Saturday, December 26, 2009

’வலையுலக சுஜாதா’ - திரு.ஜவர்லால் அவர்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு மத்தியில் தமிழ்மணத்தை நுகர்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு வலைப்பூவின் வாசம் என்னை மிகவும் கவர்ந்தது. படித்ததும் அதிர்ந்தேன். அந்த வலைப்பதிவரது புகைப்படத்தை பார்த்தவுடன் மீண்டும் ஆனந்த அதிர்ச்சி. அவரா, அவர்தானா, ஒரு வேளை அவரது குடும்ப உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் யாராவது அவரது பழைய படைப்புகளை வலையில் ஏற்றிக் கொண்டு இருக்கிறார்களோ என்றொரு குழப்பம்.அந்த வலைப்பதிவின் பல பதிவுகளையும் படித்தபின் தான் தெளிந்தேன்.

திரு.ஜவர்லால் அவர்களது ‘இதயம் பேத்துகிறது’ வலைப்பூ தான் அது.ஆம் அப்படியே அந்த காலத்தில் பிரபல எழுத்தாளர் திரு.சுஜாதா எழுதிய படைப்புகளை படிப்பது போலவே குறும்பும், சுவாரசிய நடையும் கொண்ட வசீகரீக்கும் எழுத்துக்களால் வசியப்படுத்தினார். புகைப்படத்திலும் அச்சு அசலாக திரு.சுஜாதா போன்றே முகத்தோற்றம் என்பதால் தான் ஆரம்பத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியும்,குழப்பமும். தற்செயலாக படிக்க நேர்ந்த அவரது வலைப்பூவை அன்றுமுதல் தவறாமல் தொடர்ந்து படித்தும், பின்னூட்டம் இட்டும் வருகிறேன்.

பணிப்பளுவால் உடல் அலுப்பாகி, மனம் களைப்படையும் போதெல்லாம் நண்பர்கள் பதிவுகள் படித்து மனம் உற்சாகமாகி சுறுசுறுப்படைவது எனது பழக்கம். நான் ஈடுபட்டிருக்கும் திட்டப்பணிகள் கடந்த மூன்று மாதகாலமாக இரவு பகல் பாராமல் தீவிரமாக நடப்பதால் வலைப்பக்கம் ஒதுங்கவும், பதிவுகளை படிக்கவும் முடியவில்லை. படித்தாலும் பின்னூட்டம் இட நேரமில்லை.

பல நாள் இடைவெளிக்குப் பின் திரு.ஜவர்லால் அவர்களின் வலைப்பூவிற்கு சென்று அவரது ஜப்பான் பயண தொடர்பதிவைப் படித்தேன். முந்தைய பாகங்கள் மற்றும் படிக்காத பல பதிவுகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நான் எழுத ஆரம்பித்த உல்லாச பயணப்பதிவு நான்கு பதிவிற்கு மேல நகரமாட்டேன் என அடம்பிடிக்கிறது. அன்னாரோ இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்ற ஒரு அலுவல் சார்ந்த பயணத்தை அவருக்கே உரிய நகைச்சுவை நடையில் மிகவும் சிறப்பாக அழகான புகைப்படங்கள் மற்றும் தகவல்கKளுடன் சுவாரசியமாக பதிவிட்டு வருகிறார்.நான் பணிபுரிவதும் ஜப்பான் நிறுவனம் என்பதால் ஜப்பானிய மொழி சிறிது தெரியும் என்பதால் அவரை கலாய்த்து பின்னூட்டம் இட்டேன். அவரும் அதனை பெருந்தன்மையாக ஏற்று பதில் சொல்லி இருந்தார்.

வலையுலகம் மூலம் பழகிய பல நண்பர்களுடன் சாட்டிங் தொடர்பு உள்ளது. பெரும்பாலும் எல்லோரிடமும் பேசியும் இருக்கிறேன். சரி சாரிடமும் பேசி விடலாம் என்று முடிவு செய்து அவர் அலைபேசி எண் வேண்டி கடந்த வியாழன் தனிமடல் இட்டேன். தொடர்பு எண்ணை தெரியப்படுத்தி உடன் பதில் அனுப்பி இருந்தார். ஞாயிறு காலை இந்திய நேரம் காலை பத்து மணிக்கு பேசுவதாக பதில் அனுப்பிவிட்டு இரண்டு நாள்களாக மிகுந்த குறுகுறுப்போடு இருந்தேன். அவசர பயணம் கிளம்பியதால் அவரோ என் பதில் மடல் பார்க்கவில்லை என்பது எனக்கு தெரியாது.

ஞாயிறு காலை நான் அழைக்கும்போது பயணம் முடித்து திரும்பி கொண்டு இருந்தார். “யார்“ என்றவரிடம், “உங்கள் ரசிகன் ராஜா” என்றேன். தனியாக சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையில் கார் ஓட்டி சென்று கொண்டிருந்தவர் சாலை ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு கால் மணி நேரம் பேசினார். பல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டோம். அவரது பல பதிவுகள் குறித்த தகவல்களை புள்ளி விவரமாக கூறியதில் மிக்க மகிழ்ச்சி அடைந்து உற்சாகமாகப் பேசினார். தொடர்ந்து பல சுவாரசிய பகிர்வுகளை பதிவுகளாக இட வேண்டும் என வேண்டி விடைபெறும் பொழுது அவருக்கு ஒரு விருது வழங்க விருப்பம் உள்ளதாக தெரிவித்தேன். “அப்படியா, என்ன சொல்லுங்கள்” என்றார். ‘வலையுலக சுஜாதா’ என்று என் மனமகிழ்வை விருதாக வழங்கி சிறப்பித்தேன்.

திரு.சுஜாதா அவர்களுக்கும்,திரு.ஜவர்லால் அவர்களுக்கும் நான் கண்ட ஒற்றுமைகள். இருவருமே பொறியியல் துறை சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் இருந்து பணி நிமித்தமாக பெங்களூரு சென்றவர்கள் என்பதால் பொருத்தமான விருது வழங்கியதாகவே நினைக்கிறேன்.

எங்களது அலைபேசி உரையாடல் குறித்த திரு.ஜவர்லால் அவர்கள் பதிவின் சுட்டி.

கடந்த ஜூலை 10ம் தேதி முதல் பதிவிட ஆரம்பித்த அவரது வலைப்பூ மிககுறுகிய காலத்தில் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டு சாதனை படைத்து உள்ளது. ஆம், 165 நாள்களுக்குள் 1,00,000 பார்வை என்பது மிகப்பெரும் சாதனை. சராசரியாக நாளொன்றுக்கு 600 வாசகர்கள் அவரது படைப்புகளை படித்து மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

பதிவிட வந்த முதல் மாதத்திலே சர்வதேச சிறந்த புதுமுக பதிவர் விருது பெற்றதும் , 10,000 பார்வைகளும் அவரது பல்சுவை பதிவுகளுக்கு நல்ல சான்றுகள்.

எழுத்து மட்டுமல்லாமல் அஷ்டாவதானி என்று கூறினாலும் பொருந்தும் என்பதற்கு அவரது இசையறிவும், ஆர்வமும், குரல் வளமும், புகைப்பட மிக்ஸிங்குகளும் நல்ல சாட்சிகள். அவரே சொந்தமாக இசையமைத்து , இனிமையாக சொந்தக்குரலில் பாடியுள்ள பாரதியாரின் பாயும் ஒலி நீ எனக்கு பாடல் மயக்கம் தரும் அமுதசுவை. ஒளி,ஒலியும் மிக துல்லியம்.
தாய்மொழி பேச,படிக்க,எழுத வழியில்லாத அயல்நாடுகளில் வாழு(டு)ம் என் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அன்னாரைப் போன்றோருக்கு எங்களால் முடிந்த கைம்மாறு இது போன்ற பாராட்டுக்கள் தான்.
எனதிந்த பாராட்டு பதிவினைப் படிக்கும் ஒத்த ரசனையுள்ளவர்கள் அன்பு நண்பர்களாகிய நீங்களும் அன்னாரது பல்சுவை பதிவுகளையும் படித்து பெருமகிழ்ச்சி அடையவேண்டும் என்பதே என் ஆசை.

அன்னாரைப் போன்று என்னை பெரிதும் கவர்ந்த பதிவர்களை பற்றி தொடர்ந்து எழுதலாம் எனவும் உள்ளேன்.

9 comments:

Jawahar said...

அன்புக்கு நன்றி ராஜா... உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவனாக பணியைத் தொடர்வேன்.

http://kgjawarlal.wordpress.com

அ. நம்பி said...

ஜவகர் பாராட்டுக்கு உரியவர் என்பதில் ஐயமின்று.

சிறப்புக் கண்ட இடத்துப் பாராட்டுதல் நல்ல பண்பு; அரிய பண்பு.

இவ்வாறு பாராட்டுதற்குப் பணிவும் விரிந்த உள்ளமும் வேண்டும். இவை இரண்டும் உங்களிடம் உள்ளன.

ஜவகரைப் பாராட்டிய துபாய் ராஜாவுக்குப் பாராட்டுகள்.

வாழ்க; வளர்க.

Thamira said...

இதயம் பேத்துகிறது' தலைப்பே சுவாரசியம். ஜவர்லாலுக்கு வாழ்த்துகள். உங்களுக்கு நன்றிகள்.!

சென்ஷி said...

நல்ல பகிர்வு ராஜா..

பிரபாகர் said...

ராஜா,

இவரை நான் படித்து வியந்திருக்கிறேன்...

தொடர்கிறேன். பகிர்தலுக்கு நன்றி...

பிரபாகர்.

Admin said...

வாழ்த்த்துக்கள். நல்ல பகிர்வு...

M.G.ரவிக்குமார்™..., said...

நானும் நம் வலையுலக சுஜாதா அவர்களின் வாசகன் தான்!......உங்களின் இந்தப் பதிவைப் படித்ததும் மிக்க மகிழ்ந்தேன்!....நன்றி ராஜா!....இது போன்ற சக பதிவர்களின் பாராட்டுக்கள் அவரை மேலும் உற்சாகப்படுத்தும்......அவர் மென்மேலும் பல நல்ல பதிவுகளை வழங்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

Raju said...

சூப்பர் பதிவு..!

கோவி.கண்ணன் said...

ஜவகருக்கு வாழ்த்துகள் !

அவரு எங்க ஊரு அண்ணாச்சி !