Wednesday, July 31, 2019

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா



ஓங்கு சூழ் உலகம் உய்வடைய அகிலமெல்லாம் காத்தருளும் அய்யன் சிவபெருமானுக்கும், அம்மை பார்வதிக்கும் திருமணம் பேசி நாள் குறித்த விபரம் அறிந்த நாள் முதல் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள் என பல தரப்பான மக்கள் கூட்டம், கூட்டமாக கைலாய மலை வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள். பல நாட்டு அரசர்களும், படைகள், பரிவாரங்களோடு வந்ததால் திருமணம் பார்க்க வந்தவர்கள் கனபாரம் தாங்காமல் வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்து விட்டது. அனுதினமும் ஆட்கள் வர, வர நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதைக் கண்ட சிவபூதகணங்கள் சிவ்பெருமானிடம் முறையான அறிவுரை பெற முடிவு செய்து முக்கண்ணர் முன் சென்று நின்றார்கள். தியான நிஷ்டையில் இருந்த எம்பெருமான் பூதகணங்களது அபய சரணங்கள்  கேட்டு விழித்துப் பார்த்து விஷயம் அறிந்து குறுமுனி அகத்தியரை அழைத்து வரக் கூறினார்.

பூதகணங்கள் அழைப்பின் பேரில் அம்மையப்பர் முன் வந்து நின்ற் அகத்தியரை முறுவலித்துப் பார்த்த முக்கண்ணர், “ அகத்தியரே, நீர் உடனே தெற்கே கிளம்பி சென்று நிலைமையை சீர் செய்து, இப்பூவுலகம் முன் இருந்த நிலையை அடைய உதவ வேண்டும். என்று உத்தரவிட்டார்.. அய்யனின் கட்டளைக்கு மறுமொழி உரைத்த அகத்தியர், ’ “ஐயனே, தெற்கு பாஷை எனக்கு தெரியாதே. மேலும் உமா-மகேஷ்வரர் ஆகிய தங்கள் திருமணம் பார்க்கின்ற பெரும்கொடுப்பினையையும் அடியேன் இழப்பேனேஎன்று சொல்லி மனதளர்ச்சி அடைய, “ வருந்த வேண்டாம் அகத்தியரே, தென்தேச மொழியை உமக்கு உபதேசம் செய்வோம். இங்கு நடக்கிற எங்கள் திருமணக் காட்சியையும் நீர் அங்கு இருந்தே பார்க்க யாம் அருள் செய்வோம்”” என்று சொல்லி உடனடியாக அவருக்கு தமிழ் மொழி உபதேசம் செய்து வழி அனுப்பி வைத்தார் ஆனந்தக் கூத்தர் அய்யன் சிவபெருமான்.

அகிலமெல்லாம் ஆட்கொண்ட ஆடல்நாயகரின் ஆணையின் பேரில் கைலாயத்தில் இருந்து கால்நடையாக கிளம்பி பல ஜீவநதிகளில் நீராடி, புண்ணிய ஷேத்திரங்கள் பலவற்றையும் தரிசனம் செய்து எம்பெருமான ஈசன் அருளால் வானுயரம் கொண்டு வழிமறித்து நின்ற விந்திய மலையின் கர்வம் அடக்கி, வாதாபி போன்ற கொடிய அசுரர்களை வதம் செய்து, குடகு மலையில் தவம் இருந்த நேரம் காக வடிவில் வந்த கணேசர் கங்கை நதி இருந்த கமண்டலம் கவிழ்க்க காவிரியை உருவாக்கி என மேலும் பல திருவிளையாடல்கள் புரிந்து மக்களுக்கு அருளாசி செய்தவாறே மதுரை தமிழ்ச்சங்கம் கடந்து, திருநெல்வேலி அடைந்து நெல்லையப்பரையும், காந்திமதியம்மனையும் தரிசித்து நடைப்பயணமாக சென்ற அகத்தியருக்கு போகும் வழியெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு தந்தனர். அவர் அமர்ந்து அருளாசி தந்த இடத்தில் எல்லாம் அன்பர்கள் ஆலயம் அமைத்து வழிபட்டனர்.

இப்படியாக அம்பை, கல்லிடை நகர் எல்லாம் கடந்து சிங்கம்பட்டி ஊர் வழியாக பொதிகைமலை அடைந்த அகத்தியருக்கு சித்திரை விசு தினத்தன்று பாபநாசம் கல்யாண தீர்த்தக் கரையில் மணக்கோல காட்சி தந்தார் மகேஷ்வரர் உலகம்மையோடு. வந்த காரியம் நிறைவேறி விட்டாலும் வல்லோன் ஆணைப்படி வடக்கு திரும்பாமல் பொதிகை மலையில் தங்கி தமிழ் வளர்த்திட்டார் அகத்தீஸ்வரர். தண்பொருநையாம் தாமிரபரணிக் கரையில் குடில் அமைத்து உலக நன்மைக்காக தினமும் வேள்வி, யாகம் நடத்தி வந்த போது ஒரு ஆடி அமாவாசை திருநாளன்று காரையாற்றங்கரையில் சுயம்புவாய் உருவெடுத்திருந்த மகாலிங்க சுவாமிக்கும், பூரணகலை புஷ்பகலை சமேத அய்யனார் சாஸ்தாவிற்கும் முப்பது முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிக்களும் பொன் மலர்கள், முத்து மலர்கள் சொரிந்து வழிபடுவதைக் கண்ட அகத்தியர் தானும் அந்த விசேஷ வழிபாட்டில் கலந்து கொண்டு முக்தி பெற்றார்.

காலமாற்றம் அடைந்த கலிகாலத்தில் சேரநாட்டுப்பகுதியாக இருந்த பொதிகை மலை காட்டுப்பகுதி வழியாக பாண்டிய நாட்டு வணிகர்கள் மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றிச் சென்று வணிகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது இறைவனின் திருவிளையாடலால் மாடுகளின் காலடிக் குளம்பு பட்டு சுயம்பு லிங்கத்தில் இரத்தம் பீறிட்டு வருவதைக் கண்டு வணிகர்கள் திகைத்து நின்ற பொழுது அசரிரி ஒலித்து தலவரலாறு சொல்லியது. வணிகர்கள் மூலம் விவரம் அறிந்த சேர மன்னர்கள் அவ்விடத்தில் மகாலிங்க சுவாமி, பொன் சொரிமுத்து அய்யனார் மற்றும் இருபத்தியொரு மாட தேவதைகள், தெய்வங்களுக்கும் ஆலயம் அமைத்து வழிபட்டனர். சேர தேசத்தில் மார்த்தாண்ட மன்னர் வாரிசுக்கு எதிராக எட்டு வீட்டுப் பிள்ளைமார் கலகம் செய்த போது இழந்த ஆட்சிப் பொறுப்பை மீட்க உதவியதால் பரிசாக வழங்கப்பட்ட பொதிகை மலைப்பகுதியும், சொரிமுத்தையனார் ஆலயமும்  சிங்கம்பட்டி சமஸ்தானத்திற்கு சொந்தமானது.

பன்னெடுங்காலத்திற்கு முன் அந்தண குலத்து பட்டவராயர் பொம்மக்கா, திம்மக்காவை விரும்பி மணந்ததால் குலம் மாறி ஆடு, மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். சொரிமுத்தையனார் கோயில் அருகே காட்டாற்றங்கரையில் ஆநிரைகளை கவர வந்த திருடர்களுடன் ஏற்பட்ட சண்டையின் போது பட்டவராயர் கொல்லப்பட, அவரது இரு மனைவிகளும் தாங்கள் வாழ்ந்த பொதிகை மலை அரசரான சிங்கம்பட்டி மன்னரிடம் அனுமதி பெற்று உடன்கட்டை ஏறிட ஆலய வளாகத்தில் காவல் நாய்கள் காச்சி, பூச்சியுடன் பொம்மக்கா, திம்மக்கா சமேதமாய் பட்டவராயர் காவல் தெய்வமானார்.




பல நூற்றாண்டுகளாய் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு வந்து தங்கி வணங்கும் பாபநாசம் காரையார் மலைப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்தையனார் ஆலயத்தில் பட்டவராயர் கோமரத்தாடிகள் ஆடிஅமாவாசை தின இரவு அரச உடையில் காட்சி தரும் சிங்கம்பட்டி மன்னரின் முன் இன்றளவும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவது காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். வேடமிட்டு, பாரம்பரிய நகை, உடை அணிந்து,  சிலம்பம் சுற்றி, சண்டை இட்டு, பின் தாயாரே அடித்து ஒப்பாரி வைத்து மன்னரிடம் அனுமதி பெற்று பூக்குழி இறங்குதல் என்னும் தீ பாய்ந்தல் நிகழ்வோடு தென்கைலாயமாம் பொதிகை மலை ஆடி அமாவாசை திருவிழா இனிதே முடிவுறும்.



திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையார் மலைப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்தையனார் ஆலய ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசின் ஆதரவுடன் வருடா வருடம் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து துறை, வனத்துறை, காவல் துறை, சுகாதார துறை மூலம் சிறப்பு பேருந்துகள், அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்து திருக்கோவில் நிர்வாகம் விழாவை சிறப்பாக நடத்த உதவி வருகிறது.

பொன் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா காண அனைவரும் வருக. அய்யன் அருள் பெறுக.

No comments: