கடவுள் அமைத்து வைத்த மேடை.
இணங்கும் கல்யாண மாலை.
இன்னார்க்கு இன்னார் என்று.
எழுதி வைத்தானே தேவன் அன்று...
டண்டண் டண்டணடண்டண் டண்டண் டண்டணடண்டண் டண்டண் டண்டணடண்டண் ....
ஓக்கே ... ஸ்டாப் மியூசிக்...
ஊர்ல மோஸ்ட் வாண்டட் பேச்சிலரா இருந்ததால ஏற்பட்ட தொந்திரவுகள் தாங்காமல் டகார்ன்னு துபாய்க்கு எஸ்கேப்பியாச்சு. சென்னை, ஹைதராபாத்ல இருந்தவரை துரத்தி, துரத்தி வந்த பொண்ணு வீட்டுக்காரங்க அதற்கப்புறம் நேரடியா நம்மளை அட்டாக் பண்ணமுடியாம வீட்டுல டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்பா,அம்மா,அக்கா அடிக்கடி இந்த விஷயமா மாத்தி மாத்தி போன் பண்ணதாலே ஊருக்கு போனா ஏடாகூடாமா வசமா மாட்டி விட்டுடுவாங்களோங்கிற பயத்துல ஒன்றரை வருஷம் ஊர்ப்பக்கமே வரலை. வருஷத்துக்கு இரண்டு லீவுங்கிறதாலே எங்க பாஸும் ஊருக்கு போகலையா, ஊருக்கு போகலையான்னு கேட்டு கேட்டு அலுத்து போயிட்டார்.
2006ம் வருஷம் புத்தாண்டு தினத்தன்று திடீர்ன்னு ஒரு ஞானோதயம். சரி இந்த வருஷத்தோட "பேச்சு இலர்" வாழ்க்கையை முடிச்சுட்டு "குடும்ப இஸ்திரி" ஆயிடலாம்ன்னு.. அதற்கப்புறம் வீட்டுல சொல்ற விஷயங்களை கொஞ்சம் காது கொடுத்து கேக்க ஆரம்பிச்சேன். நமக்கேத்த மாதிரி நல்ல குடும்பமா பார்த்து முடிச்சிருங்கன்னு சொல்லிட்டேன். இது கேள்விப்பட்ட என்னோட பாஸ் “நீ இங்கே இருந்தா எப்படி... ஊருக்கு போய் ஆகுற வேலையை பார்”ன்னு டிக்கெட் புக் பண்ணி கைல கொடுத்திட்டார்.
இதற்கு நடுவில் ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்த அப்பா, அம்மாவிடம் குடும்ப உறவினர் ஒருவர் ஒரு பெண்ணை காண்பித்து "பிடிச்சிருந்தா சொல்லுங்க. உங்க பையனுக்கு பேசி
முடித்துவிடலாம்" என்று கூறியுள்ளார். அக்கா, மாமாவும் அந்த கல்யாணத்துக்கு போயிருந்ததால் அவர்களும் பார்க்க எல்லோருக்கும் பிடித்து போய்விட மறுநாளே எனக்கு தகவல் வந்தது. சினேகா அப்போ பேமஸ் என்பதால் பெண் சிநேகா போல் இருப்பார் என பயங்கர பில்டப்.
நம்மளும் கவிதைல்லாம் எழுதிட்டோம்.
ஜாதகப் பொருத்தம் பார்க்கப் போனபோது மனப்பொருத்தம் இருந்தால் பண்ணிக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.அவர்கள் வீட்டில் எங்கள் குடும்பத்தை ஏற்கனவே அறிவார்கள். என்னை பற்றி கூறியவர்கள் எல்லாம் விஷால் மாதிரி இருப்பார், ஸ்ரீகாந்த் மாதிரி இருப்பார்ன்னு ஏகப்பட்ட பில்டப் கொடுத்திருக்கிறார்கள். மணப்பெண்ணோடு கல்லூரியில் படித்த எங்களூர் பெண் ஒருவர் வேற எங்க ஊர்லயே அம்சமான ஆளு நான்தான்னு சொல்லியிருக்கு. எங்கண்ணன் கல்யாணத்துக்கு ஊரழைக்க போயிருந்தபோது அந்த பொண்ணு நம்மளை சைட்டு அடிச்சிருக்குது.
இதெல்லாம் தெரியாம 2006 ஜூன் 10ம் தேதி யதார்த்தமா போன என்னை அக்காவும், மாமாவும் பாத்திரத்துல மாட்டுன பதார்த்தமா ஏர்போர்ட்டுல இருந்து வீடு போறவரைக்கும் பொண்ணு புராணம் சொல்லி வறுத்தெடுத்திட்டாங்க. ஏர்போர்ட்டுல வீடு போய்ச் சேர ராத்திரி 11 மணி ஆயிட்டுது. அதற்கப்புறம் அப்பா,அம்மா கண்டினியூவா ட்யூன் பண்ண ஆரம்பிக்க (ஆர்வம்) தாங்கமுடியாம பொண்ணு பார்க்க நாளைக்கே போயிடுவோம்ன்னு சொல்லிட்டேன்.
மறுநாள் காலையில் அவங்க வீட்டுக்குக்கு பக்கத்துல நடந்த என் பிரெண்டோட அக்கா கல்யாணத்துக்கு போயிட்டு அவங்க வீட்டுக்கு போன் பண்ணி பொண்ணு பார்க்க விஷயத்தை சொன்னோம். மதியம் ஒரு மணிக்கு மேலதான் நல்லநேரம். அப்ப வாங்கன்னு அவங்க சொல்லவும் கல்யாண வீட்டுலே கொஞ்சநேரம் இருந்துட்டு மதியசாப்பாடும் சாப்பிட்டுட்டு அவங்க வீட்டுக்கு போனா ஒரு பெருங்கூட்டமே திரண்டு இருந்ததை பார்த்த நான் அப்படியே ஷாக்காயிட்டேன். "பேசுறாங்க,பேசுறாங்க... பேசிகிட்டே இருக்காங்க.. " பொண்ணை கண்ணுல காமிக்கிற மாதிரியில்லை. பொறுத்து, பொறுத்து பார்த்து பொறுமையிழந்த நான் டகார்ன்னு எந்திச்சு பொண்ணு இருந்த ரூம்ல பூந்துட்டேன்.
எல்லோரும் அதிர்ச்சியடைந்தாலும் "சரி,சரி,மாப்பிள்ளை தனியா பேச ஆசைப்படறார் போல" ன்னு சொல்லிகிட்டு ஒரு பத்துபேரு அந்த ரூமுக்குள்ளே வந்துட்டாங்க. பொண்ணுகிட்ட நான் என்ன கேட்டாலும் பொண்ணுக்கு முன்னாடி அந்த பத்து பேரும் பதில் சொல்றதைப் பார்த்து கடுப்பான எங்க அக்கா, " வாங்க நாம எல்லாரும் வெளியே இருப்போம். அவங்க ரெண்டு பேரும் தனியா பேசட்டும்"ன்னு சொல்லி எல்லாரையும் வெளியே தள்ளிகிட்டு போனாங்க. "அப்பாடி"ன்னு பொண்ணு பக்கம் திரும்பி "என்ன படிச்சிருக்கீங்க"ன்னு கேள்வி கேட்டா, இப்போ கிச்சன்லயிருந்து பதில் வருது. "என்னடா பொண்ணு இங்கேயிருக்கு. சவுண்டு எங்கேயோ இருந்து வருதே,டப்பிங் வாய்ஸ் யார் கொடுக்கிறா"ன்னு பார்த்தா பொண்ணோட அம்மாவுக்கு காது ரொம்ப கூர்மையாம். அவங்கதான் சமையல்கட்டுல இருந்து டப்பிங் கொடுத்தது.
அந்த நேரம் பார்த்து எனது அலைபேசியில் நண்பர் ஒருவர் அழைக்க வீட்டினுள் சிக்னல் சரியாக இல்லாததால் வீட்டின் வெளியே வந்து பேசிக்கொண்டிருந்தேன். பேசி முடித்து நிமிர்ந்து பார்த்தால் அந்த தெருவே திரண்டு என்னை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. "சரியா போச்சு. நாம பொண்ணு பார்க்க வந்தா ஊரே வச்ச கண்ணு வாங்காம நம்மளை பார்த்துகிட்டு இருக்கே" என்று நினைத்தவாறு பொண்ணைத் தவிர அனைவரிடமும் பேசிவிட்டு விடைபெற்று கொண்டு வீட்டிற்கு திரும்பினோம்.
அதற்கடுத்த வாரம் இந்தோனேஷியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எனது அண்ணனும் குடும்பத்துடன் வர அவரிடமும் கலந்து பேசி பெண் பிடித்திருப்பதாக பெண் வீட்டாருக்கு தகவல் சொல்லிவிட்டோம். எனது அண்ணன் ஒரு மாத விடுமுறையிலே வந்திருந்ததால் அவர் செல்வதற்குள் எனது திருமணத்தை முடித்து விடலாம் என எங்கள் வீட்டில் முடிவு எடுக்கப்பட்டது. பெண் வீட்டிலும் தயாராக இருந்ததால் சரி என்று சொல்லிவிட்டனர். அதற்கடுத்த வாரம் வெற்றிலை கை மாறி கல்யாணநாளும் உறுதி செய்யப்பட்டது.
திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் இருவரும் பேசிக்கொள்ள எனது அண்ணன் மணப்பெண்ணிற்கு ஒரு மொபைல் போன் பரிசளித்தார். மணப்பெண் அப்போது முதுகலை இறுதியாண்டு படித்து கொண்டு இருந்தார். அப்போது தேர்வு நேரம். படிப்பிற்கு தொந்தரவு இருக்கக்கூடாது என்பதற்காக தேர்வு முடிந்ததும் பேசிக்கொள்ள முடிவு செய்தோம். தினமும் தேர்வு எழுதி முடித்து வெளியே வந்ததும் போன் செய்து ஓரிரு நிமிடம் பேசுவார்.
இறுதித்தேர்வு நாள் அன்று நண்பனின் திருமணம். தாலி கட்டி முடிந்ததும் சாப்பிடக்கூட செய்யாமல் மண்டபத்திலிருந்து அவசர அவசரமாக கிளம்பிய என்னை வழிமறித்த மணமகனின் தங்கைகள் “அண்ணியை பார்க்கத்தானே இவ்வளவு அவசரமாக செல்கிறீர்கள்” என்று கிண்டல் செய்யவும் எப்படி இந்த பெண்கள் அறிந்தார்கள் என எனக்கு மிக ஆச்சரியம்.
அவர் படித்த சதக் அப்பா கல்லூரி நெல்லை நகருக்கு வெளியே தனியாக இருந்ததால் அக்கல்லூரியில் படித்த பதிவுலக நண்பர் நிலவு நண்பனோடு பைக்கில் சென்று இறங்கினேன். வழக்கம் போல தேர்வு எழுதி முடித்ததும் வெளியே வந்ததும் அவர் எனக்கு போன் செய்ய நானும் பேசிக்கொண்டே எதிரே சென்று நின்றேன்.அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த அவர் தோழியருக்கு பின் ஒளிந்தார். அவரது தோழியர் ட்ரீட் கேட்க அனைவரையும் நெல்லையில் சிறந்த அரசன் ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்து சென்று அவர்கள் விருப்பபட்டதை வாங்கி கொடுத்தேன்.
அன்று தேர்வு இறுதி தினம் என்பதால் அவர்கள் எல்லோரும் செட் சுரிதார் எடுக்க டவுண் செல்ல ஏற்கனவே திட்டம் போட்டிருக்கின்றனர். என்னையும் அழைக்க நானும் உடன் சென்றேன். ஆரெம்கேவி சுடி டாட் காமில் நுழைந்து கலகலக்க வைத்தவர்கள் “சரி, எங்களுக்கு ட்ரீட் கொடுத்தீங்க, கல்யாணப் பொண்ணுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கப்போறீங்க” என்று உசுப்பேத்த இவரோ கூலாக இருப்பதிலேயே காஸ்ட்லியான சுடிதார் ஒன்றை எடுத்து என் பர்சை பழுக்க வைத்தார்.
அதன்பின் எந்த நேரமும் எஸ்.எம்.எஸ் தான். விடிய விடிய பேச்சுதான். கடிகளாலும், கவிதைகளாலும் நிறைந்தது மொபைல் இன்பாக்ஸ்.
கல்யாணத்திற்கு ஜவுளி எடுக்க இருவீட்டாரும் போயிருந்தபோது எல்லோரும் ஆரெம்கேவியில் பட்டுபுடவை எடுப்பதில் பிசியாயிருக்க நாங்கள் இருவரும் தனியாக போத்திஸில் புகுந்து ரிசப்சன் ட்ரெஸ் எடுத்து வந்தோம். முகூர்த்தப்பட்டாக என்னை மிகவும் கவர்ந்த ஒரு மிட்டாய் ரோஸ் கலர் பட்டுப்புடவையை நான் எடுக்கச்சொல்ல மணப்பெண் உள்பட அனைவரும் மறுத்தனர். எங்கள் திருமணத்திற்கு இரண்டு மாதத்திற்கு பின் நடந்த சூர்யா-ஜோதிகா திருமணத்தில் அதே நிறத்தில், டிசைனில் ஜோதிகா முகூர்த்தப்பட்டு கட்டியிருந்ததை பார்த்து என் மனைவி உள்பட அனைவரும் வியந்தனர்.
ஒருவழியாக எல்லோருக்கும் ஜவுளி எடுத்து முடித்து நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள நெல்லை சரவணபவாவில் சாப்பிட்டு விட்டு கிளம்ப இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. மறுநாள் அக்கா பசங்களுக்கு பள்ளி இருந்ததால் நாங்கள் வந்த காரில் அக்காவை களக்காடு அனுப்பிவிட்டு மணப்பெண் வீட்டில் வந்த காரில் எங்கள் வீட்டில் விட்டுவிட்டு செல்வதாக கூறியதால் நாங்கள் அனைவரும் ஒரே காரில் கலகலப்பாய் கதை பேசிக்கொண்டே அம்பை திரும்பினோம்.
பவர்கட்டால் இருளடைந்திருந்த எங்கள் ஊருக்குள் கார் நுழைந்து நாங்கள் இறங்கிகொண்டு மணமகள் வீட்டாரையும் வீட்டினுள் அழைக்க மணப்பெண் எங்கள் வீட்டில் கால் எடுத்து வைக்கும்பொழுது தடைப்பட்ட மின்சாரம் மீண்டும் வந்து வீடும், ஊரும் ஒளிவெள்ளத்தில் மிதந்தது. மிகவும் சந்தோஷமடைந்த என் பெற்றோர் என்னை துபாயில் இருந்து வரும்போது வாங்கி வந்திருந்த மோதிரத்தை அவருக்கு அணிவிக்க சொன்னனர். இரண்டு இதயங்கள் இணைந்திருப்பது போன்ற அந்த மோதிரத்தை என் மனைவி அதன்பின் கழட்டியதேயில்லை.
எனது வாழ்க்கையின் இன்றியமையாத முக்கிய நிகழ்வை 150வது பதிவாக எழுதியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.