Thursday, September 10, 2015

காலை உடைத்த காஞ்சனா - பாகம் 12


பாகம் 12 ; வரும் வினையை வாசலில் நிறுத்த முடியுமா….


முதல் பதினொன்று பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.





பாகம் - காணாமல் போன காஞ்சனா….










பாகம் 9 விருந்தும் விடுமுறை சுற்றுலாக்களும்….





பாகம் 12 


மறுநாள் சனியன்று வேலைக்கு செல்ல வேண்டாம் என்பதால் காலை மெதுவாக எழுந்து குளித்து காலை சிற்றுண்டி முடித்து விட்டு அருகிலிருந்த ஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்று வந்தேன். பின் இரவு வேலை முடித்து வந்த நண்பர்களுடன் சென்று இரவு விருந்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தோம். மதியமே சமையல்காரர் வந்துவிட அவருடன் சமையல் வேலைகளில் பரபரப்பானோம். மாலை வேலை முடித்து வந்த மணியும், ஜானும் சொல்லியிருந்த ஆராய்ச்சியக மற்றும் உள்ளூர் நண்பர்கள் பெரும்பாலானோர் வர இருப்பதாக கூறினார்கள்.

இரவு வேலைக்கு செல்பவர்கள் வழக்கமாக தங்குமில்லத்திலிருந்து மாலை ஐந்தரை மணிக்கு கிளம்பி சென்று விடுவார்கள். பின் பஜார் சென்று ஷேர் ஆட்டோவிற்கு காத்திருந்து ஏறிச் சென்று ஆராய்ச்சியக வெளிவாசலில் இறங்கி வெகுதூரம் நடந்து பணி இடத்தை அடைவதற்கு எப்படியும் இருட்டி ஏழு மணி ஆகி விடும். அவர்களுக்கான இரவு உணவை விருந்து நடைபெறும் தினங்களில் உணவு தயாரானவுடன் யாராவது இருவர் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு கொண்டு போய் கொடுத்து வருவது வழக்கம். 


விருந்திற்கு தயாராகும் அனைத்து அயிட்டங்களும் மற்றும் கூல்டிரிங்ஸ், இனிப்புகள், பழங்கள் போன்றவையும் இரவு வேலையில் இருப்பவர்களுக்கு வருவதில்லை என்பது எப்போதுமே கூறப்படும் குறை. அன்று இரவு வேலைக்குச் செல்ல வேண்டியது என்னுடன் தங்கியிருந்த பாண்டேவும், தேசிங்கும் ஆகும். நான் விருந்து கொடுப்பதாக எல்லோரிடமும் சொன்ன போதே  ‘உங்கள் விருந்தாவது உருப்படியாக எங்களுக்கு வந்து சேருகிறதா பார்ப்போம் என இருவரும் ஆதங்கப்பட, ‘நானே முன்னின்று ஏற்பாடு செய்து அனுப்புகிறேன்’ என்று உறுதி கூறியிருந்தேன்.


ஏழு மணி அளவில் எல்லா உணவுகளும் தயாராகி விட்டன. எட்டு மணிக்கு மேல்தான் விருந்து ஆரம்பிக்க இருந்ததால் ஜானும், சின்னக்காந்தியும் உள்ளூர் நண்பர் ஒருவரின் ஸ்கூட்டரில் ஆராய்ச்சியகம் சென்று இரவு வேலையில் இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து வருவதாக கிளம்பினார்கள். விருந்திற்கு தேவையான  கூல்டிரிங்ஸ், இனிப்புகள், பழங்கள் வாங்கச் சற்று நேரம் முன் தான் மணியும், இன்னும் இரு நண்பர்களும் சென்றிருந்தார்கள். அவர்கள் வர நேரமானால் விருந்துக்கு வருபவர்களை வரவேற்றுப் பேசி இருக்கச் சொல்லுமாறு அறையில் இருப்பவர்களிடம் சொல்லி விட்டு நானும் பஜார் வருவதாக கூறி ஜான், சின்னக்காந்தியுடன் சென்றேன்.


 எங்கள் துறை ஆள்களோடு சேர்த்து பணியில் இருக்கும் செக்யூரிட்டிகளுக்குமாக சேர்த்து கூல்டிரிங்ஸ், இனிப்புகள், பழங்கள் வாங்கிய பின் பார்த்தால்  உணவுப் பொருள்களோடு இப்போது வாங்கியவையுமாக சேர்ந்து பைகள் அதிகமாகி விட்டன. ஏற்கனவே சின்னக் காந்தியின் இரண்டு கையிலும் குழம்பு, கறி வகைகள் கொண்ட பாத்திரப் பைகள் இருந்ததால் பரோட்டா, பிரியாணி, சாதம் இருந்த பாத்திரங்கள் பெரிய பைகளை ஸ்கூட்டரின் முன் பகுதியில் ஓட்டுபவரின் காலுக்கு கீழே இருந்த இடத்தில் ஜான் வைத்திருந்தான். தற்போது வாங்கிய பத்து இரண்டு லிட்டர் கூல்டிரிங்ஸ் பாட்டில்கள் ஒரு பெரிய பையிலும், இனிப்புகள், பழங்கள் இன்னொரு பெரியபையிலுமாக வண்டியில் வைக்க இடம் இல்லாமல் என் கையிலே இருந்தன. சரி அவர்களுடனே ஆராய்ச்சியகம் சென்று பகலில் பார்க்க முடியாத செக்யூரிட்டிகளையும், எங்கள் துறை ஆள்களிடமும் ‘போய் வருகிறேன்’ என்று சொல்லி விட்டு அப்படியே உணவுப் பதார்த்தங்களையும் கொடுத்து விட்டு வந்து விடலாம் என முடிவு செய்தேன்.


ஜான் ஸ்கூட்டரை ஓட்ட, பேலன்சிங்கிற்காக நான் நடுவிலும், சின்னக் காந்தி பின்னாலும் அட்ஜஸ்ட் செய்து உட்கார்ந்து கொண்டு பைகளையும் ஆடாமல், அசையாமல் இறுக்கமாக கைகளில் பிடித்துக் கொண்டு புறப்பட்டோம். ஊரைத் தாண்டிய பின் வீடுகளும் நெருக்கமாக இல்லை. ஆள்நடமாட்டம் அறவே குறைந்து விட்டது. குண்டும், குழியுமாக மோசமாக இருந்த ரோட்டில்  விளக்குகளும் இல்லை. மேடு பள்ளமான ரோட்டில் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை கும்மிருட்டாகவே இருந்தது. மிகவும் மோசமாக இருந்த பாதையின் பள்ளங்களில் அவ்வப்போது வண்டி சிக்கி, குலுங்க, ஸ்கூட்டரின் மிதமான ஹெட்லைட் வெளிச்சத்தில் கீழே  விழுந்து விடாமல் வளைத்து, வளைத்து வண்டியை ஜான் ஓட்டிச் சென்றான். ’ஏன் இவ்வளவு இருட்டாக இருக்கிறது என யோசித்த போதுதான் அன்று அமாவாசை என்ற உண்மை உரைத்தது. ஏதேதோ இனம் புரியாத எண்ணங்களும் மனதில் எழுந்தன.

( தொடரும் )

பாகம் 13 


No comments: