Tuesday, January 17, 2012

பொங்கல் விருந்து - " நண்பன் " வீட்டில் " வேட்டை "

பரபரப்பான பணிக்கிடையில் அலைபேசியில் ஒரு பாச அழைப்பு. " டேய், நாளைக்கு மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்திடு. சேகர், சுந்தர்ட்ட்யும் சொல்லிட்டேன். சால்ஜாப்பு சொல்லாம வந்து சேரு." அழைத்த அன்பு நண்பனிடம் " என்னடா நாலு பரதேசிக்கு சாப்பாடு போடறதா வேண்டுதலா.. " என்று கலாய்க்க " டேய்.. நாளைக்கு பொங்கல்டா.. " என்றவுடன்தான் "ஆமாம். பொங்கல்ல... " என்பது நினைவிற்கு வந்தது. உடன் மற்ற நண்பர்களிடமும் பேசி பொங்கலன்று மதியம் நண்பன் வீடு சென்று விருந்து உண்டு பொங்கலை அருமையாக, இனிமையாக கொண்டாடினோம். படங்களும், பகிர்வும் உங்கள் பார்வைக்கு...

பொங்கலோ பொங்கல்

வண்ணம் தீட்டப்பட்ட அழகிய சிறிய மண்பானை. விலை இந்தியப்பணம் ரூபாய் நானூறாம். கேஸ் அடுப்பில் பொங்கிய பால்.

நண்பன் வீட்டு வாயிலில்  அலங்கார கரும்பு வளைவும், அழகிய மாவிலை, பனை ஓலை தோரணங்களும்...



சேகர்,ராஜகோபால், நான் மற்றும் சுந்தர்
















நான்தான் போட்டோ எடுப்பேன்... மடியிலிருந்து துள்ளி, துடிக்கும் நண்பன் ராஜகோபாலின் மைந்தன் ஜெய்கிஷோர்

ஜெய்கிஷோர்

வாழ்க்கையில் எத்தனை படி ஏறினாலும் இப்படித்தான் எப்போதும் இணைந்திருக்க வேண்டும்


சீனப்புத்தாண்டை வரவேற்கும் அலங்காரங்கள்


மூணு பேரும் வண்டியேறிப் போயிட்டாங்க...

தியேட்டர் வரை சென்றும், டிக்கெட் இருந்தும் நேரம் ஒத்து வராமையால் படம் பார்க்க முடியவில்லை.

நண்பன் ராஜகோபால், அவரது மனைவி சகோதரி அருள்செல்வி, குழந்தை ஜெய்கிஷோர் ஆகியோரது அன்பான உபசரிப்பு. அருமையான விருந்து. கல்லூரி காலத்திற்கே அழைத்து சென்ற கலகலப்பான உரையாடல்கள். உழைத்து, களைத்த உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகத்தையும், உல்லாசத்தையும் ஒருங்கே தந்ததால் அடுத்து வரும் சீனப்புத்தாண்டு விடுமுறைக்கும் வித்தியாசமான இடத்தில் சந்திக்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.

Wednesday, December 14, 2011

நண்பனே… என் நண்பனே…



உலகப்பந்தெங்கும்
உருண்டு  கொண்டிருந்தாலும்
கண்டம் விட்டு பல கண்டம்
பறந்து கொண்டிருந்தாலும்
ஏற்றம் இறக்கம்
எத்தனை நான் கண்டாலும்...

என் நண்பனே….

வாழ்வின்
பல தருணங்களில்
நீ என்னை
வாழ்த்தும் போதெல்லாம்
வருத்தப்படவைக்கிறாய்...

நான் உன்னை எப்போதும்
வாழ்த்தியதில்லையென….


சூழ்நிலைகள் என்னை
சுற்ற விட்டிருக்கலாம்...
சுகதுக்கங்களில் நான்
சுழன்றிருக்கலாம்…

அல்லது

என் நண்பனே….

சுத்தமாக உன்னை 
நான் மறந்து கூட
போயிருக்கலாம்….


எது எப்படி ஆனாலும்
என் வாழ்வில் வந்த
ஓராயிரம் உறவுகளில்
ஒன்றாய்
உன்னை நான்
நினைத்திருந்தாலும்….


நண்பனே… என் நண்பனே…

உன் உடலொட்டிய
உயிராய்தான்
என்னை நினைக்கிறாய்…
உணர்வால் நனைக்கிறாய்…

Wednesday, December 07, 2011

சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் பல திரைப்படங்களிலும் பார்த்து வியந்திருக்கிறோம்.  பரந்து விரிந்திருந்தாலும் அதன் சுத்தமும்,  பராமரிப்பும், பாதுகாப்பும் உலக அளவில் பாராட்டப்படுபவை. விழாக்காலங்களில் செய்யப்படும் விதவிதமான அலங்காரங்கள் கண்ணையும், கருத்தையும் கவரக்கூடியவை.

நமது நாட்டு விமானநிலையங்களில் வழியனுப்பச் செல்பவர்கள் விமானநிலைய வாசல் வரைதான் செல்லமுடியும். உள்ளே செல்ல தனியாக கட்டணம் செலுத்தினாலும் குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல முடியும். பயணம் செய்பவர்கள் கொண்டு சென்ற பொருட்கள் எடை சரியாக இருந்ததா, பாஸ்போர்ட், டிக்கெட் மற்றும் விசாவில் பிரச்சினையில்லாமல்  குடியுரிமை சோதனை முடிந்ததா என பலவிதமான குழப்பங்களோடு வழியனுப்பச் சென்ற குடும்பத்தார் காத்திருப்பது மிகவும் கொடுமையானது. பயணம் செல்பவர்களும் எல்லா சோதனைகளும் முடிந்து  உள்ளே சென்று அதிகபடசமாக இரண்டு மணி நேரம் வரையாவது வெட்டியாக, வேண்டாத யோசனைகளோடு காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஆனால் சிங்கப்பூரிலோ பயணம் செய்பவர்களோடு வழியனுப்பச்  செல்பவர்கள்  விமானம் புறப்படும் பகுதியைத் தவிர விமானநிலையம் முழுதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். புகைப்படங்கள் எடுக்கலாம். பயணம் செய்பவர்களும் நண்பர்கள், உறவினர்களோடு கலகலப்பாக பேசிக்கொண்டே பாஸ்போர்ட், டிக்கெட், விசா  குடியுரிமை சோதனைப் பகுதிகளை கடக்கலாம். எல்லா சோதனைகளும் முடிந்தபின் விமானம் புறப்படும் அறிவிப்பு வரும்வரை உணவகம் சென்று உரையாடிக் கொண்டிருக்கலாம். அடுத்தவரை தொந்திரவு செய்யாதவரை எந்த விதமான இடர்பாடும் இருக்காது.

இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக இந்தியா சென்ற பழைய நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக கடந்த வாரம் சாங்கி விமானநிலையத்தின் டெர்மினல் 2 சென்றபோது  ஆங்கிலப்புத்தாண்டிற்காக செய்யப்பட்டிருந்த அலங்காரங்களும், வண்ண ஒளி விளக்குகளும் மிகவும் கவர்ந்தன. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. புகைப்படங்களில் நானும், நண்பர் கணேஷும்...

மாய மான்கள்..... மயக்கும் மான்கள்


நுணுக்கமான மின் அலங்காரத்தில் உயிர் பெற்று
உயரம் துள்ளும் ஒளி மான்கள்



பகட்டான பசுமைக்குடில்... பக்கத்தில் ஒய்யார அலங்காரங்கள்....


பகட்டான பசுமைக்குடில்...



சுற்றி வந்து சுண்டி இழுக்கும் சுறா மீன் அலங்காரம்...

பளபளப்பான பலூன் அலங்காரம்...







Tuesday, November 15, 2011

பால் காய்ச்சும்.... பதிவர் சந்திப்பும்...

திடீரென முடிவு செய்தாலும் திருப்தியாக முடிந்த புதுமனை புகுவிழாவின் சில  புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...

விழா தினத்தன்று காலை வண்ண ஒளி விளக்குகள், அலங்காரப் பந்தல், பூ மாலை மற்றும் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வசந்த வீடு



கணபதி ஹோமம் ஏற்பாடுகள்



பூஜை முடிந்து ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம்


புதுப்பானையில்  தேங்காய் உடைப்பு


புதுப்பானையில் பால் விடும்  ராஜாவும், பூஜாவும்


வாழ்வெல்லாம் வளம் பொங்க வாழ்த்தி பால் விடும் எனது தாயும், தந்தையும்


 உற்றார்,உறவினர்களும், நண்பர்களும்  விழாவிற்கு வருகை தந்து வாழ்த்த மகிழ்ச்சியுடன்  இனிதே நிறைவடைந்தது.


விழாவிற்கு வரமுடியாத பதிவுலக நண்பர்கள் நேரில் சந்திக்க  வேண்டுமென்று  திரு.அ.ரா.சங்கரலிங்கம் மூலம் அன்பு அழைப்பு விடுக்க துணைவியாரோடு சென்று அனைவரையும் சந்தித்து வந்தேன்.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் ஜன்னத்தில் அருமையான சந்திப்பு.அன்றுதான் முதல்முறை சந்தித்தாலும் பலநாள் பிரிந்த உறவுகளை சந்தித்தது போன்ற உணர்வு. இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.

சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பல துறைகளில் பிரகாசிப்பவர்கள் என்றாலும் நேரம் ஒதுக்கி சந்திப்பிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தது.

சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த அன்பு உள்ளங்கள்
திரு.ராமலிங்கம்
திரு. காளிமுத்து
ஹோட்டல் ஜன்னத் அதிபர் திரு.திவான்

நான், எனது துணைவி

ஆக மொத்தம் பன்னிரெண்டு பேர்.


திரு.ராமலிங்கம், உயர்திரு. சகாதேவன் ஐயா, திரு.ஜோதிராஜ்


அன்பும்,பண்பும், பாசமும், பணிவும் நிறைந்த திரு.ஞானேந்திரன்


மேலதிகப் படங்களுக்கும், தகவல்களுக்கும் திரு.அ.ரா.சங்கரலிங்கம் மற்றும் திரு.கே.ஆர்.விஜயன்  இருவர் பதிவுகளையும் பாருங்கள்.

நன்றி. வணக்கம்.