துள்ளான். இது மூன்றாவது முடிச்சு.



சில மாதங்களுக்கு முன், சிறையில் கசாப்பை மகாராஷ் டிர அமைச்சர் ஒருவர் பார்த் துள்ளார். அமைச்சர் என்று சொல்லிக்கொள்ளாமல் பார்த்த அவர்,"பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை உன்னை; உன் பெற்றோரும் கைகழுவி விட்டனர். விசாரணையை முடித்துக்கொள்ள, நீயே குற்றத்தை ஒப்புக்கொள்ளலாமே' என்று கூறியுள்ளார். அவர் அப்படி சொன்னாரா? ஏன் சொன்னார் என்பது நான்காவது முடிச்சு.



குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டதற்கும், வாக்குமூலத்தில் சொன்னதற்கும் பெரும் முரண்பாடுகள் உள்ளன. கசாப் போன்ற படிப்பறியாத குற்றவாளியால் இப்படி கோர்வையாக மாற்றிச்சொல்ல முடியாது. இது ஐந்தாவது முடிச்சு.
"கசாப் வாக்குமூலம் பற்றி எனக்கு தெரியவே தெரியாது; அவனுக்கு இனி வாதாடுவதில் பலனில்லை. என்னை அவன் நம்பிக்கையுடன் ஏற்கவில்லை என்று தோன்றுகிறது' என்று அவன் வக்கீல் கஸ்மி கூறியது தான் இவ்வளவுக்கும் மேல் வியப்பான விஷயம். இதுவும் ஒரு மர்ம முடிச்சு.


இவ்வளவு முடிச்சுகளும் அவிழத்தான் போகின்றன; அப்போது, உண்மைகள் வெளிவரும் என்று மும்பை கிரைம் போலீஸ் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.



வாக்குமூலமே அல்ல: கசாப் வாக்குமூலம் அளித்தது தொடர்பாக சட்ட நிபுணர்கள் தெளிவான கருத்துக்களை கூறியுள்ளனர். "குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு, கோர்ட்டில் வாக்குமூலம் அளிப்பது வழக்கம் தான். குற்றத்தண்டனை சட்டத் தின் 313வது பிரிவின் படி, ஒரு குற்றவாளி, கோர்ட்டில் தன் இறுதி வாக்குமூலத்தை அளிக்கலாம். ஆனால், அதை ஏற்பதும், ஏற்காமல் தொடர்ந்து விசாரணை நடத்துவதும் கோர்ட் டின் அதிகாரத்துக்கு உட்பட்டது' என்று தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், விசேஷ கோர்ட் நீதிபதி தகலியானி, "ஒப்புதல் வாக்குமூலம் அல்ல இது. தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் குற்றவாளி. இது கோர்ட்டில் பதிவு செய்யப் பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடக்கும்' என்று தெரிவித்தார். போலீஸ் தரப்பில் இன்னும் 60 சாட்சிகளை விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை முடிய இன்னும் பல மாதங்கள் ஆகலாம். அதன் பின் தான், கசாப்பின் வாக்குமூலம் எடுத்துக் கொள்ளப்பட்டது தெரியவரும். போலீசை பொறுத்தவரை, "கசாப் சொன்னதில் முரண்பாடுகள் இருந்தாலும், பாக்., தொடர்பு குறித்து ஒப்புக் கொண்டுள்ள விஷயங்கள் எங்கள் வாதத்துக்கு பெரிதும் உதவும். அதனால், நாங்கள் மேற்கொண்ட முயற்சியின் படி, திட்டமிட்ட பாதையில் வழக்கு விசாரணை செல்வதாகவே நினைக்கிறோம்' என்று கிரைம் போலீஸ் தலைவர் ராகேஷ் மரியா கூறினார்.



கடைசி வார்த்தைகள்: வாக்குமூலத்தில் கடைசியாக கசாப் சொன்னது: "வழக்கு விசாரணையை முடித்துக் கொள்ளுங் கள்; எனக்கு தண்டனை தாருங்கள். நான் என் குற்றத்தை முன்னதாகவே ஒப்புக்கொண்டிருப்பேன்; ஆனால், பாகிஸ்தான் என்னை தன் பிரஜையாக ஏற்கவில்லை. அதனால், நான் ஒப்புதல் வாக்குமூலம் தரவில்லை. இப்போது பாகிஸ்தான் என்னை தன் குடிமகனாக ஏற்றுக்கொண்டு விட்டது. அதனால், வாக்குமூலம் தந்தேன். எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்காதீர்கள். என் வாக்குமூலத்தை நீங்கள் ஏற்க வேண்டும்; எனக்கு தண்டனை தர வேண்டும்!' இப்படி "படிப்பறியா' கசாப் கூறிய வார்த்தைகளில் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன என்பது தான் சட்ட நிபுணர்கள் கருத்து. மிகுந்த பரிசீலனைக்கு பின் கோர்ட் விசாரணை தொடர்ந்துள்ளது.



லஷ்கர் தலைவன் சயீதை தப்ப வைக்கவா? லஷ்கர் அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீது. அவன் தான், மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி, பத்து பேரை அமர்த்தி அனுப்பியது என்பது ஏற்கனவே பல வகையிலும் உறுதியான விஷயம். கடந்த அக்டோபர் மாதம் தான் முதன் முதலில் கசாப், மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தான். அதில்,"லஷ்கர் தலைவன் ஹபீஸ் சயீது தான் மும்பை தாக்குதல் சதிக்கு முக்கிய காரணமானவன்' என்று கூறியுள்ளான். ஆனால், இப்போது விசேஷ கோர்ட்டில் நீதிபதி தகலியானி முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தில், "லஷ்கர் கமாண்டர் சகி உர் ரஹ்மான் லக்வி தான் , மும்பை தாக்குதல் தொடர்பாக சதி திட்டம் தீட்டித் தந்தான்' என்று கூறியுள்ளான். சதி திட்டம் தீட்டி செயல்படுத்தியவர்கள் பெயர்களை சொல்லி வரும் போது, சயீது பாய்' என்று ஒரு பெயரை சொல்லியுள்ளான். இந்த சயீது தான், ஹபீஸ் சயீது என்று தெரிந்தாலும், கோர்ட்டில் சட்டப்படி அதை நிரூபிக்க முடியாது. இதனால், திட்டமிட்டு சயீதை இந்த சதியில் இருந்து விடுவித்துள்ளதாக தெரிகிறது என்பது வக்கீல்களின் கருத்து. மும்பை தாக்குதலுக்கு காரணமான "மாஸ்டர் மைண்ட்' ஹபீஸ் சயீது தான் என்று தெரிந்ததும் தான், பாகிஸ்தான் போலீஸ், அவன் பெயரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தது. அவனை வீட்டுக்காவலில் வைத்திருந்தது. சமீபத்தில் தான் சயீதை விடுவித்தது. இந்த நிலையில் தான் கசாப் வாக்குமூலம் வெளியாகி உள்ளது.



சட்டசபை தேர்தலுக்கு முன் தீர்ப்பு வந்தால்...: மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ளது. அதற்குள் கசாப் வழக்கில் தீர்ப்பு பெற்று விட வேண்டும் என்பதில், மாநில அரசு தீவிரமாக உள்ளதாக தெரிகிறது. கடந்த 1993ம் ஆண்டில் தான் மும்பையில், முதன் முதலாக பயங்கர தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அந்த பயங்கர சதியில் முக்கிய பங்கு , கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிமுக்கு உண்டு. வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டும், அவன் பாகிஸ்தானில் இருப்பதற்கான ஆதாரங்களை தந்தும், அவனை இந்தியாவுக்கு கொண்டு வர முடியவில்லை. மேலும், விசாரணை 13 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட பின் தான் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்படி கசாப் வழக்கும் இழுத்தடிக்கப்பட கூடாது என்பதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது. "அக்டோபருக்குள் வழக்கு விசாரணையை முடித்துவிட வேண்டும் என்று மாநில அரசு நினைப்பதில் தவறில்லை. இதற்கேற்ப, கசாப்பின் வாக்குமூலம் வந்துள்ளது. இதனால், விசாரணையை அதிக நாள் நடத்தாமல் முடிக்க வேண்டும் என்று எண்ணுவது சரி தானே' என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார். "குற்றவாளிகள் எல்லாரும் தூக்கிலிடப்பட வேண்டும்; அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும்' என்று முதல்வர் அசோக் சவான் கூறியுள்ளார்.



சதியில் தொடர்பு யார் யாருக்கு? கசாப் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள சில பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள்; சிலர், தலைமறைவாக உள்ளவர்கள்.
* லக்வி: மும்பை தாக்குதல் சதிக்கு மூல காரணம் இவன் தான். லஷ்கர் கமாண்டர். இப்போது பாக்., சிறையில் இருக்கிறான்.
* மசார் இக்பால்: மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதி. இவனும் சிறையில் உள்ளான்.
* முகமது அம்ஜத் கான்: லஷ்கர் அமைப்பாளர். கராச்சியில் ஏற்பாடுகளை செய்து தந்தவன். தலைமறைவாக உள்ளான்.
* அப்துல் ரகுமான்: படகில் வந்தவன்; இவனும் இன்னும் பிடிபடவில்லை. பாக்.,கில் தஞ்சம்.
* முகமது முஷ்டாக்: படகில் வந்தவன்; இன்னும் சிக்கவில்லை.
* முகமது உஸ்மான்: சதி திட்டத்தில் பங்கேற்றவன்.
* நிதி, புகலிடம் ஏற்பாடு செய்த அமின் சாதிக், கம்ப்யூட்டர் நிபுணர் அப்துல் வஜித், படகுகளில் ஆட்களை அனுப்பிய ஷாகித் இஸ்மாயில் கான் ஆகியோர் பாக்.,கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



வாக்குமூலத்துக்கு இரண்டு உள்நோக்கம்? கசாப் வாக்குமூலம் அளிக்க இரு முக்கிய காரணங்களை அரசு தரப்பு வக்கீல் உஜ்வல் நிகாம் சந்தேகிக்கிறார். ஒன்று; முக்கிய குற்றங்களில் இருந்து தன்னை திட்டமிட்டு விடுவித்துக் கொண்டு, அதன் மூலம் தண்டனை குறைவாக கிடைக்கலாம் என்று எண்ணுவது; இரண்டாவது, பாக்., சதிகாரர்களை திட்டமிட்டு விடுவிக்க முயற்சிப்பது. இதனால் தான் அவர் கோர்ட்டில் வாதிடுகையில், "கசாப் வாக்குமூலத்தை ஏற்கக் கூடாது; தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும்' என்று கோரினார். கசாப்பின் வக்கீல் கஸ்மி வாதாடும் போது,"கசாப் வாக்குமூலம் எனக்கே அதிர்ச்சியாக உள்ளது. போலீசாரின் அச்சுறுத்தலுக்கு பயந்து அப்படி செய்திருக்கலாம்' என்று கூறினார்.

இது தொடர்பாக கசாப்பிடம் நீதிபதி தகலியானி, "இது உண்மையா, அச்சுறுத்தலின் பேரில் தான் வாக்குமூலம் தந்தீர்களா என்று கேட்க,"அப்படி எதுவும் இல்லை. மனப்பூர்வமாக தான் இதை அளித்தேன்' என்று தெரிவித்தான்.

Saturday, July 25, 2009

இனிது


குழலினிது
யாழினிது
என்பார்

காதலிதம்
கனிமொழி
கேளாதவர்

Tuesday, July 21, 2009

இன்று ஆடி அமாவாசை....


பாபநாசம் மலைமேல் அமைந்துள்ள எங்கள் சிங்கம்பட்டி ஜமீனை சேர்ந்த சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடிஅமாவாசை மிகவும் விசேஷமான திருவிழா.

பல லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு மலைமேல் தற்காலிக குடில் அமைத்து குறைந்தது ஒரு வாரமாவது தங்கி அய்யனை தரிசித்து மகிழ்வது பலஆண்டுகளாக பழக்கத்தில் உள்ள ஒன்று.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி இந்த திருவிழாவின் போது மட்டும் மக்களால் நிறைந்திருக்கும்.மாவட்ட நிர்வாகமும்,வனத்துறை மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்திருப்பார்கள். மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துக்கள் மலையின் மேலும்,கீழும் வந்த வண்ணம் இருக்கும்.


இது குறித்த சுட்டி


விழாவின் முக்கிய அம்சமாக எங்கள் சிங்கம்பட்டி ஜமீன்தார் இரவில் பாரம்பரிய ராஜஉடையில் சிம்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களை சந்திப்பார்.

சென்ற வருடம் இருசக்கர வாகனத்திலும்,அதற்கு முந்தைய வருடம் சுட்ட செங்கல்களால் அமைக்கப்பட்ட பழைய ஜமீன் காட்டு பாதையில் நடந்து சென்றும் அய்யனை தரிசித்தேன்.இந்த வருடம் முடியவில்லை. அடுத்த வருடமாவது ஆடிஅமாவசையன்று தரிசிக்க அய்யன் அருள் புரியவேண்டும்.


Monday, July 20, 2009

ஊருக்கு போயிட்டு வந்தாச்சு......



எல்லோரும் நல்ல சுகம்.

முடிந்த வரை முக்கியமான வேலைகளை எல்லாம் முடித்தாயிற்று.

பல நண்பர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக அலைபேசியில் பேசமட்டும் தான் முடிந்தது.

சில பதிவர்களிடமும் அலைபேசியில் அளவளாவினேன்.

நாமக்கல் சிபி எழுத்தில் கலாய்ப்பு அதிகமிருந்தாலும் பேசும்போது குரலில் ஒரு கூச்சம் தெரிந்தது.நேரில் சந்தித்து நல்லா 'பழகினால்' கூச்சம் போய்விடும் என நினைத்து கொண்டேன்.

நண்பர் பாலபாரதி அதே ப(லே)ழைய பாசத்துடன் பேசினார்.கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்டவுடன் கடுப்பாகி பழையபதிவுகளை போய் பாரு என கூறிவிட்டார்.வலையுலகில் ஆயிரம் நாள் காணாமல் போனதில் பல நல்ல விஷயங்கள் நடந்தது தெரியாமல் போய்விட்டது.

துளசியம்மா குரலில் எழுத்தில் உள்ள குறும்பு அப்படியே இருந்தது. சென்னையில் எங்கே என கேட்டார்.நெல்லை என்றதும் எந்த ஊர் என விசாரித்து அறிந்து கொண்டார்.

எங்கள் திருநெல்வேலி பதிவர்களில் ,சிறந்த கவிஞரும், எழுத்தாளருமான திரு.கலாபிரியா அவர்களது குரல் மிகவும் மென்மையாக இருந்தது.அவரது பதிவுகளில் இயல்பான எழுத்தில் திருநெல்வேலி நகர தெருக்கள்,அந்தகால வாழ்க்கை முறை மற்றும் திரைப்படங்கள், திரையரங்குகள் பற்றி மிகவும் அருமையாக விவரித்திருப்பார்.அவர் வசிப்பது அம்பாசமுத்திரம் அருகேயுள்ள இடைகால் என நினைத்து நேரில் சென்று சந்திக்க எண்ணியிருந்தேன். ஆனால் அவர் இருப்பது தென்காசி கடையநல்லூர் அருகேயுள்ள இடைகால் என்பதால் அடுத்த விடுமுறையில் சந்திப்பதாக கூறினேன்.எங்கள் ஊருக்கு பல ஆண்டுகளுக்கு முன் வந்த நியாபகம் உள்ளதாக கூறினார். 90களில் சன் டிவி வரும் முன் சிற்றூர் திரையரங்குகளில் அமரர் எம்.ஜி.யார் நடித்த திரைப்படங்களே அனேக மக்கள் விருப்பமாக இருந்த்து எனவும்,நானும் சிறுவயதில் எம்.ஜி.யாரின் தீவிர ரசிகன் எனவும் கூறினேன்.அவரது பதிவுகளை படிக்கும் போது ஊரில் இருப்பது போன்ற உணர்வு தோன்றுவதையும் , பணிக்காக குடும்பத்தை பிரிந்து வா(டு)ழும் என் போன்றோருக்காக அவரது அனுபவங்களை நிறைய பதிவுகளாக எழுத வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.

அடுத்த விடுமுறையிலாவது அனைத்து நண்பர்களையும் நேரில் சந்திக்க ஆண்டவன் அருள் புரியவேண்டும்

Thursday, July 02, 2009

ஊருக்கு போறேன்........



ஆயிரம் நாள் காணாம போன கணக்கோட கூட ஒரு அரைமாசம் சேர்த்துக்கங்க.......


விடுமுறை விதிப்படி இரண்டு மாதம் முன்னே போகவேண்டியது, பணிப்பளுவின் காரணமாக இப்போதுதான் கிளம்ப முடிந்தது.

ஊருக்கு போனால் ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நேரமிருந்தால் புதியபதிவுகள் இடுகிறேன். இல்லையென்றால் நம்ம சபை பக்கம் வர்றவங்க பழைய பதிவுகளை படித்து கருத்து சொல்லிட்டு போங்க.....

Wednesday, July 01, 2009

அறியாதவள்


நானில்லாத வேளைகளில்
எங்கள் வீட்டின்
எல்லா அறைகளிலும்
எனது குரல்
ஒலிப்பது
போலவே இருக்கிறது
என கூறினாள்.


எனது இதயஅறையில்
எப்போதும்
அவள் குரல்
ஒலித்து கொண்டிருப்பதை
அறியாதவள்.

Tuesday, June 30, 2009

அற்பனுக்கு வாழ்க்கை வந்தால்.............

அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்னு சொல்லுவாங்க.நம்ம அரசியல்வியாதிங்க ஆட்சிக்கு வந்தா என்னவெல்லாம் செய்றாங்க பாருங்க.
------------------------------------------------------------------------------------------

புதுடில்லி: உத்தர பிரதேச தலைநகர் லக்னோ முழுவதும், மாயாவதி தன் சிலைகளைத் திறந்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சிலைகள் வைக்க மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடுவதா எனக் கண்டித்துள்ளது. மனு தொடர்பாக மாயாவதிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


உ.பி., மாநில முதல்வராக இருப்பவர் மாயாவதி. இவர், கடந்த 25ம் தேதி லக்னோ நகரின் பல இடங்களில், தன் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமின் சிலைகளையும் திறந்து வைத்தார். சிலைகள் திறக்கப்படுமென, அறிவிக்கப்பட்ட நாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னதாகவே இவற்றை திறந்து வைத்தார். இந்தச் சிலைகளுக்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுப் பணம் செலவிடப்பட்டது. இதை எதிர்த்து ரவிகாந்த் என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


அதில், அவர் கூறியிருந்ததாவது: லக்னோ நகரின் பல இடங்களில், மாயாவதி தன் சிலைகளை நிறுவியுள்ளார். அது மட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் சட்ட மேதை அம்பேத்கரின் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தையும் நிறுவியுள்ளார். இதற்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. தன்னை பெருமைப்படுத்திக் கொள்வதற்காக மாயாவதி, இவ்வளவு அரசுப் பணத்தை வீணடித்துள்ளார். உ.பி., மாநில கலாசாரத் துறையின் பட்ஜெட்டில், 90 சதவீதம் சிலைகள் வைப்பதற்காக செலவிடப்பட்டுள்ளது.


யானைச் சிலைகள்: லக்னோவில் 15 மீட்டர் சுற்றளவில் 60 யானைச் சிலைகளை நிறுவியுள்ளார். இதற்காகவும், அவரின் சிலைகளை நிறுவவும் மட்டும் 52.2 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறிய செயல். சிலைகள் அமைப்பதற்காக அரசு பணத்தை மாயாவதி செலவிட்டது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். சிலை வைப்பதற்கு கோர்ட் தடை விதித்து விடக்கூடாது என்பதற்காகவும், சிலைகள் வைப்பதை எதிர்த்து வரும் 3ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக முன்னாள் முதல்வர் முலாயம் சிங் அறிவித்ததாலும், அரைகுறையாகக் கட்டப்பட்ட பல சிலைகளையும் கடந்த 25ம் தேதி அவர் திறந்து வைத்துள்ளார்.

பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் படங்களை அல்லது உருவங்களை பெரிய அளவில் நிறுவக்கூடாது என, கடந்த ஏப்ரல் 1ம் தேதி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி சிலைகள் நிறுவப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக்குமார் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாயாவதி சார்பில் உ.பி., மாநில முன்னாள் அமைச்சரும், அம்மாநில அட்வகேட் ஜெனரலுமான எஸ்.சி.மிஸ்ரா ஆஜரானார். உ.பி., மாநில அரசு சார்பில் ஆஜரான வி.வி.லலித் கூறியதாவது: சிலைகள் வைப்பதற்காக மாயாவதி செலவிட்ட அனைத்து தொகைகளுக்கும் மாநில சட்டசபை அனுமதி அளித்துள்ளது என்றார்.

இதன் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: சிலைகள் வைக்க அரசு பணத்தை ஏராளமான அளவில் செலவிட்டது தொடர்பாக, முதல்வர் மாயாவதிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். நான்கு வாரங்களுக்குள் நோட்டீசிற்கு அவர் பதில் அளிக்க வேண்டும். மேலும், உ.பி., அரசு, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். உ.பி., மாநிலத்தில் எழுத்தறிவு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் 5.9 கோடி பேர், தங்களின் ஜீவனத்தை நடத்த முடியாமல் போராடி வருகின்றனர். மேலும், குழந்தைகள் இறப்பு வீதமும் உ.பி., மாநிலத்தில் அதிகளவில் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், சிலைகள் வைப்பதற்காக பல 100 கோடி ரூபாய் பணத்தைச் செலவிட்டதை நியாயப்படுத்த முடியாது. பொது வாழ்வில் உள்ளவர்கள், பொதுமக்களின் பணத்தை முறையாகச் செலவிட வேண்டும். அந்தப் பணத்திற்கு நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.
-------------------------------------------------------------------------------------------
ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, தன் சிலையையும், தன் கட்சியின் சின்னமான யானைச் சின்னத்தையும் மாயாவதி நிறுவியுள்ளதால் என்ன பயன்? இந்திய அரசியலில் இதை விட வெட்கப்படத்தக்க விஷயம் வேறு இருக்குமா என்ன?

சிலைகள் வைக்க செலவிட்ட 1,000 கோடி ரூபாயை, ஆயிரக்கணக்கான மக்களின் வறுமையைப் போக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், கல்வி அறிவை மேம்படுத்தவும் செலவிட்டிருக்கலாம்.
நல்லவேளை நடந்து முடிந்த தேர்தலில் இந்த அம்மா சார்ந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.இந்த அம்மா மட்டும் பிரதமர் ஆகியிருந்தால், அய்யய்யோ............ நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.


நல்லவேளை....... நாடும், நாமும் தப்பித்தோம்.

Monday, June 29, 2009

25-வது பதிவு – இலவச இதய அறுவை சிகிச்சை




எனது இந்த 25-வது பதிவு , எல்லோருக்கும் உபயோகமான பதிவாக இருக்கும் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பெங்களூருவில் அமைந்துள்ள சத்ய சாய்பாபா ஆசிரமம் கடந்த பல ஆண்டுகளாக மக்களுக்கு பயன்தரும் பல நல்லதிட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.பல கோடிகள் செலவழித்து ஆந்திர மாநிலத்தில் உள்ள பல கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தது , சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் கிருஷ்ணா நதிநீர் திட்டத்திற்கு 200 கோடி நிதியதவி அளித்தது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மேலும் பல ஆண்டுகளாகவே நாடு முழுவதுமுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு அறக்கட்டளையின் மூலம் பண உதவி அளித்து வருகிறது.



தற்போது அவர்களது சொந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் குழந்தைகளின் எல்லாவிதமான இதய நோய்களுக்கும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்கள் அனைத்தையும் இப்பதிவில் இணைத்துள்ளேன். இந்த முக்கியமான தகவலை தங்கள் நண்பர்கள், உறவினர்கள் அலுவலகத்தோழர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.இதய நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த சிறு உதவியை செய்வோம்.

நன்றி.வணக்கம்.

Friday, June 26, 2009

பஞ்சும் நெருப்பும்

பஞ்சும் நெருப்பும்
பக்கத்தில் இருந்தால்
பற்றிக் கொள்ளுமாம் !!


எவன் சொன்னது ??


நான் உன்னருகில்
இருக்கும் போது
நனைந்தல்லவா
போகிறேன்
அன்பினால் !!!

Thursday, June 25, 2009

கலிகாலத்தில் காதல் படும் பாடு............


காதலும்,வீரமும் தமிழரின் இரு கண்கள்.

கண்ணியமான காதலும், விவேகமான வீரமும் தமிழர் வாழ்வில் இரண்டற கலந்தவை.

இக்கலிகாலத்தில் நம்மக்களிடம் சிக்கி காதல் படும்பாட்டை பாருங்கள்.

------------------------------------------------------------------------------------------

ஒரு தலை காதலால் உண்டான விபரீதம்....

பெண் போலீஸ் வேடம்:வாலிபர் கைது

சென்னை: "முறைப்படி பெண் கேட்டேன். தர மறுத்ததால் தான், பெண் போலீஸ் வேடமிட்டு மாணவியைக் கடத்தினேன்'' என்று மாணவி கடத்தலில் சிக்கிய வாலிபர் போலீசாரிடம் கூறினார். தப்பிய கார் டிரைவரும் கைதானார்.சென்னை திருவொற்றியூர் சண்முகபுரத்தில் வசித்து வருபவர் ஜெயராமன்; தனியார் நிறுவன ஊழியர். இவரது இரண்டாவது மகள் சுந்தரி (17) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). திருவொற்றியூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து மாணவிகளோடு சுந்தரி வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பெண் போலீஸ் வேடத்தில் வந்த மர்ம நபர் சுந்தரியை சுமோ காரில் தூக்கிப் போட்டு கடத்திச் சென்றனர்.

கார் அம்பேத்கர் நகர் சுரங்கப்பாதை வழியாக செல்வதை அறிந்த போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து சாலை சந்திப்புக்கள் வழியாக அம்பேத்கர் நகர் பகுதிக்குள் சென்று காரை சுற்றி வளைத்து, மாணவியை மீட்டனர்.பெண் போலீஸ் வேடமிட்டு கடத்திய திருமங்கலத்தைச் சேர்ந்த வாலிபர் முருகனை (24) போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய கார் டிரைவர் நாகராஜன் (25) இரவில் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணையின்போது முருகன் கூறியதாவது:ஜெயராமன் குடும்பத்தினர் திருமங்கலத்தில் வசித்து வந்தனர். நான் அங்கு பஞ்சர் கடை வைத்திருந் தேன், கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தேன். நான் அவர்களது குடும்பத் தில் ஒருவனாகத்தான் இருந்தேன். இரண்டாவது மகள் சுந்தரி மீது எனக்கு மோகம் இருந்தது. இதனிடையே ஜெயராமன் திருவொற்றியூர் சென்று விட்டார்.சுந்தரியை எனக்கு பிடித் திருந்ததால், முறைப்படி சென்று பெண் கேட்டேன். அப்போது தகராறு ஏற்பட்டு விட்டது.சுந்தரியின் அக்காவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியதாக போலீசில் மாட்டிவிட்டனர். சுந்தரியை கடத்தி திருமணம் செய்ய திட்டமிட்டேன்.

பெண் போலீஸ் போல் சென்றால், கடத்த வசதியாக இருக்கும் என கருதினேன். பெரியமேடு சென்று இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து போலீஸ் உடை வாங்கினேன். சவுரி முடியும் வாங்கினேன். பள்ளியில் இருந்து சுந்தரி வீடு திரும்பியபோது பெண் போலீஸ் வேடத்தில் அவரைக் கடத்தினேன்.சற்று நேரத்தில் போலீசார் என்னை சுற்றி வளைத்த தால் என் திட்டம் தவிடுபொடியாகிவிட்டது. அந்த குடும்பத்தால் இரண்டாவது முறை ஜெயிலுக்கு போகிறேன் என போலீசாரிடம் கூறினான்.கடத்தலுக்கு பயன் படுத்திய காரும், தங்க தாலியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முருகன், அவரது கார் டிரைவர் நாகராஜன் இருவரும் நேற்று திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-----------------------------------------------------------------------------------------

இணைந்த காதல்.பிரித்த உறவுகள்.........

கணவனுடன் சேர்ந்து வாழமாட்டேன்: காதல்மணம் செய்த பெண் கதறல்

சென்னை: ""தினமும் அடித்து, உதைத்து சித்திரவதை செய்வதால், இனிமேல் கணவனுடன் சேர்ந்து வாழமாட்டேன்; அவரிடமிருந்து எனக்கு விடுதலை வாங்கித் தரவும்,'' என திருமணமான நாற்பதே நாளில் மகளிர் போலீசில் இளம்பெண் ஒருவர் புகார் செய்துள்ளார்.அரக்கோணம் கைனூர் கிராமத்தை சேர்ந்தவர் பவானி(19); பத்தாவது படித்துள்ளார். பாட்டி யின் பராமரிப்பில் வளர்ந்த பவானி, வேலை தேடி சென்னைக்கு வந்தார். தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். மதிய சாப்பாட்டிற்காக அங்குள்ள மெஸ்சுக்கு பவானி சென்று வருவது வழக்கம்.

அப்போது, அங்கு வியாசர்பாடி பி.கல்யாணபுரத்தை சேர்ந்த ஷேர்ஆட்டோ டிரைவர் சுகுமார்(22) என்பவருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. மூன்று மாதம் இருவரும் காதலித்தனர். பின் மின்ட் தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பவானியின் கழுத்தில் தாலி கட்டி, மனைவியாக சுகுமார் ஏற்றுக் கொண்டார்.திருமணம் ஆனது முதல் வியாசர்பாடி பி.வி.காலனியில் தனியாக இருவரும் வசிக்கத் துவங்கினர். ஆனால், சுகுமாரின் தாய் சுசிலா, தந்தை மாரி ஆகியோர் பவானியை கணவனுடன் சேர்ந்து வாழ விடாமல் துன்புறுத்தியதாக கூறப் படுகிறது.மேலும், பவானியிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கணவன் மற்றும் அவரது பெற்றோர் அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

அடி உதையை தாங்க முடியாமல் தன்னை காப்பாற்றும்படி எம்.கே.பி.நகர் மகளிர் போலீசில் பவானி புகார் செய்துள்ளார்.வரதட்சணை வாங்கி வர வேண்டும் என கேட்டு மாமியார், மாமனார் தினமும் என்னை அடித்து துன்புறுத்துகின்றனர். இனிமேல் கணவன் சுகுமாருடன் வாழ முடியாது.அவரிடமிருந்து எனக்கு விடுதலை வாங்கித் தரவும், நான் எனது பாட்டியிடமே சென்றுவிடுகிறேன்' என பாதிக்கப்பட்ட பவானி அழுது புலம்பினார்.
-----------------------------------------------------------------------------------------

முறையற்ற காதல்.முடிந்த வாழ்க்கை.......


ஊராட்சிதலைவர் கொலையில் திருப்பம்: கள்ளக்காதலனுடன் மனைவி கைது



திருவண்ணாமலை: ஆரணி அருகே ஊராட்சி தலைவர் கொலையில், அவரது மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.ஆரணி அடுத்த மருசூர் ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி; தி.மு.க.,வை சேர்ந்தவர். கடந்த 22ம் தேதி வீட்டில் தூங்கிய சுந்தரமூர்த்தி, வெடிவிபத்தில் உடல் கருகி இறந்தார்.ஆரணி போலீசார் விசாரணை நடத்தியதில், சுந்தரமூர்த்தியின் மனைவி செந்தாமரை மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது குடும்ப பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.செந்தாமரையின் அக்காவுக்கு சுந்தரமூர்த்தியை திருமணம் நிச்சயம் செய்த நிலையில், அவரது அக்கா வேறு ஒருவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதனால் வேறு வழியின்றி, செந்தாமரைக்கும், சுந்தரமூர்த்திக்கும் திருமணம் செய்து வைத்தனர்.செந்தாமரைக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணமான சில நாட்களில் வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்ட அவர், தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை பெற்றோர் சமாதானம் செய்து, கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மதியழகன் (27) என்ற வாலிபருடன் செந்தாமரைக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. தங்களுக்கு இடையூறாக இருந்த சுந்தரமூர்த்தியை கொலை செய்ய கள்ளக்காதலர்கள் திட்டமிட்டனர். கடந்த 22ம் தேதி இரவு, திருவிழாவில் வெடிக்கும் உயர்ரக வகை பட்டாசுகள், ஐந்து லிட்டர் பெட்ரோலை மதியழகன் வாங்கி வந்து செந்தாமரையிடம் கொடுத்தார்.

பட்டாசு, பெட்ரோல் கேன் ஆகியவற்றை சுந்தரமூர்த்தி படுக்கையின் கீழ் அவரது மனைவி வைத்து விட்டார். சென்னை சென்று வந்த சுந்தரமூர்த்தி, இரவு 11 மணிக்கு படுக்கைக்கு சென்றார். அதிகாலை வேளையில் அவர் அயர்ந்து தூங்கிய போது, கேனில் இருந்த பெட்ரோலை, அவரது படுக்கை அறையில் மதியழகன் ஊற்ற, செந்தாமரை தீ வைத்துள்ளார். பின் மதியழகன் அங்கிருந்து தப்பிவிட்டார்.தீ வைத்தவுடன் பட்டாசு வெடிக்க ஆரம்பித்தது. தீ கரும்புகை மூட்டத்துடன் இருந்ததால் அறையிலிருந்து சுந்தரமூர்த்தி தப்பி வெளியே வர முடியாமல் பரிதாபமாக இறந்தது விசாரணையில் தெரிந்தது.

வெடிவெடித்ததில் அவர் இறக்கவில்லை என்பதும், பெட்ரோல் தீ விபத்தில் அவர் இறந்திருப்பது பிரேதப் பரிசோதனையிலும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செந்தாமரையையும், மதியழகனையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் செந்தாமரை கொடுத்த வாக்குமூலத்தில், "என் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி இல்லை. மதியழகனுடன் எட்டு மாதமாக கள்ளத்தொடர்பு வைத்து உல்லாசமாக இருந்தேன். இந்த சந்தோஷத்துக்கு, சுந்தரமூர்த்தி தடையாக இருப்பார் எனக் கருதி, அவரை மதியழகனுடன் சேர்ந்து கொலை செய்தேன்' என்று கூறியுள்ளார்.


Tuesday, June 23, 2009

“இந்தி”யர்கள் பாதுகாப்பு குறித்து விளக்கம் : சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்




இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து விளக்கம் : சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடில்லி : வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில், இந்தியர்கள் தாக்கப்பட்ட விவகாரத்துக்குப் பிறகு வெளிநாடு வாழ் இந்தியர்கள‌ை பாதுகாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, என விளக்கமளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் அந்த நோட்டீஸ் வலியுறுத்தியுள்ளது. டில்லியை சேர்ந்த வக்கீல் கார்க், இவர் மத்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசை வருகிற 26ம் தேதிக்குள் இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
---------------------------------------------------------------------------------------------



தமிழ்நாட்டில் எத்தனை தீக்குளிப்பு, எத்தனை மறியல், எத்தனை போராட்டம்....... டெல்லிக்கு கொஞ்சமாச்சும் காது கேட்டதா ???

எந்த "இந்தி"ய மீடியாகாரனாவது எழுதினானா ? எட்டிப்பார்த்தானா ?

இப்ப பாருங்க. ”இந்தி”யர்கள் தாக்கப்பட்டாங்கன்ன உடனே எத்தனை குரல்கள். சுப்ரீம் கோர்ட்டே மத்திய அரசுக்கு நோட்டீஸ் கொடுக்குது.

தமிழ், தமிழ்ன்னு கதைக்காம நாமளும் இந்தியை படிச்சிருந்தா நம்மளையும் இந்தியர்ன்னு மதிச்சிருப்பாங்கல்ல.

இரண்டு தலைமுறையை இந்தி படிக்கவிடாமல் செய்த அரசியல்வியாதிங்களோட புள்ளைங்க, பேரனுங்க எல்லாம் இப்போ “இந்தி”ய அரசாங்கத்தோட மந்திரி சபையில நிரந்தர அமைச்சர்கள்.

போங்கடே போங்க..... புள்ளை குட்டியளையாவது இந்தி படிக்க வைத்து “இந்தி”யர்களா ஆக்குங்க.

Monday, June 22, 2009

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்................


இன்றைய நாளிதழில் வந்துள்ள இரண்டு செய்திகள்

1.தமிழகத்திற்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்

2.போலி ஏஜன்ட்களை நம்பி ஏமாந்த பல ஆயிரம் தமிழர்கள் மலேசியாவில் தவிப்பு


இரண்டுமே ஒன்றோடு ஒன்று சம்பந்தமுள்ள செய்திகள்.

முதல் செய்தி



தமிழகத்திற்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்

சரவண பவன், சரவணா ஸ்டோர்ஸ், அடையாறு ஆனந்த பவன் என, செல்லும் இடமெல்லாம் சமீப காலமாக ஒரு புது விஷயத்தைக் காணலாம். அது, வெளிறிய நிறம், சிறிய மூக்கு, சின்ன கண், புரியாத பாஷையில் பேசும் வாலிபர்கள்.இவர்கள், அசாம், திரிபுரா, மணிப் பூர், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 15 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இவர்கள், பல பணிகளுக்காக சென்னையை முற்றுகையிடுவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள், தி.நகரில் உள்ள மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள், செக்யூரிட்டி நிறுவனங்கள் என்பன போன்றவற்றில் பணிபுரிந்து வருகின் றனர். இவர்கள் 100 பேர் 200 பேர் என ஏஜன்ட்கள் மூலம் அழைத்து வரப் படுகின்றனர். இன்று சென்னையின் முக்கியப் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் "சீனர்'களின் முகமும், அவர்களின் உயரத்துடன் கூடியவர்களை அதிகம் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு நமது மொழி தெரியவில்லை என்றாலும் சொல்வதைக் கேட்டு அப்படியே செய்யும் பழக்கத் தைக் கொண்டுள்ளனர்.


முன், இம்மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் மட்டும் பியூட்டி பார்லர் பணிக்காக அழைத்து வரப்பட்டனர். தற்போது பல்வேறு பணிகளுக்காக ஆண்களும், பெண்களும் அழைத்து வரப்படுகின்றனர். சென்னையில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை என்பது பெரிய அலுவலகங்களில் மட்டுமே. ஓட்டல்கள் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களில் பெரும்பாலும் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். பெரும்பான்மை நிறுவனங்கள் காலை 7 மணிக்குத் திறக்கப் பட்டு, இரவு 11 மணி வரை இயங்குகின்றன. இத்துடன் பணிகள் முடிந்து விடுவதில்லை. சரக்கு இருப்பைக் கணக்கிடுதல், புதிய சரக்குகளை அடுக்குதல் எனப் பணிகள் தொடர்ந்து நடக்கும். இதனால், தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு ஒரு "ஷிப்ட்' என இரண்டு "ஷிப்ட்'கள் அல்லது எட்டு மணி நேரத்திற்கு ஒரு "ஷிப்ட்' என மூன்று "ஷிப்ட்'கள் வரை பணியில் ஈடுபடுகின்றனர்.

இங்குள்ளவர்கள் 12 மணி நேரம் வேலைக்கு ஒருநாள் கூலியாக 200 ரூபாய்க்குக் குறைந்தால் வேலைக்கு வர மாட்டார்கள். ஆனால், வெளி மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்கள், 12 மணிநேரத்திற்கு 125 முதல் 150 ரூபாய் கூலி, மூன்று நேரம் சாப்பாடு, தங்குமிடம் இவற்றைக் கொண்டு, கடுமையாக உழைக்கின்றனர். இதனால், புதிய நிறுவனங்கள் துவக்குபவர்கள் இவர்களை நம்பி வேலைக்கு அமர்த்துகின்றனர். சென்னையில் தற்போது பெரிய ஓட்டல்கள் முதல் சிறிய கடைகள் வரை இது போன்று வெளிமாநிலத்தவர்கள் அதிகமாக பணியில் உள்ளனர். இவர்கள், டேபிள் துடைக்கும் பணி, தண்ணீர் நிரப்புதல் மற்றும் சர்வர் பணிக்கும் அமர்த்தப்படுகின்றனர். இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், "தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டல்கள் உள்ளன. ஓட்டல்களில் டேபிள் துடைத்தல் மற்றும் துப்புரவுப் பணிகளுக்கு என குறைந்தபட்சம் 10 பேராவது தேவை.


ஆனால், இங்கு இப்பணிகளுக்கு யாரும் வருவதில்லை. சம்பளம் அதிகம் கொடுத்தாலும் யாரும் நிலைத்து இருப்பதில்லை. வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் குறைந்த சம்பளம் என்றாலும் பொறுமையாக வேலை பார்க்கின்றனர்' என்றார். ஓட்டல்களில் மட்டுமின்றி பிரபல வர்த்தக நிறுவனங்களிலும் வேலைக்கு ஆள் பற்றாக்கறை உள்ளது. தமிழகத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரணமாக படித்தவர்கள் கூட ஓட்டல்களில் சர்வர் பணிக்கோ அல்லது கடைகளில் "சேல்ஸ்மேன்' பணிக்கோ செல்வதை விரும்புவதில்லை. "ஒயிட் காலர் ஜாப்'களையே விரும்புகின்றனர். இதனால் தான், வெளி மாநிலத்தவரை இங்கு வரவழைக்கும் கட்டாயம் ஏற்படுகிறது என தொழில் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.


இதுதவிர, பீகார், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கட்டட பணிகள், வெல்டிங் உள்ளிட்ட பணிகளுக்காகவும், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தவர்கள் கேபிள் பதிக்கும் பணி, கட்டடங்களுக்கான குழி எடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒரு நாளைக்கு குடும்பத்துடன் 700 முதல் ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். இதை வீணாக்காமல் தங்கள் ஊர்களில் சேமிக்கின்றனர். கட்டடப் பணிகளில் கொடுத்த வேலையை உரிய நேரத்தில் முடிக்கும் இவர்களுக்கு தற்போது பில்டர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. பணியாட்களை அழைத்து வரும் ஒருவர் கூறியதாவது: நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே, சென்னைக்கு வேலைக்கு வந்து விட்டேன். எங்கள் ஊரில் இளைஞர்கள் படித்தாலும் வேலை கிடைப்பதில்லை. கிடைத்தாலும், சம்பளம் மிகக் குறைவு. சென்னையில் உள்ள ஓட்டல் களில் தற்போது எங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகம் பேர் பணியில் உள்ளனர். ஒரு நாள் சம்பளம் 150 ரூபாய் வரை அவர்களுக்குக் கிடைக்கிறது. தங்க இடமும், சாப்பாடும் அளிக்கப்படுகிறது. இந்த வருமானம் அங்குக் கிடைப்பதில்லை. ஒருவரை வைத் துப் பலர் இங்கு வருகின்றனர். இவர் கள் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்குச் சென்று திரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
------------------------------------------------------------------------------------------------

இரண்டாம் செய்தி

போலி ஏஜன்ட்களை நம்பி ஏமாந்த பல ஆயிரம் தமிழர்கள் மலேசியாவில் தவிப்பு

மீட்க வேண்டிய மத்திய அரசு;
தயக்கம் காட்டும் தமிழகம்;
ஏஜன்ட்களால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்;
திசை தெரியாமல் திரியும் தமிழர்கள்
என, வேலைக்காக மலேசியா அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மலேசியாவிற்கு வேலைக்காக ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக் கில் தமிழர்கள் செல்கின்றனர். போலி ஏஜன்ட்கள் மூலம் செல்லும் இவர்களில் பலர், சுற்றுலா விசா மூலம் அனுப்பப்படுகின்றனர். தாங்கள் எந்த விசா கொண்டு வந்தோம் என்பது கூட தெரியாததால், விசா காலம் முடிந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக் கின்றனர். பணிபுரியச் செல்லும் நிறுவன ஒப்பந் தத்தின் விவரத்தையும் யாரும் பார்ப்பதில்லை. மலேசிய நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளத்தை, முழுமையாக கொடுக்காமல் சில ஏஜன்ட்கள் ஏமாற்றுகின்றனர். இதனால், மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல், சிலர் அங்கிருந்து தப்பிச் செல் கின்றனர்.அவர்களை, அந்நாட்டு போலீசார் பிடித்து சிறையில் அடைக்கின்றனர். இப்படி, மலேசிய சிறைகளில் 3,600 தமிழர்களும், முகாம்களில் 2,400 தமிழர்களும் அடைக்கப்பட் டுள்ளனர்.இது தவிர 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தமிழர் கள், தோட்டம், கடைகள், கோழிப்பண்ணை, ஒயின் ஷாப் என பல இடங்களில் வேலை செய்து கொண்டு, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.




மலேசியாவிற்கு வேலைக்கு சென்று சிக்கலில் மாட்டிய பெண்கள் பலர், பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.கடந்த 2004ம் ஆண்டில், தலைமறைவாக இருந்த வெளிநாட்டினருக்கு மலேசிய அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது. பொது மன்னிப்பு வழங்கப்படுபவர்களின் விமானச் செலவு, அவர்கள் மீண்டும் தங்கிவிடாமல் இருப்பதற்கான உத்தரவாதம் மற்றும் எத்தனை பேர் தலைமறைவாக தங்கியிருக்கின்றனர் என்ற விவரம் என பல சிக்கல்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.இந்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால், பொதுமன்னிப்பு குறித்து பரிசீலிக்க மலேசிய அரசு தயாராக இருப்பதாக தெரிகிறது.


இத்தருணத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு நம்மை காப்பாற்றி அழைத்துச் செல்லும் என, மலேசிய வீதிகளில் பல தமிழர்கள் சுற்றித் திரிகின்றனர்.அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகும் தமிழர்களுக்கு முறையான பதில் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மத்திய அமைச்சகமும், மலேசியாவில் உள்ள இந்திய தூதரகமும் எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லைமலேசிய தமிழர்களின் நலன்கருதி, காமன்வெல்த் சமரச தீர்ப்பாயம் மற்றும் மனித உரிமைகள் பிரிவு அங்கு சென்று சாரனை மேற்கொண்டது. அந்த அமைப்பின் தெற்காசிய தலைவரும், வக்கீலுமான செல்லம் பாரி மன்னன் கூறுகையில், ""மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம், உதவிக் காக அளித்துள்ள தொலைபேசி எண்களை ஏழு நாட்களாக தொடர்பு கொண்டும், யாரும் முறையாக பதிலளிக்கவில்லை. ""மலேசியாவிற்கான இந்திய தூதர் அசோக் காந்தாவை நாங்கள் சந்தித்தபோது, "சட்டவிரோதமாக இங்கு வாழும் தமிழர்களுக்கு நாங்கள் உதவ முடியாது' என்றார். இந்த விஷயத்தில் வெளிநாட்டு வாழ் இந்திய விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

மிரண்டு போனதும் மீண்டு வந்ததும்! சென்னை நந்தனத்தில் இருந்து செயல்பட்ட போலி நிறுவனம் ஒன்றின் மூலம், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட, நாகப்பட்டினம், திருமருகல் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் கூறியதாவது: பணிக்கான விசா மூலம், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட 30 பேர் கொண்ட குழுவில், 90 ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு, நானும் போனேன். எங்களை அனுப்பிவிட்டு ஏஜன்ட் சென்றுவிட்டதால், மலேசியா ஏர்போர்ட்டில் எங்களை அழைத்துச் செல்ல, அங்குள்ள ஏஜன்டுக் காக காத்திருந்தோம். பத்து நாட்கள் வரை அவர் வராததால், மொழி தெரியாத நாட்டில் சாப்பாட் டிற்கு வழி தெரியாமல் தவித்தோம். பிறகு வந்த ஏஜன்ட் மூலம், ஒரு நிறுவனத்தில் வேலை செய்தேன். சம்பளம், வேலை நேரம் எல்லாமே, ஏஜன்ட் சொன்னதற்கு மாறாக இருந்ததால் மிரண்டு போனேன்.வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தவாவது சம்பாதிக்க வேண்டுமே என நினைத்து, பல இடங்களில் வேலை செய்தும் வட்டியை மட்டுமே கொடுக்க முடிந்தது. வேறு வழி இல்லாமல், ஒரு வழியாக நாட்டிற்கு மீண்டும் வந்து விட்டேன்.என்னைப் போன்று பல ஆயிரம் பேர், திரும்பி வரக்கூட பணம் இல்லாமல் அங்கு தவிக்கின்றனர்.இவ்வாறு விஜயகுமார் கூறினார்.


------------------------------------------------------------------------------------------------



இரண்டு செய்திகளுக்கும் எவ்வளவு முரண்பாடு பாருங்கள்.


இங்கேயே இவ்வளவு வாய்ப்புகள் இருக்கும் பொழுது ஏன் நமது மக்கள் பணம் கட்டியாவது வெளிநாடு செல்ல விரும்புவது ஏன் ?

போலி ஏஜெண்ட்களிடம் கொடுக்கும் பணத்தை ஏதாவது தொழிலில் முதலீடு செய்யலாமே.


படித்த மக்களே பலவாறு ஏமாற்றப்படும் பொழுது படிக்காத பாமர மக்களெல்லாம் எம்மாத்திரம்.



வெற்றிக்கொடி கட்டு,புதுக்கோட்டையிலிருந்து சரவணன்,பாண்டி போன்ற படங்களை பார்த்தாவது திருந்த வேண்டாமா ?



தொழிலாளர்களின் உழைப்பால் வளம்பெரும் நாடுகள் அவர்களை ஊருக்குள் தங்க அனுமதிக்காமல் பாலைவன முகாம்களிலே தங்க வைக்கின்றன.



எனதினிய தமிழ்மக்களே நல்ல சம்பளம்.விடுமுறை தரும் நிறுவனங்கள் என நண்பர்கள்,உறவினர்கள் உறுதி கூறி அழைத்தால் மட்டும் வெளிநாடுகளுக்கு செல்லுங்கள்.இல்லையேல் நமது நாட்டிலேயே தகுதிக்கேற்ப கிடைக்கும் வேலையில் குடும்பத்துடன் சந்தோசமாக வாழுங்கள்.


Saturday, June 20, 2009

ஆத்துல போட்டாலும்...............



ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா நம்ம அரசியல்வாதிங்க கடல்ல கணக்கில்லாம கொட்டுறாங்களேன்னு மனசு பொறுக்காமதான் இந்த பதிவு.

நம்ம மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பரூக் அப்துல்லா நேற்று சென்னையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். பேட்டியை முதல்ல படிச்சுட்டு அப்புறம் என் கருத்துக்கு வாங்க.

கடலின் நடுவே காற்றாலை திட்டம் : பரூக் அப்துல்லா அறிவிப்பு

சென்னை : மின் உற்பத்தியை அதிகரிக்க கடலின் நடுவே காற்றாலை அமைக்கப்படும் என மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார் பரூக் அப்துல்லா. சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய பரூக் : மின் உற்பத்தியை பெருக்குவதற்காக கடலின் நடுவே காற்றாலை அமைக்கப்படுவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இதனை மேலும் மேம்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார் . மேலும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து அரசுக்கு அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு வரிச்சுலுகை அளிப்பது குறித்து மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு செய்யும் என தெரிவித்தார்.


-------------------------------------------------------------------------------------------

உலகின் முன்னணி காற்றாலை உற்பத்தி நிறுவனத்தில் ஈராண்டு காலம் பணிபுரிந்தவன் என்ற முறையில் எனது கருத்து.

நமது நாட்டில் மலைகளில் இயற்கையாக அமைந்துள்ள கணவாய்களின் வழியாக வீசும் காற்றின் வேகத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க பல மாநிலங்களில் காற்றாலை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுதுமே பூமியின் சுழற்சியை பொறுத்து காற்று வீசும் காலம் அதிகரிக்கவோ,குறையவோ செய்கிறது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டின் ஒன்பது மாதங்களுக்கு மேல் நல்ல காற்று வீசுகிறது.நாடு முழுதும் காற்று வீசும் திசை (Wind belt) முழுதும் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய காற்றாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடலில் காற்றாலை என்பது ஐரோப்பிய நாடுகளில்தான் அதிகமாக உள்ளது.ஏனெனில் அங்கு நிலப்பரப்பு குறைவு.எனவேதான் கடலில் காற்றாலை அமைத்துள்ளார்கள்.

நமது நாட்டில் காற்று வீசும் நிலப்பரப்புகள் ஜனசந்தடியில்லாமல் இருப்பதால் இடப்பற்றாக்குறை பிரச்சனையும் இல்லை.உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் மின்கம்பங்கள் மூலம் நாடு முழுதும் விநியோகிக்கப்படுகிறது.தவிரவும் காற்றாலை துறையில் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது. பராமரிப்பு பணிக்கு தேவைப்படும் இயந்திரங்கள்,கருவிகள் மற்றும் பொறியாளர்கள்,தொழிலாளர்களை காற்றாலை அருகில் எடுத்து செல்ல கனரக வாகனப்போக்குவரத்தும் மிகவும் அவசியம்.

கடலின் நடுவே காற்றாலை அமைக்கும் பொழுது பராமரிப்பு பணிக்கு கப்பல்கள் அல்லது உலங்குஊர்திகளையே (Helicopters) பயன்படுத்த வேண்டி வரும்.உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கரைக்கு கொண்டு வர கடலினுள் உயரழுத்த கடத்திகள் (Power Cables) பயன்படுத்தப்படும் பொழுது பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த பகுதி முழுதும் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும்.

மேலும் ஏற்கனவே மக்களின் வரிப்பணமான பல ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட சேதுசமுத்திரதிட்டம் ,கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்ற கடலை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் என்ன ஆயிற்று என்றே தெரியாத நிலையில் மீண்டும் ஒரு பொருத்தமில்லாத புதிய திட்டம்.

எனவே நமது நாட்டை பொறுத்தவரை இத்திட்டம் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதே என் கருத்து.

நண்பர்களே , இப்பதிவின் முதல் நான்கு வரிகளை மீண்டும் ஒருமுறை படித்து கொள்ளுங்கள்.

அன்பு தந்தையே...



அன்பு தந்தையே...


எந்நாளும் எங்கள்
வளர்ச்சியையே
எண்ணும் உங்கள்
சிந்தையே...


உங்களாலே இன்று
உற்சாகமாக உதைத்து
ஆடுகிறோம்
வாழ்க்கை பந்தையே...


நீங்கள் 
ஏணியாய் இருந்து
எங்களை ஏற்றம்
காண செய்தீர்கள்...


நல்ல மாற்றம்
பல காண செய்தீர்கள்...


எத்தனை வயதானாலும்
குழந்தைகள் தான்
நாங்கள்
உங்களுக்கு...


எப்போதும் வேண்டும்
உங்கள் அன்பெனும்
ஆலமர நிழல்
எங்களுக்கு...

Thursday, June 18, 2009

மீள் வருகை





வந்துட்டம்ல!

எல்லாரும் பார்த்துக்குங்க!


நானும் திரும்ப வந்துட்டேன்

நானும் திரும்ப வந்துட்டேன்!

காணாமல் போன நாளுக்கெல்லாம் சேர்த்து
பல கதை சொல்ல
நானும் திரும்ப வந்துட்டேன் !