Wednesday, September 30, 2015

மதுவினை மறந்திடு….



வகை-(4) புதுக்கவிதைப் போட்டி

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை


மதுவினை மறந்திடு….

பள்ளி, கல்லூரி
மாணவர், ஆசிரியர்
அரசு அலுவலர், தனியார்
ஊழியர், அதிகாரி
ஆண்,பெண்
சிறியவர், பெரியவர்
வேறுபாடு இல்லாமல்
சமத்துவ சங்கமம் 
மதுக்கடையிலே...

பதவி வேறுபாடு
பண்பாடு மறந்து
பலரும் விழுந்தனர்
மதி மறைக்கும்
போதை சாக்கடையிலே...

அன்றாட வேலை அனைத்திற்கும்
அரசிடம்  சலுகை எதிர்பார்க்கும் நீ..

சர்க்காருக்கே படி அளக்கிறாய்
சரக்கை வாங்கும் போது மட்டும்….

வீட்டினில் இருந்து
விருட்சம் போல்
வெளியினில் வந்தவன்..

பகல் வெளிச்சம் போனதும்
ரோட்டினில் விழுந்தாய்
விழலில் இறைத்த
விதையாய் மது போதையிலே...

போதை தேடிப் போகும்
உன் பாதை வழி
சரியா சொல்

ஒரு போதும் மறவாதே
உன்னை நம்பி
வீட்டில் உண்டு
பல பேதை, பெதும்பை
உருப்படுமா நில்...

ஆதிகாலத்தில்  அருமை முன்னோர்
மருந்தாக மூலிகைப் பட்டைகள்
இட்டுக் காய்ச்சினர்..

பாதிகாலத்தில்  படுபாவிகள்
பெருத்த லாபம் பார்க்க
இரசாயன் திட்டைகள் விட்டே காய்ச்சினர்...

அப்போது மது காய்ச்சும் இடம்
காட்டோரம் கரும்புக் கொல்லை..

இப்போது மதி மயக்க இட்டிடுவார்
எத்தனை எத்தனையோ மருந்து வில்லை...

உற்பத்தி செய்வோருக்கு
அள்ளிக் கொடுக்கும்
அட்சயப் பாத்திரம்..

உறிஞ்சிக் குடிப்போர்
உள்ளத்தில் எப்போதும்
நின்று எரிந்திடும்
இச்சை மாத்திரம்..

மது அருந்துவோர்
குடும்பம் ஏந்திடும்
கையில் பிச்சை பாத்திரம்... 

ஆண்டுக்காண்டு அரசுக்கு
 ஆயிரமாயிரம் கோடி வருமானம்..

அனாமதேய மக்களின் வாழ்க்கை
 என்ன பெறுமானம்...

மது விற்றுக் கிடைக்கும்
பணம் நாட்டிற்கு..

விரும்பிக் குடித்தோர்
உடல் வீணாகிப் போனது 
நோய் சீர் கேட்டிற்கு... 

மதுவை மருந்தாக
அருந்தினால் விருந்துண்ணலாம்..

அதுவே விருந்தாக
நீ அருந்தினால்
மருந்துண்ண வேண்டி வரும்...

மறந்து விடாதே எப்போதும் மனிதா
மது போதை பழக்கம் விட்டு 
நீயாக நீங்கா விட்டால் 
விதி முடியும் முன்னே
 வீணாய்  மண் உண்ண
 வேண்டி வரும் உன்னை...

-------------------------------------------------------------------------------------------------------

 " மதுவினை மறந்திடு…." எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் உறுதி அளிக்கிறேன்.

அன்பு நண்பர்களே, வலைப்பதிவர் சந்திப்பு விழா குறித்தான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வலைப்பதிவர் திருவிழா-2015 என்ற தளத்தோடு இணைந்திருங்கள். தங்கள் பெயரும் விபரமும் வலைப்பதிவர் கையேட்டில் இன்னும் சேர்க்காத நட்புக்கள் நம்மைப் பற்றிய ஆவணப் பெட்டகம் அது என்பதை மறக்காமல் உடனே சேர்த்து விடுங்கள்... 

வலைப்பதிவர் விழா தொடர்பான தொடர்புகளுக்கு...




No comments: