Wednesday, July 29, 2009

இடையினம்.....


மெல்லினமான
அவள்
இடையினம்
கண்டு
வல்லினமானது
என்மனம்.

Monday, July 27, 2009

அ,ஆ,இ,ஈ,உ,ஊ.....


ரிவாள்

டு

ரத்தம்


யிர்

ருக்காக....

Sunday, July 26, 2009

மும்பை 26/11 கொடூர சம்பவ வழக்கில் குற்றவாளி கசாப் ஒப்புதல் வாக்குமூலம்




மும்பை 26/11 கொடூர சம்பவ வழக்கில் ஒரு வாக்குமூலம் - ஒரு மெகா திருப்பம் : குற்றவாளி கசாப் ஒப்புதல் பின்னணி


""முஜே குணாஹ் கபூல் ஹை...!'' - (என் குற்றத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்) மும்பையில் கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் சிக்கிய ஒரே பயங்கர வாதி அஜ்மல் கசாப், மும்பை விசேஷ கோர்ட்டில் 20ம் தேதி பிற்பகலில், விசாரணை ஆரம்பித்த சில நிமிடங்களில் சொன்ன வார்த்தைகள் இவை.



தாஜ், ட்ரைடென்ட் ஓட்டல்கள், சி.எஸ்.டி., ரயில் நிலையம் உட்பட சில இடங் களில் பாக்., பயங்கரவாதிகள் பத்து பேர் கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தினர். 180 பேர் கொல்லப்பட்ட இந்த பயங்கர சம்பவத்தில் உயிருடன் சிக்கிய ஒரே குற்றவாளி அஜ்மல் கசாப் தான். கசாப்பிடம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசேஷ கோர்ட்டில் விசாரணையும் ஆரம்பித்தது. நான்கு மாத விசாரணையில் கசாப், இதுவரை எதுவும் வாய் திறக்கவில்லை. கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டதும், கூண்டில் உட்கார்ந்து விடுவான்; எதுவும் வாய் திறந்து கூட பேச மாட்டான். அப்படியிருக்கும் கசாப், கடந்த 20ம் தேதி கோர்ட்டில், நீதிபதி முன்னிலையில் திடீரென நாலரை மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளான். பாகிஸ்தானில் லஷ்கர் முகாமில் பயங்கரவாத பயிற்சி பெற்றது முதல், கராச்சியில் இருந்து படகில் மும்பை வந்து, அங்கிருந்து சி.எஸ்.டி.,க்கு வந்து தாக்குதலை நடத்த ஆரம்பித் தது உட்பட எல்லாவற்றையும் விரிவாக சொல்லி விட்டான். இப்படி அவன் சொல்லி முடித்தபோது, அதிர்ச்சி அடைந்தது அவன் வக்கீல் தான். அவன் சார்பில் வாதாட நியமிக்கப்பட்ட வக்கீல் அப்பாஸ் கஸ்மியை மட்டுமல்ல, கோர்ட்டில் இருந்த போலீஸ் அதிகாரிகளையும் நிலைகுலைய வைத்தது.


படிப்பறிவில்லாதவன்; பாகிஸ்தானில் பரீத்கோட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன் கசாப். அவனிடம் விசாரணை செய்த போது, தகவல் களை சேகரிப்பதே பெரும் சிரமமாக இருந்தது. பல மறுப்புகள்; பல குழப்பமான பதில்கள்; பல தயக்கங்கள் என்று அவன் பேச்சுகளில் தெரிந்தது. அப்படியும் பொறுமையாக அவனிடம் தகவல்களை சேகரித்தனர் போலீசார்.


திடீர் மாற்றம் ஏன்? அப்படியிருக்கும் போது, கசாப்பிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம், வக்கீல்கள், விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் பற்றி பாகிஸ்தான் பல முரண்பட்ட தகவல்களை தந்து குழப்பிக் கொண்டிருக்கும் நிலையில், கசாப்பின் "வாக்குமூலம்' இன்னும் பல குழப்பங்களையும், திருப்பங்களையும் ஏற்படுத்துமோ என்று கேள்வி எழுகிறது.

பாகிஸ்தானில் இருந்து வந்த 10 பேர் கும்பலில், கசாப்பும், அபு இஸ்மாயில் ஆகிய இருவரும் சி.எஸ்.டி., நிலையத்தில் தாக்குதல் நடத்த ஆரம்பித்து, பக்கத்தில் காமா மருத்துவமனை மற்றும் சாலையில் ஏ.கே.47 துப்பாக்கியாலும், கையெறிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து, 61 பேரை கொன்றுள்ளனர். கசாப் இப்போது கோர்ட்டில் தந்துள்ள வாக்குமூலத்தில், நான் குற்றவாளி' என்பதை தவிர, சம்பவங்களை கோர்த்திருக்கும் போக்கை பார்த்தால், போலீஸ் விசாரணையில் தெரிவித் ததற் கும் இதற்கும் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது என்பதை போலீஸ் கண்டுபிடித்துள்ளது. இதனால் தான், கசாப்பின் வாக்குமூலத்தின் பின்னணி பற்றி பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.



என்னென்ன பல்டிகள்: கசாப்பிடம் மும்பை கிரைம் பிரிவு போலீசார் தான் விசாரணை நடத்தினர்; 11,280 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். நாலரை மணி நேரத்தில் நீதிபதி முன் கசாப் சொன்னதற்கும், இந்த குற்றப் பத்திரிகையில் அவன் சொன்னதாக கூறப்பட்டுள்ளதற்கும் முரண்பாடுகள் உள்ளன. தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இருபது விஷயங் களில் இப்படி முரண்பாடுகள் உள்ளதை துல்லியமாக மும்பை போலீசார் ஆதாரபூர்வமாக தயார் செய்துவிட்டனர். அதை கோர்ட்டில் அவர்கள் தரப்பில் வாதிடக்கூடும்.



முரண்பாடுகளில் சில:
* கான்ஸ்டபிள் துகாராம் ஓம்பலே கொலை: சி.எஸ். டி.,யில் தாக்குதல் நடத்தி விட்டு, ஸ்கோடா காரில் கசாப், இஸ்மாயின் தப்பிச் சென்ற போது, அந்த காரில் கான்ஸ்டபிள் ஓம்பலே எப்படியோ ஏறி, கசாப்பை கட்டிப்பிடித்துக் கொண்டு கத்தினார். அப்போது, கசாப், துப்பாக்கியால் ஐந்து முறை ஓம்பலேயை சுட்டான்; அதில் படுகாயமடைந்த அவர் இறந்து விட்டார் என்று கசாப், போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டான். ஆனால், "காரில் போன என் மீது லத்தியால் போலீசார் அடித்தனர். அப்போது, என் துப்பாக்கி நழுவி விட்டது. அதனால், ஓம்பலேயை நான் சுட முடியவில்லை.



* டாக்சியில் வெடிகுண்டு: விலே பார்லே பகுதியில், டாக்சியை பிடித்தனர் கசாப், இஸ்மாயில். முன் சீட்டில் அமர்ந்திருந்த இஸ்மாயில், டாக்சி டிரைவரிடம் பேச்சு கொடுத்து வந்தபோது, பின் சீட்டில் அமர்ந்திருந்த கசாப், காரில் குண்டு வைத்து விட்டான். இது தான் போலீஸ் விசாரணையில் சொன்னது. வாக்குமூலத்தில் கசாப் சொன்னது: "டாக்சியின் முன் சீட்டில் நான் உட்கார்ந்திருந் தேன்; இஸ்மாயில் தான் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தான். அவன் தான் காரில் வெடிகுண்டை வைத்தான்.



* சி.எஸ்.டி.,யில் குண்டு வீச்சு: ரயில் நிலையத்தில் பயணிகளை பயமுறுத்த கசாப், இஸ்மாயில் இருவருமே வெடிகுண்டுகளை வீசினர் என்பதே போலீஸ் குற்றப்பத்திரிகை தகவல். ஆனால், கசாப் வாக்குமூலத் தில் சொன்னதோ, "சி.எஸ்.டி., ரயில் நிலையத்தில் என் துப்பாக்கியில் தோட்டாக்கள் தீர்ந்து விட்டன. நான் கழிப்பறைக்கு சென்று தோட்டாக்களை நிரப்பிக் கொண்டிருந்தேன். இஸ்மாயில் தான் வெடிகுண்டுகளை வீசி பயணிகளை விரட்டினான்.



* படகு டிரைவர் கொலை: பாக்., பயங்கரவாதிகளை குஜராத்தை சேர்ந்த சோலங்கி என்பவர் தான், தன் படகில் மும்பைக்கு அழைத்து வந்துள் ளார். வாடகைக்கு அமர்த்தி வந்த படகு, மும்பை வந்ததும், சோலங்கியை கசாப்பும், இஸ்மாயிலும் கத்தியால் குத்திக் கொன்று விட்டனர். - இது தான் குற்றப்பத்திரிகை தகவல். "படகில் டிரைவர் அறையில் இருந்து ஷோயப்பும், இஸ்மாயிலும் கத்தியுடன் வந்தனர். கத்தியில் ரத்தக்கறை இருந்தது. டிரைவர் சோலங்கியை அவர்கள் கொன்றது அப்போது தான் தெரிந்தது. - இது கசாப்பின் வாக்குமூலம்.



* பாக்., பிரஜை தானா? "கசாப்பை தன் பிரஜையாக பாக்., ஏற்றுக்கொண்டு விட்டது என்று போலீசார் சொல்லியிருக்க வேண்டும். அதனால் தான், "என்னை பாக்., ஏற்றுக்கொண்டதால் தான், குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்' என்று கூறியிருக்கிறான். - கசாப் வக்கீல் கஸ்மி கூறியது இது. "கசாப்பை நாங்கள் பார்க்க வழியே இல்லை. அப்படியிருக் கும் போது, இப்படி சொல்லியிருக்க சாத்தியமில்லை' என்று போலீஸ் தரப்பு தகவல். இப்படி தாக்குதல் தொடர்பான பல சம்பவங்களில் கசாப் வாக்குமூலத்தில் மாற்றிச் சொல்லியிருக்கிறான்.



மர்ம முடிச்சுகள்: கசாப் வாக்குமூல பின்னணியில் பல மர்ம முடிச்சுகள் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. நான்கு மாதங்களாக விசாரணை நடந்துகொண்டிருக் கிறது. கோர்ட்டிற்கு வந்துபோகும் கசாப், ஒரு வார்த்தை கூட பேசமாட்டான்; தனக்கு சம்பந் தமே இல்லாமல் உட்கார்ந்திருப்பான். அப்படிப் பட்டவன், நாலரை மணி நேரம், கோர்வையாக சம்பவங்களை "தேவைப் பட்ட இடத்தில் தனக்கு சாதகமாக மாற்றி' சொல்ல எப்படி முடிந்தது என்பது முதல் மர்ம முடிச்சு.



தன் வாக்குமூலத்தில், பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் பயங்கரவாத தலைவர்களில், அறிமுகமே இல்லாதவர்களின் பெயர்களை சொன்ன அவன், லஷ்கர் தலைவன் ஹபீஸ் சயீது பெயரை சொல்லவே இல்லை. பாக்., லஷ்கர் தலைவர்கள் லக்வி, அபு ஹம்சா, அபு கானா, அபு காபா என்றெல்லாம் சொன்ன அவன், சயீது பாய் என்று கூறியுள்ளான். இதில் இருந்தே, மும்பை தாக்குதலுக்கு முக்கிய காரணமான சதிகார தலைவன் ஹபீஸ் சயீது பெயரை திட்டமிட்டு மறைத்துள்ளான். இது இரண்டாவது மர்ம முடிச்சு.



சிறையில் கசாப்புக்கு "டிவி' பார்க்கும் வசதி இல்லை; பத்திரிகைகளும் படிக்க முடியாது. மும்பை தாக்குதலுக்கு தொடர்பே இல்லாதது போல பேசி வந்த பாக்., சமீபத் தில், "மும்பை தாக்குதலுக்கு பாக்., பயங்கரவாதிகள் தான் காரணம்' என்று ஒப்புக் கொண்டது. இதற்கு மறுநாளே, கசாப் வாக்குமூலம் தந்துள்ளான். இது மூன்றாவது முடிச்சு.



சில மாதங்களுக்கு முன், சிறையில் கசாப்பை மகாராஷ் டிர அமைச்சர் ஒருவர் பார்த் துள்ளார். அமைச்சர் என்று சொல்லிக்கொள்ளாமல் பார்த்த அவர்,"பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை உன்னை; உன் பெற்றோரும் கைகழுவி விட்டனர். விசாரணையை முடித்துக்கொள்ள, நீயே குற்றத்தை ஒப்புக்கொள்ளலாமே' என்று கூறியுள்ளார். அவர் அப்படி சொன்னாரா? ஏன் சொன்னார் என்பது நான்காவது முடிச்சு.



குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டதற்கும், வாக்குமூலத்தில் சொன்னதற்கும் பெரும் முரண்பாடுகள் உள்ளன. கசாப் போன்ற படிப்பறியாத குற்றவாளியால் இப்படி கோர்வையாக மாற்றிச்சொல்ல முடியாது. இது ஐந்தாவது முடிச்சு.
"கசாப் வாக்குமூலம் பற்றி எனக்கு தெரியவே தெரியாது; அவனுக்கு இனி வாதாடுவதில் பலனில்லை. என்னை அவன் நம்பிக்கையுடன் ஏற்கவில்லை என்று தோன்றுகிறது' என்று அவன் வக்கீல் கஸ்மி கூறியது தான் இவ்வளவுக்கும் மேல் வியப்பான விஷயம். இதுவும் ஒரு மர்ம முடிச்சு.


இவ்வளவு முடிச்சுகளும் அவிழத்தான் போகின்றன; அப்போது, உண்மைகள் வெளிவரும் என்று மும்பை கிரைம் போலீஸ் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.



வாக்குமூலமே அல்ல: கசாப் வாக்குமூலம் அளித்தது தொடர்பாக சட்ட நிபுணர்கள் தெளிவான கருத்துக்களை கூறியுள்ளனர். "குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு, கோர்ட்டில் வாக்குமூலம் அளிப்பது வழக்கம் தான். குற்றத்தண்டனை சட்டத் தின் 313வது பிரிவின் படி, ஒரு குற்றவாளி, கோர்ட்டில் தன் இறுதி வாக்குமூலத்தை அளிக்கலாம். ஆனால், அதை ஏற்பதும், ஏற்காமல் தொடர்ந்து விசாரணை நடத்துவதும் கோர்ட் டின் அதிகாரத்துக்கு உட்பட்டது' என்று தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், விசேஷ கோர்ட் நீதிபதி தகலியானி, "ஒப்புதல் வாக்குமூலம் அல்ல இது. தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் குற்றவாளி. இது கோர்ட்டில் பதிவு செய்யப் பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடக்கும்' என்று தெரிவித்தார். போலீஸ் தரப்பில் இன்னும் 60 சாட்சிகளை விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை முடிய இன்னும் பல மாதங்கள் ஆகலாம். அதன் பின் தான், கசாப்பின் வாக்குமூலம் எடுத்துக் கொள்ளப்பட்டது தெரியவரும். போலீசை பொறுத்தவரை, "கசாப் சொன்னதில் முரண்பாடுகள் இருந்தாலும், பாக்., தொடர்பு குறித்து ஒப்புக் கொண்டுள்ள விஷயங்கள் எங்கள் வாதத்துக்கு பெரிதும் உதவும். அதனால், நாங்கள் மேற்கொண்ட முயற்சியின் படி, திட்டமிட்ட பாதையில் வழக்கு விசாரணை செல்வதாகவே நினைக்கிறோம்' என்று கிரைம் போலீஸ் தலைவர் ராகேஷ் மரியா கூறினார்.



கடைசி வார்த்தைகள்: வாக்குமூலத்தில் கடைசியாக கசாப் சொன்னது: "வழக்கு விசாரணையை முடித்துக் கொள்ளுங் கள்; எனக்கு தண்டனை தாருங்கள். நான் என் குற்றத்தை முன்னதாகவே ஒப்புக்கொண்டிருப்பேன்; ஆனால், பாகிஸ்தான் என்னை தன் பிரஜையாக ஏற்கவில்லை. அதனால், நான் ஒப்புதல் வாக்குமூலம் தரவில்லை. இப்போது பாகிஸ்தான் என்னை தன் குடிமகனாக ஏற்றுக்கொண்டு விட்டது. அதனால், வாக்குமூலம் தந்தேன். எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்காதீர்கள். என் வாக்குமூலத்தை நீங்கள் ஏற்க வேண்டும்; எனக்கு தண்டனை தர வேண்டும்!' இப்படி "படிப்பறியா' கசாப் கூறிய வார்த்தைகளில் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன என்பது தான் சட்ட நிபுணர்கள் கருத்து. மிகுந்த பரிசீலனைக்கு பின் கோர்ட் விசாரணை தொடர்ந்துள்ளது.



லஷ்கர் தலைவன் சயீதை தப்ப வைக்கவா? லஷ்கர் அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீது. அவன் தான், மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி, பத்து பேரை அமர்த்தி அனுப்பியது என்பது ஏற்கனவே பல வகையிலும் உறுதியான விஷயம். கடந்த அக்டோபர் மாதம் தான் முதன் முதலில் கசாப், மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தான். அதில்,"லஷ்கர் தலைவன் ஹபீஸ் சயீது தான் மும்பை தாக்குதல் சதிக்கு முக்கிய காரணமானவன்' என்று கூறியுள்ளான். ஆனால், இப்போது விசேஷ கோர்ட்டில் நீதிபதி தகலியானி முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தில், "லஷ்கர் கமாண்டர் சகி உர் ரஹ்மான் லக்வி தான் , மும்பை தாக்குதல் தொடர்பாக சதி திட்டம் தீட்டித் தந்தான்' என்று கூறியுள்ளான். சதி திட்டம் தீட்டி செயல்படுத்தியவர்கள் பெயர்களை சொல்லி வரும் போது, சயீது பாய்' என்று ஒரு பெயரை சொல்லியுள்ளான். இந்த சயீது தான், ஹபீஸ் சயீது என்று தெரிந்தாலும், கோர்ட்டில் சட்டப்படி அதை நிரூபிக்க முடியாது. இதனால், திட்டமிட்டு சயீதை இந்த சதியில் இருந்து விடுவித்துள்ளதாக தெரிகிறது என்பது வக்கீல்களின் கருத்து. மும்பை தாக்குதலுக்கு காரணமான "மாஸ்டர் மைண்ட்' ஹபீஸ் சயீது தான் என்று தெரிந்ததும் தான், பாகிஸ்தான் போலீஸ், அவன் பெயரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தது. அவனை வீட்டுக்காவலில் வைத்திருந்தது. சமீபத்தில் தான் சயீதை விடுவித்தது. இந்த நிலையில் தான் கசாப் வாக்குமூலம் வெளியாகி உள்ளது.



சட்டசபை தேர்தலுக்கு முன் தீர்ப்பு வந்தால்...: மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ளது. அதற்குள் கசாப் வழக்கில் தீர்ப்பு பெற்று விட வேண்டும் என்பதில், மாநில அரசு தீவிரமாக உள்ளதாக தெரிகிறது. கடந்த 1993ம் ஆண்டில் தான் மும்பையில், முதன் முதலாக பயங்கர தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அந்த பயங்கர சதியில் முக்கிய பங்கு , கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிமுக்கு உண்டு. வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டும், அவன் பாகிஸ்தானில் இருப்பதற்கான ஆதாரங்களை தந்தும், அவனை இந்தியாவுக்கு கொண்டு வர முடியவில்லை. மேலும், விசாரணை 13 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட பின் தான் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்படி கசாப் வழக்கும் இழுத்தடிக்கப்பட கூடாது என்பதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது. "அக்டோபருக்குள் வழக்கு விசாரணையை முடித்துவிட வேண்டும் என்று மாநில அரசு நினைப்பதில் தவறில்லை. இதற்கேற்ப, கசாப்பின் வாக்குமூலம் வந்துள்ளது. இதனால், விசாரணையை அதிக நாள் நடத்தாமல் முடிக்க வேண்டும் என்று எண்ணுவது சரி தானே' என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார். "குற்றவாளிகள் எல்லாரும் தூக்கிலிடப்பட வேண்டும்; அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும்' என்று முதல்வர் அசோக் சவான் கூறியுள்ளார்.



சதியில் தொடர்பு யார் யாருக்கு? கசாப் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள சில பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள்; சிலர், தலைமறைவாக உள்ளவர்கள்.
* லக்வி: மும்பை தாக்குதல் சதிக்கு மூல காரணம் இவன் தான். லஷ்கர் கமாண்டர். இப்போது பாக்., சிறையில் இருக்கிறான்.
* மசார் இக்பால்: மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதி. இவனும் சிறையில் உள்ளான்.
* முகமது அம்ஜத் கான்: லஷ்கர் அமைப்பாளர். கராச்சியில் ஏற்பாடுகளை செய்து தந்தவன். தலைமறைவாக உள்ளான்.
* அப்துல் ரகுமான்: படகில் வந்தவன்; இவனும் இன்னும் பிடிபடவில்லை. பாக்.,கில் தஞ்சம்.
* முகமது முஷ்டாக்: படகில் வந்தவன்; இன்னும் சிக்கவில்லை.
* முகமது உஸ்மான்: சதி திட்டத்தில் பங்கேற்றவன்.
* நிதி, புகலிடம் ஏற்பாடு செய்த அமின் சாதிக், கம்ப்யூட்டர் நிபுணர் அப்துல் வஜித், படகுகளில் ஆட்களை அனுப்பிய ஷாகித் இஸ்மாயில் கான் ஆகியோர் பாக்.,கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



வாக்குமூலத்துக்கு இரண்டு உள்நோக்கம்? கசாப் வாக்குமூலம் அளிக்க இரு முக்கிய காரணங்களை அரசு தரப்பு வக்கீல் உஜ்வல் நிகாம் சந்தேகிக்கிறார். ஒன்று; முக்கிய குற்றங்களில் இருந்து தன்னை திட்டமிட்டு விடுவித்துக் கொண்டு, அதன் மூலம் தண்டனை குறைவாக கிடைக்கலாம் என்று எண்ணுவது; இரண்டாவது, பாக்., சதிகாரர்களை திட்டமிட்டு விடுவிக்க முயற்சிப்பது. இதனால் தான் அவர் கோர்ட்டில் வாதிடுகையில், "கசாப் வாக்குமூலத்தை ஏற்கக் கூடாது; தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும்' என்று கோரினார். கசாப்பின் வக்கீல் கஸ்மி வாதாடும் போது,"கசாப் வாக்குமூலம் எனக்கே அதிர்ச்சியாக உள்ளது. போலீசாரின் அச்சுறுத்தலுக்கு பயந்து அப்படி செய்திருக்கலாம்' என்று கூறினார்.

இது தொடர்பாக கசாப்பிடம் நீதிபதி தகலியானி, "இது உண்மையா, அச்சுறுத்தலின் பேரில் தான் வாக்குமூலம் தந்தீர்களா என்று கேட்க,"அப்படி எதுவும் இல்லை. மனப்பூர்வமாக தான் இதை அளித்தேன்' என்று தெரிவித்தான்.

Saturday, July 25, 2009

இனிது


குழலினிது
யாழினிது
என்பார்

காதலிதம்
கனிமொழி
கேளாதவர்

Tuesday, July 21, 2009

இன்று ஆடி அமாவாசை....


பாபநாசம் மலைமேல் அமைந்துள்ள எங்கள் சிங்கம்பட்டி ஜமீனை சேர்ந்த சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடிஅமாவாசை மிகவும் விசேஷமான திருவிழா.

பல லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு மலைமேல் தற்காலிக குடில் அமைத்து குறைந்தது ஒரு வாரமாவது தங்கி அய்யனை தரிசித்து மகிழ்வது பலஆண்டுகளாக பழக்கத்தில் உள்ள ஒன்று.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி இந்த திருவிழாவின் போது மட்டும் மக்களால் நிறைந்திருக்கும்.மாவட்ட நிர்வாகமும்,வனத்துறை மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்திருப்பார்கள். மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துக்கள் மலையின் மேலும்,கீழும் வந்த வண்ணம் இருக்கும்.


இது குறித்த சுட்டி


விழாவின் முக்கிய அம்சமாக எங்கள் சிங்கம்பட்டி ஜமீன்தார் இரவில் பாரம்பரிய ராஜஉடையில் சிம்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களை சந்திப்பார்.

சென்ற வருடம் இருசக்கர வாகனத்திலும்,அதற்கு முந்தைய வருடம் சுட்ட செங்கல்களால் அமைக்கப்பட்ட பழைய ஜமீன் காட்டு பாதையில் நடந்து சென்றும் அய்யனை தரிசித்தேன்.இந்த வருடம் முடியவில்லை. அடுத்த வருடமாவது ஆடிஅமாவசையன்று தரிசிக்க அய்யன் அருள் புரியவேண்டும்.


Monday, July 20, 2009

ஊருக்கு போயிட்டு வந்தாச்சு......



எல்லோரும் நல்ல சுகம்.

முடிந்த வரை முக்கியமான வேலைகளை எல்லாம் முடித்தாயிற்று.

பல நண்பர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக அலைபேசியில் பேசமட்டும் தான் முடிந்தது.

சில பதிவர்களிடமும் அலைபேசியில் அளவளாவினேன்.

நாமக்கல் சிபி எழுத்தில் கலாய்ப்பு அதிகமிருந்தாலும் பேசும்போது குரலில் ஒரு கூச்சம் தெரிந்தது.நேரில் சந்தித்து நல்லா 'பழகினால்' கூச்சம் போய்விடும் என நினைத்து கொண்டேன்.

நண்பர் பாலபாரதி அதே ப(லே)ழைய பாசத்துடன் பேசினார்.கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்டவுடன் கடுப்பாகி பழையபதிவுகளை போய் பாரு என கூறிவிட்டார்.வலையுலகில் ஆயிரம் நாள் காணாமல் போனதில் பல நல்ல விஷயங்கள் நடந்தது தெரியாமல் போய்விட்டது.

துளசியம்மா குரலில் எழுத்தில் உள்ள குறும்பு அப்படியே இருந்தது. சென்னையில் எங்கே என கேட்டார்.நெல்லை என்றதும் எந்த ஊர் என விசாரித்து அறிந்து கொண்டார்.

எங்கள் திருநெல்வேலி பதிவர்களில் ,சிறந்த கவிஞரும், எழுத்தாளருமான திரு.கலாபிரியா அவர்களது குரல் மிகவும் மென்மையாக இருந்தது.அவரது பதிவுகளில் இயல்பான எழுத்தில் திருநெல்வேலி நகர தெருக்கள்,அந்தகால வாழ்க்கை முறை மற்றும் திரைப்படங்கள், திரையரங்குகள் பற்றி மிகவும் அருமையாக விவரித்திருப்பார்.அவர் வசிப்பது அம்பாசமுத்திரம் அருகேயுள்ள இடைகால் என நினைத்து நேரில் சென்று சந்திக்க எண்ணியிருந்தேன். ஆனால் அவர் இருப்பது தென்காசி கடையநல்லூர் அருகேயுள்ள இடைகால் என்பதால் அடுத்த விடுமுறையில் சந்திப்பதாக கூறினேன்.எங்கள் ஊருக்கு பல ஆண்டுகளுக்கு முன் வந்த நியாபகம் உள்ளதாக கூறினார். 90களில் சன் டிவி வரும் முன் சிற்றூர் திரையரங்குகளில் அமரர் எம்.ஜி.யார் நடித்த திரைப்படங்களே அனேக மக்கள் விருப்பமாக இருந்த்து எனவும்,நானும் சிறுவயதில் எம்.ஜி.யாரின் தீவிர ரசிகன் எனவும் கூறினேன்.அவரது பதிவுகளை படிக்கும் போது ஊரில் இருப்பது போன்ற உணர்வு தோன்றுவதையும் , பணிக்காக குடும்பத்தை பிரிந்து வா(டு)ழும் என் போன்றோருக்காக அவரது அனுபவங்களை நிறைய பதிவுகளாக எழுத வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.

அடுத்த விடுமுறையிலாவது அனைத்து நண்பர்களையும் நேரில் சந்திக்க ஆண்டவன் அருள் புரியவேண்டும்

Thursday, July 02, 2009

ஊருக்கு போறேன்........



ஆயிரம் நாள் காணாம போன கணக்கோட கூட ஒரு அரைமாசம் சேர்த்துக்கங்க.......


விடுமுறை விதிப்படி இரண்டு மாதம் முன்னே போகவேண்டியது, பணிப்பளுவின் காரணமாக இப்போதுதான் கிளம்ப முடிந்தது.

ஊருக்கு போனால் ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நேரமிருந்தால் புதியபதிவுகள் இடுகிறேன். இல்லையென்றால் நம்ம சபை பக்கம் வர்றவங்க பழைய பதிவுகளை படித்து கருத்து சொல்லிட்டு போங்க.....

Wednesday, July 01, 2009

அறியாதவள்


நானில்லாத வேளைகளில்
எங்கள் வீட்டின்
எல்லா அறைகளிலும்
எனது குரல்
ஒலிப்பது
போலவே இருக்கிறது
என கூறினாள்.


எனது இதயஅறையில்
எப்போதும்
அவள் குரல்
ஒலித்து கொண்டிருப்பதை
அறியாதவள்.