Tuesday, March 10, 2020

அகத்தியர் அருவி பவுர்ணமி பூஜை

                                     

கைலாய மலைப்பயணத்திற்கு ஈடான    பொதிகை மலை அகத்தியர் கூடம் சென்று அகத்திய முனிவரை வழிபட்டு வரவேண்டும் என்று பல ஆன்மீக அன்பர்களும் விரும்புவர்.  கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள அகத்தியர் மலைக்கு பாபநாசம் காரையார் வனப்பகுதி வழியாக செல்வதை தமிழக வனத்துறையினர் தடை செய்து விட்டதால் கேரள வனப்பகுதி வழியாக மட்டும்தான் தற்போது செல்ல முடியும்.

ஆனால் பயண தொலைவு, கடினமான பாதை, நான்கைந்து நாட்கள் நெடும்பயணம் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் கேரள வனத்துறையின் புதிய கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள் , நடைமுறைகள் ஆகியவற்றால்  தமிழக ஆன்மீக பக்தர்கள் செல்ல முடியாத பகுதியாகவே பொதிகை மலை இருக்கிறது. 

சிவபெருமான் மற்றும் சித்தர்கள் வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட ஆன்மீக பக்தர்கள் மனம் குளுரும் படியான ஒரு செய்தி. தென்பொதிகையான திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவி மலைமேல் கல்யாண தீர்த்தம் அருவிக்கரையில் அமைந்துள்ள கோடிலிங்கேஸ்வரர் திருக்கோவிலில்  அகத்தியர் பெருமான் லோபமுத்திரை தேவியுடன் குடிகொண்டு அருள்பாலித்து  வருகிறார். 

சாதாரண நாட்களில் கல்யாண தீர்த்தம் ஆலயத்திற்கு செல்ல வனத்துறை அனுமதிப்பது இல்லையென்றாலும் மாதம் தோறும்  பவுர்ணமி தினத்தன்று இரவு பூஜைக்கு மட்டும் சிறப்பு அனுமதி உண்டு. பவுர்ணமியன்று மாலை நேரம் ஆறு மணி அளவில் அகத்தியர் அருவி முருகன் கோவில் அருகில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் பூஜை முடிந்து இரவு ஏழு மணிக்கு வந்துள்ள அனைவருக்கும் அன்னதானம் நடைபெறும். 

அதன்பின் பக்தர்கள் துணையோடு பவுர்ணமி பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் அகத்தியர் அருவிக்கு மேல் அமைந்துள்ள கல்யாண தீர்த்தம் ஆலயத்திற்கு செல்ல அமைந்துள்ள படிக்கட்டுப் பாதை வழியாக கொண்டு செல்லப்படும். கல்யாண தீர்த்தம் அருவித் தடாகத்தில் இருந்து பக்தர்கள் நீர் சேந்தி எடுத்து வர கோடிலிங்கேஸ்வரர்,  லோகநாயகி அம்பாள், லோபமுத்திரை தேவி சமேத அகத்தியருக்கு அன்னாபிஷேகம் உள்பட அனைத்து அபிஷேகங்களும் சிறப்புற நடைபெறும்.

தீபாராதனை மற்றும் நைவேத்திய விநியோகம் முடிந்து கொண்டு சென்ற அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு பக்தர்கள் அனைவரும் கீழே இறங்க அதிகாலை இரண்டு மணி ஆகிவிடும். வனவிலங்குகள் நடமாடும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் பெரும்பாலான பக்தர்கள் அகத்தியர் அருவி முருகன் கோவிலில் தங்கிவிட்டு மறுநாள் காலை விடிந்தபின்தான் பாபநாசம் வந்து பின் அவரவர் வீடு திரும்புவர்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் அகத்தியர் அருவி மலைப்பகுதியில் கார், வேன், ஆட்டோ போன்ற எந்தவொரு வாகனமும் நிறுத்த வனத்துறை அனுமதி கிடையாது என்பதால் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பக்தர்கள் இரவு தங்கும் ஏற்பாட்டோடு  மாலை 4 மணிக்குள் அகத்தியர் அருவிக்கரை முருகன் கோவிலுக்கு சென்று விடுவது நல்லது.







Tuesday, October 08, 2019

படப்புச் சோறு - பாகம் 2



பாகம் 2
அணைக்கரை அம்மன் கோவிலுக்கு உரிமையான அரசமுத்து குடும்பத்தார் கேரளாவிற்கு வேலைக்குச் சென்று அங்கேயே தங்கி விட்டதால் பொறுப்பெடுத்து பேணுவார் யாரும் இல்லாமல், வெகுநாட்களாக ஆள்வரத்தும் இல்லாமல் சுற்றுப்புறம் முழுதும் செடி, கொடி, புதர்கள் அடர்ந்து, குப்பையும், கூளமாக கோயில் இருந்தது. காலையில் கண் விழித்த ஆனைக்குட்டி தன் உயிர் காத்த அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவர் கையிலிருந்த அரிவாளால் கோயில் வளாகத்தில் இருந்த செடி, கொடி, புதர்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு, சிறு செடிகள் கொண்டு துடைப்பம் போல செய்து குப்பை, கூளங்களை பெருக்கி, அள்ளி தூரத்தில் கொண்டு போட்டு சுத்தம் செய்தார்.

கருவறை உள்ளேயும், ஒட்டடை அடித்து, முடித்தவர் கருவறையில் இருந்த குடம், தாம்பாளம், சூடத்தட்டு, மணி ஆகியவைகளை கோவிலுக்கு அருகில் ஓடிய ஆற்றுக்கு எடுத்துச் சென்று அழுக்கு போக கழுவி வெயிலில் வைத்தார். பின் அவரும் குளித்து விட்டு, குளத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் அம்மனுக்கு அபிஷேகம் செய்த பின் பழைய பட்டுக்களை களைந்து விட்டு, டிரங்குப் பெட்டியில் இருந்த பட்டு ஒன்றை எடுத்துக் கட்டி திருநீர், சந்தனம், குங்குமம் கொண்டு அலங்காரம் செய்து, கோயில் வளாக செடிகளில் இருந்து பறித்து வந்த அரளி, செம்பருத்தி, நந்தியாவட்டை பூக்களால் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டார். 
   
அதன்பின் அனுதினமும் வேலைக்குச் செல்லும் போதும், திரும்பும் போதும் காலை, மாலை வேளைகளில் கோவிலைச் சுத்தப்படுத்தி அம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டார் ஆனைக்குட்டி. ஆலய வேலைகளில் அவருக்கு ஒத்தாசையாக வேறு சிலரும் அவ்வப்போது உதவுவதைப் பார்த்த எஸ்டேட்டுக்குகளுக்கு வேலைக்குச் செல்லும் பிற ஜனங்களும் கோவிலுக்கு வந்து வழிபடுவதோடு மட்டுமல்லாமல் தங்களால் ஆன உதவிகளையும் செய்ய ஆரம்பித்தனர்.

இப்படியாக எல்லோருடைய உதவியுடனும் அணைக்கரை அம்மன் கோவிலில் தினசரி இருவேளை பூஜைகளோடு தமிழ்மாதப் பிறப்பு, செவ்வாய் மற்றும் கடைசி வெள்ளி தினங்களில் பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல் போன்ற நைவேத்தியங்களோடு சிறப்பு வழிபாடுகள் நடைபெற ஆரம்பித்ததால் அக்கம், பக்க ஊர் மக்களும் குழந்தை, குட்டிகள், குடும்பதோடு வந்து போக ஆரம்பித்தனர். எல்லா வேலைகளையும் பொறுப்பெடுத்து செய்து வந்த ஆனைகுட்டி கோவிலுக்கு மக்கள் அதிகமாக ஆரம்பித்த உடன் எஸ்டேட் வேலையை விட்டு விட்டு காலை முதல் மாலை வரை முழு நேரமும் கோவிலிலே இருப்பதை வழக்கமாக்கி கொண்டார்.

அகத்தியர் உருவாக்கிய பழைய பொதிகை மலைப்பாதையான சொரிமுத்தையனார் கோவில் செல்லும் வழியில் சுப்பாமணி அய்யருக்கு சொந்தமான 30 ஏக்கர் எஸ்டேட்டு இருந்தது. அய்யரின் தாத்தா வெள்ளைக்கார துரையிடம் வாங்கிய அந்த எஸ்டேட்டில் ஏலக்காய் மரங்களே பிரதானமாக இருந்தன. அய்யரின் தாத்தா, அப்பா எல்லாம் அவர்கள் பூர்வீக ஊரான ஆழ்வார்குறிச்சியில் இருந்து வாரம் நான்கைந்து முறை மாட்டு வண்டியில் வந்து சென்றும், ஏலக்காய் அறுவடை காலங்களில் மட்டும் எஸ்டேட்டிலே தங்கியுமாக பராமரித்து வந்தனர். ஆனால் தனிமை விரும்பியான சுப்பாமணி அய்யர் படித்து, முடித்து பொறுப்பிற்கு வந்தவுடன் எஸ்டேட்டிலேயே வசதியான ஒரு வீடு கட்டி தனது மனைவியான சுந்தரவள்ளி ஆச்சியுடன் வசித்து வந்தார்.

சுப்பாமணி அய்யருக்கும், சுந்தரவள்ளி ஆச்சிக்கும் எல்லாவிதமான செல்வங்களையும் வாரி வழங்கிய இறைவன் குழந்தைச் செல்வத்தில் மட்டும் குறை வைத்து விட்டார். அய்யரும், ஆச்சியும் வேண்டாத தெய்வமில்லை. போகாத கோயில் இல்லை. ஆனால் புத்திர பாக்கியம் மட்டும் கிடைக்க வில்லை. எந்த ஒரு மருத்துவமனை சென்றாலும் பலவிதமான பரிசோதனைகள் செய்து இருவரிடமும் எந்த ஒரு குறையும் இல்லை என்றே கூறினர். இப்படியாக இருவருக்கும் திருமணம் ஆகி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அய்யருக்கு ஐம்பது வயதும், ஆச்சிக்கு நாற்பது வயதும் கடந்து விட்டாலும் தவறாமல் நம்பிக்கையோடு கோவில்களுக்கு சென்று வந்தனர்.

எஸ்டேட்டில் வேலை செய்யும் சில பெண்கள் ஆச்சியிடம் அணைக்கரை அம்மன் கோவிலின் புராதனப் பெருமை கூறி ஒரு கடைசி வெள்ளியன்று காலை பூஜைக்கும் அழைத்து சென்றனர். அணைக்கரை அம்மன் கோவிலில் குடிகொண்டுள்ள பிரம்மசக்தி அம்மனுடன் துணையம்மனாக பேச்சியம்மனும், மேலும் விநாயகர், சிவலிங்கம், சாஸ்தாக்களுடன் இருபத்தியொரு மாட தேவதைகளும், தெய்வங்களும் இருந்து அருள்பாலித்து வந்தனர். ஆச்சி வழிபட சென்ற அன்று எல்லா தெய்வங்களையும் வணங்கி விட்டு உடனே வீடு திரும்பாமல் உடன் வந்த மற்ற பெண்களோடு சேர்ந்து அபிஷேகத்திற்கும், நைவேத்தியப் பிரசாதங்கள் செய்வதற்கும் தேவையான நீரை ஆற்றில் இருந்து எடுத்து வந்து கொடுப்பது, பூ மாலைகள் கட்ட உதவுவது, பிரசாதங்கள் செய்ய மடப்பள்ளி வேலைகளில் உதவுவது என எல்லா  வேலைகளிலும் முழுமனதுடன், ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.

அம்மன்கள் உள்பட எல்லா தெய்வங்களுக்கும் அபிஷேக, அலங்காரங்கள் செய்து, பட்டு சார்த்தி, பல வண்ண மாலைகள் அணிவித்து, ஆரத்தி காட்டும் நேரம் உச்சி பொழுது ஆகிவிட்டது. கோவிலுக்கு வந்திருந்த அனைவரும் கண்குளிர, மனம் குளிர அம்மன்கள் உள்பட அனைத்து தெய்வங்களையும் தரிசித்து விட்டு, வரிசையாக சென்று தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொண்டு, விபூதி, குங்கும, சந்தனப் பிரசாதங்களை ஆனைமுத்து பூசாரியிடம் வாங்கி நெற்றியில் பூசிக் கொண்டு சென்றனர். சுந்தரவள்ளி ஆச்சி அம்மன் பீடம் அருகே வந்து தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொண்டு, பூசாரியிடம் விபூதி, குங்கும் பிரசாதங்கள் வாங்க கை நீட்டிய பொழுது ஆனைகுட்டி அருள் வந்து ஆடத் தொடங்கினார்.

( தொடரும் )

Friday, October 04, 2019

படப்புச் சோறு



உயிர் வாழ உணவு அவசியம் என்றாலும் நாகரிக வளர்ச்சி அடைந்த இந்த நவீன காலத்தில் கூட உணவின்றி போராடும் உயிரினங்கள் எத்தனையோ… எத்தனையோ… ஆதி காலத்தில் இலை, தழை, காய், கனி, கிழங்குகள் உண்ணுதல், வேட்டையாடுதல் என உணவுத் தேவைக்காக போராடிய மனித சமுதாயம் பின் விவசாயம், கால்நடை வளர்த்தல் என உணவு பழக்க, வழக்க முறையை நெறிப்படுத்தியது. நாகரிக  வளர்ச்சி காரணமாக ஆற்றங்கரைகளில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு, கிராமங்கள், நகரங்கள் உருவாக்கப்பட்டு சமூக கட்டமைப்பு உருப்பெற்றது.. ஆண்டி முதல் அரசர் வரை அனைவருக்கும் உணவு வழங்க அன்ன சத்திரங்களும், ஆகம கூடங்களும் ஏற்படுத்தப்பட்டன.

ஆலயங்கள் தோறும் பூஜை, புனஸ்காரங்களோடு நைவேத்தியப் பிரசாதங்களும் படைக்கப் பட்டு பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டதும், அனைவருக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே. தேவாலயங்களில் பொதுஜனப் பந்திகள், மசூதிகளில் நோன்பு காலங்களில் கஞ்சி விநியோகம், புத்த விகாரைகள், குருத்துவாராக்களில் அன்னதானங்கள் என அனைத்து மதங்களும் ஊராருக்கு உணவு வழங்குவதை ஒரு கடமையாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. 

கோடை காலங்களில் மழை இன்றி, விவசாயம் செய்ய முடியாமல் உணவு உற்பத்தி குறைந்து மக்கள் அல்லல்படும் காலங்களில் கிராமங்கள்தோறும் கோவில்களில் கோடைவிழாக்கள் நடத்தப்பட்டு அன்னதானமாக நீராகாராங்களும், சித்திரான்னங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவது காலம், காலமாக இருந்து வரும் பழக்கம். மேலும் கிராம தேவதைகளுக்கு ஆடுகள், கோழிகள் பலியிடப் பட்டு சமைத்து படைக்கப் பட்டு அசைவ உணவு விருந்துகளும் மக்கள் மனம் குளிர வழங்கப்பட்டு வருகின்றன. கால ஓட்டத்தில் மாற்றம் பெற்ற நடைமுறைகளால் கருத்து வேறுபாடுகளும், கண்டனங்களும் எழுவது மட்டுமல்லாமல் கலகங்களும், கலவரங்களும் எழுவதன் காரணமே இக்கதையின் களமாகும்.

பாகம் 1

சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஆளுகைக்கு கீழ் உட்பட்டிருந்த ஜமீன் சொத்துக்களான பொதிகை மலைப்பிரதேசங்கள் சுதந்திரமடைந்த பின் நாட்டுடைமையாக்கப்பட்டு விட்டாலும், பூர்வபந்த பழக்கமாக மணிமுத்தாறு மலைப்பகுதியில் அமைந்துள்ள கோவில்களின் திருவிழாக்கள் வனத்துறையினரின் சிறப்பு அனுமதி பெற்று வருடா வருடம் நடத்தப்பட்டு வருகின்றன. மழை வரம் மற்றும் குழந்தை வரம் அருளும் பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவிக்கரையில் சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, பட்டவராயர், கும்பாமுனி போன்ற பல சுவாமிகள் சமேதமாக அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு வாரம் தோறும் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சிங்கம்பட்டியில் இருந்து தவறாமல் சென்று வழிபடுவோர் உண்டு. வருடாந்திர கொடை விழாவின் போது பலரும் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்துவர். சிங்கம்பட்டி ஊர் அம்மன் கோயில் நிர்வாகம் சார்பாக ஊர் மக்களிடம் வரி பிரித்து, பல நூறு எண்ணிக்கையிலான ஆடுகள், கோழிகள் வாங்கி, பலியிட்டு, அசைவப் படையல் போட்டு சுவாமிகளுக்குப் படைத்த பின்னர் கோயிலுக்கு வரும் உள்ளூர், வெளியூர் அனைத்து பக்தர்களுக்கும் பந்தி போட்டு, அன்னதானம் பரிமாறுவது பல தலைமுறைகளாக இருந்து வரும் பழக்கம் ஆகும்.    

மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவில் போன்றே அணைக்கரை ஒட்டிய காட்டுப்பகுதியில் புலிப்பட்டி ஊர் மக்களுக்கு பாத்தியப்பட்ட அணைக்கரை அம்மன் கோவில் உள்ளது. மணிமுத்தாறு அணை கட்டப்படுவதற்கு முன் தற்போது நீர் தேக்கப்பகுதியாக உள்ள அனைத்து இடங்களுமே வயலும், தோப்பும், தோட்டங்களுமாக இருந்தன. அங்கு வீடுகள் கட்டி வசித்து வந்தவர்கள் அடிக்கடி வரும் காட்டாற்று வெள்ளத்திற்கும், மலையிலிருந்து இறங்கி வந்து வளர்ப்பு மிருகங்களையும், சில நேரம் மனிதர்களையும் தாக்கும் வன விலங்குகளுக்குப் பயந்தும் தங்கள் குடியிருப்புகளை காலப்போக்கில் புலிப்பட்டி கிராமத்திற்கு மாற்றிக் கொண்டனர். ஆனாலும்  காட்டாற்று ஓரமாய் பாறைகள் மேல் முன்னோர்கள் கட்டி வழிபட்டு வந்த கோயில்கள் இன்றளவும் அங்கே இருந்து வருகின்றன.

அகத்தியர் உருவாக்கிய பழைய பொதிகை மலைப்பாதையான சொரிமுத்தையனார் கோவில் செல்லும் வழியில் தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட்டுகள் பல உள்ளன. அணைக்கரை அம்மன் கோவில் வழியாகத் தான் அந்த தனியார் எஸ்டேட்டுகளுக்கு செல்லும் பாதை உள்ளது. நாடு விடுதலை அடையும் முன் காடுகளில் வேட்டைக்கு செல்லும் போது தங்குவதற்காக, ஜமீன்தார்களிடம் கேட்டு வாங்கிய இடங்களில், அரசாங்க அனுமதியுடன் பட்டாவும் வாங்கி எஸ்டேட்டுகள் அமைத்து பல வெள்ளைக்காரர்கள் வாழ்ந்து வந்தனர் சுதந்திரம் வழங்கிய பின் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லும் போது, தங்களிடம் பணியாற்றிய திவான்கள், கணக்குப் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாக பட்டா பெயர் மாற்றி கொடுத்து விட்டு சென்றனர். பட்டா நிலம் என்பதால் இன்றளவும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல எஸ்டேட்டுகள் தனியார் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.

புலிப்பட்டி ஊரில் இருந்து பலரும் அணைக்கரை பகுதிகளில் அமைந்துள்ள எஸ்டேட்டுகளில் வேலை பார்த்து வந்தனர். ஆனைக்குட்டியும் அதில் ஒருவர். அதிக உயரம் இல்லாமல் தொந்தியும், தொப்பையுமாக இருப்பதால் அவர் இயற்பெயர் மறைந்து ஆனைக்குட்டி என்ற பெயர் நிலைத்து விட்டது. வெகுகாலம் முன் ஒரு நாள் மாலை எஸ்டேட் வேலைக்குச் சென்று திரும்பும் போது ஒற்றை யானை துரத்த உயிர் பிழைக்க ஒடியவர் அணைக்கரை அம்மன் கோவிலுக்குள் சென்று, பூட்டு இல்லாமல் கம்பியால் முறுக்கி மூடப்பட்டிருந்த கருவறையின் மரக்கதவுகளை திறந்து, அம்மன் சிலைக்குப் பின் ஒளிந்து கொண்டார். யானை போய் விட்டதா, இல்லையா என்று தெரியாததாலும் இருட்டி விட்டதாலும் அன்று இரவு கோயிலிலே தங்கியவர் பையிலிருந்த பழங்களை சாப்பிட்டு விட்டு அப்படியே படுத்து தூங்கி விட்டார்.

( தொடரும் ) 

Wednesday, July 31, 2019

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா



ஓங்கு சூழ் உலகம் உய்வடைய அகிலமெல்லாம் காத்தருளும் அய்யன் சிவபெருமானுக்கும், அம்மை பார்வதிக்கும் திருமணம் பேசி நாள் குறித்த விபரம் அறிந்த நாள் முதல் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள் என பல தரப்பான மக்கள் கூட்டம், கூட்டமாக கைலாய மலை வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள். பல நாட்டு அரசர்களும், படைகள், பரிவாரங்களோடு வந்ததால் திருமணம் பார்க்க வந்தவர்கள் கனபாரம் தாங்காமல் வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்து விட்டது. அனுதினமும் ஆட்கள் வர, வர நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதைக் கண்ட சிவபூதகணங்கள் சிவ்பெருமானிடம் முறையான அறிவுரை பெற முடிவு செய்து முக்கண்ணர் முன் சென்று நின்றார்கள். தியான நிஷ்டையில் இருந்த எம்பெருமான் பூதகணங்களது அபய சரணங்கள்  கேட்டு விழித்துப் பார்த்து விஷயம் அறிந்து குறுமுனி அகத்தியரை அழைத்து வரக் கூறினார்.

பூதகணங்கள் அழைப்பின் பேரில் அம்மையப்பர் முன் வந்து நின்ற் அகத்தியரை முறுவலித்துப் பார்த்த முக்கண்ணர், “ அகத்தியரே, நீர் உடனே தெற்கே கிளம்பி சென்று நிலைமையை சீர் செய்து, இப்பூவுலகம் முன் இருந்த நிலையை அடைய உதவ வேண்டும். என்று உத்தரவிட்டார்.. அய்யனின் கட்டளைக்கு மறுமொழி உரைத்த அகத்தியர், ’ “ஐயனே, தெற்கு பாஷை எனக்கு தெரியாதே. மேலும் உமா-மகேஷ்வரர் ஆகிய தங்கள் திருமணம் பார்க்கின்ற பெரும்கொடுப்பினையையும் அடியேன் இழப்பேனேஎன்று சொல்லி மனதளர்ச்சி அடைய, “ வருந்த வேண்டாம் அகத்தியரே, தென்தேச மொழியை உமக்கு உபதேசம் செய்வோம். இங்கு நடக்கிற எங்கள் திருமணக் காட்சியையும் நீர் அங்கு இருந்தே பார்க்க யாம் அருள் செய்வோம்”” என்று சொல்லி உடனடியாக அவருக்கு தமிழ் மொழி உபதேசம் செய்து வழி அனுப்பி வைத்தார் ஆனந்தக் கூத்தர் அய்யன் சிவபெருமான்.

அகிலமெல்லாம் ஆட்கொண்ட ஆடல்நாயகரின் ஆணையின் பேரில் கைலாயத்தில் இருந்து கால்நடையாக கிளம்பி பல ஜீவநதிகளில் நீராடி, புண்ணிய ஷேத்திரங்கள் பலவற்றையும் தரிசனம் செய்து எம்பெருமான ஈசன் அருளால் வானுயரம் கொண்டு வழிமறித்து நின்ற விந்திய மலையின் கர்வம் அடக்கி, வாதாபி போன்ற கொடிய அசுரர்களை வதம் செய்து, குடகு மலையில் தவம் இருந்த நேரம் காக வடிவில் வந்த கணேசர் கங்கை நதி இருந்த கமண்டலம் கவிழ்க்க காவிரியை உருவாக்கி என மேலும் பல திருவிளையாடல்கள் புரிந்து மக்களுக்கு அருளாசி செய்தவாறே மதுரை தமிழ்ச்சங்கம் கடந்து, திருநெல்வேலி அடைந்து நெல்லையப்பரையும், காந்திமதியம்மனையும் தரிசித்து நடைப்பயணமாக சென்ற அகத்தியருக்கு போகும் வழியெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு தந்தனர். அவர் அமர்ந்து அருளாசி தந்த இடத்தில் எல்லாம் அன்பர்கள் ஆலயம் அமைத்து வழிபட்டனர்.

இப்படியாக அம்பை, கல்லிடை நகர் எல்லாம் கடந்து சிங்கம்பட்டி ஊர் வழியாக பொதிகைமலை அடைந்த அகத்தியருக்கு சித்திரை விசு தினத்தன்று பாபநாசம் கல்யாண தீர்த்தக் கரையில் மணக்கோல காட்சி தந்தார் மகேஷ்வரர் உலகம்மையோடு. வந்த காரியம் நிறைவேறி விட்டாலும் வல்லோன் ஆணைப்படி வடக்கு திரும்பாமல் பொதிகை மலையில் தங்கி தமிழ் வளர்த்திட்டார் அகத்தீஸ்வரர். தண்பொருநையாம் தாமிரபரணிக் கரையில் குடில் அமைத்து உலக நன்மைக்காக தினமும் வேள்வி, யாகம் நடத்தி வந்த போது ஒரு ஆடி அமாவாசை திருநாளன்று காரையாற்றங்கரையில் சுயம்புவாய் உருவெடுத்திருந்த மகாலிங்க சுவாமிக்கும், பூரணகலை புஷ்பகலை சமேத அய்யனார் சாஸ்தாவிற்கும் முப்பது முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிக்களும் பொன் மலர்கள், முத்து மலர்கள் சொரிந்து வழிபடுவதைக் கண்ட அகத்தியர் தானும் அந்த விசேஷ வழிபாட்டில் கலந்து கொண்டு முக்தி பெற்றார்.

காலமாற்றம் அடைந்த கலிகாலத்தில் சேரநாட்டுப்பகுதியாக இருந்த பொதிகை மலை காட்டுப்பகுதி வழியாக பாண்டிய நாட்டு வணிகர்கள் மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றிச் சென்று வணிகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது இறைவனின் திருவிளையாடலால் மாடுகளின் காலடிக் குளம்பு பட்டு சுயம்பு லிங்கத்தில் இரத்தம் பீறிட்டு வருவதைக் கண்டு வணிகர்கள் திகைத்து நின்ற பொழுது அசரிரி ஒலித்து தலவரலாறு சொல்லியது. வணிகர்கள் மூலம் விவரம் அறிந்த சேர மன்னர்கள் அவ்விடத்தில் மகாலிங்க சுவாமி, பொன் சொரிமுத்து அய்யனார் மற்றும் இருபத்தியொரு மாட தேவதைகள், தெய்வங்களுக்கும் ஆலயம் அமைத்து வழிபட்டனர். சேர தேசத்தில் மார்த்தாண்ட மன்னர் வாரிசுக்கு எதிராக எட்டு வீட்டுப் பிள்ளைமார் கலகம் செய்த போது இழந்த ஆட்சிப் பொறுப்பை மீட்க உதவியதால் பரிசாக வழங்கப்பட்ட பொதிகை மலைப்பகுதியும், சொரிமுத்தையனார் ஆலயமும்  சிங்கம்பட்டி சமஸ்தானத்திற்கு சொந்தமானது.

பன்னெடுங்காலத்திற்கு முன் அந்தண குலத்து பட்டவராயர் பொம்மக்கா, திம்மக்காவை விரும்பி மணந்ததால் குலம் மாறி ஆடு, மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். சொரிமுத்தையனார் கோயில் அருகே காட்டாற்றங்கரையில் ஆநிரைகளை கவர வந்த திருடர்களுடன் ஏற்பட்ட சண்டையின் போது பட்டவராயர் கொல்லப்பட, அவரது இரு மனைவிகளும் தாங்கள் வாழ்ந்த பொதிகை மலை அரசரான சிங்கம்பட்டி மன்னரிடம் அனுமதி பெற்று உடன்கட்டை ஏறிட ஆலய வளாகத்தில் காவல் நாய்கள் காச்சி, பூச்சியுடன் பொம்மக்கா, திம்மக்கா சமேதமாய் பட்டவராயர் காவல் தெய்வமானார்.




பல நூற்றாண்டுகளாய் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு வந்து தங்கி வணங்கும் பாபநாசம் காரையார் மலைப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்தையனார் ஆலயத்தில் பட்டவராயர் கோமரத்தாடிகள் ஆடிஅமாவாசை தின இரவு அரச உடையில் காட்சி தரும் சிங்கம்பட்டி மன்னரின் முன் இன்றளவும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவது காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். வேடமிட்டு, பாரம்பரிய நகை, உடை அணிந்து,  சிலம்பம் சுற்றி, சண்டை இட்டு, பின் தாயாரே அடித்து ஒப்பாரி வைத்து மன்னரிடம் அனுமதி பெற்று பூக்குழி இறங்குதல் என்னும் தீ பாய்ந்தல் நிகழ்வோடு தென்கைலாயமாம் பொதிகை மலை ஆடி அமாவாசை திருவிழா இனிதே முடிவுறும்.



திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையார் மலைப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்தையனார் ஆலய ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசின் ஆதரவுடன் வருடா வருடம் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து துறை, வனத்துறை, காவல் துறை, சுகாதார துறை மூலம் சிறப்பு பேருந்துகள், அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்து திருக்கோவில் நிர்வாகம் விழாவை சிறப்பாக நடத்த உதவி வருகிறது.

பொன் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா காண அனைவரும் வருக. அய்யன் அருள் பெறுக.

Tuesday, July 30, 2019

தென்கைலாயமாம் பொதிகை மலை ஆடி அமாவாசை திருவிழா


ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அருள்மிகு சொரிமுத்தையனார் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்பு வேண்டுகோள்கள்.

1)   தலைமுறை, தலைமுறையாக நமது முன்னோர்கள் வழிபட்டு வரும் ஆலயத்தின் சிறப்பையும், மாண்பையும், கோயிலில் குடிகொண்டிருக்கும் அனைத்து தெய்வங்களின் திருவிளையாடல்களையும் உடன்வரும் அவரவர் குடும்பத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி வழிவழியாக காத்து வரும் புனிதம் காக்க வலியுறுத்துவோம்.
2)   அரசு நிர்வாகம் போக்குவரத்து துறை மூலம் செய்துள்ள வாகன வசதி ஏற்பாடுகளையும், விதி முறைகளையும் பயன்படுத்தி கூட்ட நெரிசல் தவிர்ப்போம்.
3)   வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வருவதையும், பயன்படுத்துவதையும் தவிர்ப்போம்.
4)   சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ள இலவசக் கழிப்பிட வசதிகளை முறையாகப் பயன்படுத்தி சுற்றுப்புறச் சூழ்நிலை மற்றும் பல மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமான அன்னை தாமிரபரணி ஆற்று நீரில் மாசு ஏற்படாதாவறு காப்போம்.
5)   வனத்துறையின் அனுமதியுடன் கோவிலைச் சுற்றி திருக்கோவில் நிர்வாகம் அமைத்துள்ள தற்காலிக குடில் வசதிகள் தவிர மற்ற காட்டுப் பகுதிகளில் தங்குவதை தவிர்ப்போம்.
6)   திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களின் தற்காலிக மின்சார வசதிகளை முறையான அனுமதியில்லாமல் பயன்படுத்துவதை தவிர்ப்போம்.
7)   காட்டுக்குள் வாழும் வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு இடையூறான ஒளி,ஒலி மாசு தவிர்ப்போம்.
8)   சந்தேகத்திற்குரிய மனிதர்களின் நடவடிக்கைகளை காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை அரங்குகளில் உடனுக்குடன் தெரியப்படுத்தி அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.
9)   சிங்கம்பட்டி ஜமீன் பழைய காட்டுப் பாதையாக பாதயாத்திரை வரும் பக்தர்கள் மணிமுத்தாறு அணையின் மேற்கு பகுதி கடைசியில் அமைந்துள்ள முதலாம் எண் வாசல் வரை வாகனங்களில் வந்து, பின் அங்கு அமைந்துள்ள  வனத்துறையின் தற்காலிக அரங்கில் ஊர், பெயர், முகவரி, அலைபேசி எண், உடன் வரும் நபர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களைத் தெரிவித்து, தடை செய்யப்பட்ட பொருட்களை முற்றிலும் தவிர்த்து வனத்துறை அலுவலர்களின் முறையான அனுமதியுடன் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
10)  யானை, கரடி மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் அனுமதி மறுக்கப்பட்டால் வந்த வாகனத்திலே திரும்பி அகத்தியர் பட்டி வந்து அரசு வாகனங்கள் மூலம் கோயிலுக்கு செல்லுங்கள். வேறு எந்த காட்டு வழியாகவும் கோயிலுக்கு செல்ல முயற்சிக்காதீர்கள்.
11)  சிங்கம்பட்டி ஜமீன் பழைய காட்டுப் பாதையாக பாதயாத்திரை செல்ல வனத்துறை அலுவலர்கள் அனுமதிக்கும் பட்சத்தில் கூடுமானவரை குறைந்தது பத்து, பதினைந்து பேர்கள் கொண்ட குழுவுடன் இணைந்து செல்லுங்கள். குடும்ப உறுப்பினர்கள் மட்டும் நான்கைந்து பேராக தனியாக செல்வதை தவிருங்கள். உடன் வரும் குழந்தைகளை முன், பின் தனியாக விடாமல் குழுவின் நடுப்பகுதியில் நடத்திச் செல்லுங்கள்.
12)  வறட்சிகாலம் என்பதால் வனவிலங்குகள் ஆற்றுக்கு நீர் குடிக்க வந்தாலோ, உணவு தேடி எதிரில் வந்தாலோ எந்த விதமான தொந்திரவும் செய்யாதீர்கள்.
13)   சமையல் செய்ய தேவையான விறகு, அடுப்பு மற்றும் எரிவாயு உருளைகளை வனத்துறை அனுமதியுடன் எடுத்துச் செல்லுங்கள். கோவிலைச் சுற்றி காட்டுக்குள் விறகு சேகரிப்பது சட்ட விரோதம் என்பதால் திருக்கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் தேவையான விறகுகளை வாங்கிக் கொள்ளுங்கள்.
14)  மொட்டை போடுவது, காது குத்துவது போன்ற நிகழ்ச்சிகளை திருக்கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர்கள் அமைத்துள்ள அரங்குகளில் உள்ள பணியாளர்கள் மூலம் செய்யுங்கள்.
15)  பலநூறு ஆண்டுகள் பாரம்பரியமான சொரிமுத்தையனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை பரம்பரை அறங்காவலர் சிங்கம்பட்டி ஜமீன்தாரர் மேதகு தீர்த்தபதி மகாராஜாவின் சீரிய முயற்சியால்  ஒவ்வொரு வருடமும் அனைத்து அரசு துறைகளின் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கும் ஒத்துக் கொண்டு சிறப்பான முறையில் நடத்தி வரும் திருக்கோவில் நிர்வாகத்திற்கு அன்பையும், ஆதரவையும் அனைத்து பக்தர்களும் வழங்குவோம் என உறுதி கொள்வோம்.

தென்கைலாயமாம் பொதிகை மலையில் இருபத்தியொரு மாட தெய்வங்கள் மற்றும் தேவதைகளுடன் அருள்பாலித்து வரும் பொன் சொரிமுத்தையானார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அனைத்து ஊர் பக்தர்களையும் வருக, வருக என வரவேற்கிறோம்.

அனைவரும் வருக, அய்யன் அருள் பெறுக.

Friday, July 26, 2019

மூன்று முக சுவாமி சங்கிலி பூதத்தார்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி கிராமம் மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மூன்று முக சுவாமி சங்கிலி பூதத்தார்.




ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்திற்காக திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தோடு பாரிஜாத மரம், காமதேனுப் பசு மற்றும் மேலும் பல அதிசயங்களும், அற்புதங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளிவரும் நேரத்தில் விசித்திரமான, வீரியமான பல விதமான பூதகணங்களும், அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார் சங்கொலி முழங்க கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடல் மேல் கனத்த இரும்புச்சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார, ஓங்கார உருவத்தோடும், ஆரவார சப்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் மற்ற முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். அமிர்தத்தோடு பிறந்ததால் சங்கிலி பூதத்தாருக்கு ‘அமிர்த பாலன்’ என்றொரு பெயரும் உண்டு. கையில் குண்டாந்தடியான தண்டத்தை ஆயுதமாக ஏந்தியுள்ளதால் 'தண்டநாதன்' என்றும் கூறுவர். திருப்பாற்கடலில் பிரமாண்ட உருவத்தோடும், அனைவர் கண்ணையும் பறிக்கும் முத்து போன்ற பிரகாசத்தோடும் தோன்றியதால் 'ராக்‌சஷ முத்து' என்றும் அன்பர்களால் அழைக்கப்படுகிறார்.
அண்டமெல்லாம் நடுங்கச் செய்த அதிபயங்கர ஆலகாலவிஷத்தை விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய கைலாய நாயகரும், சித்தருக்கெல்லாம் சித்தரும், வித்தகருக்கெல்லாம் வித்தகரும், முக்கண் மூத்தவருமான எம்பெருமான் சிவபெருமான் பூதகணங்களையும், பூதகணங்களுக்கெல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி தன்னோட பிள்ளைகளாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு கைலாயத்தில் வைத்துக் கொண்டார்.
இப்படியாக சிவபெருமான் ஆணையின் பேரில் பூதராஜாவான நமது சங்கிலி பூதத்தார் சுவாமி மற்ற பூதகணங்கள் உதவியோடு மிகவும் சிறப்பாக கைலாய நிர்வாகம் செய்து கொண்டு இருந்தார். ஒருமுறை சிவபெருமான் சங்கிலி பூதத்தாரிடம் மொத்த கைலாய நிர்வாகப் பொறுப்பையும் கொடுத்து விட்டு ‘பூலோகப் பயணம் போய் வருகிறேன்’ என்று கூறிச் சென்றார்.அப்படி போன சிவன் திரும்பி வரவேயில்லை. நெடுங்காலமாக பொறுத்திருந்து பார்த்த பார்வதி அன்னை ஆனவர் பூதத்தாரை அழைத்து,‘அமிர்த பாலனே, பூமிக்கு போன உங்கள் தந்தையை வெகுநாட்களாக காணவில்லையே.விபரம் ஏதும் அறிவாயா…' என்று விசாரிக்க, 'இன்னும் சிறிது நாளில் வந்து விடுவார் அன்னையே’ என்று பூதத்தார் பதில் கூறினார். இப்படியாக பல நாள்கள் கழிந்தன.
கேட்கும் போதெல்லாம் பூதத்தார் இதே பதிலை சொல்ல பார்வதி அன்னை ஒருநாள் கோபப்பட்டு, 'என்ன செய்வாய், ஏது செய்வாய், என்று நான் அறியேன். நீயே நேராக பூலோகம் சென்று உங்கள் தந்தையை கையோடு அழைத்து வா' என்று உத்திரவிட, மீறமுடியாத பூதத்தாரும் தந்தையைத் தேடி பூலோகம் கிளம்பினார். அப்படி அவர் தேடி வரும்போது தூரத்தில் சிவனும் கைலாயத்துக்கு திரும்பி வருவதை பூதத்தார் பார்த்து விட்டார். ஆனால் பூதத்தார் வருவதை சிவபெருமான் கவனிக்கவில்லை.
'ஆஹா.., நாம் கைலாயம் விட்டு கீழிறங்கி வருவதை அப்பா பார்த்தால் கொடுத்த கைலாயப் பொறுப்பை கவனிக்காமல், ஊர் சுற்றுவதாக தவறாக நினைத்து, கோபப்பட்டு, சத்தம் போடுவாரே.., ஏன் இப்படி வந்தாய் என்று கேட்டால் பார்வதி அன்னை ஆணை இட்ட விபரம் சொல்ல வேண்டி வருமே…, நாம் சாபம் வாங்கினாலும் பரவாயில்லை, நம்மால் அன்னை பார்வதி ஏச்சும், பேச்சும் வாங்கக்கூடாது, குடும்பத்தில் குழப்பம் வந்து விடக்கூடாது’ என்றெல்லாம் பலவாறு எண்ணிய பூதத்தார், பாதை ஓரத்தில் கிடந்த பாம்புச்சட்டையில் புகுந்து சிவபெருமான் கண்ணில் படாமல் மறைந்து கொண்டார். இதனால்தான் சங்கிலி பூதத்தாருக்கு 'சட்டநாதன்' (சட்டைநாதன்) என்றொரு பெயரும் உண்டு. மேலும் சங்கிலி பூதத்தார் சுவாமி இருக்கிற இடத்தில் எல்லாம் பாம்பு இருக்கும். சுவாமி பாம்பாகத்தான் பக்தர்கள் கண்ணில் படுவார். ஆனால் யாரையும், எந்த தொந்திரவும் செய்ய மாட்டார். தன்னை வேண்டி வழிபடுகிற பக்தர்களது கனவிலும் பாம்பாகத் தான் வருவார். ஆபத்து நேரங்களில் ‘ சட்டநாதா, சங்கிலிபூதம்’ என்று அபயக்குரல் கொடுத்தால் சரசரவென்று வந்து உதவிடுவார்.
‘தாய் அறியாத சூல் உண்டோ’, ‘தந்தை அறியாத பிள்ளை உண்டோ’ சங்கிலி பூதத்தார் தன் கண்ணில் படக்கூடாது என்பதற்காக பாம்புச்சட்டையில் புகுந்ததை ஞானதிருஷ்டியில் கண்ட சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை அழைத்து, ‘மகனே, சட்டநாதா, சங்கிலிபூதம், அமிர்த பாலா, கைலாயத்தில் சிறப்பாக காவல் நிர்வாகம் செய்து வரும் உனது பாதுகாப்பும், திருவருளும் பூலோக மக்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம். நீதி, நேர்மை, நியாயம், நிர்வாகங்களில் சிறந்த காக்கும் கடவுளான அன்பு மைந்தன் உனக்கு இப்போது எமது அன்பு பரிசுகளாக ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரமும் தந்தோம். உன்னை வணங்குவோர் எந்தக் குறையுமின்றி அன்பிலும், அறத்திலும், செல்வத்திலும் சிறந்து விளங்குவார்கள். நீ பூலோகம் சென்று சிறப்பான திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு நன்மைகள் பல செய்து யாம் இருக்கும் தென்கைலாயமாம் பொதிகை மலை வந்து எம்மை அடைவாய்.’ என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.
இப்படியாக பூலோகம் வந்து சேர்ந்த பூதத்தார் ஒரு இடமென்று தங்காமல் பல புண்ணிய ஷேத்திரங்களுக்கும் பயணம் சென்றார். எனவேதான் அவருக்கு ‘ஷேத்திரபாலன்’ என்றொரு பெயரும் உண்டு.அப்படி சென்ற இடங்களில் எல்லாம் பல திருவிளையாடல்கள் செய்து மக்களினால் கோயில்கள் கட்டி கும்பிடப்படுகிறார்.
இவ்வாறு அய்யன் சிவபெருமானிடம் ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரம் பெற்றதையே மூன்று முகமாக கொண்டு மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவிலில் தன்னை வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் அருள்பாலித்து வருகிறார் சுவாமி சங்கிலி பூதத்தார்.