Friday, July 03, 2015

சுவாமி சங்கிலி பூதத்தார் திருநெல்வேலி மாநகரம் வந்த கதை.


அருள்மிகு சுவாமி சங்கிலிபூதத்தார் திருப்பாற்கடலில் அமுதத்துடன் அவதரித்தது முதல் சிவபெருமான் ஆசியுடன் திருக்கைலாய காவல் நிர்வாகப் பொறுப்பேற்றது மற்றும் திருக்கைலாயத்தில் இருந்து கிளம்பி பல புண்ணிய ஷேத்திரங்கள் பயணம் செய்து, திருவிளையாடல்கள் பல புரிந்து திருச்செந்தூர், திருக்குறுங்குடி வழியாக தென்கைலாயமாம் பொதிகை மலை அடைந்து எம்பெருமான் அருள்மிகு மகாலிங்கம் சுவாமியின் அருளாசியோடு சொரிமுத்தையனார் கோயிலில் ஐந்து நிலையம் அமைத்து அருள்பாலித்து வருவதை அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் திருவரலாறு மூலம் அறிந்தோம்.

சுவாமி சங்கிலி பூதத்தார் தென்கைலாயமாம் பொதிகை மலையில் இருந்து இறங்கி திருநெல்வேலி மாநகரம் வந்த கதையை இப்போது பார்ப்போம்.





சுவாமி சங்கிலி பூதத்தார் தென்கைலாயமாம் பொதிகை மலையில் இருந்து இறங்கி திருநெல்வேலி மாநகரம் வந்த கதையை அய்யன் ஆணைப்படி படிப்போர் ஆனந்தம் பெறுமாறு நெல்லை வட்டார பேச்சுத் தமிழிலே  எழுதியுள்ளேன்.


திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலைச் சுற்றி பூதத்தாருக்கு தனித்தனியா 21 நிலையம் இருக்கு… தெரியுமா… அந்த கதையையும் இப்போ சொல்லிடுதேன்…. நெல்லையப்பர் கோயில் கொடிமரத்திற்காக மரம் வெட்ட பொதிகை மலைக்கு போனவங்க விபரம் தெரியாம, சங்கிலி பூதத்தார் இருந்த பிரம்மாண்ட மரத்தை வெட்டி சாய்ச்சுட்டாங்க…. அந்த காலத்துல என்ன இப்போ மாதிரி லாரி,டிரெயிலரா உண்டு….. வெட்டின மரத்துல 'நெல்லையப்பர் கோயில் கொடிமரம்'ன்னு குறிப்பு எழுதி தாமிரபரணி ஆத்துல தள்ளிவிட்டுட்டு  எல்லோரும் திரும்பி வந்துட்டாங்க… மழை பெஞ்சு தாமிரபரணி ஆத்து வெள்ளத்துல மிதந்து வந்த மரம் திருநெல்வேலி சேந்திமங்கலம் (மணிமூர்த்திஸ்வரம் ) பக்கத்துல கரை ஒதுங்கிட்டு. குறிப்பு பார்த்த ஊர்மக்கள் கோயிலுக்கு தகவல் சொல்லி விட கோயில்ல இருந்து 50.60 மாடு கட்டுன பெரிய வண்டியோட வந்து மரத்தை ஏத்தி கொண்டு போனாங்க….


டவுண்  நெல்லையப்பர் கோயில் தெப்பக்குளம் வரை போன வண்டி அதுக்கு மேல நவுர மாட்டேன்கிது… 100 குதிரையை கட்டி இழுங்காங்க… 50 யானையை கொண்டு இழுக்காங்க… வண்டி அசையக்கூட இல்லை…. இது என்னடா சோதனைன்னு எல்லாரும் முழிச்சுகிட்டு இருக்கும் போது ஒரு வயசான ஆளு மேல சங்கிலி பூதத்தார் சாமி வந்து ‘ நான் இருந்த மரத்தை  வெட்டி கொண்டு வந்துட்டியளேடா’ ன்னு குதிச்சு, குதிச்சு ஆடுதாரு. ‘ சரி.. நடந்தது நடந்து போச்சு..என்ன பரிகாரம் பண்ணனும்’ன்னு கோயில் நிர்வாகத்தார் கேட்க, ‘கோயிலைச் சுத்தி 21 நிலையம் வச்சு வருஷம் தவறாம கொடையும் விட்டு கொடுக்கணும்’ன்னு சத்தியம் வாங்கின பிறகுதான் வண்டி நவுண்டுச்சாம்…கொடி மரமும் கோயில் போய் சேர்ந்துச்சாம்…



திருநெல்வேலி டவுணுக்கு எப்போ போனாலும் பாருங்க… தெப்பக்குளம் கரையில ரோட்டுப்பக்கமா 'முத்து மண்டபம்'ன்னு பூதத்தாருக்கு முதல் நிலையமும், அப்படியே நெல்லையப்பர் கோயில் கோட்டைச்சுவரை சுற்றி எல்லா ரத வீதியிலயும்  மத்த கோயில்களும் இருக்கு… இப்படித்தான்  அந்த இடத்துக்கு ‘பூதத்தான் முக்கு’ன்னும் பேரு வந்துச்சு. வருஷாவருஷம் கொடையும், பூக்குழி இறங்குறதும் ரொம்ப விஷேசமா நடந்துகிட்டு இருக்கு… 


எல்லாம் அய்யன் அருள்.

நன்றி.வணக்கம்.


4 comments:

'பரிவை' சே.குமார் said...

சங்கிலி பூதத்தார் வரலாறை அறியத் தந்தீர்கள்....
அருமை..

துபாய் ராஜா said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பர் குமார்.

Anonymous said...

சங்கிலி பூதத்தார் வரலாற்றை தெரியப்படுத்தியதுக்கு நன்றி!!! அன்புடன் மீனாட்சி

துபாய் ராஜா said...

// Anonymous said...

சங்கிலி பூதத்தார் வரலாற்றை தெரியப்படுத்தியதுக்கு நன்றி!!! அன்புடன் மீனாட்சி //

முதல் வருகைக்கும், முத்தான கருத்துரைக்கும் நன்றி திரு.மீனாட்சி...