Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, October 06, 2009

நூறாவது பதிவு – வாசிப்பும்,வலையுலகும்,வருங்காலமும்.....



இது எனது நூறாவது பதிவு. கடந்து வந்த பாதையை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கிறது.

சிறுவயதில் இருந்தே வாசிப்பு ஆர்வம் அதிகம். பத்து வயதுக்குள்ளே பட்டி விக்கிரமாதித்தன் கதைகள் ,திரு.இராஜாஜியின் வியாசர் விருந்து படித்தது வெள்ளியன்று வரும் சிறுவர் மலருக்காக உடன்பிறப்போடு சண்டை போட்டு கிழித்தது. சிறுவர் இதழ்களான அம்புலிமாமா,பாலமித்ரா,ராணி காமிக்ஸ், கோகுலம் என தேடித்தேடி படித்தது. பள்ளியில் அந்த கதைகளை நல்ஒழுக்க வகுப்புகளில் மேடையேறி பகிர்ந்து கொண்டது. என எல்லா நினைவுகளும் இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றன. ம்ம்ம்...... அது ஒரு அழகிய கனாக்காலம்.

வயது ஏற ஏற ராணி முத்து, மாலைமதி, கிரைம் நாவல்கள், பாக்கெட் நாவல்கள் பழக்கம் ஆயின. அந்த கால ஆனந்த விகடன், குமுதம் வார இதழ்களில் தொடராக வந்த கதைகளை பலரும் “பைண்ட்” செய்து வைத்திருப்பார்கள். பலமுறை கேட்டாலும் பலத்த யோசனைக்குப்பின்தான் கிடைக்கும். கல்கி, சாண்டில்யன், ஜெயகாந்தன், ‘மோகமுள்’ ஜானகிராமன், சுஜாதா, ராஜேஷ்குமார், ‘ஞே’ ராஜேந்திரகுமார், சுபா எல்லாம் இப்போதும் மிகவும் ஆதர்ச எழுத்தாளர்கள். லஷ்மி, ராஜம் கிருஷ்ணன் போன்றோரின் குடும்ப நாவல்களும் பிடிக்கும். தொண்ணூறாம் வருட தீபாவளி மலராக ஆனந்த விகடனில் சுஜாதாவின் ஏன்,எதற்கு,எப்படி வெளியிட்டார்கள். பல அரிய அறிவியல் தகவல்களை எளிமையாக புரிய வைத்த அந்த புத்தகம் மூன்று பாகம் வந்தது.

குரல் கொஞ்சம் கணீரென்று இருப்பதால் பள்ளியின் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வகுப்பாசிரியர்களால் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டேன். எனது தமிழாசிரியர்களும் என் மீது தனிப்பிரியம் கொண்டு இலக்கியமன்றங்களில் ஈடுபடுத்தினர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி ஆசிரியர் விடுப்பில் சென்றபோது ஒருமாதம் மட்டும் வந்த பயிற்சி தமிழ் ஆசிரியை கதை,கவிதைகள் எழுத தூண்டி பல கத்துக்குட்டி கவிதைகள் எழுதிக்காட்டியபோது பாராட்டியமை மிகவும் குறிப்பிடத்தக்கது. தணியாத தமிழார்வத்தால் தமிழ் இலக்கியம் படித்த எனது தமக்கையாரின் அகநானூறு, புறநானூறு முதல் நவீன இலக்கியம் வரையான பாடங்களை அவருக்கு முன் நான் படிப்பேன். எனது தமக்கையார் தற்போது தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

பள்ளியில் படிக்கும்போது விடுமுறைக்காக எந்த ஊருக்கு சென்றாலும் தேடும் முதல் இடம் நூலகமே. இந்த பழக்கம் இன்னும் தொடர்கிறது. நூலகம் இல்லாத ஊருக்கு சென்றால் மிகவும் நொந்து போய்விடுவேன். பணிவிஷயமாக பல மாநிலங்களுக்கு சென்றபோது தமிழ் படிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். தொடர்பு கொள்ள, செய்திதாள் படிக்க என்ற அளவிலே பயன்படுத்திவந்த இணையத்தில் ஏதோ தேடுதலின் போது எதிர்பாராதவிதமாக வலையுலகம் அறிமுகமானது. பலவிதமான பகிர்வுகள் நிறைந்த பதிவுலகம் இனிதே ஈர்த்தது.

முதலில் பதிவுகளை மட்டும் படித்து வந்தவன் பின் அனானியாக ஆங்கிலத்தில் பின்னூட்டங்கள் இடவும் ஆரம்பித்தேன். அனானி ஆப்சனிலும் கீழே எனது பெயர் குறிப்பிட்டே பின்னூட்டங்கள் இட்டு வந்தேன். பல நண்பர்களும் அறிமுகமானார்கள். அவர்கள் மூலம் ஈ கலப்பை பற்றி அறிந்து தரவிறக்கம் செய்து தமிழிலே பின்னூட்டங்கள் இட்டு வந்தேன். நட்பு வளையம் பெருகியது. பின் தனியே இந்த வலைப்பூவையும் 2006ல் பதிவுலக நண்பர்கள் மூலம் உருவாக்கி பதிவுகள் இட ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் கவிதைகள் மட்டுமே எழுதிவந்தேன். என்னைப் பாதித்த செய்திகளையும் சொந்த கருத்துகளோடு பதிவாக இட்டுள்ளேன். எங்க ஊரு பாட்டுக்காரிகள் என்பதே நான் முதல் முதல் எழுதிய அனுபவ நிகழ்ச்சி. பின் எழுதிய கவிதைகள் அனைத்தும் எனக்கு மிகப்பிடித்தமானவை. உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

நான் எழுதிய சொந்த திகில் அனுபவங்களான மோகினியைக் கண்டேன், முறுக்கு முனி போன்றவற்றிற்கு கிடைத்த வரவேற்புகளால் ஏதோ மோகம் தொடர்கதை எழுதவும் துணிந்தேன். பாராட்டுக்களும், மிகச்சிறிய பாகங்கள் என விமர்சனங்களும் ஒருங்கே குமிந்தாலும் ஒவ்வொரு பாகமுடிவிலும் ட்விஸ்ட் வைத்து முடித்ததில் எனக்கே என் எழுத்து பிடித்திருந்தது. இன்னும் எவ்வளவோ பெரிய தொடர்கள் எழுதவும் ஊக்கம் தந்திருக்கிறது.

அடுத்து ஒரு வரலாற்றுப் பயணம் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு கவிதைகள்,கதைகள் என தொடர உத்தேசித்துள்ளேன். தமிழ்த்தாயின் தயவும், ,காலதேவனின் கருணையும்,அன்பு நண்பர்கள் உங்கள் ஆதரவும் இருந்தால் எழுத்துலகில் இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம் ......

Monday, July 20, 2009

ஊருக்கு போயிட்டு வந்தாச்சு......



எல்லோரும் நல்ல சுகம்.

முடிந்த வரை முக்கியமான வேலைகளை எல்லாம் முடித்தாயிற்று.

பல நண்பர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக அலைபேசியில் பேசமட்டும் தான் முடிந்தது.

சில பதிவர்களிடமும் அலைபேசியில் அளவளாவினேன்.

நாமக்கல் சிபி எழுத்தில் கலாய்ப்பு அதிகமிருந்தாலும் பேசும்போது குரலில் ஒரு கூச்சம் தெரிந்தது.நேரில் சந்தித்து நல்லா 'பழகினால்' கூச்சம் போய்விடும் என நினைத்து கொண்டேன்.

நண்பர் பாலபாரதி அதே ப(லே)ழைய பாசத்துடன் பேசினார்.கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்டவுடன் கடுப்பாகி பழையபதிவுகளை போய் பாரு என கூறிவிட்டார்.வலையுலகில் ஆயிரம் நாள் காணாமல் போனதில் பல நல்ல விஷயங்கள் நடந்தது தெரியாமல் போய்விட்டது.

துளசியம்மா குரலில் எழுத்தில் உள்ள குறும்பு அப்படியே இருந்தது. சென்னையில் எங்கே என கேட்டார்.நெல்லை என்றதும் எந்த ஊர் என விசாரித்து அறிந்து கொண்டார்.

எங்கள் திருநெல்வேலி பதிவர்களில் ,சிறந்த கவிஞரும், எழுத்தாளருமான திரு.கலாபிரியா அவர்களது குரல் மிகவும் மென்மையாக இருந்தது.அவரது பதிவுகளில் இயல்பான எழுத்தில் திருநெல்வேலி நகர தெருக்கள்,அந்தகால வாழ்க்கை முறை மற்றும் திரைப்படங்கள், திரையரங்குகள் பற்றி மிகவும் அருமையாக விவரித்திருப்பார்.அவர் வசிப்பது அம்பாசமுத்திரம் அருகேயுள்ள இடைகால் என நினைத்து நேரில் சென்று சந்திக்க எண்ணியிருந்தேன். ஆனால் அவர் இருப்பது தென்காசி கடையநல்லூர் அருகேயுள்ள இடைகால் என்பதால் அடுத்த விடுமுறையில் சந்திப்பதாக கூறினேன்.எங்கள் ஊருக்கு பல ஆண்டுகளுக்கு முன் வந்த நியாபகம் உள்ளதாக கூறினார். 90களில் சன் டிவி வரும் முன் சிற்றூர் திரையரங்குகளில் அமரர் எம்.ஜி.யார் நடித்த திரைப்படங்களே அனேக மக்கள் விருப்பமாக இருந்த்து எனவும்,நானும் சிறுவயதில் எம்.ஜி.யாரின் தீவிர ரசிகன் எனவும் கூறினேன்.அவரது பதிவுகளை படிக்கும் போது ஊரில் இருப்பது போன்ற உணர்வு தோன்றுவதையும் , பணிக்காக குடும்பத்தை பிரிந்து வா(டு)ழும் என் போன்றோருக்காக அவரது அனுபவங்களை நிறைய பதிவுகளாக எழுத வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.

அடுத்த விடுமுறையிலாவது அனைத்து நண்பர்களையும் நேரில் சந்திக்க ஆண்டவன் அருள் புரியவேண்டும்