Friday, June 29, 2012

இதுதாண்டா போலீஸ்....

இன்றைய தினமலரில் வந்த செய்தியும், படங்களும் உங்கள் பார்வைக்கு.


சென்னை:கல்வி தனியார் மயமாவதைத் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள், சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை நேற்று முற்றுகையிட முயன்றனர். இவர்களை, சாலையிலேயே தடுத்து நிறுத்தி, கைதுசெய்ய போலீசார் முயன்றபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவ, மாணவியரை போலீசார் கைது செய்தனர். தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசுடைமையாக்க வேண்டும்; அனைவருக்கும் இலவச, கட்டாயக்கல்வி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர், மாநிலத் தலைவர் கணேசன் தலைமையில், நேற்று காலை 11 மணிக்கு, சென்னை, கல்லூரி சாலையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். மொத்தமே 50 முதல் 60 பேர் வரை தான் இருந்தனர்.திருவல்லிக்கேணி துணைக் கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், மாணவ, மாணவியரை, சாலையிலேயே தடுத்து நிறுத்தினர். "முன் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்த அனுமதியில்லை; கலைந்து செல்லுங்கள்' என, போலீசார் கூறினர். அதைக் கேட்காமல், சாலையிலேயே மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.அப்போது, கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ஆர்ப்பாட்டக்காரர்களுடன், ஐந்து வயது சிறுவர்களும் அதிகளவில் வந்தனர். ஒன்றரை வயது குழந்தையையும் ஒரு மூதாட்டி தூக்கி வந்தார். இந்தக் குழந்தைகளின் கைகளில் கொடியைக் கொடுத்து கோஷம் போட வைத்தனர். இந்தச் சம்பவத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.


அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை அரசுடைமையாக்கி அனைவருக்கும் இலவசமாக கட்டாயக் கல்வி வழங்கக்கோரி சென்னை, நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குனரகம் முன் ஆர்பாட்டம் நடத்திய புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணியினர். ஆர்பாட்டத்திற்கு வந்திருந்த தாயிடமிருந்து குண்டு கட்டாக குழந்தையை அடாவடித்தனமாக தூக்கி கைது செய்து அழைத்து சென்ற வீரமிக்க போலீசார். இந்த சம்பவத்தை பார்த்த பெண் போலீஸ் உட்பட அனைவரையும் உறையவைத்தது.




அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை அரசுடைமையாக்கி அனைவருக்கும் இலவசமாக கட்டாயக் கல்வி வழங்கக்கோரி சென்னை, நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குனரகம் முன் ஆர்பாட்டம் நடத்திய புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணியினர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்னை கழுத்தை பிடித்து இழுத்து வேனில் முட்டிய ஆண் போலீசார்.


அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை அரசுடைமையாக்கி அனைவருக்கும் இலவசமாக கட்டாயக் கல்வி வழங்கக்கோரி சென்னை, நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குனரகம் முன் ஆர்பாட்டம் நடத்திய புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணியினர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை முடியை பிடித்து இழுத்து வேன் உள்ளே தள்ளும் பெண் போலிஸ்.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் பாராமல், கட்சிகளை சாராமல் இந்த இளைஞர்கள் இறங்கி போராடுவது தங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்துதான் என்பதை கூட அறியாமல்அகிம்சை வழியில் போராடுபவர்களிடம் காட்டும் முரட்டுத்தனத்தையும்,மூர்க்கத்தனத்தையும் பாருங்கள். இந்த அதிகாரத்தையும், ஆணவத்தையும் தந்தது யார்.

இதுதாண்டா போலீஸ்....


Wednesday, April 18, 2012

நம்ம வீட்டு கல்யாணத்தில் சந்திப்போம்...



பதிவுலக பண்பாளரும், பாசத்தில் சிறந்தவரும், பழக்கத்தில் குணம் நிறைந்தவருமான உயர்திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்கள் இல்லத்திருமணம் 25.04.2012 புதன்கிழமை, திருநெல்வேலி செல்வி மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. ஏற்கனவே அவரது வலைப்பூவிலும் திருமண அழைப்பிதழை இட்டுள்ளார். பதிவுலக சொந்தங்கள் பலரும் வருகை தர உள்ளனர். நெல்லையின் மிகப்பெரிய பதிவர் சந்திப்பாகவும் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நாளை இரவு சிங்கப்பூரில் இருந்து கிளம்புகிறேன். 20.04.2012 வெள்ளி முதல் 28.04.2012 சனிக்கிழமை  வரை நெல்லையில்தான் இருப்பேன். திருமணத்திற்கு வருகை தரும் நண்பர்கள் 0091-94891 53344 என்ற எண்ணில் எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம்.

வாருங்கள் நண்பர்களே…. நம்ம வீட்டு கல்யாணத்தில் சந்திப்போம். 

நன்றி.வணக்கம்.

Tuesday, January 17, 2012

பொங்கல் விருந்து - " நண்பன் " வீட்டில் " வேட்டை "

பரபரப்பான பணிக்கிடையில் அலைபேசியில் ஒரு பாச அழைப்பு. " டேய், நாளைக்கு மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்திடு. சேகர், சுந்தர்ட்ட்யும் சொல்லிட்டேன். சால்ஜாப்பு சொல்லாம வந்து சேரு." அழைத்த அன்பு நண்பனிடம் " என்னடா நாலு பரதேசிக்கு சாப்பாடு போடறதா வேண்டுதலா.. " என்று கலாய்க்க " டேய்.. நாளைக்கு பொங்கல்டா.. " என்றவுடன்தான் "ஆமாம். பொங்கல்ல... " என்பது நினைவிற்கு வந்தது. உடன் மற்ற நண்பர்களிடமும் பேசி பொங்கலன்று மதியம் நண்பன் வீடு சென்று விருந்து உண்டு பொங்கலை அருமையாக, இனிமையாக கொண்டாடினோம். படங்களும், பகிர்வும் உங்கள் பார்வைக்கு...

பொங்கலோ பொங்கல்

வண்ணம் தீட்டப்பட்ட அழகிய சிறிய மண்பானை. விலை இந்தியப்பணம் ரூபாய் நானூறாம். கேஸ் அடுப்பில் பொங்கிய பால்.

நண்பன் வீட்டு வாயிலில்  அலங்கார கரும்பு வளைவும், அழகிய மாவிலை, பனை ஓலை தோரணங்களும்...



சேகர்,ராஜகோபால், நான் மற்றும் சுந்தர்
















நான்தான் போட்டோ எடுப்பேன்... மடியிலிருந்து துள்ளி, துடிக்கும் நண்பன் ராஜகோபாலின் மைந்தன் ஜெய்கிஷோர்

ஜெய்கிஷோர்

வாழ்க்கையில் எத்தனை படி ஏறினாலும் இப்படித்தான் எப்போதும் இணைந்திருக்க வேண்டும்


சீனப்புத்தாண்டை வரவேற்கும் அலங்காரங்கள்


மூணு பேரும் வண்டியேறிப் போயிட்டாங்க...

தியேட்டர் வரை சென்றும், டிக்கெட் இருந்தும் நேரம் ஒத்து வராமையால் படம் பார்க்க முடியவில்லை.

நண்பன் ராஜகோபால், அவரது மனைவி சகோதரி அருள்செல்வி, குழந்தை ஜெய்கிஷோர் ஆகியோரது அன்பான உபசரிப்பு. அருமையான விருந்து. கல்லூரி காலத்திற்கே அழைத்து சென்ற கலகலப்பான உரையாடல்கள். உழைத்து, களைத்த உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகத்தையும், உல்லாசத்தையும் ஒருங்கே தந்ததால் அடுத்து வரும் சீனப்புத்தாண்டு விடுமுறைக்கும் வித்தியாசமான இடத்தில் சந்திக்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.

Wednesday, December 14, 2011

நண்பனே… என் நண்பனே…



உலகப்பந்தெங்கும்
உருண்டு  கொண்டிருந்தாலும்
கண்டம் விட்டு பல கண்டம்
பறந்து கொண்டிருந்தாலும்
ஏற்றம் இறக்கம்
எத்தனை நான் கண்டாலும்...

என் நண்பனே….

வாழ்வின்
பல தருணங்களில்
நீ என்னை
வாழ்த்தும் போதெல்லாம்
வருத்தப்படவைக்கிறாய்...

நான் உன்னை எப்போதும்
வாழ்த்தியதில்லையென….


சூழ்நிலைகள் என்னை
சுற்ற விட்டிருக்கலாம்...
சுகதுக்கங்களில் நான்
சுழன்றிருக்கலாம்…

அல்லது

என் நண்பனே….

சுத்தமாக உன்னை 
நான் மறந்து கூட
போயிருக்கலாம்….


எது எப்படி ஆனாலும்
என் வாழ்வில் வந்த
ஓராயிரம் உறவுகளில்
ஒன்றாய்
உன்னை நான்
நினைத்திருந்தாலும்….


நண்பனே… என் நண்பனே…

உன் உடலொட்டிய
உயிராய்தான்
என்னை நினைக்கிறாய்…
உணர்வால் நனைக்கிறாய்…

Wednesday, December 07, 2011

சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் பல திரைப்படங்களிலும் பார்த்து வியந்திருக்கிறோம்.  பரந்து விரிந்திருந்தாலும் அதன் சுத்தமும்,  பராமரிப்பும், பாதுகாப்பும் உலக அளவில் பாராட்டப்படுபவை. விழாக்காலங்களில் செய்யப்படும் விதவிதமான அலங்காரங்கள் கண்ணையும், கருத்தையும் கவரக்கூடியவை.

நமது நாட்டு விமானநிலையங்களில் வழியனுப்பச் செல்பவர்கள் விமானநிலைய வாசல் வரைதான் செல்லமுடியும். உள்ளே செல்ல தனியாக கட்டணம் செலுத்தினாலும் குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல முடியும். பயணம் செய்பவர்கள் கொண்டு சென்ற பொருட்கள் எடை சரியாக இருந்ததா, பாஸ்போர்ட், டிக்கெட் மற்றும் விசாவில் பிரச்சினையில்லாமல்  குடியுரிமை சோதனை முடிந்ததா என பலவிதமான குழப்பங்களோடு வழியனுப்பச் சென்ற குடும்பத்தார் காத்திருப்பது மிகவும் கொடுமையானது. பயணம் செல்பவர்களும் எல்லா சோதனைகளும் முடிந்து  உள்ளே சென்று அதிகபடசமாக இரண்டு மணி நேரம் வரையாவது வெட்டியாக, வேண்டாத யோசனைகளோடு காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஆனால் சிங்கப்பூரிலோ பயணம் செய்பவர்களோடு வழியனுப்பச்  செல்பவர்கள்  விமானம் புறப்படும் பகுதியைத் தவிர விமானநிலையம் முழுதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். புகைப்படங்கள் எடுக்கலாம். பயணம் செய்பவர்களும் நண்பர்கள், உறவினர்களோடு கலகலப்பாக பேசிக்கொண்டே பாஸ்போர்ட், டிக்கெட், விசா  குடியுரிமை சோதனைப் பகுதிகளை கடக்கலாம். எல்லா சோதனைகளும் முடிந்தபின் விமானம் புறப்படும் அறிவிப்பு வரும்வரை உணவகம் சென்று உரையாடிக் கொண்டிருக்கலாம். அடுத்தவரை தொந்திரவு செய்யாதவரை எந்த விதமான இடர்பாடும் இருக்காது.

இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக இந்தியா சென்ற பழைய நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக கடந்த வாரம் சாங்கி விமானநிலையத்தின் டெர்மினல் 2 சென்றபோது  ஆங்கிலப்புத்தாண்டிற்காக செய்யப்பட்டிருந்த அலங்காரங்களும், வண்ண ஒளி விளக்குகளும் மிகவும் கவர்ந்தன. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. புகைப்படங்களில் நானும், நண்பர் கணேஷும்...

மாய மான்கள்..... மயக்கும் மான்கள்


நுணுக்கமான மின் அலங்காரத்தில் உயிர் பெற்று
உயரம் துள்ளும் ஒளி மான்கள்



பகட்டான பசுமைக்குடில்... பக்கத்தில் ஒய்யார அலங்காரங்கள்....


பகட்டான பசுமைக்குடில்...



சுற்றி வந்து சுண்டி இழுக்கும் சுறா மீன் அலங்காரம்...

பளபளப்பான பலூன் அலங்காரம்...