Tuesday, October 18, 2011

வேண்டும்….வேண்டும்...


                   பற்றற்ற வாழ்க்கைக்கு பழக வேண்டும். 
            முற்றற்ற நிலைக்கு முயல வேண்டும்.
              குற்றற்ற சொல், செயல் புரிய வேண்டும்.


         திக்கற்ற திசையெலாம் திரிய வேண்டும்.
தென்பட்ட தெய்வமெலாம் வணங்க வேண்டும். 
புண்பட்ட மனமெலாம் உதவ வேண்டும்.
கண்பட்ட மொழி, கலையெலாம் பயிலவேண்டும்
பண்பட்ட பலகுணம் பார்க்க வேண்டும்.


மானம் மறை உடை உடுத்த வேண்டும்.
ஞானம் தரும் உணவு படுத்த வேண்டும்.
ஈனமில்லா இடத்தில் உடல் கிடத்த வேண்டும்.

வேண்டும்... வேண்டும் என்ற எண்ணம்
வேண்டாம் என்ற எண்ணம் வேண்டும்.


இறந்த காலம் எளிதாய் கடந்துவிட்டோம்.   
வரும்காலம் வருத்தமின்றி வாழவேண்டும்
    நிகழ்காலம் நேர்மையாய் நாம் நடந்து கொண்டால்....  

Saturday, October 15, 2011

பள்ளி பருவத்திலே…..

எல்லோருடைய வாழ்க்கையிலும் மாணவப்பருவம் என்பது படிப்பைத் தவிர எந்த ஒரு கவலையும் இல்லாத காலகட்டம் ஆகும். அடிப்படை வசதி இல்லாத ஏதோ ஒரு கிராமத்தின் ஆரம்பப்பள்ளி என்றாலும், அமெரிக்க பல்கலைகழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு என்றாலும் குறும்பும், குதூகலமே கூடி இருக்கும்.

 
பொதுவாக பல மாணவர்களும், ஆசிரியர்களும் பாடப்புத்தகத்தில் என்ன கொடுத்துள்ளதோ அதை மட்டுமே மனப்பாடமாக படித்தும்,நடத்தியும் விடுவர். ஆனால் சில ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பாடத்தை விட்டு வெளியேயும், அல்லது பாடத்தையே வேறு கோணத்திலும் சிந்தித்து செயல்படுத்த முனைவர். அதனால் முந்திரிக்கொட்டை, அதிகப்பிரசங்கி என்ற பட்டப்பெயர்களோடு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், அடக்குமுறைகளும் ஆயிரமாயிரம்…. அப்படிப்பட்ட மாணவர்களைப் பற்றிய சில சுவாரசியப் பகிர்வுகளின் தொகுப்பே இந்த பதிவு. 

மாநிலமெங்கும் உள்ள அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளின் அடிப்படை வசதிகள், ஆசிரியர்களின் அணுகுமுறை,  பயிற்றுவிப்பு முறை, மாணவர்களின் புரியும் திறமை , ஆகியவற்றை சோதிப்பதற்காக மாநில அரசின் கல்வித்துறையின் மாவட்ட கல்வி அலுவலர்கள்  ( DEO – District Education Officer )  மூலம் அவ்வப்போது தணிக்கை ஆய்வுகள் நடத்தப்படுவது  நாம் அனைவரும் அறிந்ததே.

அவ்வாறான ஆய்விற்கு DEO வருவதை அறிந்தது முதல் ஆய்வு முடிந்து செல்லும்வரை சம்பந்தப்பட்ட பள்ளி முழுதுமே ஒரு அசாதரண, பரபரப்பான சூழ்நிலை தொற்றிக்கொள்ளும். பள்ளி கட்டிட பராமரிப்பு, வெள்ளையடிப்பது, மற்றும் பல மராமத்து பணிகளில் நிர்வாக அலுவலர்களும், மாணவர்களை தயார்படுத்துதல், பல்வேறு பாட சம்பந்தமான குறிப்புகள், படங்கள்  தயார் செய்து வகுப்பறை முழுதும் ஒட்டி அழகு செய்தல் என ஆசிரியர்களும் முழுவீச்சில் முயற்சிப்பார்கள். இந்த முயற்சிகளிலெல்லாம் சிக்கி, சின்னாபின்னாமாவது மாணவர்களே.

இப்படித்தான் ஒரு ஆரம்பப்பள்ளியிலும் DEO ஆய்விற்காக மாணவர்களை தயார் செய்த ஆசிரியர் ஆங்கிலப்பாடத்தை “ ஏ ஃபார் ஆப்பிள் “ , “ பி ஃபார் பிஸ்கட் “ , “ சி ஃபார் சாக்லெட் “ ….  என்று சொல்லிக் கொடுத்து சரியாக பதில் சொன்னவர்களுக்கு பரிசாக ஆப்பிள், பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றை கொடுத்து ஊக்கப்படுத்தியிருந்தார்.


ஆய்வு தினமும் வந்தது. ஆசிரியரும், மாணவர்களும் , தனித்தனி தட்டுகளில் ஆப்பிள்களும்,பிஸ்கட்டுகளும், சாக்லேட்டுகளும் தயாராயிருக்க மாவட்டக் கல்வி அதிகாரியும் வகுப்பினுள் வந்தார்.



ஆசிரியரிடமும், மாணவர்களிடமும் வழமையாக பேசிவிட்டு ஆங்கிலப்பாடத்திலிருந்து கேள்வி கேட்க ஆரம்பித்தார். “ ஏ ஃபார் …. “ என ஒரு மாணவனைப் பார்த்து கேட்க அவன் “ ஆப்பிள் “ என கூறவும் ஆசிரியர் பெருமிதத்துடன்  DEO கையாலே அந்த மாணவனுக்கு ஒரு ஆப்பிள் பரிசளிக்கச் செய்தார்.

அடுத்த மாணவனைப் பார்த்து “ பி ஃபார்….. “ என கேட்க அந்த  மாணவன் பதில் சொல்லாமல் நிற்பதை கண்ட DEO  சரியாக காதில் விழவில்லையோ என்றெண்ணி, சிறிது சத்தமாக “ பி ஃபார்….. “ என்று கேட்டார். அந்த மாணவனோ இன்னும் தீவிரமாய் யோசிக்க ஆரம்பிக்கவும், “ இதுதானா நீ பாடம் சொல்லிக்கொடுத்த லட்சணம் “ என்பது போல் DEO ஆசிரியரைப் பார்க்க ஆசிரியர் மாணவனை நாக்கை துருத்திக் கொண்டு மிரட்ட கொஞ்சமும் அசராத மாணவன் “ பி ஃபார்….. “, “ பி ஃபார்….. “ என்று இரண்டு முறை யோசனையோடு கூறி  மூன்றாவது முறை முகமலர்ச்சியுடன், பதில் கிடைத்த சந்தோஷத்தில் “ பி ஃபார்….. ஃபிக் ஆப்பிள் “. ( Big Apple ) என்று சத்தமாகச் சொன்னான்.

 ஆம்… பிஸ்கட்டும், சாக்லேட்டும் அவ்வப்போது சாப்பிட்ட அவனுக்கு ஆப்பிள்தான் அரிதான பொருள். அதனால்தான் பெரிய ஆப்பிளாக கேட்டான். அவனது சாமர்த்தியமான பதிலைக் கேட்டு சத்தமாக சிரித்த DEO அவனது கையில் இரண்டு ஆப்பிள்களை தூக்கி கொடுத்து ஆசிரியரையும் பாராட்டி சென்றார்.


இன்னொரு பள்ளி,இன்னொரு ஆய்வு, இன்னொரு DEO, மாணவர்களிடம் சில படங்களை காண்பித்து அது என்ன என்று கேட்டு கொண்டிருந்தார்.


மாணவர்களும்  வாழைப்பழம், மாமரம், ஆடு, மாடு, மணி, மணல் , சணல் அணில்…  என்று போட்டி போட்டுக் கொண்டு பதில்கள்  சொல்லிக் கொண்டிருந்தனர். இப்படியாக பலரிடம் கேட்டு பதில் பெற்றுக் கொண்டிருந்தவர் ஒரு மாணவன் மட்டும் மற்றவர்கள் பதில் சொல்லும் போதெல்லாம் உற்றுக்கவனித்து திருப்தி இல்லாத பாணியில் முகத்தை சுழித்துக் கொண்டிருப்பதை கண்டு அவனிடம் ஒரு படத்தை காண்பித்து கேட்க அவன் மிக தெளிவான முகத்துடன் “ யானையின் படம் “ என்றான்.

மேலும் அவனிடம் அடுத்தடுத்து படங்களை காண்பித்து பதில் கேட்க அவன் அசராமல்  வாழைப்பழத்தின் படம், மாமரத்தின் படம், ஆட்டின் படம், மாட்டின் படம், மணியின் படம் என்று தெளிவான குரலில் வரிசையாக சொன்னான்.  இப்போதுதான் DEO விற்கு அந்த மாணவன் முகம் சுழித்த காரணம் புரிந்தது. ஆம் மற்ற மாணவர்கள் படத்தை படமாக பார்க்காமல் அதில் உள்ளதை உள்ளபடி உருவகப்படுத்தி சொன்னார்கள். இந்த மாணவன் மட்டுமே அவை யாவும் படம் என்ற உண்மையை உணர்ந்து பதில் சொன்னான். 

அவன் அதிகப்பிரசங்கித்தனமாக பேசியதாக எண்ணாத DEO வும் அவனை வியந்து பாராட்டி சென்றார்.
 
மற்றுமொரு  நடுநிலைப் பள்ளியில் நடந்த சுவாரசியமான சம்பவம். பள்ளி தலைமையாசிரியர், கரெஸ்பாண்டட் புடைசூழ ஒரு வகுப்பினுள் நுழைந்த DEO மாணவர்களின் பொது அறிவுத்திறனை சோதிக்கும் விதமாக          “ இராமாயணத்தில் இருந்து கேள்வி கேட்கப்போகிறேன் “ என்று கூறி ஒரு மாணவனை நோக்கி “ ஜனகனின் வில்லை உடைத்தது யார் “ என்று கேட்டார்.

அவரது திடீர் கேள்வியால் அதிர்ச்சியடைந்த மாணவன் ஏதோ ஒரு ஞாபகத்தில் “ நான் இல்லை சார் “ என்றான். அவனது பதிலால் துணுக்குற்ற DEO  இன்னொரு மாணவனை எழுப்பி அதே கேள்வியை கேட்க  “ ஆமாம் சார். அவன் உடைக்கலை சார் “. என்று அவன் கூற வகுப்பிலிருந்த அனைவரையும் வரிசையாக எழுப்பி கேட்டபோதும் எல்லோரும் இதே பதிலை சொல்ல குழப்பமடைந்த DEO வகுப்பாசிரியரைப் பார்க்க அவரும், “ ஆமாம் சார். பசங்க சொல்றது சரிதான். அந்த வில்லை அவன் உடைக்கலை சார் “ என்றார்.

இப்போது கொஞ்சம் கோபமடைந்த DEO தலைமையாசிரியரைப் பார்க்க, அவரும், “ ஆமாம் சார். அப்படி சேட்டை பண்ற  பசங்க யாரும் நம்ம பள்ளியிலே கிடையாது சார். “ என்றார். DEO மேலும் கோபமாகி முகம் சிவந்து நிற்பதை கண்ட கரெஸ்பாண்டன்ட் அவரை தனியே அழைத்துச் சென்று, “ சார். வேணும்ன்னா அந்த உடைந்த வில்லுக்குண்டான பணத்தை பள்ளி நிர்வாகத்திலிருந்து கொடுத்து விடுகிறோம். பெரிய மனது பண்ணி  இந்த பிரச்சினையை மேலும் பெரிதாக்காமல் இத்தோடு விட்டுவிட்டால் ரொம்ப புண்ணியமாப் போகும் “ என்று கெஞ்சிய குரலில் கேட்க மயக்கமடைந்து விழுந்தார் அந்த DEO.









Thursday, October 13, 2011

செய்நன்றியில் சிறந்தவர் கர்ணனா…. கும்பகர்ணனா….

அறை நண்பரோடு ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து, என்னவெல்லாமோ பேசி கடைசியில் நின்ற இடம்தான் பதிவின் தலைப்பு. உங்களின் பார்வைக்கும் அந்த பகிர்வு.

செய்நன்றியில் சிறந்தவர் கர்ணனா…. கும்பகர்ணனா….


செய்நன்றியில் சிறந்தவர் கர்ணனா…. கும்பகர்ணனா…. – இது என்ன கேள்வி கும்பகர்ணன் அண்ணனுக்காக சண்டை போட்டு மாண்டதில் என்ன சிறப்பு… கர்ணன்தான் பாண்டவர்கள் தம் சகோதரர்கள் என்று தெரிந்தும் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க இறுதிவரை துஷ்டன் துரியோதனனுக்காக போராடி உயிர்நீத்தான் என்பதுதான் எல்லோருடைய கருத்தாகவும் இருக்கும்.


இனி விவாதத்திற்கு வருவோம்.


கர்ணன் : கன்னிப் பெண் குந்தி தேவிக்கும், சூரிய தேவனுக்கும் பிறந்து ஆற்றில் விடப்பட்டு, தேரோட்டியால் வளர்க்கப்பட்டு, வில்வித்தை கற்றுத்தேர்ந்து போட்டியொன்றில் அர்ஜுனனோடு மோதவரும்போது துரோணச்சாரியால் இழிகுலத்தான் என அவமானப்படுத்தப்பட்டவன். அந்த நேரம் துரியோதனன் எழுந்து அர்ஜுனனை விட திறமைசாலி என்பதால் கர்ணனின் வில்திறமைக்காக அவனை அங்கதேச அதிபதியாக்கி தன்னுடன் சேர்த்துக்கொண்டு எடுக்கவோ… கோர்க்கவோ… என்ற அளவில் நட்பு கொண்டான். நட்பிற்கு நன்றியாக தன் உடல், பொருள்,ஆவி அனைத்தும் துரியோதனனுக்கு அர்ப்பணம் என்று உறுதிமொழி கூறியவன் கர்ணன்.












குற்றம் 1 : இந்திரன் தன் மகன் அர்ஜுனனுக்காக கர்ணனது கவச,குண்டலத்தை தானமாக கேட்டபோது அறுத்துக் கொடுத்த கர்ணன் அவனது உடல், பொருள், ஆவிக்கு சொந்தக்காரனான துரியோதனனிடம் அனுமதி பெறாதது ஏன்…


குற்றம் 2 : உண்மையான நட்பிற்கும், உறவிற்கும் அழகு தவறு செய்யும்போது இடித்துரைப்பது… சூதாட்டத்தில் பாஞ்சாலியையும் தர்மர் வைத்து தோற்றவுடன் அவளை அவைக்கு இழுத்து வந்து துச்சாதனன் அவமானப்படுத்தும்போது ஆட்சேபிக்காததும்…. அந்த அநியாயத்தை தட்டிக்கேட்டு, தடுக்க முயன்ற கௌரவர்களில் கடைசியானவனான விகர்ணனை பெரியவர்களை எதிர்த்து பேசக்கூடாது என்று திட்டி சபையை விட்டு வெளியே அனுப்பியதும் நியாயமா…



குற்றம் 3 : கண்ணன் மூலம் கர்ணன் தன் மகன் என அறிந்த குந்தி தேவி அவனை பாண்டவர்களோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறு அழைக்கும்போது செஞ்சோற்றுக்கடன் கூறி மறுத்த கர்ணன், அர்ஜுனனை தவிர மற்ற பாண்டவர்களை கொல்லமாட்டேன் என்றும், அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டும்தான் கொடிய நாகபாணம் பிரயோகிப்பேன் என்றும் துரியோதனனிடம் அனுமதி பெறாமல் உறுதிமொழி கொடுத்தது சரியா… தவறா…



குற்றம் 4 : யுத்த தர்மபடி களத்தில் ஆயுதமின்றி நிற்கும் எவரையும் தாக்கக்கூடாது…. ஆனால் நிராயுதபாணியாக நின்ற அபிமன்யுவை அம்பு விட்டு கொன்றது யுத்ததர்மமா…..


குற்றம் 5 : அர்ஜூனனை அழிக்க நாகபாணம் விடும்பொழுது நெஞ்சுக்கு குறிவக்குமாறு பலகளம் கண்ட அனுபவசாலியான தேரோட்டிய சல்லியன் கூறியும் கேட்காமல் தலைக்கு குறிவைக்க கண்ணன் தன் காலால் தேரை ஒரு அடி கீழே அழுத்தி அர்ஜுனனை காப்பாற்றினான். அதனால் கடும்கோபம் கொண்ட கர்ணன், நிலத்தில் அழுந்திய தேரை தூக்க முயற்சித்துக் கொண்டிருந்த சாரதியும், பாரதப் போரில் ஆயுதம் தூக்கமாட்டேன் என சத்தியம் செய்திருந்தவனுமாகிய கண்ணனை அம்பால் அடித்து துன்புறுத்தினான். இச்சம்பவத்தையும், அபிமன்யுவை கொன்றதையும் கூறித்தான் நிராயுதபாணியான கர்ணனை கொல்ல மறுத்த அர்ஜுனனின் மனதை மாற்றினான் கண்ணன்.



குற்றம் 6 : கர்ணன் உயிர்பறிக்க அர்ஜூனன் விடும் அம்புகளெல்லாம் தர்மதேவதையால் மாலைகளாக மாறுவதை கண்ட கண்ணன் வயோதிக அந்தணர் உருவம் எடுத்து கர்ணன் செய்த தர்மத்தையெல்லாம் தானமாக கேட்க, அவனும் ரத்தத்தில் தாரை வார்த்து கொடுத்தான்.நெகிழ்ச்சியுற்ற கண்ணன் என்ன வரம் வேண்டுமென்றாலும் கேட்க சொல்ல ஈரேழு உலகம் இருக்கும் வரை கொடைவள்ளல் என்ற பட்டம் மட்டும் போதும் என்று கூறியதற்கு பதிலாக தன் நண்பன் துரியோதனன் போரில் வெல்ல வேண்டும் என்று கேட்டிருக்கலாமே…. 


குற்றம் 7 : இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாது என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்பதற்காக வாரி, வாரி வழங்கிய கர்ணன் அந்த பொன்னும்,பொருளும் துரியோதனன் கொடுத்ததே என்பததை எப்போதும் மனதில் கொண்டும், எல்லோரிடமும் சொல்லியும் அந்த புகழெல்லாம் துரியோதனனுக்கு கிடைக்கும்படி செய்திருக்கலாம் அல்லவா….




கும்பகர்ணன் : இராவணனின் தம்பி. மிகுந்த பலம் வாய்ந்தவன். தூக்கத்தில் ஆழ்ந்தால் ஆறுமாதத்திற்கு ஒருமுறைதான் விழிப்பான்.
அப்படியொரு நாள் விழித்திருக்கும்போது தான் இராவணன் சீதையை கவர்ந்து வந்தான். உடனே அச்செயலை கண்டித்த கும்பகர்ணன் சீதையை திருப்பி கொண்டுபோய் விட்டுவிடுமாறு அறிவுரை கூறி விட்டு தூங்கச் சென்று விட்டான்.



 சீதை இராவணனால் கடத்தப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருப்பதை அறிந்த இராமன் வானரப்படை திரட்டி வந்து நடத்திய போரில் இந்திரஜித் மற்றும் முக்கிய தளபதிகள் மடிந்தவுடன் தூங்கிக் கொண்டிருந்த கும்பகர்ணனை எழுப்பச் சொன்னான் இராவணன்.






 கடும்போராட்டத்திற்குபின் உறக்கத்தில் இருந்து எழுப்பப்பட்ட கும்பகர்ணன் விவரங்கள் அறிந்து இராவணனிடம் சென்று, “ உன்னை அன்றே சீதையை கொண்டு விடச்சொன்னேனே…. அப்படிச் செய்திருந்தால் இந்த தேவையில்லாத போரே வந்திருக்காதே… இந்திரஜித் போன்ற ஒப்பிலா வீரர்களையே அழித்தவன் என்றால் அவனது பலம் இன்னும் புரியவில்லையா… இப்போதாவது மன்னிப்பு கேட்டு சீதையை இராமனிடம் ஒப்படைத்து விட்டு உயிர்பிழைக்கும் வழிபார் ”. என்று அறிவுரை கூறினான்.அதற்கு இராவணன் எனக்காக போரிட்டு மடியும் அளவு பாசம் கொண்ட மகன்களையும்,நண்பர்களையும் பெற்றும் உன்னையும், விபீஷணனையும் போன்ற துரோகிகளை தம்பிகளாக அடைந்ததற்காக வெட்கப்படுகிறேன் . வேதனைப்படுகிறேன் என்று கூறவும் உனது நன்மைக்காகவும், மீதியிருக்கும் நமது குலம் காக்கப்படவேண்டும் என்பதற்காகவும்தான் உன்னை திருந்தச்சொன்னேன். விதியை யாரால் வெல்ல முடியும். என்று கூறி கும்பகர்ணன் போருக்கு புறப்பட்டு சென்றான்.



கும்பகர்ணன் களத்தில் இறங்கி வானரப்படைகளை துவம்சம் செய்வதை கண்டு திகைத்த இராமன் யார் இந்த இராட்சதன் என விபீஷணனிடம் கேட்டு விவரம் அறிந்தான்.






இனியும் இவனை விட்டு வைத்தால் வானரப்படையை கூண்டோடு அழித்துவிடுவான் என்பதால் அம்பு விட்டு கும்பகர்ணனின் இரு கைகளையும் அறுத்தும் அங்கும், இங்கும் ஓடி அகப்பட்டவர்களை கால்களால் மிதித்து அழிப்பதை கண்ட இராமன் இரு கால்களையும் அறுத்தான்.




சகோதர பாசத்தால் பீடிக்கப்பட்டு மிகுந்த மனவருத்தத்துடன் மாமிசமலை போல் களத்தில் விழுந்து கிடந்த கும்பகர்ணனின் அருகில் சென்ற விபீஷணன் அவனது கண்களில் இருந்து தாரை, தாரையாக கண்ணீர் வடிவதை கண்டு மேலும் கலங்கி காரணம் கேட்க “ மிகுந்த பலசாலியும்,பெரும் உடலும் கொண்ட என்னையே இராமனது பாணங்கள் சிதைத்து சின்னாபின்னப் படுத்தி விட்டனவே..என்னை விட நூறு மடங்கு உருவத்தில் சிறிய இராவணன் மீது இந்த பாணங்கள் பட்டால் அவன் எவ்வளவு வலியும், வேதனையும் அடைவான் என்பதை நினைத்தே என் கண்கள் கலங்குகின்றன ” என்று கூறியவாறே உயிர் நீத்தான் கும்பகர்ணன்.


உங்களது கருத்துக்களையும் கூறுங்கள்….

செய்நன்றியில் சிறந்தவர் கர்ணனா…. கும்பகர்ணனா….

Monday, October 10, 2011

அன்பே... என் அன்பே...


உயிர்ப்பறவை
உடலை
விட்டுச்செல்லும்
 நேரம்...

அன்பே...
என் அன்பே...

உன் 
நினைவுகளோடுதான்
என்
அஸ்தமனம்
  நேரும்...


உறவென்று
சொல்லிட
உலகில்
  பலருண்டு...

உடலொட்டிய
உயிர்
ஒன்றே ஒன்று...

அன்பே...
என் அன்பே...

உரக்கச்
சொல்வேன்
அது
நீயே என்று...


பணிக்காக
பறந்தேன்
  பல நாடு...

அன்பே...
என் அன்பே...

காதல்பிணி
தீர
எப்போதும்
இருப்பேன்
இனி
நான்
உன்னோடு...

Tuesday, October 04, 2011

பயணம்...


ஓரூரில் பிறந்து
ஈரூரில் வளர்ந்து
மூவூரில் படித்து
நாலூரில் முடித்து
ஐந்தூரில் பணிபார்த்து
ஆறூரில் குடியமைத்து
ஏழூரில் எல்லாம் இருக்க
எட்டாத ஊர் செல்லும்வரை
இன்னும் எததனை
    ஊர் வழிப்பயணம் எமக்கு......

Saturday, October 01, 2011

காரணம் என்னடி...



கட்டி அணைத்து
முத்தம் கொடுத்தால்
கன்னங்கள் சிவக்கும்
சரிதான்....


ஆனால்
எட்டி நின்று 
ரசிக்கும்போது கூட
நித்தம்
உன் கன்னங்கள்
  சிவப்பதன்
காரணம் என்னடி...

------------------------

மோதலின் போது
ஒரு கன்னத்தில்
அறைந்தால்
மறுகன்னத்தை காட்டு
    தத்துவம் சொல்லும் நீ.....


மிகுந்த காதலின்போது
உன்னொரு கன்னத்தில்
முத்தமிட்டால்
மறுகன்னம் காட்ட
மறுப்பதன்
காரணம் என்னடி...


Tuesday, September 27, 2011

காதல் காலம்



தை, மாசி
கன்னியவள்
தைத்திட்டாள்
என் மனதில்
கதை
   பல பேசி...



பங்குனி, சித்திரை
பந்தம் கொண்டவள்
படுத்திய பாட்டில்
பங்கம் கண்டது
     என் நித்திரை.....



வைகாசி, ஆனி
எங்கள் காதல்
ஏறியது இனிதே
பல ஏணி....



ஆடி, ஆவணி
இணைந்தே
பாடிட்டார்
இருவீட்டாரும்
  எதிர்லாவணி....



புரட்டாசி, ஐப்பசி
புதுவாழ்வில்
இறங்கிட்டோம்
புறந்தள்ளி
     பல சதி.....



கார்த்திகை, மார்கழி
காதல் களியில்
புது உறவொன்று
உருவாக
இனி
எங்கள் வாழ்வில்
தினம், தினம்
தீபாவளி.




Saturday, September 24, 2011

கண்டவர் விண்டிலர்….



அனுநித்தம் கனவில் வந்திட்ட
அழகுமுத்தம் பல தந்திட்ட
கனதினம் பிரிந்திட்ட
காதலி தொலைவில் வந்திட
கண்கள் நோக்கிட
காதல் பெருக்கிட
இதயநீர் இளகிட
இமைகள் நனைந்திட
உதடுகள் ஒட்டிட
உள்நாக்கு உலர்ந்திட
கட்டி அணைத்திட
கைகள் துடித்திட
கண்ணியம் தடுத்திட
அருகே அழைத்திட
அவள் பெயரும் மறந்திட
ஏதேதோ என்னுள் நடந்திட
உலகமொழியெலாம்
ஒரு வார்த்தை இல்லை
தன்நிலை மறந்திட்ட
என்நிலை விளக்கிட….



Tuesday, September 20, 2011

தமிழா…..தமிழா

ஓட்டு வீடு,
ஓலைக்குடிசையில்
தூசி,தும்பு
மண், மட்டி
ஒட்டி விழும்
மழைத்தண்ணீர்
வேட்டித்துணியில்
வடிக்கட்டி
தவலையில் பிடித்து
தவணையில் குடித்து
வளர்ந்தோம்
அப்போது…..


தண்டா பானி
மினரல் வாட்டர்
பிராண்ட் மாறி
குடித்தால்
த்ரோட் இன்வக்சன்
சளி, கபம்,காய்ச்சல்
ரூபாய் தொள்ளாயிரம்
செலவு
நாளொன்றிற்கு
இப்போது…..

Sunday, September 18, 2011

தாய் நீ(ர்) தாய்...


ஊற்றுச் சேய்
ஓடைக் குழந்தை
அருவிக் குமரி
ஆற்று மங்கை
  அலைகடல் பெண்....


சூரியக் கணவன்
சுடுகதிர் பட்டு
நீராவிக் கர்ப்பம்
    நீ தரித்து....


நெடுமழையாய்
பிரசவித்தாய்
நீர்சூழ்
  பிரபஞ்சத்தில்.....

Friday, September 16, 2011

கவிஞனின் கவலை...



கடந்து செல்லும்
ஒவ்வொரு முகங்களும்
எனக்கொரு  கதை
சொல்லுகின்றன.



என் கதை
எழுதவே
நேரமில்லையே....



எப்போது  எழுதுவேன்
எல்லோர்  கதைகளையும்
 நான்....






Wednesday, September 14, 2011

ராஜா மகள் பூஜா - பிறந்த நாள்

ராஜா மகள் பூஜா


இந்த ராஜாவின் குட்டி இளவரசி சிவ பூஜாவிற்கு இன்று பிறந்த நாள்.



நான்கு வயது முடிந்து ஐந்தாவது தொடங்குகிறது.


அன்புமகள் சிவபூஜா இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.








Monday, September 12, 2011

வெறுமை

ஏதோ ஒரு
பயணத்தின்
இடையில்
காத்திருக்கும்போது 
கடக்க மறுப்பது
நேரம் மட்டுமல்ல
நினைவுகளும் தான்...... 

Saturday, September 10, 2011

வசியக்காரி...



பேய்க்கதைகளை
கேட்டு
பீதியடையாத
 நான்.....

உன்
வாய்க்கதைகளை
கேட்டு
வசமிழந்து போகிறேன்.




Tuesday, September 06, 2011

காதல் தந்திரம்

ஏழு கடல், ஏழு மலை தாண்டி
ஏதோ ஒரு குகையில்
எந்திரக்கிளியிடம்
ஒளிந்திருக்குமாம்
மந்திரவாதியின் உயிர் .
படித்திருக்கிறேன்
பாலவயதில்......

பலகடல் தாண்டி
பணிக்காக பறந்தபோது
காதல் மந்திரக்கிளி
உன்னிடம் தந்திரமாக
என்னுயிர் ஒட்டிக்கொள்ள....
துடித்திருக்கிறேன்
பருவவயதில்.....