ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அருள்மிகு
சொரிமுத்தையனார் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்பு வேண்டுகோள்கள்.
1)
தலைமுறை, தலைமுறையாக நமது முன்னோர்கள் வழிபட்டு வரும்
ஆலயத்தின் சிறப்பையும், மாண்பையும், கோயிலில் குடிகொண்டிருக்கும் அனைத்து தெய்வங்களின்
திருவிளையாடல்களையும் உடன்வரும் அவரவர் குடும்பத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு எடுத்துச்
சொல்லி வழிவழியாக காத்து வரும் புனிதம் காக்க வலியுறுத்துவோம்.
2)
அரசு நிர்வாகம் போக்குவரத்து துறை மூலம் செய்துள்ள
வாகன வசதி ஏற்பாடுகளையும், விதி முறைகளையும் பயன்படுத்தி கூட்ட நெரிசல் தவிர்ப்போம்.
3)
வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு
வருவதையும், பயன்படுத்துவதையும் தவிர்ப்போம்.
4)
சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ள இலவசக் கழிப்பிட வசதிகளை
முறையாகப் பயன்படுத்தி சுற்றுப்புறச் சூழ்நிலை மற்றும் பல மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமான
அன்னை தாமிரபரணி ஆற்று நீரில் மாசு ஏற்படாதாவறு காப்போம்.
5)
வனத்துறையின் அனுமதியுடன் கோவிலைச் சுற்றி திருக்கோவில்
நிர்வாகம் அமைத்துள்ள தற்காலிக குடில் வசதிகள் தவிர மற்ற காட்டுப் பகுதிகளில் தங்குவதை
தவிர்ப்போம்.
6)
திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களின்
தற்காலிக மின்சார வசதிகளை முறையான அனுமதியில்லாமல் பயன்படுத்துவதை தவிர்ப்போம்.
7)
காட்டுக்குள் வாழும் வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர்
பெருக்கத்திற்கு இடையூறான ஒளி,ஒலி மாசு தவிர்ப்போம்.
8)
சந்தேகத்திற்குரிய மனிதர்களின் நடவடிக்கைகளை காவல்துறை
மற்றும் ஊர்க்காவல் படை அரங்குகளில் உடனுக்குடன் தெரியப்படுத்தி அனைத்து மக்களின் பாதுகாப்பை
உறுதி செய்வோம்.
9)
சிங்கம்பட்டி ஜமீன் பழைய காட்டுப் பாதையாக பாதயாத்திரை
வரும் பக்தர்கள் மணிமுத்தாறு அணையின் மேற்கு பகுதி கடைசியில் அமைந்துள்ள முதலாம் எண்
வாசல் வரை வாகனங்களில் வந்து, பின் அங்கு அமைந்துள்ள வனத்துறையின் தற்காலிக அரங்கில் ஊர், பெயர், முகவரி,
அலைபேசி எண், உடன் வரும் நபர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களைத் தெரிவித்து, தடை செய்யப்பட்ட
பொருட்களை முற்றிலும் தவிர்த்து வனத்துறை அலுவலர்களின் முறையான அனுமதியுடன் பயணம் செய்யுமாறு
கேட்டுக் கொள்கிறோம்.
10) யானை, கரடி
மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் அனுமதி மறுக்கப்பட்டால் வந்த
வாகனத்திலே திரும்பி அகத்தியர் பட்டி வந்து அரசு வாகனங்கள் மூலம் கோயிலுக்கு செல்லுங்கள்.
வேறு எந்த காட்டு வழியாகவும் கோயிலுக்கு செல்ல முயற்சிக்காதீர்கள்.
11) சிங்கம்பட்டி
ஜமீன் பழைய காட்டுப் பாதையாக பாதயாத்திரை செல்ல வனத்துறை அலுவலர்கள் அனுமதிக்கும் பட்சத்தில்
கூடுமானவரை குறைந்தது பத்து, பதினைந்து பேர்கள் கொண்ட குழுவுடன் இணைந்து செல்லுங்கள்.
குடும்ப உறுப்பினர்கள் மட்டும் நான்கைந்து பேராக தனியாக செல்வதை தவிருங்கள். உடன் வரும்
குழந்தைகளை முன், பின் தனியாக விடாமல் குழுவின் நடுப்பகுதியில் நடத்திச் செல்லுங்கள்.
12) வறட்சிகாலம்
என்பதால் வனவிலங்குகள் ஆற்றுக்கு நீர் குடிக்க வந்தாலோ, உணவு தேடி எதிரில் வந்தாலோ
எந்த விதமான தொந்திரவும் செய்யாதீர்கள்.
13) சமையல் செய்ய தேவையான விறகு, அடுப்பு மற்றும் எரிவாயு
உருளைகளை வனத்துறை அனுமதியுடன் எடுத்துச் செல்லுங்கள். கோவிலைச் சுற்றி காட்டுக்குள்
விறகு சேகரிப்பது சட்ட விரோதம் என்பதால் திருக்கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர்களிடம்
தேவையான விறகுகளை வாங்கிக் கொள்ளுங்கள்.
14) மொட்டை
போடுவது, காது குத்துவது போன்ற நிகழ்ச்சிகளை திருக்கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெற்ற
ஒப்பந்ததாரர்கள் அமைத்துள்ள அரங்குகளில் உள்ள பணியாளர்கள் மூலம் செய்யுங்கள்.
15) பலநூறு
ஆண்டுகள் பாரம்பரியமான சொரிமுத்தையனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை பரம்பரை அறங்காவலர்
சிங்கம்பட்டி ஜமீன்தாரர் மேதகு தீர்த்தபதி மகாராஜாவின் சீரிய முயற்சியால் ஒவ்வொரு வருடமும் அனைத்து அரசு துறைகளின் பலவிதமான
கட்டுப்பாடுகளுக்கும் ஒத்துக் கொண்டு சிறப்பான முறையில் நடத்தி வரும் திருக்கோவில்
நிர்வாகத்திற்கு அன்பையும், ஆதரவையும் அனைத்து பக்தர்களும் வழங்குவோம் என உறுதி கொள்வோம்.
தென்கைலாயமாம்
பொதிகை மலையில் இருபத்தியொரு மாட தெய்வங்கள் மற்றும் தேவதைகளுடன் அருள்பாலித்து வரும்
பொன் சொரிமுத்தையானார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அனைத்து ஊர் பக்தர்களையும் வருக, வருக என வரவேற்கிறோம்.
அனைவரும்
வருக, அய்யன் அருள் பெறுக.
No comments:
Post a Comment